search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நிலம் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் ஹரிபிரசாத்திற்கு, தரணிதரன் கொடுக்கவில்லை.
    • வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூரைச் சேர்ந்தவர் மகன் தரணிதரன்(வயது31). இவர்களுக்கு சொந்தமான நிலம் பழனி-தாராபுரம் ரோட்டில் உள்ளது.

    இதில் 35 ஏக்கர் நிலத்தை திருப்பூர் மாவட்டம் தாசம்பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத்(34) என்பவர் வாங்க முடிவு செய்தார். இதற்காக 2.5 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதையடுத்து முதலில் 8.25 லட்சம் ரூபாயை ஹரிபிரசாத், தரணிதரனிடம் கொடுத்தார்.

    ஆனால் அதன் பிறகு மீதி பணத்தை கொடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக பேச வேண்டும் என ஹரிபிரசாத், தரணிதரனை கோவைக்கு அழைத்துள்ளார்.

    அதன்படி தரணிதரன் கோவை வந்து, ரெயில்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வைத்து அவர்கள் சந்தித்தார்.

    அப்போது, இந்த இடம் வாங்கும் விஷயத்தில் உங்கள் உறவினர்கள் மூலம் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. ஹரிபிரசாத் அங்கிருந்து சென்றுவிட்டார். அறையில் தரணிதரன் மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், தரணிதரன் தங்கியிருந்த அறையில் கஞ்சா வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்த வந்ததாக கூறி சோதனை நடத்தியு ள்ளனர்.

    ஆனால் ஒன்றும் சிக்கவில்லை. இதனால் தன்னை மாட்டிவிட ஏதோ சதி நடப்பதாக நினைத்த தரணிதரன் அங்கிருந்து சென்று விட்டார்.

    அதன்பிறகு நிலம் சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் ஹரிபிரசாத்திற்கு, தரணிதரன் கொடுக்கவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 16-ந் தேதி நிலம் தொடர்பாக பேச வேண்டும் என கூறி மீண்டும் தரணிதரனை கோவைக்கு அழைத்தனர். அவர் காரில் கோவைக்கு வந்து விட்டு, அவர்களை தொடர்பு கொண்டார்.

    அப்போது வ.உ.சி.மைதானத்திற்கு வருமாறு ஹரிபிரசாத்தின் நண்பர்கள் அழைத்தனர். அதன்படி தரணிதரனும் அங்கு வந்தார்.

    அப்போது அங்கு ஏற்கனவே காத்திருந்த ஹரிபிரசாத்தின் கூட்டாளிகளான பாபு, ஜான்சன் ஆகியோர் காரில் ஏறினர். பின்னர் தரணிதரனை காருடன் கடத்தி சென்றனர்.

    அவரிடம் இருந்த பணம் ரூ.30 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, அவர் வைத்திருந்த ஆவணங்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு, அவரை பாதி வழியில் இறக்கி விட்டு காருடன் தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து தரணிதரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹரிபிரசாத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தரணிதரனை கடத்தி பணம், ஆவணங்களை பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஹரிபிரசாத், கார் டிரைவரான சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார்(37), சரவணம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் ஊழியரான பாபு(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபிரசாத் தாராபுரம் முன்னாள் பா.ஜ.க மண்டல துணைத்தலைவராகவும், பாபு ரத்தினபுரி முன்னாள் பா.ஜ.க நெசவாளர் அணி மண்டல தலைவராகவும் இருந்துள்ளனர். இதேபோல் பிரவீன்குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மண்டல செயலாளராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா எப்படி அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முடியும்.

    * சசிகலா 2021-ல் பதவியில் இல்லை என அறிவித்துள்ளார்.

    * கட்சி மீது உண்மையில் அக்கறை இருந்தால் ஜானகி பாணியில் சசிகலா ஒரு அறிக்கையை தற்போது வெளியிட வேண்டும்.

    * அ.தி.மு.க. எங்கள் தலைமையில் இருப்பதை ஏற்று சசிகலா அறிக்கை வெளியிட வேண்டும்.

    * ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கும் எண்ணம் ஒரு போதும் இல்லை.

    *தமிழகத்தில் கள்ளச்சாராய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    * கள்ளச்சாராய சம்பவங்களை திட்டம் போட்டு தி.மு.க. அரசு மறைத்து வருகிறது.

    * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, கள்ளச்சாராயம் பெருகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.
    • அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டோம்.

    * அ.தி.மு.க. போட்டியிட்டால் 3-வது, 4-வது இடத்திற்கு வந்திருக்கும் என அண்ணாமலை கூறியிருக்கிறார். மிகப்பெரிய அரசியல் ஞானிபோல் அண்ணாமலை பேசுகிறார்.

    * அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

    * மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் 6000 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று 2-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. கோவையில் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.

    * 2014 தேர்தலில் 18.80 சதவீத வாக்குகளை பா.ஜ.க. கூட்டணி பெற்றது. 2014ல் பெற்றதை விட 2024ல் பா.ஜ.க. கூட்டணி குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது.

    * தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் ஈரோடு தொகுதி தேர்தலில் பரிசுகள், பணம் தந்துதான் வெற்றி பெற்றது. இதனை நன்கு அறிந்த அண்ணாமலை வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை பற்றி விமர்சிப்பது கண்டித்தக்கது.

    * வாயில் வடை சுடுவது, பொய் செய்திகளை பரப்புவது தான் அண்ணாமலையின் வழக்கம்.

    * 100 அறிவிப்புகளை 500 நாட்களில் வெளியிடுவோம் என கோவையில் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.

    * பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோவைக்கு கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றுவாரா?

    * அண்ணாமலை போன்ற தலைவர்களால் தான் மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்தது.

    * தமிழக பா.ஜ.க. தலைவரான பின்னர் என்ன திட்டத்தை மத்திய அரசிடம் கேட்டு தமிழகத்திற்காக பெற்றுத்தந்தார் அண்ணாமலை?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.
    • கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது.

    அந்த வகையில், கோவையில் முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய 2 வழித்தடங்களில் மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.10,740 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    முதல் வழித்தடமாக உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை 22 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரெயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகே உள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்துக்கான நிதியை பெறுவதற்கு, ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.

    இதனை ஏற்று மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான நிதியை கடனாக வழங்க உள்ள பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் நேற்று மதுரையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து இன்று கோவை வந்தனர். கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைய உள்ள வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை உக்கடம் பகுதியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுணன், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யுகு, தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுக்கு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கி கூறினர்.

    2 நாள் ஆய்வு முடிந்த பின்னர் நாளை தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

    • மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

    இதையடுத்து மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.
    • தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பர் அதுல்யா ரவி.

    இவரது சொந்த ஊர் கோவை ஆகும். வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் குடியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போனது.

    அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி(46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அவர்களிடம் பாஸ்போர்ட் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார்.
    • மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.

    கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் இன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். அதேபோல் இன்றும் வழக்கம் போல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் திடீரென குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல மேயர் பங்கேற்கவிருந்த சில நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறைதீர்க்கும் கூட்டம் ரத்தானது கோவையில் மேலும் பரபரப்பை அதிகரித்து உள்ளது.


    இதுதொடர்பாக மேயர் கல்பனாவை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவரது கணவர் ஆனந்தகுமார் பேசினார். அவர் கூறுகையில் மேயருக்கு தற்போது உடல் நலம் சரியில்லை. இதனால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார்.

    இதுதொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது மேயர் ராஜினாமா செய்வார் என்பது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான் என கூறி தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

    கோவை மாநகராட்சி தேர்தல் நடந்தபோது பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாநகராட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டார். இதனால் தி.மு.க. அபார வெற்றி பெற்றது.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ஏற்கனவே கவுன்சிலர்களாக இருந்தவர்கள் என பலர் தங்களுக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேயராக அறிவிக்கப்பட்டவர் தான் கல்பனா.

    சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து அவர் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு சில பிரச்சனைகள் அவரை தொடர்ந்தது. மேயரின் தாயார் வசித்த வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு அந்த பெண் போலீஸ்நிலையம் வரை சென்றார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மேயர் மீதே அவர் புகார் கொடுத்தார். அப்போது இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் சந்தையில் வசூல் செய்வது தொடர்பான பிரச்சனையில் மேயரின் கணவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


    இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலும் மேயருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வைச் சேர்ந்த கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஆனால் மேயர் கல்பனா வார்டில் தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுகள் குறைவாகவே கிடைத்திருந்தது.

    அந்த வார்டில் அண்ணாமலை 330 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். மிக முக்கிய பொறுப்பில் உள்ள மேயரின் வார்டில் வாக்குகள் குறைந்தது தி.மு.க. மேலிடத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் தான் மேயர் கல்பனா ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியுள்ளது.

    இந்தநிலையில் கல்பனாவிடம் இருந்து மேயர் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் பலர் கோதாவில் குதித்துள்ளனர். மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர்.

    ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

    • சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது.
    • சுகாதாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியது என்னதான் ட்ரால் மீம் ஆக பார்த்தாலும் கூட, சட்டசபையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

    சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக, ஸ்வச் பாரத்தில் 44வது இடத்தில் இருந்த சென்னை இப்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

    மக்கும் குப்பை மக்காத குப்பைகளை அவர்கள் பிரித்தெடுப்பதே கிடையாது. இதன் வெளிப்பாடுதான் சிறுவன் உயிரிழப்பு சம்பவம்.

    அடுத்தது, மழைநீர் குப்பைகளுடன் கலக்கும் அது குடிநீர் பைப் வழியாக செல்லும். மக்கள் அதனை பருகுவார்கள். ஆனால் இதை பற்றி எல்லாம் சுகாதாரத்துறை அமைச்சருக்கோ மற்றவர்களுக்கோ கவலை இல்லை.

    இதுகுறித்து சட்டசபையில் விவாதம் நடப்பது கிடையாது. சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவது கிடையாது.

    ஈஷா பொறுத்தவரை யானை வழித்தடம் இல்லை.

    முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்வது தவறு இல்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரு முதல்வர் வெள்ளை அறிக்கை வழங்காமல் தொடர்ந்து வெளிநாட்டு பயணம் சென்றுக் கொண்டிருக்கிறார்.

    துபாய் சென்று வந்து 2 வருடங்கள் ஆகிறது. ஆனால், அங்கு சென்று வந்ததற்கான பயன் என்ன ? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்தீர்கள் ? இதேபோல், சிங்கப்பூர், ஜப்பான் சென்றார்கள். பணம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன ?

    அரசு செலவில் ஒரு முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்றால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா?
    • அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள்.

    கோவை:

    கோவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சட்டசபையில் முதலமைச்சர் முன்னிலையில் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக மூத்த அமைச்சரே சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    டாஸ்மாக் மதுவில் Quality இல்லை என்று அமைச்சரே ஒத்துக்கொண்டு உள்ளார்.

    மது குடிப்பவர்கள் தானாக திருந்தினால்தான் பிரச்சனை தீரும் என அமைச்சர் சொல்வதற்கு எதற்கு இந்த ஆட்சி. எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா? என்று மக்களின் கேள்வியை நான் எழுப்புகிறேன்.

    தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் என சென்று கொண்டிருக்கிறது.

    சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் குழந்தை பலியாகி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். உயிருக்கு மரியாதை இல்லை. பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கி உள்ளது என்று அவர் கூறினார்.

    • தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
    • வடமாநில வாலிபர்களிடம் போலீசார் சோதனை

    கோவை:

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்களும் கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் இன்று மதியம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று, பீகாரில் இருந்த வந்த ரெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டி மற்றும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வடமாநில வாலிபர்களையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்தனரா? அல்லது வேறு யாராவது கடத்தி இதில் வைத்தனரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம் வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    ஓடைகளில் நீர்வரத்து, அதிகரித்ததால் நேற்று முன்தினமும் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியல் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி, பேரூர் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இதனால் குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 471 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்கோனா 64

    சின்னக்கல்லார்-93

    வால்பாறை 72

    வால்பாறை தாலுகா-69

    சிறுவாணி அடிவாரம்-63

    ×