search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டிராவிஸ் ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார்.
    • முதல் 6 ஓவரில் ஆஸ்திரேலியா 113 ரன்கள் குவித்தது.

    ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவரில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டி20 கிரிக்கெட்டில் பவர் பிளேயில் அதிக ரன்கள் விளாசிய அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி முதல் 6 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 113 ரன்கள் குவித்தது.

    5-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 30 ரன்களும் 6-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 26 ரன்களும் அதிகபட்சமாக குவித்தனர். குறிப்பாக ஹெட் 17 பந்தில் அரை சதம் விளாசினார். 

    • ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்தது.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்- டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். ஆஸ்திரேலிய டி20 அணியில் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் அறிமுகமானார். அவர் அறிமுக போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    இதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஸ் 12 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட் 25 பந்தில் 80 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஸ் - ஸ்டோய்னிஸ் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    ஆஸ்திரேலிய அணி 9.4 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்.
    • விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் 12000 ரன்களை கடந்த அவர் 34 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய 4 வீரர்களையும் மிஞ்சியுள்ளார்.

    அதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. அத்துடன் விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதே போல் விராட் கோலியின் புள்ளிவிவரங்களையும் நான் பார்க்கிறேன். இதை நான் இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலியர்கள் பார்வையில் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பேட்டிங் சராசரி மகத்துவத்திற்கான பெஞ்ச மார்க் அல்லவா?

    அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் அவர் சதமடித்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை.

    ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் நான் பார்த்த சிறந்த சதத்தை அடித்தார். அந்த வித்தியாசமான சதத்தை அடித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய மண்ணில் நான் தேர்ந்தெடுப்பேன்.

    என்று கூறினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் 1 டெஸ்ட் சதம் கூட அடித்ததில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 

    • முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அறிமுகமாகிறார்.

    இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், ஜோஷ் ஹல், ஷோயிப் பஷீர்.

    • இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது.
    • தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்.

    சிட்னி:

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் ஜனவரி 8 வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு 2 டெஸ்ட் போட்டிக்கும் இடையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த அணியாலும் கம்பேக் கொடுக்க முடியும்.

    இதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த முறை விளையாடிய 2 முறையும் இந்திய அணி கோப்பையுடன் திரும்பியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்டர் கவாஸ்கர் கோப்பை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா அணி திண்டாடி வருகிறது. சொந்த மண்ணிலேயே தொடர்ச்சியக 2 முறை இந்திய அணியுடன் தோல்வியடைந்திருப்பதால், ஆஸ்திரேலியா அணி பழிதீர்க்க தீவிரமாக உள்ளது.

    இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது. தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். எதிர்வரும் டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இந்த தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

    இந்திய அணியும் எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். அதேபோல் நாங்களும் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளோம். அதுதான் இம்முறை எங்களுக்கு உதவியாக இருக்கும்.

    இவ்வாறு கம்மின்ஸ் கூறியுள்ளார். 

    • வங்கதேசத்திற்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் சேர்த்துள்ளார்.
    • ஐசிசி தரவரிசையில் 12-வது இடத்திற்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இந்த தொடரில் மோசமாக விளையாடிய பாபர் அசாம், 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் கடந்த 5 வருடத்தில் முதல் முறையாக டாப் 10-ல் இருந்து பாபர் அசாம் வெளியேறி 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் டெஸ்ட்டில் 50-க்கு மேற்பட்ட ரன்களை கடைசியாக 2022-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 பிளாஸ்ட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே மற்றும் டர்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டர்ஹாம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து விளையாடிய சர்ரே அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் வில் ஜேக்ஸ், லௌரி எவான்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த டோமினிக் சிப்லி மற்றும் சாம் கரண் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இறுதியில் சர்ரே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்ஹாம் அணியை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில் இப்போட்டியில் சர்ரே அணியின் விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்டுள்ள நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. டாம் கரன் வீசிய வைட் யார்க்கர் பந்தை பாஸ் டி லீக் கவர் திசையில் அடித்துவிட்டு ரன் ஓட முயற்சித்தார். அப்போது அந்த இடத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்து வில் ஜேக்ஸ் அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் பேட்டர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பாதி களத்தில் நிற்க, வில் ஜேக்ஸ் பந்தை விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸிடம் த்ரோ அடித்தார். ஆனால் பந்தை சரியாக பிடிக்க தவறிய நிலையில், தனது கைகளால் மட்டுமே ஸ்டம்பினை தகர்த்தார். பிறகு அவர் தனது தவறை உணர்ந்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்த நேரத்தில், ஜோன்ஸ் பாதுகாப்பாக தனது கிரீஸிற்கு திரும்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
    • இஷான் கிஷனுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    துலீப் டிராபி 2024 கிரிக்கெட் தொடர், நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் முன்புபோல் இல்லாமல், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதன் காரணமாக இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தவிர, மற்ற அனைத்து முன்னணி இந்திய வீரர்களும் இத்தொடரில் விளையாட உள்ளனர்.

    இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. துலீப் டிராபி 2024 தொடரில் அபாரமாக செயல்படும் இளம் வீரர்களுக்கு, வங்காளதேச தொடரில் இடம் வழங்க, வாய்ப்பு உள்ளதால், இளம் வீரர்கள் முழு ஆற்றலுடன் விளையாட வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் துலீப் டிராபி தொடருக்கான இந்தியா 'டி' அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிஷன் நாளை தொடங்க உள்ள தொடக்க ஆட்டத்தில் (இந்தியா 'சி' அணிக்கு எதிராக) விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக நாளை தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இந்தியா 'டி' அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.
    • டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இங்கிலாந்து தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடவில்லை.
    • கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடி 600 நாட்களுக்கு மேல் ஆகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் தற்போது வருகிற 19-ந்தேதியில் இருந்து வங்கதேச அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. பின்னர் லண்டனில் அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விலகியது தெரியவந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

    ரிஷப் பண்ட் மோசமான கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். சுமார் 600 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துலீப் டிராபியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் துலீப் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பைக்குப் பின் பும்ரா சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பில்லை.

    ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் மூவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    வேகபந்து வீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.

    வங்கதேச அணிக்கெதிராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் அகமது, தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடுவார்கள்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    • முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை தொடங்கிய இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. முதல் சீசனில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

    அதன்பின் நடைபெற்ற 2-வது ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    3-வது முறையாக அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வென்ற ஐசிசி சாம்பியன்ஷிப் தனக்கு உலகக் கோப்பை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    2023 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் சாய்த்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும்.

    • இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகினார்.
    • மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.

    2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.

    அண்மையில், , இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து ஜூலை 30 ஆம் தேதி மேத்யூ மோட் விலகினார்.

    இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்.

    ×