search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuwait fire accident"

    • தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
    • 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குவைத் தீவிபத்து தொடர்பாக முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
    • அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    அயலக தமிழர் நலத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இதனிடையே குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

    கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.

    • 6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.
    • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் குவைத்திலேயே வசித்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குடியிருப்புகளில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    குவைத்தில் செயல்பட்டு வரும் என்.பி.டி.சி. நிறுவனத்தில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தங்குவதற்காக குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்திற்குட்பட்ட மங்காப்பில் அடுக்குமாடி குடியிருப்பை ஏற்பாடு செய்துள்ளது.

    6 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். நேற்றிரவு குடியிருப்பில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அங்கு தங்கியிருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் ஓடினர். இருப்பினும் பலர் தீயின் கோரபிடியில் சிக்கினர்.

    இதற்கிடையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க சிலர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் இருந்து கீழே குதித்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயில் கருகியும், புகையின் காரணமாக மூச்சுத்திணறி கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது. தீ விபத்தில் பலியானவர்களில் 42 பேர் இந்தியர்கள் என தெரிய வந்த நிலையில் இதில், 30-க்கும் மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 11 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    ஆகாஷ் எஸ்.நாயர் (வயது 23), பந்தளம், உமருதீன் சமீர் (33) லூகோஸ் (48), கொல்லம், ரஞ்சித் (34), கெலு பொன்மலேரி (55), காசர்கோடு, முரளிதரன், பத்தினம்திட்டா, சாஜு வர்கீஸ் (56), கோனி, தாமஸ் உம்மன், (திருவல்லா).

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த தாமஸ் ஜோசப், பிரவீன் மாதவ், பூனத் ரிச்சர்ட் ராய் ஆனந்த், அனில் கிரி, முஹம்மது ஷரீப், துவரிகேஷ் பட்நாயக், விஸ்வாஸ் கிருஷ்ணன், அருண்பாபு, ரேமண்ட், ஜீசஸ் லோபஸ், டென்னி பேபி கருணாகரன் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    விபத்தில் பலியான கொல்லத்தைச் சேர்ந்த சமீர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக குவைத் சென்றுள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு திரும்பிய அவர் திருமணம் செய்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் அவர், மீண்டும் குவைத் சென்றுள்ளார். கனரக வாகன ஓட்டுனராக பணியாற்றிய அவர் பரிதாபமாக தீயில் கருகி இறந்துள்ளார்.

    அவரது நண்பர் நஜீப் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது கால் முறிந்தது. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் தனது தந்தைக்கு போன் மூலம் சமீர் இறந்த தகவலையும், தான் காயமுற்றிருப்பதையும் தெரிவித்தார்.

    சமீரின் மற்றொரு நண்பர் ஷானவாஸ் கூறுகையில், நாங்கள் 3 பேரும் ஒரே கிராமத்தில் ஒன்றாக வளர்ந்தோம். ஒன்றாகவே வேலை பார்த்தோம். நான் வேறு இடத்தில் தங்கியிருந்தேன். தீ விபத்து பற்றி அறிந்ததும், நண்பர்களை பற்றி விசாரித்தேன். அப்போது சமீர் இறந்து விட்டார் என்பது பேரிடியாக அமைந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நஜீப்பிடம் போனில் பேசினேன். நான் இன்னும் அதிர்ச்சியாகவே உள்ளேன் என்றார்.

    இந்த சம்பவம் குறித்து கேரள எதிர்க்கட்சித் தலைவரான சதீசன் கூறுகையில், குவைத் தீ விபத்து சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவை கதறி அழ வைக்கும் சம்பவமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து கேரளாவைச் சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என்றார்.

    தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வாசனை குவைத் செல்ல உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரும் குவைத் விரைந்துள்ளார். 

    • உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    • தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர்.

    வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

    உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் என அது சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் குவைத்தில் வசிக்கின்றனர்.

    இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிற வளைகுடா நாடுகளைப்போல குவைத்திலும் இந்தியர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.

    குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதத்தினர், அதாவது சுமார் 10 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திலும் 30 சதவீதம் பேர் (சுமார் 9 லட்சம்) இந்தியாவை சேர்ந்தவர்கள்.

    குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் குடும்பமாக தங்கியிருக்கின்றனர். அதேநேரம் குடும்பத்தினரை இங்கே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர்.

    இவர்கள் பெரும்பாலும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.

    அந்தவகையில் குவைத்தில் இயங்கி வரும் பிரபலமான என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

    6 மாடிகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200 பேர் தங்கியிருந்தனர். தொழிலாளர் முகாம் என அழைக்கப்படும் அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். அதிலும் குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம்.

    இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    மளமளவென பரவிய இந்த தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும், மாடிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    அதிகாலை நேரம் என்பதால் பலரும் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் தூக்கத்திலேயே உடல் கருகினர். அதேநேரம் புகை மூட்டம் காரணமாக பலருக்கும் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.

    இவ்வாறு உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பல தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி இறந்தவர்களே அதிகம் ஆகும்.

    அதேநேரம் தீ விபத்து ஏற்பட்டதும் தப்பிக்க வழி தெரியாமல் மாடிகளில் இருந்து பலரும் கீழே குதித்தனர். இதனால் படுகாயம் ஏற்பட்டும் சிலர் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலமும், அலறல் சத்தமுமாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அத்துடன் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைத்தனர். அதைப்போல தீ பிடித்ததால் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கியிருந்தவர்களையும் உயிருடன் மீட்டனர்.

    நெஞ்சை உருக்கும் இந்த பயங்கர சம்பவத்தில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர்.

    இந்த துரதிர்ஷ்டமான சம்பவத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் தீவிபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தீவிபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட காயமடைந்தவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    • இறந்த பின்தான் தகனம் செய்வார்கள்; தகனம் செய்து இறப்பைத் தந்திருக்கிறது நெருப்பு...
    • உலகம் தோன்றிய நாளிலிருந்து விபத்துகள் புதியனவல்ல...

    சென்னை:

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, குவைத் தீவிபத்து தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத்தின் தீ விபத்தில்

    மனிதச் சதைகள்

    கருகிய வாசம்

    உலகக் காற்றில் வீசுகிறது

    இறந்த பின்தான்

    தகனம் செய்வார்கள்;

    தகனம் செய்து

    இறப்பைத் தந்திருக்கிறது

    நெருப்பு

    இதயத்தின்

    மெல்லிய தசைகள்

    மெழுகாய் உருகுகின்றன

    உலகம்

    தோன்றிய நாளிலிருந்து

    விபத்துகள் புதியனவல்ல

    விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்

    அது தொடர்வது

    பாதுகாப்பு அளவீடுகளின்

    குறைபாடுகளைக் காட்டுகிறது

    மனிதத் தவறுகள்

    திருந்தவில்லை என்று

    வருந்திச் சொல்கிறது

    மாண்டவர்களுக்காக

    அழுது முடித்த இடத்தில்

    அழத் தேவையில்லாத சமூகத்தை

    வார்த்தெடுக்க வழி சமைப்போம்

    உலகத் தொழிலாளர்களுக்கு

    என் இந்தியக் கண்ணீர்

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.

    உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

    இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

    இந்தியாவிற்குள்: +91 1800 309 3793

    வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901

    • உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

    சென்னை:

    நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.

    பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    • குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    புதுடெல்லி:

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    மத்திய கிழக்கில் உள்ள நமது தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியது.

    இந்திய அரசு, அதன் சகாக்களுடன் இணைந்து, நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    • அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவு.

    குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக, சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வரப்பெற்றுள்ளது.

    அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனைகளில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

    இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தொடர்பு எண்கள்: +91 1800 309 3793,

    +91 80 6900 9900, +91 80 6900 9901

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
    • தீ விபத்தில் 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன.

    தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல்.

    குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியானது. தமிழகர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், குவைத் தீ விபத்து தொடர்பாக உதவிகளைப் பெற இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

    குவைத் தீ விபத்து தொடர்பாக +965 65505246 என்ற உதவி எண்ணை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

    மேலும், தீ விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டினர் நிலை குறித்து குவைத் தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.

    குவைத் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் கோரியுள்ளோம்.

    உயிரிழந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் எனவும் அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது.

    ×