search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121399"

    தமிழக கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. #SSLCExam
    புதுச்சேரி:

    தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றும் புதுவையிலும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வுகள் முதல் முறையாக மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப்பார்க்க 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள 239 பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 988 மாணவர்களும், 6 ஆயிரத்து 970 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 948 பேர் 36 மையங்களில் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் ஆயிரத்து 294 பேர் 6 மையங்களில் தேர்வு எழுதினர்.

    காரைக்காலில் உள்ள 63 பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 335 மாணவர்களும், ஆயிரத்து 477 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 812 பேர் 13 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மொத்தம் 800 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 நிலைக்குழுவும், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #SSLCExam

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வேதாரண்யம் உள்ளது. உப்பு உற்பத்தியில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தியாகிறது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்திற்கும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு லாரிகள் மூலமாகவே அனுப்படுகிறது.

    இந்தநிலையில் கஜா புயலால் கடலிலிருந்து சேர் உப்பள பகுதியில் சேறு புகுந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தற்சமயம் உப்பு உற்பத்தி சீசனில் உப்பு உற்பத்தி செய்யமுடியாமல் உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் உப்பு இலாகா அதிகாரிகள் குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். அவர்களிட மிருந்து இதுவரை எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை.

    இதனால் உப்பு உற்பத்தி பணிகள் தற்சமயம் 30 சதவீதமே நடந்துள்ளது. ஒருசிலர் மட்டுமே உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உப்பு உற்பத்தி செய்கிறார்கள்.

    கஜா புயல் பாதிப்புக்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு உப்பு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி துவங்க ஒரு மாத காலம் ஆகும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

    வைகை அணை பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் வைகை அணை முக்கிய இடமாக உள்ளது. இங்குள்ள பூங்கா பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருப்பதால் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் பூங்கா பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. புல்தரைகள், கண்கவர் பொம்மைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், படகு குழாம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் கட்டும் பணி நிறைவடைந்தது.

    இதனையடுத்து 5 பெடல் படகுகள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி செயல்பாட்டுக்கு வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் படகு குழாமில் 2 பேர் செல்லும் 3 பெடல் படகுகளும், 4 பேர் செல்லும் 2 பெடல் படகுகளும் உள்ளன. 4 பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.170-ம், 2- பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யும்போது பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணிக்கு இன்னும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை கொண்டே பராமரித்து வருகிறோம். தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் (சனி, ஞாயிறு) இயக்க முடிவு செய்துள்ளோம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    பெண்கள் மட்டும் இடம்பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. 36 வயதான பெண் டாக்டரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி இக்கட்சியை தொடங்கி உள்ளார். #NationalWomenParty
    புதுடெல்லி:

    பெண்கள் மட்டும் இடம்பெறும் ‘தேசிய பெண்கள் கட்சி’ என்ற கட்சி நேற்று டெல்லியில் தொடங்கப்பட்டது. 36 வயதான பெண் டாக்டரும், சமூக ஆர்வலருமான ஸ்வேதா ஷெட்டி, இக்கட்சியை தொடங்கி உள்ளார். கட்சி தலைவராக அவர் செயல்படுவார்.



    இதுபற்றி ஸ்வேதா ஷெட்டி கூறுகையில், “அமெரிக்காவில் ஒரு பெண்கள் கட்சி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதை பின்பற்றி இக்கட்சியை தொடங்கி உள்ளோம். மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு பெற்றுத்தருவதும் கட்சியின் நோக்கம் ஆகும்” என்றார். #NationalWomenParty
    திருச்சி நகரில் இரண்டாவது கட்டமாக 19 வார்டுகளில் ரூ.73½ கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
    திருச்சி:

    திருச்சி நகரில் இரண்டாவது கட்டமாக 19 வார்டுகளில் ரூ.73½ கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் 10,722 வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இணைப்பு வழங்கப்படும்.

    திருச்சி நகரில் ஏற்கனவே பழைய திருச்சி நகராட்சி பகுதி மற்றும் சில வார்டுகளில் புதை வடிகால் எனப்படும் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரண்டாவது கட்டமாக 25 வார்டுகளில் ரூ.344 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

    இரண்டாவது கட்ட பணியில் தற்போது தொகுப்பு - 2 ல் ரூ.73 கோடியே 48 லட்சத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகளின் தொடக்க விழா நேற்று வார்டு எண்7-ஐ சேர்ந்த விஸ்வாஸ் நகரில் நடந்தது. ப.குமார் எம்.பி. முன்னிலையில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் இந்த பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    இரண்டாவது கட்ட பாதாள சாக்கடை பணி தொகுப்பு இரண்டின் கீழ் தற்போது 19 வார்டுகளில் வேலை நடைபெற உள்ளது. சஞ்சீவி நகர், உறையூர் ஏ.யூ.டி. காலனி, பாத்திமா நகர், வெக்காளியம்மன் நகர், யுவர்ஸ் காலனி, வடக்கு தாராநல்லூர், பிச்சை நகர், விஸ்வாஸ்நகர், மகாலெட்சுமி நகர், அகிலாண்டேஸ்வரி நகர், ஜீவா நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், மாரிஸ் அவென்யூ, பிரண்ட்ஸ் என்கிளேவ், ராஜா காலனி, அம்மையப்பா நகர், கீதா நகர், அண்ணாமலை நகர், ஜெயம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 7,436 வீடுகள், 3,286 வணிக நிறுவனங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 722 இணைப்புகள் வழங்கப்படும்.

    இதற்காக 66 கி.மீ. நீளத்திற்கு புதைவடிகால் குழாய்கள் மற்றும் 12 கி.மீ. நீளத்திற்கு உந்து குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் 12 எண்ணிக்கையில் உந்து நிலையங்கள் (பம்பிங் ஸ்டேஷன்) அமைக்கப்படும். 30 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட பழைய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களுடன் ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைக்கிறார். #PMModi #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து நாளை காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் வருகிறார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைக்கும் அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

    அங்கிருந்து பிலாய் நகருக்கு செல்லும் மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணையத்தின் வழியாக ஒன்றிணைக்கும் பாரத் நெட் சேவையின் இரண்டாவது கட்டப்பணிகளை துவக்கி வைப்பதுடன், இதற்கு அடையாளமாக கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.

    பிலாய் ஐ.ஐ.டி.க்கான புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன், பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் பின்னிரவு டெல்லி திரும்புகிறார். #PMModi #Chhattisgarh

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    பலியானவர்களில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன், ஸ்னோலின், தமிழரசன் ஆகிய 7 பேர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித் குமார், ஜெயராமன் ஆகிய 6 பேர்களின் உடல்கள் ஐகோர்ட்டு உத்தரவின்படி வருகிற 6-ந்தேதிக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    இந்தநிலையில் முதலில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேர்களின் உடல்களையும் மறுபிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் புதுவை ஜிப்மர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையிலான குழுவினர், நீதிபதிகள் முன்னிலையில் 7 பேர் உடலையும் மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கடந்த 2-ந்தேதி மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சத்யபிரியா, பாலகிருஷ்ண பிரபு, மாநில மனித உரிமை ஆணையர் உதவி பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக அன்று மாலையே டெல்லியில் இருந்து தேசிய மனித உரிமை ஆணையக்குழு மூத்த போலீஸ் சூப்பிரண்டு புபுல் பிரிட்டோ பிரசாத் தலைமையில், உறுப்பினர்கள் ரஜ்வீர்சிங், நிதின்குமார், அருண் தியாகி, லால்பகர் ஆகியோர் தூத்துக்குடிக்கு வந்தனர்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டனர். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 7-ந்தேதி வரை விசாரணை நடைபெறுகிறது.



    இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் கமி‌ஷன் விசாரணை தூத்துக்குடியில் இன்று தொடங்கியது.

    இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். முதலில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற அவர் கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் தென் மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அவர் முறைப்படி விசாரணையை தொடங்கினார். அவர் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களை பார்வையிடுகிறார். பின்பு அவர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்கிறார்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் துப்பாக்கி சூடு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறுகிறார்.

    மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அவரவருக்கு தெரிந்த தகவல்களை விசாரணை அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசனிடம் தெரிவிக்கலாம் என்றும், சென்னையில் உள்ள மனித உரிமை ஆணைய தலைமை அலுவலகத்திலும் நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #Thoothukudifiring  #Arunajagadeesan



    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரியில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. #Thoothukudipolicefiring #internetresumes
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க இணையதளச் சேவைகளை முடக்கிவைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

    எனினும், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணையச்சேவைக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளது. #Thoothukudipolicefiring #internetresumes
    விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதிகள் பயனடையும் வகையிலான புதிய கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் நகராட்சி கூட்டரங்கில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 30 பேருக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியமாக மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை கலெக்டர் சிவஞானம் தலைமையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளில் ரூ.404 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து பணிகள் தொடங்க அறிவிக்கப்பட உள்ளது.

    குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தில் மாவட்டத்தில் 4,210 வீடுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.126 கோடியே 30 லட்சம் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 30 பேருக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், உதவி நிர்வாக பொறியாளர் சுப்பாராஜ், தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×