search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார்"

    லஞ்சம் வாங்கிய வழக்கில் தாசில்தார், தலையாரிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    சிவகங்கை:

    ராமேசுவரத்தில் கடந்த 2004-ம் ஆண்டு தாசில்தாராக பணியாற்றியவர் சவுந்தரராஜன். அவரிடம் வெளிச்சம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் மீன்வளர்ப்பு தொழில் தொடர்பாக அனுமதி கோரி ஒரு விண்ணப்பம் அளித்தார். இந்த நிலையில் அதற்கான அனுமதியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக வழங்கும்படி தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோர் கேட்டார்களாம். அதற்கு கருப்பையா தயங்கியதால், பின்பு இருவரும் ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளனர். இதுகுறித்து கருப்பையா ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் ஏற்பாட்டில் கடந்த 18.9.2004 அன்று ரூ.3 ஆயிரத்தை, தாசில்தார், தலையாரியிடம் கருப்பையா கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், தாசில்தார் சவுந்தரராஜன் மற்றும் தலையாரி நாகரத்தினம் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீதான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தாசில்தார் சவுந்தரராஜன், தலையாரி நாகரத்தினம் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    வேதாரண்யம் தாசில்தார் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
    சென்னை:

    நாகப்பட்டினம் மாவட்டம், கடினல்வயல் பஞ்சாயத்து தலைவராக இருந்த டி.மலர்விழி, தாக்கல் செய்துள்ள கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கூறியிருப்பதாவது:

    குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம், கடினல் வயல் பஞ்சாயத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, கடந்த 2003-ம் ஆண்டு முதல் உப்பளம் நடத்தி வருகிறது.

    இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் சார்பிலும், பஞ்சாயத்து சார்பிலும் மாவட்ட கலெக்டர் முதல் உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பிலும், பஞ்சாயத்து சார்பிலும் பல மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனுமதி இல்லாமல் நிலத்தில் உப்பளம் நடத்துவதால் பஞ்சாயத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    புறம்போக்கு நிலம் பயன்படுத்துவோர் வரி கட்டணம் விதிகளின்படி, புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவோரிடம் வரி வசூலிக்கலாம். அதன்படி, கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்திடம் இருந்து வரி வசூலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு பல அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘குஜராத் ஹெவி கெமிக்கல் நிறுவனம், பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்தி வருவது குறித்து வேதாரண்யம் தாசில்தார் ஆய்வு செய்து, அந்த நிறுவனத்துக்கு விதிக்கவேண்டிய வரியை கணக்கிட்டு, அதுகுறித்து அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கு 6 வாரத்துக்குள் அனுப்பிவைக்கவேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் வரி வசூலிக்கவேண்டும்’ என்று கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    ஆனால், இதுவரை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. எனவே, வேண்டும் என்றே உத்தரவை அமல்படுத்தாமல் இருக்கும் நாகப்பட்டினம் கலெக்டர், வேதாரண்யம் தாசில்தார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.முருகபாரதி ஆஜராகி, ‘வேதாரண்யம் தாசில்தாரர் ஏற்கனவே இரு முறை சரியான ஆய்வுகள் செய்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வரி தொகையை குறைத்து மதிப்பிட்டுள்ளார்’ என வாதிட்டார்.

    இதையடுத்து, வேதாரண்யம் தாசில்தார் வருகிற பிப்ரவரி 1-ந்தேதி நேரில் ஆஜராகி, அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். #MadrasHC
    சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பரங்குன்றாபுரம் பொதுமக்கள் தாசில்தாரிடம் அனு கொடுத்துள்ளனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் நல்லையாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரத்திலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்கின்ற பகுதி என்பதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடை மூடப்பட்டது. 

    இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம் குன்றம், கருவந்தா, குறிச்சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்லுகின்றனர். 

    இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அவசர காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையிலான இந்த அலுவலகம், 24 மணிநேரமும் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில், சரண்யா என்பவர் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    தீக்காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அப்போதைய மாவட்ட கலெக்ட‌ராக இருந்த கருணாகரன், கருணை அடிப்படையில் இந்த தற்காலிகப் பணியை வழங்கியிருந்தார். இந்த அலுவலகத்தில் பணியாற்றும் தாசில்தாரான திருப்பதி என்பவர், சரண்யாவுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவுகொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சரண்யா கூறியதாவது:‍-

    நான் செங்கோட்டையில் வசித்துவருகிறேன். என் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததால், உடலில் தீவைத்துக்கொண்டதில் காயம் ஏற்பட்டது. பின்னர், என்னுடைய இரு குழந்தைகளையும் காப்பாற்ற வழியின்றித் தவிப்பதை அப்போதைய மாவட்ட கலெக்டர் சுட்டிக் காட்டியதால், பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தட்டச்சராகப் பணி வழங்க நடவடிக்கை எடுத்தார்.

    இந்த பிரிவில் தாசில்தாராக உள்ள திருப்பதி என்பவர், கடந்த சில தினங்களாக என்னிடம் தவறான நோக்கத்தில் பழக ஆரம்பித்தார். விடுமுறை நாட்களில் எனக்கு வேலை கொடுத்து வரவழைக்கும் அவர், அருகில் அமர்ந்துகொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

    ஒருகட்டத்தில் அவரது சேட்டைகள் அத்துமீறியதால் கண்டித்தேன். இதனால் அவர் என்னை மிரட்டினார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்திருந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட தாசில்தார் என்னை பணியில் இருந்து நீக்கியதாக கூறி வேறு நபர்களை பணியில் அமர்த்தி உள்ளார்.

    அதன் பின்னரே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் உதவியை நாடினேன். போலீசிலும் புகார் செய்தேன். ஆனால் இதுவரை யாரும் எந்த விசாரணையும் செய்யவில்லை. தாசில்தார் திருப்பதி மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனக்கு இரு பெண்குழந்தைகள் இருக்கும் நிலையில், மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை தாசில்தார் கந்தசாமி அந்த பெண் ஊழியர் சரண்யாவிடம் விளக்கம் கேட்பதற்காக வந்தார். இதனிடையே சரியாக வேலைக்கு வராததால் கண்டித்ததாகவும், அதன்காரணமாக அவர் பாலியல் புகார் கூறியதாகவும் தாசில்தார் திருப்பதி தரப்பில் கூறப்பட்டது.

    மேலும் அவர் கூறுகையில், பெண் ஊழியரை வேலையில் இருந்து நீக்கவோ, வேலையில் சேர்க்கவோ எனக்கு அதிகாரமில்லை என்றார். பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் சம்பவங்கள் தற்போது வெளியாகி வருகிற நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு தாசில்தார் பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #tamilnews
    செந்துறை அருகே விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டிஎஸ்பி, செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் தலைமையில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக் நடந்து வருகிறது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரியிலிருந்து நல்லாம்பாளையம் வரை நீர்வழி மற்றும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதையை அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பாதையை விவசாயிகள் பயன்படுத்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசி பட்டா நிலங்களை சேர்த்து மண் பாதை அமைத்தார்.

    இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் உஞ்சினி கிராமத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக்கல் சுரங்க நிர்வாகம் இந்த பாதையில் லாரிகளை இயக்க முயற்சித்தது. இதனை இலங்கைச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்தி தடுத்தனர்.

    கடந்த சில தினங்களாக மீண்டும் பாதை அமைத்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர். இதனை கண்ட இலங்கைச்சேரி விவசாயிகள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்காக எங்களது பட்டா நிலங்களை விட்டு கொடுத்துள்ளோம் என்று கூறினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் ஜோதி மற்றும் அரியலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தாஸ் ஆகியோர் பார்வையிட்டு விவசாய நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்துறை கிராம நிர்வாக அதிகாரி இளையராஜா, தலைமை சர்வேயர் அடங்கிய குழுவினர் 2 நாட்கள் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். அளவீடு செய்ததில் விவசாயிகள் பட்டா நிலம் ஒரு மீட்டருக்கு மேலாக சாலை பகுதியில் உள்ளது என்று அளவு காட்டினார்கள். மேலும் தங்களது வேலிகளை இந்த அளவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றனர். அதனை தொடர்ந்து விவசாயிகள் விட்டுக்கொடுத்த தங்களது பட்டா நிலங்களை மீண்டும் கைப்பற்றி வருவாய்த் துறையினர் கொடுத்த அளவு படி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் விவசாயிகள் வேலியுடன் அமைத்த பாதையில் அரியலூர் டி.எஸ்.பி.மோகன்தாஸ், செந்துறை தாசில்தார் உமாசங்கரி ஆகியோர் சென்று, பணியாளர்கள் உதவியுடன் பாதையில் மணலை கொட்டி லாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருப்பதால் ஸ்ரீவைகுண்டம் வடகால் கரையோர பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய குடியிருப்புகளை 15 நாளில் காலி செய்ய வேண்டும் என்று தாசிர்தார் உத்தரவிட்டுள்ளார்.
    ஸ்ரீவைகுண்டம்:

    மழை காலங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, தமிழகமெங்கிலும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், தாமிரபரணி வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப் பணித்துறையினர் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படியும், சப்-கலெக்டர் பிரசாந்த் மற்றும் வருவாய் ஆய்வாளர் வீரப்பன் ஆகியோரது ஆலோசனையின் பேரிலும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி, தாசில்தார் சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் கரையோர பகுதிகளான அண்ணாநகர், நளராஜபுரம், நளங்குடி, இசக்கியம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, பல வீடுகள் வாய்க்கால் கரையோரத்தில் தண்ணீரை ஒட்டினாற்போல் இருப்பதால் மழை வெள்ளக் காலங்களில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று பேசிய தாசில்தார் சந்திரன், 15 நாட்களில் வீடுகளை காலி செய்திட வேண்டும். சொந்த வீடோ, நிலமோ இல்லாத நபர்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார்.
    எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தாசில்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், தெற்கு காட்டூர், ரெகுநாதபுரம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு சேகரிக்கப்படும் எரிவாயு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூரில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சியின் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில் தெற்கு காட்டூரில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 500 மீட்டர் தூரத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதிக்கப்பட்டிருந்த பைப் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக எரிவாயுவும் தண்ணீரும் சேர்ந்து கொப்பளித்துக்கொண்டு வெளியேறி உள்ளது.

    இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் ஒ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஓ.என். ஜி.சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ராமநாதபுரம் தாசில்தார் சிவக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாயு கசிவால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட தால் குழாய் சேதமடைந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வெடிப்பை சரி செய்து விட்டனர். எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

    இனிமேல் வெடிப்பு ஏற்படாதவாறு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சென்னிமலை அருகே போலி பதிவு எண்ணில் கிராவல் மண் கடத்திய லாரியை பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி பறிமுதல் செய்தார்.
    சென்னிமலை:

    நேற்று முன் தினம் இரவு வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கொண்ட லாரியை நிறுத்தி பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி விசாரணை செய்தார். இந்த லாரியை அரச்சலூரை சார்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை பகுதியில் குவாரியில் இருந்து மண் எடுத்து வந்ததாகவும் மேட்டுக்கடை பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும் கூறினார்.

    மேலும் இந்த லாரியில் இரண்டு பதிவெண்கள் ஒட்டப்பட்டு இருந்தது கண்டு தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தார் அலுவலகத்திற்கு லாரி கொண்டுவரப்பட்டது. கிராவல் மண்ணுக்கு அபராதம் விதிக்க கோட்டாச்சியருக்கு பரிந்துறை செய்த தாசில்தார் போலி பதிவெண் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட ரமணியிடம் புகார் தெரிவித்தார்.

    இதனடிப்படையில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒட்டப்பட்ட இரண்டு எண்களுமே போலியானது என்பதால் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யும்படி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லாரியில் உள்ள இரண்டு எண்களுமே போலி என்பதால் வண்டியில் உள்ள சேஸ் நம்பரை வைத்து தான் லாரி உரிமையாளரை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    ஆண்டிப்பட்டி அருகே நள்ளிரவில் பதுங்கி மணல் டிராக்டரை தாசில்தார் பிடித்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை 11-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல், சவுடு, தூசு மணல், செம்மண் எடுப்பதற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. ஆண்டிப்பட்டி தாலுகா முழுவதும் டிப்பர், லாரி, டிராக்டர்களில் மணல் வண்டிகள் சாரை சாரையாக சென்ற வண்ணம் இருந்தது. அதிகளவு மண் வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனையடுத்து விவசாயிகளும், தன்னார்வ அமைப்புகளும் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மணல் எடுப்பதற்கான உரிமங்களை முழுமையாக ரத்து செய்தார். இதனால் மாவட்டம் முழுவதும் மணல் எடுக்கவில்லை.

    இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் கணேசபுரம் அருகே விருமானூத்து மெயின் ஓடை, சன்னாசியப்பன் ஓடை, புதுக்குளம் கண்மாய் ஓடை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் திருடி வந்தனர்.

    இந்நிலையில் ஆண்டிப்பட்டி தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் துறையினர் திருட்டு மணல் வண்டிகளை பிடிக்க ஜி.உசிலம்பட்டி கண்டமனூர் சாலை ஓரம் இரவில் பதுங்கி இருந்தனர். அப்போது லாடசன்னாசிபுரம் சாலை வழியாக இரவு 12 மணியளவில் மணல் ஏற்றி ஒரு டிராக்டர் வந்துள்ளது. அப்போது மறைந்திருந்த தாசில்தார் மணல் வண்டியை மடக்கி பிடிக்க நினைத்த போது, டிராக்டர் டிரைவர் வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து ஜீப்பில் வருவாய் துறையினர் விரட்டி சென்றுள்ளனர். ஆனால் டிராக்டர் டிரைவர் போக்கு காட்டி, வேறு பாதையில், விளக்கை அணைத்து விட்டு சென்றுள்ளார்.ஆனால் தாசில்தார் டீம் வண்டி சத்தத்தைக் கேட்டு பின் தொடர்ந்து 4 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்றுள்ளனர். டிராக்டர் டிரைவர் அருகிலிருந்த கண்மாய் அருகே சென்ற போது பாதையில்லாததால் வண்டியை நிறுத்தி ஓடியுள்ளார். அவரை விரட்டி பிடிக்க முற்பட்ட போது , கண் இமைக்கும் நேரத்தில் அவர் அருகில் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்து மறைந்துள்ளார். இதனால் மணலுடன் டிராக்டரை கொண்டு வந்து தாலுகா அலுவலகத்தில் நிறுத்தியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வறியோர் நிவாரண தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன் (வயது 52). இதே பிரிவில் வருவாய் ஆய்வாளராக சின்னக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    நிலக்கோட்டை அருகே உள்ள மெட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மனைவி கேசம்மாள் (42). கடந்த ஜனவரி மாதம் பாம்பு கடித்து இறந்து விட்டார். அவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் இழப்பீட்டு தொகை பெறுவதற்காக கேசம்மாளின் சகோதரர் ஜோசப் செல்வராஜ் (52) தாசில்தார் சரவணனிடம் விண்ணப்பம் அளித்திருந்தார்.

    இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனில் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என தாசில்தாரும், ரமேசும் கூறியுள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஜோசப் செல்வராஜ் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகளை ஜோசப் செல்வராஜ் தாசில்தாரிடம் வழங்கினார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன், ஆய்வாளர்கள் ரூபாகீதா ராணி, கீதா ஆகியோர் சரவணன் மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.



    ×