search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்.ராதாகிருஷ்ணன்"

    பாராளுமன்ற தேர்தல் களைகட்டி உள்ள நிலையில் ஈரோடு உள்பட 4 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். #AmitShah #bjp #parliamentelection

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தல் களைகட்டி உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொங்க மண்டலத்தை மையப்படுத்தி பாரதிய ஜனதா காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    இதை தொடர்ந்து பா. ஜனதாவின் தலைவர் அமித்ஷா கொங்கு மண்டலம் வரதிட்டமிட்டார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமித்ஷா சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

    கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டுக்கு புறப்பட்டார். ஈரோடு சித்தோடு அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.

    அங்கு அமித்ஷா கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நெசவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது நெசவாளர்களின் பிரச்சினை அவர்களின் முக்கிய கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

    அமித்ஷாவிடம் நெசவாளர் பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை கேட்டு கொண்ட அமித்ஷா பரிசீலிப்பதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 4 பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது.

    இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, வெற்றிக்கான வியூகங்களை பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். #AmitShah #bjp #parliamentelection

    சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணன் தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். #Minister #PonRadhakrishnan #PrivilegeMotion #KeralaCop #YathishChandra
    புதுடெல்லி:

    சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரின் போராட்டங்களை தடுப்பதற்காக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் 21-ந்தேதி பா.ஜனதா தொண்டர்களுடன் சென்றார். இருமுடிக்கட்டுடன் சென்ற அவரை ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திரா தலைமையிலான போலீசார் நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.



    பின்னர் மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் அரசு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், மீதமுள்ளவர்கள் வந்த தனியார் கார்களை அனுமதிக்கமாட்டோம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், பிற பக்தர்களுடன் அரசு பஸ்சில் சபரிமலைக்கு சென்றார்.

    இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஐ.பி.எஸ். அதிகாரி யதிஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் வழியில் போலீசார் என்னை தடுத்து நிறுத்தி, தனியார் வாகனங்கள் அதற்கு மேல் செல்ல முடியாது எனக்கூறினர். மேலும் அரசு பஸ்களில் பக்தர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

    சபரிமலையில் நிலச்சரிவு மற்றும் நெரிசல் ஏற்படும் எனக்கருதி தனியார் வாகனங்களை அனுமதிக்கவில்லை என போலீசார் கூறினர். ஆனால் அரசு பஸ்களை அனுமதிக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பொறுப்பேற்க முடியுமா? என்று என்னிடமே போலீஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார். இது மக்கள் பிரதிநிதியை அவமதிக்கும் செயலாக கருதுகிறேன்.

    இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இதைக்கேட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இந்த பிரச்சினை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.  #Sabarimala #PinarayiVijaya #PonRadhakrishnan
    தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP

    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் காங்கிரசுடன் தி.மு.க. மீண்டும் கூட்டணி சேருவது கருணாநிதியின் வார்த்தைப்படி கூடா நட்பு ஒன்று கூடுகிறது. இந்த கூட்டணியால் மீண்டும் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியையும் அமைக்க துடிக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் 2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள்.

    இலங்கை அரசால் தமிழர்களை ஒரு காலத்திலும் வெல்ல முடியாது. தமிழர்களை வெல்வதற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு துணை நின்றதாக ராஜபக்சே ஏற்கனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது அவர் இலங்கை பிரதமராகவும் ஆகி இருக்கிறார்.

    காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்பது மீண்டும் 2009-ஐ நோக்கி செல்வதற்கு சமம். அந்த நிலைமை மீண்டும் உருவாவதற்கு இடம் கொடுக்க கூடாது என்பது எனது வேண்டுகோள்.


    தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் 1972-ல் அ.தி.மு.க. உருவெடுத்ததும், அதேபோல் ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் உருவானதும்.

    இப்போதைய அரசியல் சூழலில் கழகங்கள் இல்லாத தமிழகத்தை காண மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வலுவான கூட்டணி அமைய வேண்டும். வருகிற தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்கு பா.ஜனதா முயற்சிக்கும். அதே நேரத்தில் கூட்டணிக்காக பா.ஜனதா யாரிடமும் கெஞ்சாது.

    தம்பித்துரை, பா.ஜனதாவை ஏன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்று தெரியவில்லை. அரசியல் காரணங்களுக்காக யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசிவிடக் கூடாது. தம்பித் துரை, பா.ஜனதாவை விமர்சனம் செய்வதற்கு பின்புலம் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    கமல் கட்சி தொடங்கி இருக்கிறார். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. முதலில் கட்சியை தொடங்கி அரசியல் களத்துக்குள் வரட்டும். மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பார்ப்போம். இப்போதே அவர்கள் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை சொல்ல முடியாது.

    இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP

    சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால், கிடப்பில் போடப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற வேண்டும் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #PonRadhakrishnan #BJP
    சென்னை:

    சென்னை துறைமுக தின விழா மற்றும் நவீன பன்னாட்டு பயணிகள் முனையம் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தை திறந்துவைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சென்னை துறைமுக தலைவர் ப.ரவீந்திரன், சுற்றுலாதுறை ஆணையர் வி.பழனிகுமார், சுங்கத்துறை ஆணையர் அஜித்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள நவீன பன்னாட்டு பயணிகள் முனையத்தின் மொத்த பரப்பளவு 2 ஆயிரத்து 880 சதுர மீட்டர் ஆகும். 17 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த முனையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    விழாவில், சிறப்பாக பணிபுரிந்த துறைமுக அதிகாரிகள், ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அதிகாரிகள் மற்றும் அவரது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் 3 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் சென்னை துறைமுகம் பெரிய துறைமுகமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த துறைமுகத்தின் நிகர லாபம் ரூ.6 கோடியாக இருந்தது. தற்போது இதன் நிகர லாபம் ரூ.230 கோடியாக உயர்ந்து உள்ளது.

    இந்தியாவின் முதன்மை துறைமுகமாக இதனை கொண்டு வர சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். சென்னை துறைமுகம் முதன்மை பெற வேண்டுமானால் கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தை உயிர்பெற செய்ய வேண்டும்.



    இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக துறைமுக அதிகாரிகள், சாலை மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

    கூடிய விரைவில் இந்த திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்று நம்புகிறேன். தமிழக சுற்றுலா துறையானது கன்னியாகுமரி, ராமேசுவரம், மணப்பாடு, மகாபலிபுரம் வரை பயணிகள் போக்குவரத்துக்கான ஒரு திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

    அந்த திட்டத்தை திருவனந்தபுரம் கோவளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்சிடம் தெரிவித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மத்திய மந்திரி கே.ஜெ.அல்போன்ஸ் கூறுகையில், ‘உலக அளவிலான சுற்றுலாத்துறையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது இந்தியா 65-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் 2-வது இடத்திலும், உள்நாட்டு சுற்றுலாத்துறையில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை முதல் கன்னியா குமரி வரையிலான கடல்வழி பயணிகள் போக்குவரத்து உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். #PonRadhakrishnan #BJP 
    தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #tnministers

    மதுரை:

    மதுரையில் இன்று நடந்த பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் இல்ல விழாவில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதார் கார்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இதன் வாயிலாக சாதாரண மக்களும் ஆதார் கார்டு மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசின் மீதான பழியும் நீங்கியுள்ளது.

    தமிழக அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் அரசியல் விமர்சனத்துக்குட்பட்டவை. எனவே அவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சு காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.


    பாராளுமன்ற தேர்தலில் முன்பைவிட 350 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக பாரதீய ஜனதா முடிவு செய்யும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பது தான் பாரதீய ஜனதாவின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #tnministers

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் துணிச்சலான நடவடிக்கையே காரணம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Modi #PMModi #PonRadhakrishnan
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரையில் பொருளாதார வளர்ச்சி அடைந்து இருக்கிறது. பொருளாதார தவறுகளை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. தற்போது பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கிறது.

    மோடி அரசில் வாகனங்கள், விவசாயம், தொழிற் உற்பத்தி, தொழில்முனைவோர் முன்னேற்றம், தொழில் தொடர்பான வாகனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. உலகளவில் நம்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதற்கு காரணம் பிரதமர் மோடியின் துணிச்சலான தேச பக்தியான நடவடிக்கைகள்தான்.

    மகாராஷ்டிராவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு ராகுல்காந்தி உள்பட மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மகாராஷ்டிரா உயர் போலீஸ் அதிகாரி, ஆயிரக்கணக்கான ஆவணங்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார்.

    அவர்கள் பயங்கரவாதிகள் திரைமறைவில் இருந்து சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறவர்கள். அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொலை செய்யும் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.



    இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணை போகின்ற மாதிரி அவசரப்பட்டு ராகுல்காந்தி உள்ளிட்ட மற்ற கட்சியினர் அறிக்கை வெளியிடக்கூடாது. இன்று வரை ராஜீவ் காந்தி படுகொலை பற்றி பேசி வருகிறோம்.

    அதே போல ஒரு கொலை மீண்டும் நடக்க வேண்டுமா? அதற்கு எந்த முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

    1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தியை எந்த வழியில் கொலை செய்தார்களோ அதே வழிமுறையை பின் பற்றி பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் அறிக்கைகள் இப்படிப்பட்ட பயங்கரவாதிகளுக்கு துணையாக அமைந்து விடும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ராஜீவ் காந்தி கொலை உள்பட பல சம்பவங்கள் நடந்தது. அதுபோல இந்த ஆட்சியிலும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது.

    ஆந்திர மாநிலத்தில் செம்மர கடத்தலில் தமிழர்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து தமிழக அரசு முறையாக கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #PMModi #PonRadhakrishnan
    வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளாவுக்கு பயணம் செய்யவுள்ளது. #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 370க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளா சென்று ஆய்வு நடத்த உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களை ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவற்கு தடையாக இருப்பது அரசியல் கட்சியினர் அல்ல. வன்முறை, கலவரம் போன்றவற்றை உருவாக்க வேண்டும், அதன்மூலம் திட்டத்தை தடுக்க வேண்டும் என செயல்பட்டு வருபவர்களைத்தான் நான் எதிர்க்கிறேன்.

    ஏற்கனவே தமிழகத்தில் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் அமைத்து செயல்படுவதாக நான் கூறி வந்தேன். இதுதொடர்பாக தமிழக அரசை பலமுறை எச்சரித்தும் தீவிரவாதத்தை தடுக்க அரசு தவறி விட்டது. இதனால் தீவிரவாதிகளின் செயல்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.

    மீத்தேன் திட்டம், நியூட்ரின் திட்டம், கெய்ல் எரிவாயு திட்டம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூட பயங்கரவாதிகள் ஊடுருவி தான் பிரச்சினை ஏற்படுத்தி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முன்பே அதற்கு எதிராக நான் 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது என்னை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். தற்போது ஸ்டெர்லைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கலவரத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஒழிக்க போலீஸ் அதிகாரி தேவாரத்துக்கு முழு அதிகாரம் கொடுத்தார். அதன் விளைவாக நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டனர். இங்கிருந்து ஓடி ஆந்திரா மற்றும் மற்ற மாநிலங்களுக்கு சென்றனர்.

    ஆனால் இன்று அந்த நிலை வேறு. வேறு மாநிலங்களில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்துள்ளனர். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் அதை பயன்படுத்தி இளைஞர்களை தீவிரவாதிகள் மூளைச்சலவை செய்கிறார்கள். தீவிரவாதிகள் விவகாரத்தில் வேடிக்கை பார்க்காமல் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    விவசாயத்தை அழிப்பது மத்திய அரசின் இலக்கல்ல. ஏனெனில், எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.11 லட்சம் கோடியை விவசாயிகளுக்கு வங்கி கடனாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையையும் பலமடங்கு உயர்த்தி உள்ளது. விவசாயிகளை உயர்த்தவேண்டும் என்றால் அவர்களின் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த வேண்டும். அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அதை மனதில் கொண்டே மத்திய அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறது. 150 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு தந்தது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுதான்.

    இதுதவிர ஆண்டுக்கு 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றுநீரை தமிழகத்துக்கு கொண்டுவரவும் திட்டம் வகுத்துள்ளது. இதற்கான கூட்டம் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீணாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்று நீரை தமிழகத்துக்கு தரவேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறும்போது ‘தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை‘ என்றே கூறினார். இதில் இருந்தே தமிழக விவசாயிகளின் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை அறிந்துகொள்ளமுடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சத்துணவு முட்டை வினியோகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான் பதிலளித்தபோது ‘முட்டை வினியோக ஊழல் தொடர்பாக தகுந்த விசாரணை நடத்த வேண்டும்‘ என்று கூறினேன்.

    ‘தமிழக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்‘ என்பதைத்தான் ‘மொட்டை அடிக்கப்படுகிறார்கள்‘ என்றேன். எனவே நான் பேசியதன் கருத்தை புரிந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் பேச வேண்டும். தமிழகம் ஊழல் மயமாக மாறிவிட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊழலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan
    தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகள் நிலைமை மாறும் என்று திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan
    திருச்சி:

    திருச்சியில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கே: மத்திய அரசின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறதே.

    ப : எந்த நடவடிக்கை அப்படி உள்ளது?

    கே : உயர்கல்வி ஆணையத்தை (யு.ஜி.சி) மத்திய அரசு மாற்றி அமைப்பதாக கூறப்படுகிறது.

    ப : எப்போதும் காலம் காலமாக பயன்படுத்தப்படுகின்ற ஒருமுறையை மாற்றி அமைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றால் அதை மாற்றி பயன்படுத்துவது நல்லது. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு செய்யும் துரோகம். மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    கே : தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளாரே?

    ப : அவர் அ.தி.மு.க. அரசை மட்டும் குறை சொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைப்படுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார்.

    கே : ஊழலை ஒழிப்பதாக கூறி வரும் பா.ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளில் யாரை கைது செய்துள்ளது என தம்பிதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளாரே?


    ப : இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க முடியாது. யாரையும் உள்நோக்கத்தோடு கைது செய்ய முடியாது. ஊழல் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கைது செய்யும் போது அவர்கள் தப்பிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    கே : 2019-ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறப்படுவது பற்றி?

    ப : நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கிறார்கள். ஏன் என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை.

    ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகிறார்கள். இதை கண்டு பயப்படுகிறவர்களுக்கு அது அவர்களது சொந்த பயத்தை காட்டுகிறது.

    கே : பா.ஜனதா நிலை என்ன?

    ப : வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகபடியான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலிலும் ஆளுமையை நிரூபிக்கும். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இருக்கிறது.

    கே : வரும் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூறியிருப்பது பற்றி பதில் என்ன?

    ப : தேர்தலுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் எதையும் கூறலாம். தேர்தல் வரும் போது தான் எதை தின்றால் பித்தம் தெளியும் என்றும் கிடைக்கிறதெல்லாம் கிடைக்காதா? என்று அனைத்து அரசியல் கட்சிகளும் நினைப்பார்கள்.

    தேர்தலின் போது இது மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #BJP #PonRadhakrishnan #AssemblyElection
    தமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    விசாகப்பட்டிணத்தில் கப்பல் போக்குவரத்து துறை சார்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மற்றும் இணை மந்திரி மாண்டியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

    அப்போது ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் இருந்து 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை காவிரியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.

    ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது, அது தீரும் வரை தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட சென்னைக்கு தண்ணீர் கொடுத்தேன் என்றார்.

    ஜி.எஸ்.டி. குறித்தான தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுக்கக் கூடாது.


    தமிழகத்தில் முட்டையிலும் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தமிழக மக்கள் முட்டையால் மொட்டை போடப்பட்டு இருக்கிறார்கள். முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்.

    பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் ஊழல் பெருகுகிறது என்றுதான் சொன்னார். ஏற்கனவே ஆண்ட அரசையோ, தற்போது ஆளுகின்ற அரசையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தற்போது தேர்தல் கூட்டணி பற்றி சொல்ல முடியாது. அதற்கு வெகுநாள் இருக்கிறது.

    தி.மு.க. பெரிய ஊழலில் திளைத்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய ஊழலில் இருந்துள்ளது. ஆனால் தி.மு.க. மத்தியில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சேருகிற இடத்தை பொறுத்துதான் சேருபவர்கள் இருப்பார்கள்.

    டாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைப்போல் வசனம் பேசுபவர்கள் கடைசி நேரத்தில் அதை மாற்றுவார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.

    அ.தி.மு.வை நடத்தும், அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள், ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக ஊழலை எதிர்க்கின்ற கட்சி. தூய்மை, நேர்மை வழியில் நடக்கின்ற கட்சி.

    நடிகர் கமல் தன்னை பகுத்தறிவாளன் என்றும் ஊழல், ஏழ்மையை ஒழிக்க அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். தமிழக மக்களை ஏழை ஆக்கக் கூடாது.

    பயங்கரவாதத்தை பற்றி நான் பேசியதால்தான் தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் மத்திய துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசாலோ, தமிழக போலீசாராலோ கைது செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #EggNutritionCorruption
    தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.#ponradhakrishnan
    சென்னை:

    தற்காலிகமாக நிறுத்தப்படவிருக்கும், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு மேற்கொள்ளப்பட்ட ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

    மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 42 ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனம், மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவையை நடத்தி வருகிறது. 80 சதவீதம் பயணிகள் பயணிக்கும் இந்த விமான சேவை, எவ்வித காரணமும் அறிவிக்கப்படாமல் 12-ந் தேதி(நாளை) முதல் நிறுத்தப்பட உள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு வந்தது.

    அதைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நடைபெற்று வருவதையும், ரூ.1,500 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் மதுரையில் அமைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மற்றும் ராமேசுவர சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, அதன் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் இயக்குனர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தனித்தனியாக கடிதம் எழுதி மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை நிறுத்தாமல் தொடர வலியுறுத்தினார்.



    மேலும், பொன்.ராதாகிருஷ்ணன் தனது தனிச் செயலாளரிடம் நேரடியாக சென்று விமானத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிய அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஹஜ் புனித பயணம் நடைபெற்று வருவதால் இந்த விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதின் பேரில் 20 நாட்களுக்கு பின் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனம் மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பைக்கு செல்லும் விமான சேவை இயக்கப்படும் என்பதையும், விரைவில் மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்து உள்ளனர்.

    இதனால் விமானம் மூலம் சுற்றுலா, வியாபார வர்த்தகம், மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்போரின் பயணம் எந்த தடையுமின்றி 20 நாட்களுக்கு பிறகு தொடரும் என்றும், அதே போல பரிசீலனையில் உள்ள மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவையும் விரைவில் தொடங்கும் என்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ponradhakrishnan
    தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PonRadhakrishnan

    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் தங்களை மூளைச்சலவை செய்ததாக மக்கள் கூறி இருக்கிறார்கள். இங்குள்ள தி.மு.க. உள்ளிட்ட கட்சி தலைவர்களின் மூளை டிரைகிளீனருக்கா போய்விட்டது? மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    முந்தைய காலங்களில் மத்திய ஆட்சியை கேள்வி கேட்டது உண்டா? மாநில அரசு செயல்பட தவறும் போது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பயங்கரவாதிகளுக்கு சமூக விரோதிகள் என்ற கவுரவம் வேண்டாம். தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன்.

    அவர்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் மகிழ்ச்சி. தேவைப்பட்டால் பயங்கரவாதிகள் மீது மத்திய அரசே நடவடிக்கை எடுக்கும்.


    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் சென்னையில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு வளர்ச்சியை கொடுப்பது. இந்த திட்டம் சேலம், கோவையை தாண்டி இருக்கும் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

    இந்த திட்டத்தை எதிர்ப்பதற்கான அடிப்படை நோக்கம் என்பது தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும். தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டும். புது தொழிற்சாலைகள் வரக்கூடாது என்ற எண்ணம் தான்.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் 60 சதவீதம் மேற்கு மாவட்டங்களில் உள்ளது. அந்த மாவட்ட மக்களின் முயற்சியில் இந்த திட்டம் வருகிறது. அதை கெடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

    சில திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடியும். சில திட்டங்கள் தாமதமாகலாம். கன்னியாகுமரியில் நாலு வழிச்சாலைக்கு 2003-ல் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதுதான் செயல்படுத்தப்படுகிறது.

    மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் கிடப்பதற்கு யார் காரணம்? இதைப்பற்றி தி.மு.க.வோ மற்ற கட்சிகளோ பேசுகிறதா? நான் அந்த துறை பொறுப்பில் இருந்தபோது பிரச்சினைகளை அறிந்து மீண்டும் பணிகளை தொடங்கும் நிலைக்கு கொண்டு வந்தேன்.

    பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் 2 தொகுதிகளில் தோற்றதால் கட்சி செல்வாக்கை இழந்து விட்டதாக கூறுவது தவறு. இதுதான் ஜனநாயகத்தை பா.ஜனதா எப்படி கடை பிடிக்கிறது என்பதற்கு அடையாளம். மற்ற மாநிலங்களில் இடைத்தேர்தல் எப்படி நடக்கிறது?

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் எத்தனை கட்சிகள், எத்தனை வியூகங்கள் அமைத்தாலும் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan

    ×