search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை"

    • இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    • பார்வை குறைபாடுள்ள வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப் பந்தயத்தில் அவர் பங்கேற்றார்.

    பிரான்ஸ் தலைநகரில் பாரா விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை இத்தாலியைச் சேர்ந்த வாலண்டினா பெட்ரில்லோ பெற்றுள்ளார்.

    50 வயதான வாலண்டினா பெட்ரில்லோ பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான T12 பிரிவில் 200மீ மற்றும் 400மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார்.

    1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலிய ஓட்டப்பந்தய வீரர் பியட்ரோ மென்னியா தங்கம் வென்றதைப் பார்த்து 7 வயதிலேயே தடகள விளையாட்டின் மீது காதல் கொண்டதாக பெட்ரில்லோ தெரிவித்தார்.

    தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆணாக வாழ்ந்த வாலண்டினா பெட்ரில்லோ கடந்த 2017 ஆம் ஆண்டு ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு திருநங்கையாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை.
    • பீகார் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் ஆவார்

    மான்வி மது காஷ்யப் என்ற திருநங்கை பீகார் மாநிலத்தின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் ஆகியுள்ளார். சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் கனவு நனவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    பீகாரின் பங்கா மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவரை பல பயிற்சி மையங்கள் நிராகரித்த போதிலும், தனது விடாமுயற்சி காரணமாக தற்போது சப்-இன்ஸ்பெக்டராகியுள்ளார்.

    இது தொடர்பாக மான்வி மது காஷ்யப் கூறுகையில் "எனக்கு இது கனவு நனவானது போல் உள்ளது. எனக்கு உதவியாக என்னுடைய இருந்த அனைவருக்கும் மிகவும் நன்றியுள்ளவனராக இருக்கிறேன்.

    ஆனால் என்னுடைய பயணம் இங்கேயுடன் நின்று விடாது. கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணி செய்தால் எதையும் அடைய முடியும் என்ற தகவலை எனது கிராம மக்களுக்கு தெரிவிக்க, போலீஸ் உடையுடன் சொந்த கிராமத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

    எனது வெற்றிக்கான பாதை சவால்களால் நிறைந்தது என்று நான் சொல்ல வேண்டும். குறிப்பாக நான் ஒரு திருநங்கை என்ற அடையாளத்தின் காரணமாக. நான் பல தடைகளையும் பாகுபாடுகளையும் சந்தித்தேன். திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு நிறைய செய்ய வேண்டும்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு தயாராகுவதற்காக பாட்னாவில் பல பயிற்சி மையங்களுக்கு சென்றேன். ஆனால் நான் அங்கே இருப்பது சூழ்நிலையை சீர்குலைக்கும் எனச் சொன்னார்கள். இது என்னை மிகவும் பின்னடைவாக இருந்தது. ஆர்வலர் ரேஷ்மா பிரசாத், ஆசிரியர் ரஹ்மான் ஆகியோர்தான் நான் இந்த நிலைக்கு உயர முக்கிய காரணம்" என்றார்.

    2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பீகாரில் 40,827 திருநங்கைகள் உள்ளனர்.

    • திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.
    • பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்.

    3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திருநங்கைகளைச் சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி விழாவுக்கு முன், பாஜக எம்பியும், முன்னாள் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சருமான வீரேந்திர குமார் சமூகத்தினரை தனது இல்லத்தில் வரவேற்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " பிரதமர் மோடியின் 'அனைவரின் ஆதரவும், அனைவரின் நம்பிக்கையும், கூட்டு முயற்சியும்' என்ற அழைப்பின் ஒரு பகுதி.

    விழாவில் திருநங்கைகளை பிரதமரின் உள்ளடக்கிய செய்தியை மேம்படுத்துவதாகும். திருநங்கைகளுக்கு அதிகாரமளிப்பதில் பங்களிப்பைச் செய்துள்ளார் பிரதமர் மோடி.

    பதவியேற்பு விழாவிற்கு திருநங்கைகள் முறைப்படி அழைக்கப்படுவது இதுவே முதல் முறை.

    உபி பாஜக பிரிவைச் சேர்ந்த சோனம் கின்னார், புதிய அரசாங்கத்திற்கு ஆசி வழங்குவதற்காக 50 சமூக உறுப்பினர்களுடன் இங்கு வந்துள்ளனர்.

    ஜாதி அடிப்படையிலான அரசியலால் பிரதமர் மோடி எதிர்பார்த்த அளவுக்கு சீட் கிடைக்காதது வருத்தமளிக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது, நிலைமை மேம்படும்" என்றார்.

    • தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன.
    • பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    மதுரை:

    உயர்கல்வி பயின்று சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் தணியாத வேட்கை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எல்லோருக்கும் இந்த விருப்பம் நிறைவேறும் என்பதில் உறுதியில்லை.

    குறிப்பாக உயர்கல்வி படிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு போதிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் மூன்றாம் பாலித்தனவர் என்று கூறப்படும் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

    தற்போது சமூகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கூடங்களிலும், இதர தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கான வாய்ப்புகளும், உரிமைகளும் மெல்ல மெல்ல கிடைக்க தொடங்கி உள்ளன. இதற்கு தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன. குறிப்பாக திருநங்கைகள் சமூகத்தில் இதர பாலினத்தவரைபோல இயல்பாக கலந்து செயல்படும் வகையில் அனைவருக்கும் மனமுதிர்ச்சி ஏற்படவில்லை.

    இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு தடைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் உரிய இடத்தை அடைய முடியாத நிலையும் நீடிக்கிறது.

    இந்த சூழலில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மஸ்தானி என்ற திருநங்கை ஒருவர் தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி உயர் கல்வி பயில்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இணைந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து மஸ்தானி கூறுகையில், நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது எனது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் என்னால் இயல்பாக பிறருடன் பழக இயலாத நிலை ஏற்பட்டது.

    இதை நான் கூறிய போது எனது குடும்பத்தினரும் என்னை தனிமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் நான் என்னை திருநங்கையாக உணர தொடங்கினேன். அதே நேரத்தில் 12-ம் வகுப்பு கடந்த 2019-ம் ஆண்டு 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி ஆனேன். ஆனால் என்னை திருநங்கையாக மாற்றிக்கொள்வதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் என்னால் மேல்படிப்பு படிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகள் சமூகத்தினருடன் இணைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு உயர்கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இருந்துள்ளது. அவருக்கு கைகொடுக்க மாற்று பாலினத்தவர் ஆதார மையம் முன்வந்தது.

    ஏற்கனவே திருநங்கையாக மாறி சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளையும் சந்தித்து இன்றைக்கு தனித்துவ ஆளுமையாக உயர்ந்துள்ள பிரியா பாபு என்பவர் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தை நிறுவி, இதுபோன்று திருநங்கைகளாகவும், மாற்று பாலினத்தவராகவும் மாறி வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், அரசின் சலுகைகள், அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து மஸ்தானிக்கும் உயர்கல்வி பயில்வதற்கு அந்த ஆதார மையம் முயற்சி மேற்கொண்டது. இதுகுறித்து அதன் நிறுவனர் பிரியா பாபு கூறுகையில், மஸ்தானி தொடக்கத்தில் மாற்று பாலினத்தவரோடு இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டிருந்தார். அவருடைய லட்சியமான உயர் கல்வி பயில்வதற்கு உதவ எங்களது நிறுவனம் முன் வந்தது. நாங்கள் அவர் கல்வி பயில நிதி உதவி செய்ய முயன்றோம்.

    மேலும் அவர் தனது புதிய அடையாளத்துடன் கல்லூரியில் இணைந்து பயில்வதற்கான முயற்சியை செய்தோம். இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மஸ்தானி உயர்கல்வி பயில்வதற்கு நிச்சயம் உதவுவோம் என உறுதி அளித்தனர். இது குறித்து மஸ்தானி மேலும் கூறுகையில், மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் முயற்சியில் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நான் பி.ஏ. (பொருளாதாரம்) படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

    நான் உயர்கல்வி பயில வேண்டும் என்பது தான் எனது தாயாரின் ஆசையாகும். ஆனால் திருநங்கையாக மாறிய பிறகு குடும்பத்தினரின் உதவி இல்லாத நிலையில் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் மூலமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    தற்போது நான் உயர் கல்வி படிப்பது எனது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அடைந்த போதிலும் என்னை அவர்களோடு சேர்த்து கொள்ள விருப்பம் இல்லை. அதே நேரத்தில் கல்லூரியில் பெண்கள் விடுதியில் தங்கி பயில நிர்வாகம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    சமூகத்தில் மாற்று பாலினத்தவர் தற்போது காவல் துறை அதிகாரிகளாகவும், இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரிகளாகவும் உயர்ந்து வருகின்றனர். மஸ்தானி போன்ற மாற்று பாலினத்தவர் உயர்கல்வியும், சட்டமும் பயின்று அனைத்து மாற்று பாலினத்தவர் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முன்வரும் போது இன்னும் கூடுதலான வாய்ப்புகளும், தன்னம்பிக்கையும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஏற்படும் என்பது நிதர்சனம். பாலியல் பேத மற்ற வகையில் அதற்கான வழியை உருவாக்கி கொடுக்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமையாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    • நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.
    • 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதுடன் நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான திருநங்கைகள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் ஆடி வந்து அம்மனை வழிபட்டனர்.

    மேலும் 54 தீச்சட்டிகள் சுமந்தும், 28 தீச்சட்டிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது. இது மட்டுமின்றி 21 அடி நீளமுள்ள அலகு குத்தி கோவிக்கு வந்து காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இதனால் சித்திரை திருவிழா களைகட்டியது. 

    • பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார்.
    • நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283. தமிழகத்தில் தேர்வு எழுதியதும் அவர் ஒருவர்தான்.

    பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார். எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையும். அவர் படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார்.

    • புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது.
    • சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல்.

    ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

    புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின  ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.

    தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 

    • திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
    • திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

     மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

    இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை.
    • இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தின் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி (46). துறவியான அவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார்.

    இந்த சூழலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களமிறங்கி உள்ளேன். திருநங்கைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை.

    இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எங்களுக்கு நாட்டில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவிப்பது இல்லை. அகில இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தெரிவித்தார்.

    • ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
    • பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாகர்கோவில்:

    ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.

    மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.

    பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.

    இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.

    அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-

    டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.

    இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.

    என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.
    • திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது.

    திண்டுக்கல்:

    விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்கள் சாதித்து வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம்பதித்த நிலையிலும், ஆணுக்கு நிகராக சமத்துவம் கிடைப்பதற்கு சிலநேரம் போராட வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பிறந்த திருநங்கைகளின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.

    திருநங்கைகள் சமுதாயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கு போராடி வருகின்றனர். அதேநேரம் திருநங்கைகளுக்கு வேலை கிடைக்குமா? என்ற கேள்வியை தகர்த்து ஒருசில திருநங்கைகள் திறமையால் சாதித்து விடை எழுதி வருகின்றனர். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் தெற்கு ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

    அவருக்கு ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், முதன்மை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, எஸ்.ஆர்.எம். தொழிற்சங்க கோட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரபீக் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக திருநங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழும் சிந்து கூறுகையில், எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நான் பி.லிட் தமிழ் இலக்கியம் படித்துள்ளேன். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி வந்தேன். ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன்.

    இதற்கிடையே சிறு விபத்தில் எனக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து, இன்று (நேற்று) பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். திருநங்கையாக பிறந்து விட்டோம் என்ன செய்வது என்று சோர்ந்து போய்விடவில்லை.

    மனம் தளராமல் நன்றாக படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். எல்லோருடைய வாழ்விலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே திருநங்கைகள் தங்களுக்கு தான் பிரச்சனை என்று நினைத்து மனம் தளர்ந்து விடக்கூடாது. கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்றார்.

    • சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கூட்டம் அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றுபவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. பாலின பாகுபாடின்றி அவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியமே வழங்கப்படும். ஜனவரியில் இருந்து புதிய முறை நடைமுறைக்கு வருகிறது.

    மற்றொரு முக்கிய முடிவாக புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆணுக்குரிய தன்மையை கொண்ட ஒருவர் ஆபரேஷன் மற்றும் பாலின மறுசீரமைப்பு சிகிச்சை முறைகள் மூலம் பெண்ணாக மாறினாலும் அவர் ஒரு போதும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டின் மாண்பையும், நேர்மையையும், வீராங்கனைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உங்களது விளையாட்டுக்கு எது சரியாக இருக்கிறதோ அதற்கு ஏற்ப பாலின தகுதி கொள்கையை நிர்ணயித்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியது. இதன்படியே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இதற்காக கடந்த 9 மாதங்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் உள்ளூர் போட்டிகளில் பாலின தகுதி வரைமுறையை பின்பற்றும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

    ×