search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 191853"

    • மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது.

    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சிக குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த திட்டத்தின் முதல் சிறப்பு முகாம் ராயபுரம் மண்டலத்தில் நடைபெற்றது.

    இந்த நிலையில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது. புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து மனுவாக அளித்தனர். குறிப்பாக தெருவிளக்கு, குப்பை அகற்றுதல், குடிநீர்-கழிவுநீர் தொடர்பாக ஏராளமானோர் மனு அளித்து இருந்தனர்.

    இந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மேலும் அவர் கோரிக்கை மனு வழங்கிய பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

    சிறப்பு முகாமில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அவர் பேசும் பாோது, மக்களைத்தேடி மேயர் திட்டம் 15 மண்டலங்களிலும் நடந்து முடிந்தவுடன் மக்களைத்தேடி மேயர் செல்ல வேண்டும். தற்போது மண்டல அளவில் மேயர் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கிறார். வரும் காலங்களில் பகுதி வாரியாக அவர் மக்களை சந்திக்க வேண்டும். முதல் கட்டமாக குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்வாயையொட்டி வசிப்பவர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    இதில் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தாயகம் கவி எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் இசையரசன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்வத்பேகம், நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் அன்பரசு, கோவில் துணை ஆணையர் விஜயா, வனச்சரக அலுவலர் அருள்நாதன் கலந்து கொண்டனர்.

    • புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர்.

    திருவொற்றியூர்:

    மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் 136 விசைப்படகுகள் அருகில் இருந்த படகுகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதியும், கட்டப்பட்டிருந்த வார்ப்பு பகுதி மீது மோதியும் பலத்த சேதம் அடைந்தன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கடலோர கிராமங்களில் மாண்டஸ்புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட 124 மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.4.67 கோடி நிவாரண நிதியை வழங்கினர். நிகழ்ச்சியில் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் இளைய அருணா, எம்.எல்.ஏக்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள், சுரேஷ், ஜெபதாஸ் பாண்டியன், நிர்வாகிகள் பாண்டி செல்வம், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
    • 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தற்போது வசதியான பஸ் நிலையம் இல்லை. இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதியே பஸ் நிலையமாக உள்ளது.

    சென்னை மாநகர், அரசு, தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாமல்லபுரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாமலல்லபுரம் புறநகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிநவீன பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் விடப்பட் டது.

    இதை ஏற்று திருக்கழுக்குன்றம் சாலை பகுதி, பக்கிங்காம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக சென்னை பெருநகர திட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து, ஓராண்டு கடந்தும் கிடப்பில் உள்ளது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை எம். எல்.ஏ. பாலாஜி இத்திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என அறிவித்துள்ளார்.

    • வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன.
    • சட்டநாதர் கோவில் என்பது பஞ்ச ஆரண்ய தலங்களில் வனம் சார்ந்த 2-வது கோவில். அவர் கோரிய கும்பாபிஷேக பணிகள் வருகிற 16-ந்தேதி அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.காமராஜ் (நன்னிலம்), நன்னிலம் வாஞ்சியம் வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் சேகர்பாபு, "வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தை பெறுகின்ற அமைப்பு, பசுமடம் போன்ற 5 பணிகள் ரூ.1.40 கோடி செலவில் அறம் சார்ந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கோவிலுக்கு பாலா லயம் நடத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் பணிகளை நிறைவேற்றித் தந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.

    அப்போது உறுப்பினர் காமராஜ், "சோழவள நாட்டில் பஞ்ச ஆரண்யங்கள் என்று 5 தலங்கள் இருக்கிறது. ஒரே நாளில் 5 தலங்களையும் தரிசனம் செய்யக்கூடிய வகையில் அதிகாலையில் இருந்து இரவு முதல் தரிசிக்க கூடிய ஒரே நேர் கோட்டில் 5 சிவ தலங்கள் அமைந்திருக்கிறது. அதில் 2-வது தலமான அவளிவநல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட உள்ள சூழ்நிலை இருக்கிறது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு மொட்டை கோபுரம்தான் இருக்கின்றது. அதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்" என்றார்.

    இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

    சாட்டநாதர் கோவில் என்பது பஞ்ச ஆரண்ய தலங்களில் வனம் சார்ந்த 2-வது கோவில். அவர் கோரிய கும்பாபிஷேக பணிகள் வருகிற 16-ந்தேதி அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கிறது. சுமார் ரூ.34.30 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. வரதராஜ பெருமாள் கோவிலில் மொட்டை கோபுரம் இருப்பதாக தெரிவித்தார்.

    300 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் தொல்லியல் வல்லுனர் குழுவினரோடு ஆய்வு செய்து அந்த மொட்டை கோபுரத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து சாத்தியக் கூறுகள் இருப்பின் 3 நிலை ராஜகோபுரமாக கட்டித் தருவதற்கு இந்துசமய அறநிலையத்துறை முயற்சிக்கும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட 7 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 5 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 3 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும் என்று 6 கோவில்களின் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. ராஜ ராஜசோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழனாக திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலே நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.

    சட்டப்பேரவையில் இன்று வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலுக்கு நான்கு சிறு திருத்தேர்கள் அமைத்துதர அரசு ஆவன செய்யுமா என்றும், அவ்வையாருக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அ.தி.மு.க .உறுப்பினர் ஓ.எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போதிய வருமானம் இல்லாத கோயிலாக இருந்தாலும் ஆணையர் நிதி ஒதுக்கீடு செய்து தேர் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என கடந்த 2022-23 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டதாகவும், இந்த மணிமண்டபம் தொடர்பான வரைபடம் முதலமைச்சரும் காண்பிக்கப்பட்ட போது இன்னும் சிறப்பாக அமைக்க வலியுறுத்தியதால், மறு வடிவம் செய்யப்பட்டு வருகிறது எனவும், ரூ.12 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதோடு, விரைவில் இதற்கான முழுமையான பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என்றும், இந்த நிகழ்வில் அ.தி.மு.க. உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    • நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும்.
    • வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று மயிலாப்பூர், சித்திரக்குளம் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை மடப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இறை தரிசனம் முடித்து, சுற்றுப்புற சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை, மடப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டோம்.

    500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது.

    இக்கோயிலின் சித்திரக் குளம், ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த கோவிலுடைய திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது, திருக்கோவிலுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடையின்றி கொண்டு வந்து சேர்ப்பது, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை சட்டரீதியாக மீட்கின்ற நடவடிக்கைகளை முழு வேகத்துடன் மேற்கொள்வது, நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நீதிமன்றம் காட்டுகின்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினுடைய ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை வழங்கினார்கள்.

    இந்து சமய அறநிலைத் துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை அரசின் சார்பில் இதுவரையில் எந்த ஆட்சியும் வழங்கவில்லை. சுவாமி தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவது, ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து சொத்துக்களை மீட்பது, திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருவாயை முறையாக கொண்டு வந்து சேர்ப்பது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள், கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்துதல் என்று பல்வேறு கோணங்களில் இந்த துறைக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கி வரும், முதல்-அமைச்சரின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம் என்றே கூறலாம்.

    நேற்றைய தினம் மதுரை அழகர்கோயில் இராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகமெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் இதுவரையில் 394 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    அதேபோல மீட்கப்பட்டுள்ள சிலைகளை அடையாளம் கண்டு அந்தந்த திருக்கோவிலுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதற்குண்டான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார்.
    • இந்தியாவிலேயே தலை சிறந்த சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.

    சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

    234 தொகுதிகளிலும் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால், ஒரு அணிக்கு செயலாளர் உண்டு என்றால், அது உதயநிதி ஸ்டாலின்தான் என திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது. இயக்கப்பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து தன்னை அவர், முன்னிலை படுத்தி வருகிறார். வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார், அதற்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார். 


    தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளதாவது: ஒன்றரை ஆண்டுகள்தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டுகளில் தலைவர் தளபதி, உங்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்ய இருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பவர் யார் என்றால், இந்தியாவிலேயே தலை சிறந்த சட்ட உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் வழங்கப்படுகிறது.
    • கோவில் பிரசாதம், மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    சென்னை :

    தமிழகத்தில் பொதுமக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டு போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு, இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் 'தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

    இதனை செயல்படுத்தும் வகையில், கடந்த ஆடி மாதம் புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத்துறையுடன், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமைதோறும் குறைந்த கட்டணத்தில் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிக சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிக சுற்றுலாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்மர் கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    அதேபோல், 2-ம் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயல் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீர ராகவபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், சுற்றுலாத்துறை இயக்குனரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, கூடுதல் கமிஷனர் சி.ஹரிப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொது மேலாளர் பாரதி தேவி, இணை இயக்குனர் பி. புஷ்பராஜ், இணை கமிஷனர்கள் ஆர்.சுதர்சன், ந.தனபால், கே.ரேணுகா தேவி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிகள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    திருச்செந்தூர்: 

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:

    இந்து சமய அறநிலையத்துறை உருவான ஆண்டு முதல் எந்த ஆட்சியிலும் செய்ய தோன்றாத வகையில், பல்வேறு புதுப்புது திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தி வருகிறோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் என முக்கிய கோயில்களில் பெருந்திட்ட (மாஸ்டர் பிளான்) வரைவை ஏற்படுத்தி, அத்திட்ட அறிக்கையின்படி பக்தர்களின் அடிப்படை தேவைகள், கோயில்களை பழைமை மாறாமல் பாதுகாக்க வேண்டிய பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 


    வடமாநிலங்களில்தான் 100 கோடி, 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்விப்பட்டிருப்போம். முதன் முதலில் இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பங்கேற்புடன் ரூபாய் 300 கோடி செலவிலே இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மேம்பாட்டுப் பணிகளும், ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    வருகின்ற 28.09.2022 அன்று முதலமைச்சர், தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த பெருந்திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். கோயிலுக்கு நெடுஞ்சாலையிலிருந்து நேரடியாக பாதை அமைக்கின்ற பணிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் உடன் கலந்தாய்வு செய்து அவரையும் நேரில் வர வைத்து அதற்குண்டான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

    மேலும் கோயிலுக்குள் வருவதற்கு முன்பு கடலில் சென்று கை கால் கழுவிவது ஐதீகமாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலை கடினமாக இருப்பதை அறிந்து அதையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கு உண்டான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வெகு விரைவில் மாற்றுத்திறனாளிகளும் கடல் நீரை தொட்டு வணங்குகின்ற ஒரு நல்ல சூழலையும் அதற்குண்டான முயற்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    அனைத்து ஒப்புதல்களும் முறையாக பெறப்பட்டிருக்கின்றன. அன்னதான கூடம், மருத்துவ மையம், ஆழிக் கிணறுக்கு செல்லுகின்ற பாதைகள், கடலில் குளியலுக்கு பிறகு உடைமாற்றும் அறைகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளாக மேற்கொள்ளப்பட உள்ளன.

    எந்தவிதமான சிறு குற்றச்சாட்டும் இல்லாமல் முழுமையாக வெளிப்படை தன்மையோடு இந்த திருப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். திருப்பணியால், கந்த சஷ்டி விழாவிற்கு எந்த இடையூறும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள கோயில் அலுவலர்கள் உறுதி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த பணிகள் முடிந்து சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கின்ற பொழுது இறை அன்பர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் இந்த திருப்பணி ஒன்றிற்காகவே மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆக வேண்டும், இவர் இருந்தால் தான் பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணிகளை நிறைவேற்றி தருவார் என்ற வகையில் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம்.
    • இந்த பணி ஆன்மீகவாதிகளால் பாராட்டப் படுகின்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவரிடம் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் திருக்கோவில் நகையெல்லாம் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி முறைகேடு நடப்பதாக தெரிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அமைச்சர் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக நானும், துறையின் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சில பொருட்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப் பட்டிருந்தை பற்றி கேட்டபோது அது தெய்வத்திற்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கையான பலமாற்று பொன் இனம் என்று சொன்னார்கள்.

    தெய்வத்திற்கு பயன்படுகின்ற நகைகளை நாங்கள் முறையாக பதிவிட்டு பதிவேட்டில் வரவு வைத்துக் கொண்டு பாதுகாப்பு அறையில் வைத்திருக்கின்றோம். தெய்வத்திற்கு முழுவதும் பயன்படாத பலமாற்று பொன்னினங்களை மூட்டையாக கட்டி வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள் இதை உருக்குதற்கு ஏதேனும் ஆணை இல்லையா, மாற்றுவழி இல்லையா என்று துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டேன்.

    1977 ஆம் ஆண்டு இதற்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. பல்வேறு திருக்கோயிலில் நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் வட்டித் தொகையை அந்தந்த திருக்கோயில்களுக்கு செலவிட்டு வருகிறோம்,

    அந்த திருக்கோயிலின் திருப்பணிக்கு ஏதாவது தங்கம் தேவைப்பட்டால் வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருக்கின்ற தங்கத்தை திரும்ப பெற்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

    இது ஒரு அருமையான திட்டம். இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக செயல்படாமல் இருந்தது. அதனால் தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அவர்களின் நேரடி பார்வையில் தங்கத்தை பிரிக்கின்ற பணியினை மேற்கொண்டிருந்தோம். இடையில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றார்கள்.

    நீதிமன்றமும் இந்த தங்கத்தை பிரிக்கின்ற பணிக்கு தடை ஏதும் விதிக்கவில்லை. பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற திருக்கோயில்களில் தங்கத்தை பிரித்தெடுக்கின்ற பணியை மேற்கொள்ளலாம், பரம்பரை அறங்காவலர்கள் இல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமித்து பின்னர் பணியினை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அந்த வகையில் இருக்கன்குடியில் 27 கிலோ தங்கத்தை உருக்கி அதனை வங்கியிலே டெபாசிட் செய்ததில் வட்டியாக மாதத்திற்கு 2 லட்சம் என்ற விதத்தில் ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய் அந்த திருக்கோவிலுக்கு வருமானமாக வந்து கொண்டிருக்கிறது.

    அதேபோல தேவி பவானி அம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற சுமார் 130 கிலோ எடை கொண்ட பலமாற்று பொன் இனங்களை மும்பையில இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆலையிலே உருக்கி 101 கிலோ தங்கத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

    அந்த தங்கமும் வைப்பு நிதிக்கு சென்றால் ஆண்டிற்கு சுமார் ஒரு கோடி 2 லட்சம் ரூபாய் வருமானம் அத்திருக்கோயிலின் திருப்பணிக்கு கிடைக்கும்.

    இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத தங்கத்தை ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்குவதற்கு முன்னால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற குழுவினரால் முழுவதுமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு, யாராவது பக்தர்கள் விரும்பினால் அவர்களின் முன்னிலையிலேயே அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    இது ஒட்டுமொத்தமாக திருக்கோயில் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நல்ல பணி. உண்மையிலேயே ஆன்மீக உலகத்திற்கு முதலமைச்சர் அவர்களால் செய்யப்படுகின்ற இந்த பணி ஆன்மீகவாதிகளால் பாராட்டப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பத்து திருக்கோயில்களில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இவ்வாண்டு மேலும் ஐந்து திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:

    இந்த ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து  கோயில்களில் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    பத்து திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும், ஐந்து திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும், பசுமைத் திருக்கோயில்கள் திட்டத்தின் கீழ் 5 திருக்கோயில்களின் அன்னதானக் கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

    திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×