search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதோஷ வழிபாடு"

    • சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம்.
    • ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.

    கோவில் தோற்றம்

    திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளின் அழகிய சூழலில் அமைந்துள்ளது ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் என்கிறார்கள்.

    தல வரலாறு

    தேவலோக தலைவனான இந்திரனின் மகன் ஜெயந்தன். இந்திரனின் மகன் என்பதால் இவன் ஆணவத்தில் நடந்து கொண்டான். இதனால் பிறரிடம் வம்பிழுத்து சாபம் பெற்றுக்கொள்வான். அப்படி ஒரு முறை ஜெயந்தன் சென்று கொண்டிருந்த வழியில், அவனுக்கு எதிர் திசையில் அத்ரி முனிவர் வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அத்ரி முனிவருக்கு, ஜெயந்தன் முறையாக வணக்கம் தெரிவிக்காதது மட்டுமின்றி, அவரது நடையைப் பார்த்து 'நண்டு ஊர்ந்து செல்வதுபோல உள்ளது' என்று கிண்டல் செய்தான். இதனால் கோபம் கொண்ட அத்ரி முனிவர், ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.

    இதனால் பதறிப்போன ஜெயந்தன், 'தன் பிழையை பொறுத்தருள வேண்டும்' என்று அத்ரி முனிவரின் காலில் விழுந்து வேண்டினான். இரக்கம் கொண்ட அத்ரி முனிவர், "மணவூர் என்ற இடத்தில் உள்ள திருநந்தீஸ்வரர் ஆலயத்தில் அருளும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வா. உன்னுடைய சாபம் நீங்கும்" என்று கூறி அங்கிருந்து அகன்றார்.

    மறுநொடியே ஜெயந்தன் நண்டாக மாறிவிட்டான். பின்னர் அவன், மணவூர் வந்து திருநந்தீஸ்வரரை வழிபட்டு, ஊரின் எல்லையில் சிவபெருமானை நினைத்து தியானம் செய்தான். அப்போது சிவபெருமான், பூமியை பிளந்து கொண்டு பிரகாசமான லிங்கத் திருமேனியுடன் அவனுக்கு காட்சியளித்தார்.

    சுயம்புவாக தோன்றிய இந்த இறைவனை அங்கேயே பிரதிஷ்டை செய்த ஜெயந்தன், அந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வதற்காக அங்கே ஒரு திருக்குளத்தையும் உருவாக்கினான்.

    பின்னர் நண்டு வடிவில் நாள்தோறும் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜித்து வந்தான். தொடர் வழிபாட்டின் காரணமாக, சிவபெருமானின் அருளால் ஜெயந்தன் மீண்டும் தன்னுடைய சுய உருவைப் பெற்றான்.

    நண்டு வடிவில் ஜெயந்தன் இறைவனை வழிபட்டதால், இங்கு உள்ள மூலவர் 'கற்கடேஸ்வரர்' என்று திருப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். கற்கடேஸ்வரருக்கு வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் முருகப்பெருமானும் அருள்பாலித்து வருகின்றனர்.

    கற்கடேஸ்வரருக்கு இடது புறம் ஆதி காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த காமாட்சி அம்மன், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு முன்னரே தோன்றியவர் என்பதால் காஞ்சி மகா பெரியவர் இங்குள்ள காமாட்சி அம்மனுக்கு 'ஆதி காமாட்சி' என்று பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.

    இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் தெய்வமாகவும் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் திகழ்கிறார்.

    சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இத்தல இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இது தவிர இவ்வாலயம் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயத்தில், துவார கணபதி, பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர், பலிபீடம் ஆகியவை உண்ளன. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, அன்னாபிஷேகம், சிவராத்திரி, தை மாதத்தில் 108 சங்காபிஷேகம் போன்ற நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். கும்பகோணம் அருகே திருந்து தேவன்குடியில் பிரசித்தி பெற்ற கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. அதே போல் நண்டு வழிபட்ட கற்கடேஸ்வரர் ஆலயம் மணவூரில் உள்ள இந்த ஆலயம் மட்டுமே என்கிறார்கள்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி ரெயில் மார்க்கமாக செல்கையில் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சற்று தொலைவில் இயற்கை சூழலுடன் வயல் அருகே வீற்றிருக்கும் இந்த கற்கடேஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

    • நித்ய பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி.
    • திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய வேண்டும்.

    பிரதோஷம் என்றால் மாலையில் சூரிய அஸ்தமன வேளையான மூன்றே முக்கால் நாழிகைகளை (4.30 மணி முதல் 6 மணி வரை) குறிக்கும். இந்த நித்ய பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதி. ஆனால் எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. எனவே குறைந்தபட்சம் மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் வழிபாடு செய்ய வேண்டும்.

    ஈசன் ஆலகால விஷத்தை உண்டு மயக்கம் தீர்ந்து எழுந்து நந்தியின் கொம்புகளுக்கு நடுவே கால்பதித்து நடனமாடிய நேரம் பிரதோஷ வேளை, திரயோதசி திதி. ஈசனின் நடனம் கண்டபின் தேவர்களின் மன பயம் நீங்கியது.

    மகிழ்ச்சி பிறந்தது. அதன்பின்னரே அவர்களுக்கு அமிர்தம் கிடைத்து சாகா வரம் பெற்றனர். எனவே, பிரதோஷ வேளையில் ஈசனை தரிசனம் செய்பவர்களுக்கும் பயம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ தினத்தன்று மாலையில் சிவாலயத்தில் கூடும் கூட்டமே இதற்கு சான்று.

    சோமசூக்த வலம்

    மாதம் இருமுறை வரும் பிரதோஷ நாள்களில் வழிபட முடியாதவர்கள் ஓர் ஆண்டில் அபூர்வமாக வரும் சனிக் கிழமை பிரதோஷத்தன்று வழிபாடு செய்வது அவசியம். ஒரு சனிப்பிர தோஷத்தன்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அதனால்தான் அதை பிரதோஷங்களின் தலைவன் என்னும் விதமாக மகாபிரதோஷம் என்று அழைக்கிறார்கள்.

    மகாபிரதோஷத்தின் விசேஷம்

    முதன்முதலில் ஈசன் பிரதோஷ வேளையில் ஆனந்த நடனமிட்டது ஒரு சனிக் கிழமையில்தான். சனிப்பிரதோஷ வேளையில் சகல தேவர்களும் ஈசனின் சன்னிதியில்தான் கூடியிருப்பார்கள். ஈசனை தேவர்களும் வழிபாடு செய்வார்கள் என்பதால் அந்த வேளையில் ஈசனும் அவரின் வாகனமான நந்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். அப்போது கேட்கும் வரங்களை எல்லாம் ஈசன் அருள்வார் என்கின்றன ஞான நூல்கள்.

    நந்தியே இந்தப் பிரபஞ்சத்தின் முதல் சீடன், முதல் குரு. ஈசனிடம் பிரபஞ்ச ரகசியங்களைக் கற்ற சீடனான நந்தி, பிரபஞ்சத்துக்கே குருவாகவும் திகழ்கிறார். இந்த உலகில் குருவின் கருணையைப் பெறாமல் ஈசனின் திருவடியைச் சரணடைய முடியாது.

    எனவே உயிர்கள் அனைத்தும் சிவனைச் சரணடைய வகை செய்து அருள் செய்பவர் நந்தி பகவான். மண்ணுலகின் ஒவ்வொருவருக்கான குருவை அடையாளம் காட்டி வழி நடத்துபவர். அப்படி ஒரு ஞான குரு அமையப் பெறாதவர்கள் இந்த மகாபிரதோஷ வேளையில் நந்தியிடம் வேண்டிக்கொண்டால் விரைவில் உங்களுக்கு ஞான குரு கிடைப்பார். சிவ நெறியில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.

    மேலும் காரியத்தடை நீங்குதல், கடன் தீர்ந்து செல்வ வளம் சேர்தல், பகை அழிந்து வெற்றிகள் குவிதல் என இந்த உலகில் நாம் மகிழ்வோடு வாழத் தேவையான அனைத்தையும் நமக்கு அருளும் வழிபாடு மகா பிரதோஷ வழிபாடு.

    மகா பிரதோஷத்தன்று சிவாலய தரிசனம் மிகவும் முக்கியம். ஈசன் ஆனந்த நடனம் புரியும் தன்மையில் அருள்வார். தவறாமல் கோவிலுக்குச் சென்று நந்திக்குப் பின் நின்று அதன் கொம்புகளின் வழியாக ஈசனை தரிசனம் செய்ய வேண்டும்.

    ஆலயம் செல்லும்போது குறைந்தபட்சம் கையில் மலர்களோ, வில்வ இலைகளோ கொண்டு செல்லுங்கள். ஏக வில்வம் சிவார்ப்பணம் என்பது பெரியவர்கள் வாக்கு. பக்தியோடு ஒரு வில்வ இலை சமர்ப்பித்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து கேட்கும் வரம் தருவார்.

    வாய்ப்பிருப்பவர்கள் நந்தியின் அபிஷேகத்துக்கு உரிய பொருள்களை சமர்ப்பிக்கலாம். பசும்பால் மிகவும் சிறந்தது. நெய், தேன், சந்தனம், மஞ்சள் சமர்ப்பணம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும்.

    தவறாமல் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு. மகா பிரதோஷ காலத்தில் ஒருமுறை பாராயணம் செய்தாலே பலநூறுமுறை பாராயணம் செய்த புண்ணிய பலன் கிடைக்கும்.

    பிரதோஷ வேளையில் ஆலயத்தில் சோமசூக்த பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதாவது நந்திக்குப் பின் இருந்து சிவனை தரிசனம் செய்துவிட்டுப் பின் பிரதட்சிணமாகக் கோமுகி வரை வலம் வர வேண்டும். பின் கோமுகியைக் கடக்காமல் இடமிருந்து வலமாகத் திரும்பி சுற்றிவர வேண்டும். இவ்வாறு சிவநாமத்தைச் சொல்லியபடி வலம் வந்து வேண்டிக்கொண்டால் மனதின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும். வாழ்வில் இருந்த துக்கங்கள் நீங்கும்.

    ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ வேளையில் விளக்கேற்றி சிவபுராணமும், கோளறு பதிகமும் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வமும் உணவும் நிறைந்திருக்கும். அந்த வேளையில் வீட்டில் செய்யக் கூடாத சிலவற்றை அறிந்து தவிர்க்க வேண்டும்.

    குறிப்பாக பிரதோஷ வேளையில் உறங்கக் கூடாது. அதிலும் சனி மகாபிரதோஷ வேளையில் உறங்குவது பாவம். இரவு வேலை செய்பவராக இருந்தால் கூட இந்த வேளையில் விழித்திருக்க வேண்டும். அவ்வாறு விழித்திருந்து சிவ தியானம் செய்தாலே புண்ணியம் என்கிறார்கள்.

    வழிபாடு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. பிற தீய பழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது. தீய சொற்களைப் பேசக் கூடாது. நற்செயல்கள் செய்பவர்களை பழித்துப் பேசித் தடுக்கக் கூடாது என்கின்றன ஞான நூல்கள்.

    சனி தோஷம் தீர்க்கும் சனிப்பிரதோஷம்

    சனிக்கிழமை சனி பகவானுக்குரியது. இந்த நாளில் செய்யும் சிவ வழிபாடு சனி பகவானின் அருட்பார்வையைப் பெற்றுத்தரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி நடக்கும் மகரம், கும்பம், மீனம், கடகம், விருச்சிகம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனிப்பிரதோஷம் அற்புதமான பரிகார தினமாகும்.

    இந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபட்டால் சனி தோஷம் முற்றிலும் விலகும். சகல நன்மைகளும் கைகூடும். எனவே இந்த நாளில் தவறாமல் சிவ வழிபாடு செய்து சகல நன்மைகளையும் பெறுவோம்.

    • நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும்.
    • நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    "பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்" என்று சொல்வார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான மிகச் சிறப்பான நாளைய தினத்தில் "சூரிய பகவான்" மற்றும் "சிவபெருமானை" போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.

    சூரிய பகவான் மந்திரம்: ஆம் ஹுராம் ஹிரீம் ஹுராம் சஹ் சூரியாய் நமஹ

    சிவ பெருமான் மந்திரம்: ஓம் நமோ பகவதே ருத்ராய

    பிரதோஷ நேரமான மாலை வேலையில் கோவிலுக்கு சென்று முதலில் சூரிய பகவானை தரிசித்து, அவருக்கு நெய் தீபமேற்றி மந்திரத்தை 10 முறை உச்சரித்து வணங்க வேண்டும். இதனால் சூரிய தோஷம் நீங்கும்.


    பிரதோஷ நேர பூஜையின் போது சிவபெருமானை வேண்டி மந்திரத்தை 9 முறை கூறி வணங்க வேண்டும். இம்மந்திரங்களை நாளை கூறி வழிபடுவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் உடல், மனம், ஆன்மா தூய்மை பெற்று ஆன்மிகச் சிந்தனை நமக்குள் நிறையும். அதோடு நமது கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் பெருகும். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி.

    பொதுவாக பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகு காலம் என்பதும் இந்த நேரம்தான். அதாவது மாலை 4.30 முதல் 6 மணி வரை. எனவே நாளை ராகுகாலமும் பிரதோஷ தருணமும் சேர்ந்து வரும் இந்த நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.

    நாளை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது, 16 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெறும். நம்மால் முடிந்த அபிஷேகப் பொருட்களை வழங்கி, சிவ தரிசனம் செய்வது எல்லா வளங்களையும் தந்தருளும்.

    முடிந்தால் வில்வமும், செவ்வரளியும் சார்த்துங்கள். நந்திதேவருக்கு கூடுதலாக அருகம்புல், செவ்வரளி , வில்வம் கொண்டு சிவ நந்தி தரிசனம் செய்தால், வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். தரித்திரம் விலகும். சுபிட்சம் நிலவும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடந்தேறும் என்பது உறுதி. சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம், பெருகும்; நிலைக்கும் என்பது ஐதீகம்.

    • பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்.
    • இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    24-ந்தேதி பங்குனி மாத பவுர்ணமி அன்று விடுமுறை நாளாக இருப்பதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்த உள்ளனர். வருகிற 25-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மகாசிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 21 வகையான அபிஷே கங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     விடுமுறை தினம், சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

    மலையேறு பவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது. சதுரகிரியில் மகா சிவராத்திரி, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.

    மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • சிவபெருமானையும், நந்திபகவானையும் வழிபட விசேஷமான நாள்.
    • நந்தி பகவானுக்கும், சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும்.

    பிரதோஷ நாள் சிவபெருமானையும் நந்தி பகவானையும் வழிபட விசேஷமான நாள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் மாலை நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் அபிஷேக ஆராதனை நடக்கும். மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடக்கக்கூடிய இந்த அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்வதன் மூலமாக எல்லாவிதமான கிரக தோஷங்களும் நீங்கி விடும்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது.
    • மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பிரளயநாதர்சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று அம்பாலும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    • வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று கார்த்திகை பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜா மணி அய்யர் நடத்தினார்.

    பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமா னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபா ராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திரு ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்த னர். இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்தி கை மாத பிரதோஷத்தை யொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.

    முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழை அம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×