search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ராம் ரமேஷ்"

    • பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு 2 முகம் இல்லை.
    • 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நிச்சயம் ஒன்றாக கொண்டு வருவோம்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், ராய்ப்பூரில் வரும் 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும், கே.சி.வேணுகோபால் எம்.பி.யும் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    கே.சி.வேணுகோபால் எம்.பி. கூறியதாவது:-

    கட்சியின் முதல் நாள் மாநாட்டின்போது, வழிகாட்டும் குழு கூட்டம் நடைபெறும். இதில் கட்சியின் உயர் அதிகார அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலில், பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கி, அதை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கு அதன் பங்கு தெரியும்.

    காங்கிரஸ் கட்சி அதற்கான முயற்சியை ஏற்கனவே எடுத்துள்ளது. அது பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் தொடர்பில் உள்ளது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் காங்கிரஸ் கட்சியின் தெள்ளத்தெளிவான முயற்சி உள்ளது. 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை நிச்சயம் ஒன்றாக கொண்டு வருவோம்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை அளித்துள்ள உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும், உதய்பூர் சிந்தனை அமர்வின் நீட்டிப்பாகவும் ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முக்கியம் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்கிறது. இது குறித்து ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

    எதிர்க்கட்சிகள் அணியை நாங்கள்தான் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று யாரும் சான்று அளிக்கத்தேவையில்லை. ஏனென்றால், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வெற்றி பெறாது.

    எனவே நாங்கள் நிதிஷ்குமார் கருத்தை வரவேற்கிறோம். கே.சி.வேணுகோபால் கூறியது போல இதுபற்றியும், 2024 தேர்தலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ராய்ப்பூர் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

    அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வலுவான காங்கிரஸ் இல்லாமல், வலுவான எதிர்க்கட்சிகள் ஒன்றுமை சாத்தியம் இல்லை.

    இந்திய ஒற்றுமை யாத்திரை, இந்திய அரசியலுக்கான மாற்றுருவாக்கத்துக்கான தருணம், அதை நிதிஷ்குமார் ஒப்புக்கொண்டிருக்கிறார். நாங்களும் இதை வரவேற்கிறோம். எங்கள் பங்களிப்பை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். எந்த இடத்திலும் பா.ஜ.க.வுடன் சமரசம் செய்து கொள்ளாத ஒரே அரசியல் கட்சி காங்கிரஸ்தான். சில கட்சிகள் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய கூட்டத்துக்கு வந்துள்ளன. ஆனால் அவற்றின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளன. பா.ஜ.க.வைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு 2 முகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
    • பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    புதுடெல்லி :

    அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    அதன்படி அந்தக் கட்சி, அதானி நிறுவனங்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.

    அந்த வகையில் அதானி நிறுவனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி நேற்று 3 முக்கிய கேள்விகள் எழுப்பி உள்ளது.

    இதையொட்டி அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:-

    இன்று தொடர்ந்து 10-வது நாளாக அதானி நிறுவனங்களின் அற்புதமான வளர்ச்சியில் பிரதமரின் பங்கு குறித்து 3 முக்கிய கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. உங்கள் மவுனத்தைக் கலையுங்கள், பிரதமர், அவர்களே.

    * கவுதம் அதானி, 2017-ம் ஆண்டு மேற்கொண்ட இஸ்ரேல் பயணத்தில் இருந்து, அவர் இந்திய, இஸ்ரேல் ராணுவ உறவில் சக்திவாய்ந்த லாபகரமான பங்களிப்பைக்கொண்டிருக்கிறார். அவர், டிரோன்கள், மின்னணுவியல், சிறிய ரக ஆயுதங்கள், விமான பராமரிப்பு போன்றவற்றை உள்ளடங்கிய இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கூட்டு திட்டங்களைப் பெற்றிருக்கிறாரே?

    * அதானி நிறுவனங்கள், கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு 'ஷெல்' நிறுவனங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த குற்றசாட்டுகளை சந்தித்துள்ள நிலையில், இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உறவை ஒரு கேள்விக்குரிய குழுமத்திடம் ஒப்படைப்பது தேசிய நலனுக்காகவா? உங்களுக்கும், ஆளும் கட்சிக்கும் (பா.ஜ.க.) இதில் ஏதேனும் கைமாறு உண்டா?

    * நமது ஆயுதப் படைகளின் அவசரகாலத் தேவைகளை அரசு ஏன் சாதகமாகப் பயன்படுத்தி, எதற்காக புத்தொழில் நிறுவனங்கள் ('ஸ்டார்ட்-அப்'கள்) மற்றும் நிறுவப்பட்ட இந்திய நிறுவனங்களின் இழப்பில், அதானி டிரோனின் ஏகபோக ஆதிக்கத்தை எளிதாக்குகிறது?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
    • அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம்.

    புதுடெல்லி :

    அதானி நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் அதானி விவகாரத்தில் மறைப்பதற்கோ, அஞ்சுவதற்கோ பா.ஜனதாவிடம் எதுவும் இல்லை என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு அமைக்க தயங்குவது ஏன்?

    கூட்டு விசாரணைக்குழு கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட எங்கள் தலைவர்கள் பாராளுமன்றத்தில் பேசினால், அந்த கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்றன.

    அப்படி அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அரசு அனுமதிக்க வேண்டும்.

    அதானி விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மற்றும் 'செபி' தலைவர் மதாபி புரிக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

    அதானிக்கும், அரசுடனான அவரது நிறுவனங்களின் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

    அதேநேரம் நாங்கள் எப்போதும் தொழில் முனைவோருக்கு ஆதரவாக இருக்கிறோம். அதுவே பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகும். கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

    இதைப்போல தாராளமயமாக்கலை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஆனால் அது விதிகள் மற்றும் நிறுவனங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அவை சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் விதிகள் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும்.

    அதானி விவகாரத்தில் நாங்கள் அஞ்சமாட்டோம், தொடர்ந்து குரல் எழுப்புவோம். பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இருக்கின்றன.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

    • பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம்.
    • காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.

    அவந்திபோரா :

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காஷ்மீரில் உள்ள அவந்திபோராவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    ராகுல் காந்தி, நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிற சூழலில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கிய ஆதார மையமாக காங்கிரஸ் இருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக அதை நான் நம்புகிறேன். இன்றும் நாங்கள் மட்டுமே தேசிய கட்சியாக இருக்கிறோம். (பா.ஜ.க. தவிர்த்து).

    நாங்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியில் இல்லாமல் போய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும், தாலுகாவிலும், சிறிய நகரத்திலும், நகரத்திலும் காங்கிரஸ் தொண்டர்களை நீங்கள் பார்க்க முடியும். காங்கிரஸ் குடும்பங்களைப் பார்க்க இயலும்.

    பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் மட்டுமே தேசிய அரசியல் சக்தியாக இருக்கிறது.

    நாங்கள் ஆளுகிற மாநிலங்களின் எண்ணிக்கை அல்லது நாங்கள் பெறும் வாக்குகளின் சதவீதத்தை வைத்து எங்கள் செல்வாக்கை அளவிடுவது மிகவும் குறுகிய கண்ணோட்டம் என்று சொல்வேன். காங்கிரசின் சித்தாந்தம், மையம் ஆகும். இது ஒரு மைய-இடதுசாரி கட்சி. ஒவ்வொரு கட்சியும் காங்கிரசின் கண்ணோட்டத்தை சுற்றி வருகின்றன.

    எனவே நாங்கள் ஆதார மையமாக இருப்போம். பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அது காங்கிரஸ் கூட்டணியால்தான் முடியும்.

    காங்கிரஸ் கட்சி தனித்து நின்று பா.ஜ.க.வை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புவேன். இதுவே எனது லட்சியம். ஆனால் அது 2024 தேர்தலில் அது யதார்த்தமாக இருக்காது.

    2029-ம் ஆண்டு தேர்தலில், நாங்கள் எங்கள் சொந்தப் பலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிட தயார் ஆவோம்.

    சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளுக்கு மிக அதிக இடம் கொடுத்திருக்கிறது. இது கட்சியின் கட்டமைப்புக்கு பாதிப்பாக அமைந்து விடும்.

    ராகுல் காந்தியின் செய்தி, முதலில் கட்சியை கட்டமையுங்கள். அதிகாரம் தொடர்ந்து வரும் என்பதுதான். ராகுல் காந்தியின் பார்வை சரியானது.

    நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. கட்சி அமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. அது நிலைத்து நிற்க வேண்டும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை ஒரு நிகழ்வு அல்ல. இது ஒரு இயக்கம். இதை ஒரு இயக்கமாக பார்க்க வேண்டும் என்றால் அதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்தியாக வேண்டும்.

    இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பிந்தைய காங்கிரஸ் கட்சி முற்றிலும் மாறுபட்ட காங்கிரசாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மோடி அரசு மௌனம் காக்கிறது.
    • நமது ஆயுதப் படைகளின் பதிலடியை கண்டு பெருமிதம் கொள்கிறோம்.

    சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படைகளை மத்திய அரசு குவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் 30 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 9 ந்தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதாகவும், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 


    உடனடியாக இரு தரப்பினரும் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும், மீண்டும் அமைதி நிலவ, சீன ராணுவ அதிகாரிகளுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மோடி அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது. எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விழிப்புடன் செயல்பட கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தன் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க மத்திய அரசு மௌனம் காக்கிறது.

    மோடி அரசு இந்த விஷயத்தை மட்டும் அடக்கி வாசிக்க முயற்சிக்கிறது, இதனால் சீனாவின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலைக் கண்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நாட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது, ஆனால் மோடி ஜி தனது இமேஜைக் காப்பாற்ற நாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
    • சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது.

    புதுடெல்லி :

    வருகிற 7-ந் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    இந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று காலை உயர்மட்டக்கூட்டம் ஒன்றைக்கூட்டினார்.

    கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் உத்திகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.

    இதையொட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 முக்கிய பிரச்சினைகளை எழுப்புவோம்.

    இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுதல் ஆகிய பிரச்சினைகளை எழுப்புவோம்.

    சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் சாதகமாக உள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் 2 நீதிபதிகள் இட ஒதுக்கீடக்கு எதிராக கேள்விகள் எழுப்பினர். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது.
    • இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது.

    புதுடெல்லி :

    ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதையொட்டி, ஓராண்டுக்கு பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது. இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது. இதற்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தலைமை பொறுப்பை வகித்துள்ளன. ஆனால், எந்த நாடும் இப்போது மோடி அரசு செய்வதைப் போல் தம்பட்டம் அடித்தது இ்ல்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. 'மோடி ஒரு புத்திசாலித்தனமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்' என்று அவர் கூறினார். ஜி20 தலைமை விஷயத்தில் அதுதான் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வெளியேறிய பின்னர் கட்சியை விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது.
    • கண்ணியத்தைக் காப்பாற்றிய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள்.

    அகர் மால்வா: 

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை இன்று மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா பகுதியை அடைந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடக பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது

    கட்சியை விட்டு வெளியேறிய பிறகு கண்ணியமான மௌனம் காத்த கபில் சிபல் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப அனுமதிக்கப்படலாம், ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

    கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளனர், எனவே அவர்களை திரும்பப் அழைக்கக் கூடாது. ஆனால் கட்சியில் இருந்து கண்ணியத்துடன் வெளியேறியவர்களும் உள்ளனர், மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை குறித்து அவர்கள் கண்ணியமான மவுனம் காத்து வருகின்றனர்.

    சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறிய எனது முன்னாள் சகாவும் மிக நல்ல நண்பருமான கபில் சிபலைப் பற்றி என்னால் நினைக்க முடிகிறது அவர், சிந்தியா மற்றும் சர்மாவைப் போல அல்லாமல் மிகவும் கண்ணியமான மௌனம் காத்துள்ளார்.

    எனவே, கண்ணியத்தைக் காப்பாற்றிய அத்தகைய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கட்சியை விட்டு வெளியேறி பின்னர் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது. ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான, 24 காரட் துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஜெயராம் ரமேஷின் கருத்துக்கு பதிலளித்த மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், சிந்தியா வலுவான கலாச்சார வேர்களைக் கொண்ட 24 காரட் தேசபக்தர் என்று குறிப்பிட்டுள்ளார். சிந்தியா மற்றும் சர்மா இருவரும் தங்கள் பணியில் 24 காரட் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளனர், ரமேஷின் கருத்துக்கள் பண்பாடு இல்லாதது, முற்றிலும் ஜனநாயகமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

    • அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை.
    • டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது.

    இந்தூர் :

    ராஜஸ்தானில், அசோக் கெலாட்டை முதல்-மந்திரியாக கொண்ட காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

    அசோக் கெலாட் சமீபத்தில் அளித்த பேட்டியில், சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு சச்சின் பைலட், ''அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும், இழிவான சொற்களையும் பயன்படுத்துவது ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல'' என்று கூறியிருந்தார்.

    இந்தநிலையில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல்காந்தி பாதயாத்திரைக்கிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அமைப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவருமே எங்களுக்கு தேவை. அசோக் கெலாட் சில குறிப்பிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக்கூடாது.

    இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருகிறது. அதற்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது. காங்கிரஸ் தலைமைதான் காலவரையறை நிர்ணயிக்கும்.

    ராஜஸ்தான் பிரச்சினையில், கட்சியை வலுப்படுத்தக்கூடிய முடிவை எடுப்போம். ஒருவேளை கடினமான முடிவு எடுக்க வேண்டி இருந்தால், அதை எடுக்க காங்கிரஸ் தயங்காது. ஒருவேளை இரு அணிகளுக்கு இடையே சமரசம் உருவாக்குவதாக இருந்தால், அதையும் செய்வோம்.

    டிசம்பர் 4-ந் தேதி, ராஜஸ்தானில் பாதயாத்திரை நுழைகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அங்கும் பாதயாத்திரை வெற்றி பெறும்.

    பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவாதம் நடக்க வேண்டும். ஆனால், குஜராத் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, இத்தகைய பிரித்தாளும் பிரச்சினையை பா.ஜனதா எழுப்புகிறது. தேர்தலுக்கு பிறகு அதை மறந்து விடும். குஜராத்தில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. கீழ்மட்டத்தில் ஆம் ஆத்மி பலமாக இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடு நிகழ்ச்சிகளில் உள்நாட்டு அரசியலை பிரதமர் பேசி வருவதாக காங்கிரஸ் கண்டனம்.
    • நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல் பேசியதில்லை.

    இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பாலி நகரத்தில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியை 2014 ஆண்டுக்கு முந்தையது மற்றும் பிந்தையது என குறிப்பிட்டு பேசினார்.

    2014ம் ஆண்டு தாம் பிரதமராக பதவியேற்றதற்கு பின்னரே இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பிரதமர் பேசியதாக கூறி காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இதற்கு முன்னர் நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல், பாரபட்சம், மற்றும் தவறான எண்ணங்களை பேசியதில்லை என்பது நீண்ட கால நமது பாரம்பரியம் ஆகும்.

    இந்த ஆரோக்கியமான பாரம்பரியம், 2014 மே மாதத்துக்கு பிறகு (மோடி ஆட்சிக்கு பிறகு) உடைக்கப்பட்டு விட்டது. இதற்கு சமீபத்திய உதாரணமாக இந்தோனேசியாவில் மீண்டும் அவர் (பிரதமர் மோடி) தனது சுய ஆவேசத்தைக் காட்டி உள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    • 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

    • சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
    • பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது.

    மும்பை :

    மும்பை பத்ராசால் குடிசை சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்ததாக கோர்ட்டு அதன் உத்தரவில் கூறியது.

    இந்தநிலையில் மராட்டிய மாநிலம் நாந்தெட்டில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இதுகுறித்து நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு மூலம் மத்திய புலனாய்வு முகமை அரசியல் எதிரிகளை பயமுறுத்த, அச்சுறுத்த பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. சஞ்சய் ராவத் ஜாமீன் உத்தரவு மூலம் அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு இல்லை என்பது தெரிகிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்க மோடி, அமித்ஷாவின் கையில் இருக்கும் அவர்களின் அரசியல் ஆயுதம். சஞ்சய் ராவத்தை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. பல்வேறு பிரச்சினைகளில் அவர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக பேசுவார் என நம்புகிறோம்.

    பா.ஜனதா கூட்டுறவு துறையை அழிக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக கூட்டுறவு துறையில் பலமாக உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் கூட்டுறவு துறைக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ஆனால் அது மோடி ஆட்சியில் மாறிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×