search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ் தாக்குதல்"

    • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் சிலர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலிடாரிட்டி இளைஞர் ஒற்றுமை இயக்கம் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது.

    திருவனந்தபுரம்:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக உலகின் பல பகுதிகளில் சிலர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கேரளாவில் இதுபோன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால், ஆன்லைன் மூலம் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் மலப்புரத்தில் சாலிடாரிட்டி இளைஞர் ஒற்றுமை இயக்கம் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தான் காலித் மஷால் வீடியோவில் தோன்றி உரையாற்றி உள்ளார். அவர் பேசுகையில், சியோனிச பயங்கரவாத செயல்களில் இருந்து மஸ்ஜித் அக்சாவை விடுவிக்க முயற்சிக்கும் பாலஸ்தீனப்போராளிகளுக்கு ஆதரவளிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். 1967-ல் இஸ்ரேலில் வலது சாரி அரசியல் குழு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அல்அக்சாவை அழிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    ஹமாஸ் தலைவர் காணொலி நிகழ்ச்சிக்கு கேரள பாரதிய ஜனதா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் கூறுகையில், மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் காலித் மஷால் ஆன்லைனில் பங்கேற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பாலஸ்தீனத்தை காப்பாற்றுங்கள் என்ற போர்வையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பையும், அதன் தலைவர்களையும், போர்வீரர்கள் என்று கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் சுரேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். உடனடியாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    • 100 போர் விமானங்கள் ஒரே சமயத்தில் காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது.
    • காசா எல்லைக்குள் நுழைந்து இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் ஹமாஸ் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    காசா:

    இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கி 23 நாட்களை கடந்து விட்டது.

    இந்த சண்டையில் இரு தரப்பிலும் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என அறிவித்துள்ள இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது.

    இரவு முழுவதும் சுமார் 100 போர் விமானங்கள் ஒரே சமயத்தில் காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

    இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் தனது தாக்குதலை நேற்று முதல் அதிகரித்து இருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் இடைவிடாமல் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து குண்டுகளை வீசி வருகின்றது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு பாதுகாப்பு கேடயமாக அங்குள்ள சுரங்கங்கள் உள்ளன. இங்கு ஏராளமான பதுங்கு குழிகள் இருக்கிறது. இங்கு மறைந்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க தயாராக உள்ளனர்.

    இந்த சுரங்கங்கள் தான் இஸ்ரேல் படையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 230 பிணைக்கைதிகளை இந்த சுரங்கத்தில் தான் ஹமாஸ் படையினர் அடைத்து வைத்துள்ளனர்.

    நேற்று நடந்த கடுமையான வான் வெளி குண்டு வீச்சு தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் 150 சுரங்க கட்டமைப்புகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இதே போல காசா எல்லைக்குள் நுழைந்து இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் ஹமாஸ் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா கொல்லப்பட்டார். இவரது தலைமையின் கீழ் தான் ஹமாஸ் அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், டிரோன்கள், பாராகிளைடர்கள், வான்வெளி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வந்தன.

    கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் நகரம் மீது பாராகிளை டர்கள், டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார். இவரை இஸ்ரேல் உளவு அமைப்பு தீவிரமாக தேடி வந்தது.

    இந்த நிலையில் வடக்கு காசாவின் ரகசிய சுரங்க பாதையில் அவர் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இந்த இடத்தை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அதில் கமாண்டர் உள்பட பல ஹமாஸ் அமைப்பினர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால் காசா நகரை அப்படைகள் சுற்றி வளைத்துள்ளன. ரோபோ மற்றும் ரிமோட் மூலம் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. இதனால் போர் இன்னும் உச்சகட்டத்தை எட்டும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது.

    அதே சமயம் சுரங்கங்களில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
    • காசா நகரமே தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

    காசா:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தொடங்கி 22 நாட்களை கடந்து விட்டது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் சபதம் ஏற்றுள்ளது.

    இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இது வரை 1,405 பேர் பலியாகி விட்டனர். இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் 7,326 பேர் இறந்து விட்டனர். பாலஸ்தீன மேற்கு பகுதியில் நடந்த மோதலில் 107 பேர் உயிர் இழந்து விட்டனர்.

    இதில் பெரும்பாலானோர் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள். இந்த போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,838 ஆக அதிகரித்து உள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.

    இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காசா பகுதியில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் படையினர் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசாவின் வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் போர் விமானங்கள் சரமாரியாக காசா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    நேற்று இரவு விடிய, விடிய குண்டுகளை வீசியது. வானில் இருந்து தீப்பந்துகள் விழுவது போல குண்டுகள் வெடித்தது. இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி விட்டன. இதில் பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    காசா நகரமே தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.

    வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல் தற்போது தரை வழியாகவும் தாக்க தொடங்கி உள்ளது. காசா எல்லையில் முற்றுகையிட்டுள்ள தரை படை பீரங்கிகள் காசாவின் புற நகர் பகுதிக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்புகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கியது. பின்னர் அவர்கள் தங்களது நிலைக்கு திரும்பி வந்ததனர். காசா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் இஸ்ரேல் வீரர்களுடன், தங்கள் போராளிகள் மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் தெரிவித்து உள்ளது. மேலும் இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்த போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படையை முழு பலத்துடன் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அவர்கள் ஊடுருவலை முறியடிக்க முற்றிலும் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.

    இதனால் இந்த சண்டை மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் உச்சக்கட்டம் அடைந்துள்ள சூழ்நிலையில் காசாவில் தொலை தொடர்பு துறை சேவைகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக காசாவில் உள்ள பொதுமக்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். காசா பகுதி வெளி உலக தொடர்பில் இருந்து முழுவதும் துண்டிக்கபட்டு உள்ளது. இதனால் காசாவில் என்ன நடக்கிறது என்பது எதுவுமே தெரியவில்லை. தங்களது பணியாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஐ.நா. மற்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து இருக்கிறது.

    • இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
    • அமெரிக்க ராணுவ வீரர்கள் 900 பேர் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா பகுதி மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவுக்குள் தரை வழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. காசா எல்லையில் ராணுவ டாங்கிகள் அணிவகுத்து நிற்கின்றன. 3 லட்சம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பின. ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இது தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் விரைவில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் காசாவுக்குள் புகுந்து பீரங்கி தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகார் கூறும் போது, ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் அடுத்த கட்ட போருக்கு தயாராவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வரும் நாட்களில் காசாவில் பீரங்கி தாக்குதல்களை தொடரும்.

    ஹமாஸ் அமைப்பினரை கொல்வதும், முழுப்படையெடுப்புக்கு அடித்தளமிடுவதும், வெடிக்கும் சாதனங்கள், உளவுத் தளங்களை நடுநிலையாக்குவதும் இஸ்ரேல் தரைப்படை நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

    வான் மற்றும் கடலில் இருந்து காசா மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. மூத்த ஹமாஸ் தளபதிகளை கொல்வதிலும், ஹமாஸ் உள்கட்டமைப்பை அழிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.

    இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோசவ் கல்லன்ட் கூறும்போது, ஹமாசுக்கு எதிரான போரில் அடுத்த கட்டங்களுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. நிலைமைகள் சரியாக இருக்கும் போது தரைவழி தாக்குதல் தொடங்கும் என்றார்.

    காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் 21-வது நாளாக தொடர்கிறது. நேற்று இரவு காசா மீது குண்டுகள் வீசப்பட்டன.

    இதற்கிடையே காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று அடைய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இப்போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் உள்ளது.

    இந்த நிலையில் கிழக்கு சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய குழுக்களின் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் புரட்சிகர காவலர் படையின் இரண்டு இடங்களை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே அமெரிக்க ராணுவ வீரர்கள் 900 பேர் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா தனது இரண்டு போர்க் கப்பல்களை மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
    • எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 19-வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது.

    இதற்கிடையே காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறும்போது, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இதற்கிடையே காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    காசாவில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன. இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

    இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    அதே போல் காசாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

    • மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
    • போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய துணை நிரந்தர பிரதிநிதி ரவீந்திரன் பேசியதாவது:-

    இஸ்ரேல், பாலஸ்தீனம், இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்க நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்க வேண்டும்.

    இந்த போர் சூழல் அதிகரிப்பு மோசமாக மனிதாபிமான நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது.

    இது மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்தின் பலவீனமான தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சவாலான காலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை அனுப்பும். பாலஸ்தீன மக்களுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்பட 38 டன் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

    காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளோம்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, போரில் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

    அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி ஆபத்தானது. நேரடி சமாதான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
    • ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.

    தொடர்ந்து கூறும்போது, லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது. இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன.

    இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன.

    பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

    • 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
    • காசாவில் நடந்த தாக்குதல்களில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர்.

    இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இஸ்ரேலில் இருந்து இதுவரை 5 சிறப்பு விமானங்களில் மொத்தம் 1,200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    அதே சமயம் காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். காசாவில் இந்தியர்கள் 4 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது  உடனடியாக மீட்போம் என்றும் அவர் கூறினார். மேலும் காசாவில் நடந்த தாக்குதல்களில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
    • இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிலவிய நீண்ட கால மோதல் தற்போது போராக வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர். போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் ஒவ்வொரு நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

    அந்த வகையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1,600 பேர் தாயகம் திரும்ப உதவும்படி ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானங்கள் இயக்கப்படும் என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சில மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
    • சில முக்கியமான இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் போரின் எதிரொலி டெல்லியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் போராட்டம் நடத்துவதற்கு சில அமைப்புகள் முனைந்தன. இதுபோல மேலும் சில இடங்களில் இஸ்ரேல் போர் காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் தூதரகம் முன் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதைப்போல சில யூத நிறுவனங்களின் அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகைக்காக மக்கள் கூடிய சில முக்கியமான இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதைப்போல இமாசல பிரதேசம், கோவா மற்றும் மராட்டியம் போன்ற சில மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

    • காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
    • இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கியது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.

    அந்தவகையில் நேற்றைய தினம் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவுடன் சிறப்பு விமானம் ஒன்று இந்தியா வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ×