search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
    • டிசம்பர் 31-ந்தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.

    ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் 40 நிமிடங்களிலேயே டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போனது. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    தொடக்கம் முதலே முன்பதிவு செய்ய தொடங்கினாலும், அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்வதால் 'சர்வர்' பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நாளை திருமலையில் கோகார்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 8.30 மணிக்கு உற்சவர் ஏழுமலையான் கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேல தாளம், மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    அங்கு பகல் 11 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 57, 104 பேர் தரிசனம் செய்தனர். 32 351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • முன்பதிவு செய்த நாளில் ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • நாடு முழுவதும் இந்தக் கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன.
    • திருப்பதி கோவிலில் 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.3,100 கோடி ஆகும்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலகப்புகழ் பெற்றது. தினந்தோறும் உலகமெங்கும் இருந்து இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள்.

    இங்கு மக்கள் காணிக்கைகளை குவிக்கிறார்கள்.

    உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2½ லட்சம் கோடி (சுமார் 30 பில்லியன் டாலர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவில் 1933-ம் ஆண்டு உருவான காலம்தொட்டு இப்போதுதான் முதல் முறையாக அதன் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது பிரபல தகவல் சேவை நிறுவனமான விப்ரோ (இதன் சொத்து மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி), உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே (இதன் மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி) மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஐஓசி ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட அதிகம்.

    திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 10¼ டன் தங்கம், 2½ டன் தங்க நகைகள் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதும் இந்தக் கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன.

    திருப்பதி கோவிலை விட அதிக சொத்து 2 டஜன் கம்பெனிகளுக்கு மட்டுமே இருக்கின்றன.

    இவற்றில் முக்கியமானவை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.17.53 லட்சம் கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (ரூ.11.76 லட்சம் கோடி), எச்.டி.எப்.சி. வங்கி (ரூ.8.34 லட்சம் கோடி), இன்போசிஸ் ( ரூ.6.37 லட்சம் கோடி), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (ரூ.6.31 லட்சம் கோடி), இந்துஸ்தான் யூனிலிவர் (ரூ.5.92 லட்சம் கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.5.29 லட்சம் கோடி), பார்திஏர்டெல் ( ரூ.4.54 லட்சம் கோடி), ஐ.டி.சி. (ரூ.4.38 லட்சம் கோடி) ஆகும்.

    திருப்பதி கோவிலின் மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், " திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் காணிக்கையாக தருகிற ரொக்கம், தங்கம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி வருமானமும் அதிகரித்து வருகிறது. இதனால் தேவஸ்தானத்தின் செல்வம் தொடர்ந்து பெருகி வருகிறது" என தெரிவித்தார்.

    திருப்பதி கோவிலில் நடப்பு 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.3,100 கோடி ஆகும். இந்த நிதி ஆண்டில் வங்கி வட்டியாக ரூ.668 கோடி வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும், சுமார் 2½ கோடி பக்தர்கள் மூலம் உண்டியல் காணிக்கை வடிவில் ரூ.1,000 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திருப்பதி கோவில் சார்பில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, அரியானா, மராட்டியம், டெல்லி மாநிலங்களில் நிறைய கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

    • பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம்.
    • இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நிகழ்வதால் காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.

    எனவே இன்று இரவு 7 மணியளவில் நடக்கயிருந்த பவுர்ணமி கருட சேவை ரத்து செய்யப்படுவதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணிவரை நிகழ்கிறது. அதையொட்டி இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன.

    அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு கைங்கர்யம், நிவேதனம் முடிந்ததும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலேஸ்வரர் கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் மூடப்படுகின்றன. முன்னதாக துணைக் கோவில்களில் காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம்.

    சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து கைங்கர்யங்கள் நடக்கும். இதைப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கார்த்திகை மாதத்தையொட்டி விஷ்ணு பூஜை நடந்து வருகிறது.
    • இந்த பூஜையின் முக்கியத்துவத்தை பக்தர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி விஷ்ணு பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜை நடந்தது.

    கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். அத்துடன் லட்சுமி நாராயண சிலைகள் மற்றும் துளசி மற்றும் நெல்லி செடிகளுடன் அமரவைக்கப்பட்டனர். அதன் பிறகு துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜையை அர்ச்சகர்கள் நடத்தினர்.

    அப்போது தேவஸ்தான வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரிலு கார்த்திகை மாதத்தின்போது துளசி தாத்ரி சஹிதா தாமோதர பூஜையின் முக்கியத்துவத்தைப் பற்றி பக்தர்களுக்கு விளக்கி கூறினார்.

    பூஜையில் ஏழுமலையான் கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், கோவிந்தராஜ தீட்சிதர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது
    • திருப்பதியில் 18-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது.

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று ேபசினார்.

    அவர் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதில் முக்கிய நிகழ்ச்சியாக 24-ந்தேதி கஜ வாகன வீதிஉலா, 25-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 27-ந்தேதி தேரோட்டம், 28-ந்தேதி பஞ்சமி தீர்த்தம், 29-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது. பஞ்சமி தீர்த்தம் அன்று கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

    திருப்பதியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம் மற்றும் கோவிந்தராஜசாமி சத்திரம் 2-ல் இந்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதியில் இருந்து இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்க தொடங்கி உள்ளோம்.

    சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கி வருகிறோம். குறிப்பிட்ட ஒதுக்கீடு முடிந்ததும் கவுண்ட்டர்களை மூடுகிறோம். டோக்கன் பெறும் பக்தர் அதே நாளில் தரிசனம் செய்யலாம்.

    டோக்கன் இல்லாத பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 2-ல் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் அமைதியாக காத்திருக்கலாம். அதற்கான நேரம் வரும்போது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து தரிசன வரிசையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் விரைவு தரிசனம் வழங்கப்படுகிறது.

    டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்து டைம் ஸ்லாட் டோக்கன்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்போம். ஆதாரை பதிவு செய்து டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்படுவதால், பக்தர்கள் தரிசனம் செய்தாலும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறை மட்டுமே டோக்கன் பெற வாய்ப்பு உள்ளது.

    டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. காலை 8 மணியாக மாற்றி, ஒரு மாத காலம் ஒத்திகை முறையில் தரிசனத்துக்காக பக்தர்களை அனுமதிக்கிறோம்.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இரவில் காத்திருக்கும் சாதாரணப் பக்தர்கள் அதிகாலையில் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்கிறோம். பக்தர்களின் கருத்துகளை பரிசீலனை செய்து உரிய முடிவெடுப்போம்.

    டிசம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து திருப்பதியில் உள்ள மாதவம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு ஆப் லைனில் பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளோம். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்குவது திருமலையில் தங்கும் இடம் வாங்குவது குறையும்.

    புனித தெலுங்கு கார்த்திகை மாதத்தில் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டி கடந்த 4-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சம்பந்தப்பட்ட பூஜைகளை நடத்தி வருகிறோம். இந்தப் பூஜை நிகழ்ச்சிகளை ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்புகிறோம்.

    திருப்பதியில் 18-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து வருகிற 23-ந்தேதி வரை திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோம மஹோற்சவம் நடத்துகிறோம்.

    8-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதையொட்டி 8-ந்தேதி கோவில் கதவுகள் 11 மணிநேரம் மூடப்படுகிறது. இதனால் கோவிலில் பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம் உள்ளிட்ட சிறப்பு தரிசனங்கள் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. கோவில் நடை திறந்ததும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    9-ந்தேதி தெலுங்கானா மாநிலம் ஓங்கோல், 12-ந்தேதி லண்டன், 13-ந்தேதி ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரத்தில் சீனிவாச கல்யாணம் நடக்கிறது.

    முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் அறிவுறுத்தலின்படி திருமலையை மாசு இல்லாத நகரமாக மாற்ற இலவச பஸ்களுக்கு பதிலாக (தர்ம ரதம்) மின்சாரப் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக ஓலக்ட்ரா நிறுவனம் ரூ.15 கோடி மதிப்பிலான 10 மின்சாரப் பஸ்களை வழங்க முன்வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கைசிக துவாதசியும் சிறப்பு பெற்றது.
    • உக்ரசீனிவாசமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கைசிக துவாதசி ஆஸ்தானம் நடந்தது. புராணங்களின்படி வைணவ ஷேத்திரங்களில் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான நாட்களில் கைசிக துவாதசியும் ஒன்றாகும். வராகப்பெருமாள் கைசிக புராணத்தின் 82 ஸ்லோகங்களை பூதேவி தாயாருக்கு உபதேசித்த நாள் கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கைசிக துவாதசியும் சிறப்பு பெற்றது.

    கைசிக துவாதசி அன்று ஒருநாள் மட்டும் சூரிய உதயத்துக்கு முன் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வேங்கடத்துரைவர் என்று அழைக்கப்படும் உக்ரசீனிவாசமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

    அதன்படி கைசிக துவாதசியான நேற்று அதிகாலை 4.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத உக்ரசீனிவாசமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உற்சவர்களை கோவிலுக்குள் கொண்டு சென்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கவாசலில் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, பூரணை பட்டணம் கைசிக துவாதசி ஆஸ்தானத்தை அர்ச்சகர்கள் செய்தனர். அதில் கோவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய பாதைகளில் பக்தர்கள் நடந்து வருவார்கள்.
    • ஏ.வி.தர்மாரெட்டி பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு பதில் அளித்துப் பேசினார். பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கிஷோர், காவளி: விரைவில் காலாவதியாகப் போகிற அரசு பாண்டுகள் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் அரசாங்கத்துக்கு முதலீடு செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது உண்மையா?

    அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி: தேவஸ்தான வரலாற்றில் எந்த அரசாங்கத்துக்கும் பணம் கொடுத்ததில்லை. எதிர்காலத்திலும் கொடுக்காது. அறங்காவலர் குழு தலைவர் மீதும், தேவஸ்தானம் மீதும் அவதூறு பரப்ப வேண்டாம். தவறான தகவல்களை தருகிறார்கள். அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காலர் குழு உறுப்பினர்கள் இதுவரை எந்தத் தவறும் செய்யவில்லை. இனியும் செய்ய மாட்டார்கள். மாநில அரசுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்ததில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தேவஸ்தானம் இதுவரை ரூ.15,938 கோடியை டெபாசிட் செய்துள்ளோம். இனிமேல் அதிக வட்டி தரும் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்வோம். தகவறான தகவல்களை நம்ப வேண்டாம், என்று பக்தர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    ஹனுமந்த்பிரசாத், ஐதராபாத், திருமால்ராவ், நல்கொண்டா: எங்கள் காலனியில் உள்ள ராமர் கோவிலில் தூபம், தீபம், பிரசாதம் செய்ய முடியவில்லை. மாநில அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் நிதி போதாது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக நிதி உதவி செய்கிறீர்களா, எங்கள் காலனியில் கல்யாண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்?

    அதிகாரி: தேவஸ்தான அதிகாரிகள் அதைப் பார்த்து, ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் உதவி வழங்க முயற்சி செய்வார்கள். கல்யாண மண்டபம் கட்டுவதற்கான விதிகளை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள்.

    பென்சலயா, நெல்லூர்: எங்கள் கிராமத்தில் கோவில் கட்ட தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது, காரணம் என்ன?

    அதிகாரி: கோவில் கட்டுவதற்கான விதிகளை பரிசீலனை செய்வோம்.

    சுபாஷினி, சென்னை: முதியோர் சாமி தரிசனம் செய்ய வரும்போது, உதவியாளராக வரும் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. முதியோர் கோவிலில் தள்ளப்படுகின்றனர்?

    அதிகாரி: ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மட்டுமே முதியவர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.

    ராம்பாபு, கம்மம்: சாமிக்கு வெள்ளிக் கிரீடம் அணிவிக்க வேண்டும்?

    அதிகாரி: ஏழுமலையானுக்கு வெள்ளிக் கிரீடம் அணிவிப்பதில்லை. உங்களிடம் இருந்து வெள்ளிக் கிரீடத்தைக் காணிக்கையாகப் பெற்று அதை ஏழுமலையான் கோவில் துணைக் கோவில்களில் பயன்படுத்துவதை நாங்கள் பரிசீலிப்போம்.

    சாம்பையா, வாரங்கல்: வி.ஐ.பி பிரேக் தரிசனங்களுக்கு எப்போது கடிதம் கொடுக்க வேண்டும்?

    அதிகாரி: கடிதத்தை முந்தைய நாளிலில் இருந்து 2 மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். ஆறரை மணி நேரம் கழித்து உங்கள் மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ். வரும். பின்னர் தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

    பாலாஜி, சென்னை: சென்னையில் இருந்து திருமலைக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்தோம். சார்ஜிங் பாயின்ட் இல்லை. திருமலை மற்றும் திருப்பதியில் சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கலாம்?

    அதிகாரி: தற்போது அலிபிரி மற்றும் திருமலையில் தேவஸ்தான சார்ஜிங் பாயின்ட்கள் உள்ளன. பக்தர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம். விரைவில் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் எச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து சார்ஜிங் பாயின்ட்களை அமைப்போம்.

    அசோக்குமார், சென்னை: அலிபிரி நடைபாதையில் சோதனையின் போது ஊழியர்கள் பக்தர்களை அவமதிக்கிறார்கள்?

    அதிகாரி: பாதுகாப்பு காரணங்களுக்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டுவில் சோதனை நடத்தப்படுகிறது. பக்தர்களை அவமானப்படுத்தாமல் இருக்குமாறு நடவடிக்கை எடுப்போம். விஜிலென்ஸ் ஊழியர்கள் உங்களை அவமானப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    தேஜா, பெங்களூரு: முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு நேரடி தரிசனம் கொடுங்கள்?

    அதிகாரி: தினமும் ஒரு மணி நேரம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்குகிறோம். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து திருமலைக்கு வர வேண்டும்.

    ராஜேஸ்வரராவ், கரீம்நகர்: ஸ்ரீவாரி சேவையில் லட்டு பிரசாத சேவை நீக்கப்பட்டது. மீண்டும் சேர்க்கவும்?

    அதிகாரி: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் லட்டு பிரசாத சேவை செய்யக்கூடியவர்களை பரிசீலனை செய்வோம்.

    யுவராஜ், திருப்பதி: சீனிவாசம் விடுதி வளாகத்தில் சாலையைக் கடக்க பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும்?

    அதிகாரி: திருப்பதி மாநகராட்சி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தெரிவித்து, பிரச்சினையை தீர்க்க ஏற்பாடு செய்வோம்.

    சூர்யநாராயணா, விஜயவாடா, மல்லேஸ்வரராவ், நிர்மல்: திருமலைக்கு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய பாதைகளில் நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது எப்போது, இலவச தரிசனத்தில் செல்லும் டைம் ஸ்லாட் டோக்கன்களை ஆன்லைனில் வெளியிடலாமா?

    அதிகாரி: நாங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம், கோவிந்தராஜசாமி சத்திரங்களில் டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்குகிறோம்.

    ஸ்ரீநாத், கிழக்கு கோதாவரி: ஸ்ரீவாரி சேவா செய்ய விண்ணப்பிக்க ஆப் லைனில் அனுமதிக்கப்படுமா?

    அதிகாரி:ஸ்ரீவாரிசேவை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். ஸ்ரீவாரிசேவா செய்கின்ற எந்த சேவகருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.

    சிவகோபால், கர்னூல்: நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருப்பதுபோல் கவுண்ட்டர்களுக்கு வெளியே கொட்டகை அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்?

    அதிகாரி: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருமலை முழுவதும் கொட்டகை அமைக்க முடியாது.

    லட்சுமிநாராயணா, ராஜமுந்திரி: பக்தி சேனலில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன. ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறோம். குழந்தைகள் மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை அளிப்பவர்களுக்கு பிரேக் தரிசனம் அளிக்கலாமா?

    அதிகாரி: குழந்தைகள் இருதய மருத்துவமனைக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் காணிக்கை அளித்தவர்களுக்கு பிரேக் தரிசனம் தருகிறோம். ரூ.10 ஆயிரம் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்க முடியாது.

    ஜெயலட்சுமி, கர்னூல்: ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் லக்கி டிப் ஆர்ஜித சேவைகள் கிடப்பதில்லை. நான் ஒரு இசை ஆசிரியர், எனக்கு மேடையில் பாட வாய்ப்பு தர முடியும்?

    அதிகாரி: ஸ்ரீவாரி ஆர்ஜித சேவையை ஆன்லைனில் பதிவு செய்யலாம் மற்றும் அதற்கு முந்தைய நாள் திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு மையத்தில் லக்கி டிப் கவுண்ட்டரில் பங்கேற்கலாம். நீங்கள் பக்தி பாடல்களை பாட வேண்டுமென்றால் நாத நீராஞ்சன மேடையில் பாட வாய்ப்பளிக்கப்படும்.

    மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    • 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
    • திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடியாக உள்ளது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பணம், தங்கத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் செய்கிறது. ஆனால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் டெபாசிட் என்ற பெயரில் மாநில அரசிடம் தங்கத்தை அடகு வைப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

    இதற்கு பதிலளித்த தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மீது யாரோ சிலர் தவறான செய்தியைப் பரப்புவது ஏற்றதல்ல என்று எச்சரித்தார்.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்கம் மொத்தம் 10,258.37 கிலோ கிராம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் ஏழுமலையானின் ரொக்க டெபாசிட் வெகுவாக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி ரூ.13,025 கோடி ரொக்கம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.15,938 கோடி ரொக்கம் டெபாசிட் உள்ளது.

    2019-ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி தங்கம் கையிருப்பு 7,339.74 கிலோ கிராமாக இருந்தது. ஆனால் இப்போது அது 10,258.37 கிலோ கிராமாக உள்ளது என்றார்.

    மேலும், ஏழுமலையானின் தங்க நகைகள் மற்றும் ரொக்கம், அதிக வட்டி தரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் சாமியின் பணம் மற்றும் தங்க நகைகளை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய மாட்டோம் எனத் தெரிவித்தார்.

    • விஷ்ணு சாளக்கிராம பூஜை, சங்கல்பம் மற்றும் பிரார்த்தனை சூக்தம் தொடங்கியது.
    • ஷம மந்திரம் மற்றும் மங்கள ஆரத்தியுடன் விஷ்ணு சாளக்கிராம பூஜை முடிந்தது.

    தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. அதற்காக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி வசந்த மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் சாளக்கிராம கற்களும் எடுத்துச் செல்லப்பட்டன.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான வைகானச ஆகம ஆலோசகர் மோகனராங்காச்சாரிலு இந்தப் பூஜையின் பலன்களை தெரிவித்தார். 100 அஸ்வ மேத யாகங்கள் செய்த பலன் கிடைத்து, பிறவியில்லா முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அதைத்தொடர்ந்து முதலில் விஷ்ணு சாளக்கிராம பூஜை, சங்கல்பம் மற்றும் பிரார்த்தனை சூக்தம் தொடங்கியது. பின்னர் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் சாளக்கிராம கற்களுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். விஷ்ணு அஷ்டோத்திர சதநாமாவளியை பாராயணம் செய்தனர். அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கும், சாளக்கிராம கற்களுக்கும் ஆரத்தி எடுத்தனர். அதில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவாக ஷம மந்திரம் மற்றும் மங்கள ஆரத்தியுடன் விஷ்ணு சாளக்கிராம பூஜை முடிந்தது.

    அதில் கோவில் பிரதான அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதர், தர்மகிரி வேதப் பள்ளி, தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×