search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97380"

    ம.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ம.தி.மு.க. சட்ட திட்ட விதி எண்: 23-ன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

    வைகோ


    ம.தி.மு.க. சட்ட திட்ட விதி எண்: 26-ன்படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும், கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும் தலைமை நிலையம் இயங்கி வருகின்றது.

    கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இயங்கும் தலைமை நிலையப் பணிகளை, தலைமைக் கழக செயலாளர் ஒருங்கிணைப்பார்.

    கழகப் பொதுச்செயலாளரின் சுற்றுப்பயணங்கள், சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையையும் தலைமைக் கழகச் செயலாளர் மேற்கொள்வார்.

    கழகத்தின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல்; அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட மற்ற பல்வேறு அமைப்புகளுடன் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தொடர்புகளில் பொதுச்செயலாளர் இடும் பணிகளை நிறைவேற்றுதல் தலைமைக் கழகச் செயலாளரின் பணி ஆகும்.

    ம.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் (ம.தி.மு.க. ஐ.டி. விங்) பொறுப்பாளர் பொறுப்பையும், கூடுதலாக தலைமைக் கழகச் செயலாளரே கவனிப்பார்.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.


    ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம், இனி, ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த அறிவிப்பில், விதி 5-ன்படி, ஏற்கனவே பணி நியமன நடவடிக்கைகளில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு பொருந்தாது என விதிவிலக்கு அளித்தது.

    பதிவு மூப்பு அடிப்படையில், சான்று ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்தபிறகு, 1258 பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் உட்பட சுமார் 5000 பேர் பணி நியமனம் கிடைக்கப் பெறாமல் உள்ளனர். அவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

    அந்த வழக்கில், ‘2012-க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள், கிளாஸ் 5 விதியின்படி. இனி, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டிய தேவை இல்லை; காலிப்பணி இடங்கள் ஏற்படும்போது, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

    தற்போது, தமிழ்நாடு முழுமையும் அரசுப் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து இருப்பதாக, அரசு அறிவித்து இருக்கின்றது. எனவே, பல்லாயிரக்கணக்கான புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. விரைவில், புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கின்றார்.

    இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே காத்திருப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மேல்சபை எம்.பி.யாக்கி அழகு பார்த்த தி.மு.க.வுக்கு மீண்டும் வைகோ திரும்ப வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றிற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தராத பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது போன்ற செயல்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் மூலம் பதில் கூறி உள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள சிலரை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா போட்ட கணக்கு தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த தோல்வி, இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் விழித்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    தமிழகத்தின் வடமாவட்டங்களில் வலிமையாக இருந்த பா.ம.க., பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் வலம் வந்த தே.மு.தி.க.வும் மக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் இத்தேர்தலில் மண் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

    தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான், பிரசாரம் செய்தபோதே, தி.மு.க. கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்று கருதினேன். தேர்தல் முடிந்ததும் இதனை தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.

    தமிழகத்திற்கு இனி மு.க. ஸ்டாலினின் தலைமைதான் தேவை. அது காலத்தின் கட்டாயமும் ஆகும்.

    தேர்தல் களத்தில் நின்ற டி.டி.வி. தினகரன் கும்பல் தேர்தலில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிக்கோள் இல்லாமல் ஒரு சிலருக்காக மட்டும் கட்சி நடத்தியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.

    இந்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இனி அவர், அடுத்த தேர்தலுக்கு தான் மக்கள் முன் வருவார். அப்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அரசியலில் இருந்து வெளியேறுவார்.

    ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை பாராட்டி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர், பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாகவே இருக்கிறது.

    மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு இடமில்லை. எந்த பதவியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதை நான், ஏற்கனவே எதிர்பார்த்தேன். பிரதமர் மோடி, புதிய இந்தியா என்று கூறி புறப்பட்டு விடுவார். இனி தமிழகத்தை கண்டுகொள்ள மாட்டார்.



    தேர்தலில் களப்பணியாற்றிய வைகோவிற்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கி ஏற்கனவே தி.மு.க. அழகுப்பார்த்துள்ளது. இப்போது மீண்டும் அவருக்கு மேல்சபை எம்.பி. வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே வைகோ மீண்டும் தி.மு.க.வில் இணைய வேண்டும். தென்தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    தமிழகத்தின் தேனி தொகுதியில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இது இளங்கோவன் மீது திணிக்கப்பட்ட தோல்வி ஆகும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது அ.தி.மு.க.வினர் வசம் இருந்து தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற 9 தொகுதிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.

    நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும். அங்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களே வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன்? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15-ந்தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் எதிர் பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்?.

    தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.

    கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

    குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    வைகோவின் தேர்தல் ராசியை மீம்ஸ் மூலம் விமர்சித்தவர்களுக்கு ம.தி.மு.க.வினர் சுவரொட்டி மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.
    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தியும் வெற்றி பெற்றார்.

    தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் வைகோ இருக்கும் கூட்டணி வெற்றி பெறாது என்றும், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வைகோ இடம் பெற்றிருந்த கூட்டணி தோல்வியடைந்ததால் அவரது அரசியல் ராசியை விமர்சித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பும் வைகோவை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன. இது ம.தி.மு.க.வினருக்கு மனவேதனை அளித்தது.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த ம.தி.மு.க.வினர் ‘வைகோவின் ராசி எப்புடி?’ என்ற தலைப்பிட்டு மதுரையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில் வைகோவின் படத்துடன் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

    தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம் என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

    இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இது ஒருபுறம் இருந்தாலும், வைகோவும், ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த முறை வைகோவின் ராசி ராகுலை காவு வாங்கி விட்டது என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீண்டும் மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
    திராவிட கோட்டைக்குள் பாரதிய ஜனதாவால் நுழைய முடியவில்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் தி.மு.க. 3-வது இடத்தை பெற்று இருக்கிறது. தலைமை ஆளுமை என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். தமிழக நலன்களை தி.மு.க. காக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.


    திராவிட கோட்டைக்குள் பா.ஜனதாவால் நுழைய முடியவில்லை. அடுத்து முதல்வர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வருவார் என்பதை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் தார்மீக உரிமையை எடப்பாடி பழனிசாமி இழந்து இருக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியின் வெற்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை காட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆளும் கட்சியின் அறை கூவலுக்கு எதிராக தி.மு.க. கூட்டணியின் வெற்றியை கண்டு மற்ற மாநிலத்தவர் கூட வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    நியூட்ரினோ, மேகதாது அணை, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றாத வண்ணம் தமிழகத்திற்கான அரணாக தி.மு.க. கூட்டணி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக-வின் கணேஷமூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    ஈரோடு தொகுதியில் மதிமுக-வைச் சேர்ந்த கணேஷமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜி மணிமாறன் போட்டியிட்டார். கணேஷ மூர்த்தி 563591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணிமாறன் 352973 வாக்குகள் பெற்றார்.

    மக்கள் நீதி மய்யம் 47719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 39010 வாக்குகளும் பெற்றன.
    ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வெங்கு மணிமாறனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அ.ம.மு.க. சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.

    ஈரோடு தொகுதி ஓட்டு எண்ணிக்கை ஈரோட்டை அடுத்த சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்தே ம.தி.மு.க வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலையில் இருந்தார்.

    இதில் ம.தி.மு.க. வேட்பாளர் 4360 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு மணிமாறன் 2020 ஓட்டுகள் பெற்றிருந்தார்.

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 28845

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 17233

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 1402

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 2374

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 56339

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 33439

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 2563

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 5193

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 84065

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 52204

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 4062

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 8113

    கணேசமூர்த்தி (ம.தி.மு.க) - 112385

    வெங்கு மணிமாறன் (அ.தி.மு.க) - 71128

    செந்தில்குமார் (அ.ம.மு.க) - 5419

    சரவணகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 10623

    4-வது சுற்று முடிவில் கணேசமூர்த்தி அ.தி.மு.க வேட்பாளரை விட 41.257 ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தார்.
    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் பரப்புரை கூட்டத்தில் கமல்ஹாசன் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படஉள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி பதிவு செய்து உள்ளார். காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோர் ஏன் கண்டிக்கவில்லை?. கமல்ஹாசன் சரித்திர உண்மையை பதிவு செய்தார். அவர் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?. இதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை?.



    கோட்சே கொடியவன் என்று பதிவிட்டவரை நடமாடவிடக்கூடாது, நாக்கை அறுப்பேன் என்று பேசுவது, கூட்டத்தில் ஆட்களை அனுப்பி செருப்பு வீச செய்வது என்பது அநாகரிகமான அரசியல். ஆரோக்கியமற்ற ஒரு வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடுகின்ற இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்து விட்டு, லட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம் பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து இருக்கின்றன.

    இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப்பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

    1794 சதுர கி.மீ. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

    மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மே 10 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

    வேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலிகொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல இலட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?

    தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

    காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.

    எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
    மு.க.ஸ்டாலினின் அரசியல் சதுரங்கத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங் கூடலூர், ஈசநத்தம், சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்ற படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி காவிரிக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தளபதி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் உதயசூரியன் நகரில், வறுமையில் வாடுவோர், ஒரு குடிசைக்குள் 3 குடும்பங்களாக நெருக்கடியில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரை கணக்கெடுத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்கிற அவரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. அதனை மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருப்பதால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுவது உறுதி.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தற்போதுகூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் திணிக்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரான மோடி ஆட்சி மத்தியில் தூக்கி எறியப்படும். முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மோடி ஆட்சி பச்சை கொடிகாட்டி விட்டார்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தஞ்சை தரணி உள்பட காவிரி டெல்டாவை பஞ்ச பகுதிகளாக மாற்ற துடிக்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்த்துகின்ற அரசியல் சதுரங்ககாய்களை பொறுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை தட்டிக்கேட்க முடியாமல் திராணியில்லாமல் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

     


    பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளை விற்பனை செய்வது பற்றிய செய்திகள் வருகிறது. இதை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது.

    ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என குழந்தைகளை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்கின்ற கொடுமை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரங்கேறி இருக்கிறது. அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? அவர்களை பிச்சை எடுக்கக்கூட பயன்படுத்தலாம். இதையெல்லாம் பார்க்கும் போது சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டதை பார்க்க முடிகிறது.

    மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வு எழுதபோகிற இடத்தில், மாணவிகள் காதிலே போட்டிக்கிற கம்மலை கழற்ற சொல்கிறார்கள். அதில் என்ன கம்யூட்டரா வைத்திருக்க முடியும். இதைவிட அந்த பெண் வெட்கி தலை குனியும்படி துப்பட்டாவை எடுத்து சோதனை போட்டிருக்கிறார்கள்.

    தேர்வு எழுதப் போகும் போது எத்தனை பதற்றம் இருக்கும். நானும் கல்லூரிகளிலே தேர்வு எழுதியவன் தான். ஆனால் நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்னரே, இப்படி சோதனை போட்டால் அவர்கள் எப்படி பதற்றமின்றி தேர்வெழுத முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத போகிறவர்களுக்கு சோதனை செய்கிறார்களா? என்றால் இல்லை.

    அரியலூர் மாணவி அனிதா மற்றும் பிரதீபா ஆகியோர் நீட் தேர்வினால் தங்களுக்கு இன்னுயிரை மாய்த்து கொண்டதை மறக்க இயலுமா? 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். அது பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிற மாநில சுயாட்சியாக தான் இருக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் உறுதி எனும்போது நீட் உள்ளிட்டவற்றில் பறிபோன தமிழக உரிமைகள் மீட்கப்படுவது உறுதி.

    நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேபிள் டி.வி. கட்டணம், கியாஸ் சிலிண்டர் உயர்வு ஆகியவற்றால் மக்கள் படும் அவதி தீர்க்கப்படும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள் என்றும் இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும் என்றும் வைகோ பேசினார்.
    தூத்துக்குடி:

    ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் வல்லநாட்டில் திரண்டு இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்கள் தீர்க்கப்படவில்லை. கல்வி கடன்கள் நீக்கப்படவில்லை. பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது.

    இளைஞர்கள் 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். காரணம் இங்குள்ள அரசு ஊழல் அரசாக இருக்கிறது. இவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் இருக்கின்ற நகைகளை அடமானம் வைத்து படிக்கவைத்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காததால் தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன், 5 பவுன் வரை வங்கியில் தங்க நகை கடன் பெற்றவர்களுக்கு அவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து, தங்க நகைகளை பெற்று கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.

    இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஏற்படும் பிரச்சனை குறித்து கேட்டறிய செல்லும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி, இனி யாரும் போராடக்கூடாது என்று 13 பேரை சுட்டுக் கொலை செய்தது. அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்தி கேட்கிறேன். அந்த செயலுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கும் நீதிபதிகள் நீங்கள்.

    தமிழகத்துக்கு வருகிற கேடுகளை இந்த அரசால் தடுக்க முடிகிறதா? நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்து தேனி மாவட்டத்தை பாழ்படுத்த துடிக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. இதனை தடுக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய துணிச்சல் இந்த அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழகம் தான். இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதைத்தொடர்ந்து அவர் தெய்வச்செயல்புரம், மேலதட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
    ×