search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டுபிடிப்பு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இந்த ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரி நீரில் நச்சுக்கள் கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2019-ம் ஆண்டு மார்ச் வரை 16 கி.மீ. பரப்பில் உள்ள வீராணம் ஏரியின் 6 இடங்களில் இருந்து ஏரி நீர் எடுக்கப்பட்டது. இதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வீராணம் ஏரி நீரில் 10 சயனோ பாக்டீரியாக்கள் உள்ளதால் இவைகள் மூலமாக இந்த நச்சுக்கள் உருவானது ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுக்கள் இருக்க கூடாதென உலக சுகாதார மைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. ஆனால், வீராணம் ஏரியில் ஒரு லிட்டர் நீரில் 17.72 மைக்ரோ கிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது கண்டறியப்பட்டது. இந்த நச்சுக்கள் மனித உடலில் உள்ள கல்லீரலை பாதிப்படைய செய்வதோடு, தோல் வியாதிகளும் வருமென சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் நீர் வடிவாய்க்கால்கள் மூலம் வீராணம் ஏரிக்குள் வருகிறது. இந்த நிலங்களின் விளைச்சலுக்காக பயன்படுத்தப்படும் உரங்களினால், ஏரிக்கு வரும் நீரின் மூலமாக இந்த நச்சுக்கள் வந்திருக்கும் என்று சென்னை பிரசிடென்சி கல்லூரி தாவரவியல் ஆராய்ச்சியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இந்நீரில் உள்ள அமினோ அமிலம் மூலமாக புற்றுநோய் வருவதற்கான அபாயமும் உள்ளதாக அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

    கடந்த 2-ம் உலகப்போரின் போது மேற்கண்ட நச்சுக்களை எதிரி நாடுகளில் உள்ள நீர்நிலைகளில் கலந்து அந்த மக்களை ஹிட்லர் கொன்று குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    தொட்டியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ளதை படித்ததில் தொட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பது தெரிய வந்தது.
    பல்லடம்:

    நூற்றாண்டுக்கு மேலான பழமையான தொட்டியை பல்லடம் அருகே வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதுகுறித்து பல்லடம் வரலாற்று மையம் குழுவை சேர்ந்த பாண்டியன் கூறியதாவது:

    பல்லடம் வட்டாரத்தின் வரலாற்று சிறப்புகள், தொல்லியல் சார்ந்த பொருட்கள், கட்டிட கலை, சிற்பங்கள் ஆகியன குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அவ்வாறு பல்லடம் அருகே ஆறாக்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகே பழமையான கால்நடை தொட்டி ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தொட்டியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ளதை படித்ததில் தொட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்பது தெரிய வந்தது. அன்றைய காலகட்டத்தில் மாட்டு வண்டிகளே பிரதானமாக இருந்துள்ளன. 

    கால்நடைகளின் தாகம் தீர்க்க வேண்டி ஆறாக்குளம் கிராமத்தை சார்ந்த ஒருவர் கால்நடை தொட்டியை உபயமாக வழங்கியுள்ளார். இதேபோல் ஒரு கி.மீ., தூரத்துக்குள் இன்னும் தொட்டிகள் இருக்க வாய்ப்பு உள்ளது. 

    தொட்டியில் உள்ள வாசகங்கள் தெளிவாக இல்லை. பல எழுத்துகள் மறைந்துள்ளன. நம் முன்னோர்களின் பொக்கிஷமான இவை நம் நாகரீகத்தை பறைசாற்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
    சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    பீஜிங்:

    சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட புதைபடிமங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின் 4,351 புதைபடிமங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதைபடிமமான பல உயிரினங்களின் தோல், கண்கள் மற்றும் உள் உறுப்புகள் மிகவும் நேர்த்தியாக புதைபடிமமாகி பதனமாகி இருப்பதாலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதாலும் இதை பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்று புதை படிமவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
    நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை பாய்கிறது. #FakeUniversity #UGC
    புதுடெல்லி:

    நாட்டின் தலைநகரமான டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    அவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.

    இதுபற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரி சத்யபால்சிங் எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில் கூறி இருப்பதாவது:-

    பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் நடத்திக்கொண்டு, மக்களை முட்டாள் ஆக்கும் விதத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருகிற போலி பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவை உரிய அனுமதியின்றி நடத்தப்படுபவை ஆகும்.

    மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் தங்கள் பகுதியில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பல்கலைக்கழக மானியக்குழு போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளைக் கேட்டு வந்தும் அவற்றில் மாணவர்கள் சேருவதால்தான் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  #FakeUniversity #UGC
    நாசாவின் கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி ஆய்வுக்கலன் மூலம் பூமியைப் போன்ற இரண்டு உலகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. #NASA #AlienWorld
    வாஷிங்டன்:

    கெப்லர் எக்சோப்லாநெட் என்ற விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டு, பூமியை போல் வேற்றுக்கிரகங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை ‘சிக்னஸ்’ நட்சத்திர கூட்டத்திற்கு அருகே இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

    கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ள நட்சத்திரங்கள் பலவும் பூமியிலிருந்து நூறு முதல் ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பவை என்பதால் இதுவரை மனிதர்கள் செல்லாத எல்லைவரை இந்த விண்வெளி தொலைநோக்கி படம் எடுத்து அனுப்பியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



    பூமியைப் போன்ற கிரகங்களை அண்டச் சராசரத்தில் கண்டுபிடிப்பது என்பது சர்வ சாதாரணம் என்றாலும் வானியல் வல்லுநர்கள் இந்தக் கிரகங்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    பூமியிலிருந்து 60 ஒளியாண்டுகள் தொலைவில் கிட்டத்தட்ட பூமியின் பருமனிலும், இருமடங்கு பருமனுள்ள கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவால் அனுப்பப்பட்டுள்ள டிரான்ஸ்டிங் எக்சோப்லாநெட் செயற்கைகோள் மூலமாகவே இந்தக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ரெட்டார்ஃப் நட்சத்திரத்திற்கு அருகில் இரண்டாவது வேற்றுலகம்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கிரகம் பூமிக்கு ஒப்பிடக்கூடியது ஆனால் சற்று பெரியது என்றும், அதன் நட்சத்திரத்தைச் சுற்றி மிகக் குறைவான சுற்றுப்பாதைக் காலமே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. #NASA #AlienWorld
    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #NatarajarStatue
    சென்னை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 5.7.1982 அன்று மிகப்பெரிய அளவில் சிலைகள் திருட்டுபோன சம்பவம் நடந்தன.

    நடராஜர் சன்னதியின் இரும்பு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய்விட்டதாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 600 வருடங்கள் பழமையான 2½ அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, 2 அடி உயரமுள்ள ஐம்பொன் சிவகாமி அம்மன் சிலை, 1½ அடி உயரமுள்ள ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை, 1 அடி உயரமுள்ள ஐம்பொன் ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகள் திருட்டுபோனதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த 4 ஐம்பொன் சிலைகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவை ஆகும். கடந்த 36 வருடங்களாக விசாரணை நடத்தியும் இந்த சிலை திருட்டு வழக்கில் கல்லிடைக்குறிச்சி போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. வழக்கு விசாரணையை கைவிட்டு விட்டனர்.

    இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 1½ ஆண்டுகளாக, இந்த சிலை திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    தீவிர விசாரணையில் திருட்டுபோன ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலையை கடத்தி சென்ற திருட்டு கும்பல் ஆஸ்திரேலியாவில் அச்சிலையை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    திருட்டு போனதில் ஒரு சிலை மட்டும் (நடராஜர்) ரூ.30 கோடி மதிப்புடையது ஆகும். இந்த சிலை உள்பட 8 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    இந்த வழக்கை கல்லிடைக்குறிச்சி போலீஸ் விசாரணையில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது  .#NatarajarStatue 
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 17 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடித்தது தொடர்பாக அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள், காஞ்சீபுரம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மின் நுகர்வோர்களுக்கு ரூ.7 லட்சத்து 25 ஆயிரத்து 595 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.

    மேலும் குற்றவியல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக கூடுதலாக ரூ.78 ஆயிரம் செலுத்தினர். எனவே அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

    மின் திருட்டு சம்பந்தமான புகார்களை 9445857591 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியில் 5-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை பகுதியில், தெருவோரம் நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர் தேர்பேட்டை பகுதிக்கு சென்று நடுகல்லை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தெப்பக்குளம் அருகே சாலையோரம், 3 ஆடி ஆழத்தில் 10 அடி உயரம் கொண்ட ஒரு நடுகல் புதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நடுகல் தோண்டி எடுக்கப்பட்டது.

    இந்த நடுகல்லில் அமர்ந்த நிலையில் உள்ள பெண்ணின் கையில் கத்தி, கழுத்தின் அருகே இருப்பது போன்றும், சிவலோகத்திற்கு பெண்ணை அழைத்து செல்வது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிவலிங்கம், நந்தி மற்றும் சில பெண்கள் நிற்பது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த நடுகல் 5-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று மையத்தினர் தெரிவித்தனர். 
    தமிழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் இந்தியாவின் முதல் தானியங்கி சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    கோயம்புத்தூரை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் இணைந்து இந்தியாவின் முதல் தானியங்கி சக்கர நாற்காலி (Wheelchair) உருவாக்கியுள்ளனர். இந்த தானியங்கி சக்கர நாற்காலி பயனரை ஒருஇடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்லும். போக வேண்டிய இடத்துக்கு வீல்சேர் தானாக செல்லும் என்பதோடு, வழியில் இருக்கும் இடர்பாடுகளை தவிர்க்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    செல்ஃப்-இ (Self-E) என அழைக்கப்படும் இந்த வீல்சேர் ரோபோடிக் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Robotic Operating System - ROS) பயன்படுத்துகிறது. இந்த இயங்குதளம் கொண்டு தானியங்கி வீல்சேர் தானாக செல்கிறது. இது அதன் அருகில் உள்ள இடங்களில் பயணிக்க ஏதுவாக வரைபடம் ஒன்றை உருவாக்கி, அதனை ஸ்மார்ட்போன் செயலியில் பிரதிபலிக்கிறது.

    வழியில் நிலையான மற்றும் மாறக்கூடிய இடர்பாடுகளை லேசர் சென்சார் மூலம் இயங்குதளம் தானாக கண்டறியும். பின் ஸ்மார்ட்போனில் உள்ள வரைபடத்தில் பயனர் எங்கு வேண்டுமானாலும் தொட முடியும். பயனர் தொடும் இடத்திற்கு வீல்சேர் பாதுகாப்பாக செல்லும். 

    முற்றிலும் பயனர் உதவியின்றி தானாக செல்லும் இதே போன்ற வீல்சேர் தற்சமயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாடல்கலின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், மாணவர்கள் உருவாக்கியிருக்கும் வீல்சேர் ப்ரோடோடைப் விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவு தான். 

    சித்னா ரவி தேஜா, சரத் ஸ்ரீகாந்த் மற்றும் அகில் ராஜ் என செல்ஃப்-இ வீல்சேரை உருவாக்கிய மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமிர்தா விஷ்வா வித்யபீடம் மனிதாபமான தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஜூனியர் ஆராய்ச்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.



    “வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணையாமல் பல்கலைக்கழக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட முதல் தானியங்கி சக்கர நாற்காலி என்ற பெருமையை செல்ஃப்-இ பெற்றிருக்கிறது. தற்சமயம் இந்த வீல்சேர் மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என பல்வேறு சூழல்களில் சோதனை செய்யப்பட வேண்டும்,” என அமிர்தா விஷ்வா வித்யபீடம் மனிதாபமான தொழில்நுட்ப ஆய்வகத்தின் உதவி பேராசிரியர் ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

    “மாணவர்களின் தற்போதைய உருவாக்கம் வெற்றிகரமான ப்ரோடோடைப் என்ற நிலையில் அமிர்தா விஷ்வ வித்யபீடம் தொழில்நுட்ப வியாபார இன்குபேட்டர் மூலம் இதனை வணிக மயமாக்க இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

    செல்ஃப் இ தானியங்கி வீல்சேரை மருத்துவமனைகளில் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விமான நிலையம் அல்லது வீட்டில் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போனினை பயன்படுத்த தெரிந்த அனைவராலும் இந்த வீல்சேரை பயன்படுத்த முடியும். இதனால் வழக்கமான வீல்சேர்களில் ஜாய்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.

    செல்ஃப் இ தானியங்கி வீல்சேர் அதன் அருகில் உள்ள மக்கள், சுவர்கள், தூண்கள், மேசை, நாற்காலி போன்ற இடர்பாடுகளை தானாக கண்டறிந்து கொள்ளும். இதற்கு லிடார் (LiDAR) எனும் லேசர் சென்சாரை இந்த வீல்சேர் பயன்படுத்துகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் வரைபடம் லானாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு அனுப்பப்படும். இதற்கென பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    சேலம் மாவட்டம் செம்மாண்ட பட்டியில் சாக்கடை வசதிக்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் குழிதோண்டும் போது, 100 ஆண்டுகள் பழமையான கல்லால் செதுக்கப்பட்ட 4 அடி பெருமாள் சிலை கண்டு எடுக்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம், காடையாம் பட்டியை அடுத்த செம்மாண்ட பட்டியில் இரு தினங்களாக சாலை விரிவாக்க பணி மற்றும் சாக்கடை வசதிக்காக குழிதோண்டும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் சாக்கடை வசதிக்காக ஜே.சி.பி எந்திரம் மூலம் குழிதோண்டும் போது, 100 ஆண்டுகள் பழமையான கல்லால் செதுக்கப்பட்ட 4 அடி பெருமாள் சிலை கண்டு எடுக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த கல் சிலைக்கு மஞ்சள் மற்றும் பாலால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் இங்கு சிலைகள் இருப்பதாகவும் அதையும் கண்டு எடுக்க வேண்டும் என சாமியாடியபடி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர் கோட்டையில் மண்ணில் புதைந்திருந்த சுமார் 1 டன் எடை கொண்ட பீரங்கி தோண்டி எடுக்கப்பட்டது. இது 17-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1806-ம் ஆண்டு கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சி தான், இந்தியாவின் முதல் சுதந்திர போர்.

    அந்த காலக்கட்டத்தில் வேலூர் கோட்டை ஆயுத கிடங்காக இருந்தது. 136 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேலூர் கோட்டை கருங்கற்களால் கட்டப்பட்ட அழகிய கட்டுமானங்களுக்கு பெயர் பெற்றது.

    இதன் அழகிய மதில்கள், சுற்றியுள்ள அகழி உறுதியான கல் கட்டமைப்புக்கு புகழ் பெற்றது. இந்த கோட்டையில் திப்பு மகால், ஐதர் மகால், பாஷா மகால், பேகம் மகால், கண்டி மகால் என 5 சிறிய அரண்மனைகள் உள்ளன.

    மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து மதத்திற்குரிய ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்துவ தேவாலயம், முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மசூதியும் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள கோசாலை தென்னந்தோப்பில் ஊழியர்கள் குப்பை மற்றும் சாணம் கொட்டுவதற்காக அருகருகே 3 குழிகளை தோண்டினர்.

    பீரங்கியை தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் வெற்றிச்செல்வி ஆய்வு செய்த காட்சி.

    அப்போது, பெரிய பீரங்கி மற்றும் 3 பீரங்கி குண்டுகள் தென்பட்டது. உடனடியாக வேலூர் தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு மேலும் குழி தோண்டுவதை நிறுத்தினர்.

    இதையடுத்து, சென்னை மண்டல தொல்லியல்துறை உதவி ஆய்வாளர் வெற்றிச் செல்வி இன்று காலை வேலூர் கோட்டைக்கு வந்து மண்ணில் புதைந்திருந்த பீரங்கியை பார்வையிட்டார். சிப்பாய் புரட்சிக்கு பிறகு 17 நூற்றாண்டில் கிழக்கு இந்திய கம்பெனிகள் பயன்படுத்திய பீரங்கியாக இருக்கலாம் என்று வெற்றிச்செல்வி கூறினார்.

    பிறகு பள்ளத்தில் இருந்த பீரங்கி ஆட்கள் மூலம் மேலே தூக்கப்பட்டது. அந்த பீரங்கி சுமார் 1 டன் எடை இருந்தது. வேலூர் தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பீரங்கியை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். #Tamilnews
    சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சென்னை கோட்டத்தின் அமலாக்க அதிகாரிகள், மின் பகிர்மான வட்ட அதிகாரிகளுடன் இணைந்து சென்னை தெற்கு-2 மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட சிறுசேரி மற்றும் பனையூர் பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது 17 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முறைகேடாக மின் இணைப்பு பயன்படுத்தியதற்காக ரூ.9 லட்சத்து 17 ஆயிரத்து 767 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

    மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை தவிர்க்க விதி முறைகளின் படி, அவர்களே முன்வந்து அதற்குரிய சமரச தொகையான ரூ.76 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×