search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கிவிடும்.
    • நீட் எழுதச் செலவே இல்லை என்று ராஜ்பவனில் ஆளுநர் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் மனதிற்குள் சிரித்திருப்பார்கள்.

    மார்பில் அணிந்த துப்பட்டாவில் இருக்கலாம் ரகசியக் குறிப்புகள்?

    தோளாடைகள் துகிலுரியப்பட்டு..

    தேர்வு மையங்களில் நுழைகிறார்கள் நவீன பாஞ்சாலிகள்..

    அழியப்போகின்றன அஸ்தினா புரங்கள்! - (மனுஷ்யபுத்திரன்)

    நீட் எழுதச் சென்ற மாணவிகளுக்கு ஏற்பட்ட அவலங்களையும் அலங்கோலங்களையும் கண்டு பொங்கிய கவிஞரின் கோப வரிகள் இவை.

    நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 12 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒரு பாராட்டு விழா நடத்தபபட்டது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவிக்குச் சரியான சூடு கொடுத்தார், திருவாளர் பொதுஜனம் ஒருவர்! நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் தந்தை ராமசாமி (இனிஷியல் "ஈ.வெ." இல்லை) என்பவரே அவர்.

    "நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப் போகிறீர்கள்?" என்று ஆளுநரைக் கேள்வி கேட்டு மடக்கினார் நமது ராமசாமி.

    "நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கிவிடும். பயிற்சி மையங்களுக்குச் சென்று நீட் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்களை அறிவுசார் மாற்றுத் திறனாளிகளாக்க நான் விரும்பவில்லை!" என்று பொங்கினார் ஆர். என். ரவி. "நீட் வந்தபிறகு தான் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது. நீட் இல்லாமல் தமிழக மருத்துவக் கல்வி அடைந்துள்ள தரம் பற்றாக்குறையானது. உட்காருங்கள்! (What we have achieved without NEET is no longer sufficient. Sit down.)" என்று அக்னி நட்சத்திரமானார் ஆர். என். ரவி.

    மாட்சிமை தாங்கிய ஆளுநருக்குத் தெரியாமல் போன விஷயங்கள்:

    1. இந்தியாவின் முதல் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை அன்றைய மதராசில் செய்யப்பட்டது. வருடம் 1935.

    2. இந்தியாவின் முதல் வெற்றிகரமான "திறந்த இதய அறுவைச் சிகிச்சை" தமிழ்நாட்டில் தான் நடந்தது. ஆண்டு:1962. மருத்துவரின் பெயர்: டாக்டர் கோபிநாத்.

    3. இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்தில் தான் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நாள்: பிப்ரவரி 2, 1971.

    என் கல்லூரிக்காலத்தில் (1965) பி.யூ.சி. மதிப்பெண்படி நேர்முகத் தேர்வு நடந்து மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுவந்தனர். அதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாநில நுழைவுத் தேர்வு (Tamil Nadu Professional Courses Entrance Examination) நடத்தப்பட்டுத் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதில் எழுந்த குளறுபடிகள் அடிப்படையில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல்படி தர வரிசை வெளியிடப்பட்டு அதன்படி மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதாவது எல்லா முறைகளையும் பல வருடங்களாகப் பரிசோதித்துப் பார்த்தபின்பே நாம் "பிளஸ் டூ" அடிப்படையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

    நீட் எழுதச் செலவே இல்லை என்று ராஜ்பவனில் ஆளுநர் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் மனதிற்குள் சிரித்திருப்பார்கள். பிரதர், ஆர்.என். ரவி அவர்களே.. நீட் கோச்சிங் கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வரை.

    உங்களிடம் கேள்வி கேட்டு ஒலிபெருக்கி பிடுங்கப்பட்ட மாணவியின் தந்தை நமது ராமசாமியே "என் மகளை 9-ம் வகுப்பு முதல் நீட் கோச்சிங்கில் சேர்த்துப் படிக்க வைக்க இத்தனை லட்சம் செலவு ஆனது. நான் மத்திய அரசு ஊழியன். என்னால் முடிந்தது. ஏழை எளியவர்களால் எப்படி முடியும்? நீட் வெற்றி என்பதே கோச்சிங் சென்டர் தான்!" என்று ராஜ்பவனுக்கு வெளியே நிருபர்களிடம் விரட்டி விரட்டி பேசியதை டி.வி.க்களில் பார்த்தீர்களா, இல்லையா?

    "கோச்சிங் இல்லாமல் நீட்டில் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்று சொல்கிற ஆளுநருக்கு மேட்டுக்குடிப் பள்ளிகள் கோச்சிங் நிறுவனக் கூட்டணியில் கட்டணக் கொள்ளை அடித்து நீட் பயிற்சி தருவது தெரியுமா?

    நீட் தேர்வு ஒரே ஒரு தாள்! அதற்குக் கட்டணம் ரூ 1700. போக்குவரத்து, முந்திய நாள் இரவுத் தங்கல் என்று இன்னும் பல செலவுகள். பிளஸ் டூ ஸ்டேட் போர்டு ஆறு தாள் தேர்வுக் கட்டணம் எழுதக் கட்டணம் ரூ 175 முதல் 225 வரை. தேர்வு மையம் அவரவர் பள்ளி. பிளஸ் டூ விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு அரசு தனியாக மதிப்பூதியம் தருகிறது.

    நீட் கேள்வித்தாள் "ஆப்டிக்கல் ரெஸ்பான்ஸ் ஷீட்" (ஓ.ஆர்.எஸ்) முறை. விடைத்தாள் திருத்தச் செலவு இல்லை. எந்தப் பெரிய செலவும் இல்லாமல் ஒற்றைத் தாளுக்கு 1700 ரூபாய் கட்டணம் வாங்கும் தேசீய தேர்வு முகமை அதில் ஒரு பகுதியைச் செலவு செய்து குழந்தைகள் மன அழுத்தம் அடையாமல் பாதுகாப்புச் சோதனை நடத்தி இருக்கலாம். இதை ஏன் நமது ஆளுநர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடாது?

    தமிழகத்தில் மட்டும் சென்ற ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் நீட் தேர்வுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்திருக்கும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்ன நன்மை செய்திருந்தார்கள்?

    இவ்வளவு கட்டணம் வசூல் செய்தும் வினாத்தாள் பற்றாக்குறை அவ்வப்போது எழுகிறது. கேள்வித்தாளைப் போட்டோகாப்பி எடுத்துக் கொடுத்துத் தாமதமாகத் தேர்வு எழுத வைத்த "ததிங்கிணத்தோம்" வேலைகள் எல்லாம் நடக்கின்றன. ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்வி மொழிபெயர்ப்புகள் வேறாக இருந்தன என்று வழக்குகள் தொடரப்படுகின்றன.

    நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைகாலத் தடை உத்தரவே பிறப்பித்தது. இப்படிப் பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே உச்சநீதிமன்றத்தின் தயவால் தான் நீட் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. "அடுத்த முறை இது போல் நடக்கக் கூடாது. கபர்தார்!" என்ற எச்சரிக்கை மட்டும் அவ்வப்போது எதிரொலிக்கும்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் டாக்டர் பி. கே என்ற பிரேம்குமார் நீட் பேப்பருக்கு 30 லட்ச ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு வினாத்தாளை முன் கூட்டியே லீக் செய்து கேள்விகளுக்குப் பதிலும் தயாரித்து விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்தார். நமது ஆளுநரின் மாநிலமான பீகாரைச் சேர்ந்த அந்த மோசடிப் பேர்வழி பற்றிய செய்திகள் வெளிவந்தபோது பல லட்சம் செலவு செய்து விடிய, விடியப் படித்த நமது மாணவ-மாணவியர் நொந்தே போனார்கள்.

    பி.கே. பிடிபட்டார். ஆனால் அவரிடம் கேள்வித்தாள் பெற்றவர்கள் இப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டும் இப்படிப்பட்ட புகார்கள் எழுந்தன. லீக் செய்யப்பட்ட வினாத் தாள்களில் காணப்பட்ட கேள்விகள் தேர்வுக் கேள்விகளோடு பெரும்பாலும் ஒத்துப் போயின. தேசிய தேர்வு முகமை மறுப்புத் தெரிவித்துவிட்டது.

    நீட் தேர்வின் தரம் பற்றிச் சிலாகிக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கு இவையெல்லாம் தெரியுமா? 7.5 சதவீதம் அரசுப் பள்ளி இட ஒதுக்கீடு இல்லையென்றால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் இந்த வாய்ப்பும் வந்திருக்காது. அதில் இடம் பெற்றவர்களுக்கான மொத்த கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது என்பதையாவது கவர்னருக்கு யாரேனும் சொன்னார்களா?

    நீட் தேர்வு முறையை நிராகரித்து இந்தியத் தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர் ஜூலை 18, 2013 அன்று பின்வருமாறு தீர்ப்பு எழுதினார்:

    "நகரங்களில் நவீன நாகரிக மருத்துவர்கள் தேவைப்படுவது போல் கிராமங்களில் ஏழை டாக்டர்கள் (bare foot doctors) தேவைப்படுகிறார்கள். நீட் முறையை அனுமதித்தால் இந்தியாவில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளி அதிகரிக்கும். எனவே நீட் நிராகரிக்கப்பட வேண்டும்!"

    கபீர் ஓய்வு பெற்ற பிறகு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதே போன்ற இன்னொரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருந்தது. எனவே நீட் சீராய்வு மனு அதற்கு மாற்றப்பட்டது.

    ஏப்ரல் 11, 2016-ல் சீராய்வு மனு அனுமதிக் கப்பட்ட உடன், சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் நடத்தவேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்தது. (Sankalp Charitable Trust v. Union of India). இவ்வழக்கில் ஏப்ரல் 28, 2016- ம் தேதி சாதகமான உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். 2013ல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைப்புற வழியாக 2016- ம் ஆண்டு உயிர்பெற்றது.

    ஆனால் இதுவரை சுப்ரீம்கோர்ட் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நீட் நரபலிகள் கூடிக் கொண்டே போகின்றன. கிட்டத்தட்ட 20 தற்கொலைகள். சமீபத்திய சோகம்: சென்னை குரோம்பேட்டை மாணவன் ஜெகதீஸ்வரன் மற்றும் அவனது தந்தை செல்வகுமார் ஆகியோரின் அகால மரணங்கள்!

    நீட் வந்த பிறகு மருத்துவக் கல்வியில் கட்டணக் கொள்ளை இல்லை என்ற ஆளுநரின் வாதம் அபத்தம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படைத் தர வரிசைப்பட்டி யலில் எப்போதுமே அரசு கல்லூரிகளில் ஒரே கட்டணம் தான்! தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டா போக மீதியுள்ள நிர்வாகக் கோட்டாவிற்கு லட்சக்கணக்கில் பீஸ்! இப்போதும் அப்படியே!

    நீட்டில் பாஸ் அல்லது மினிமம் தகுதி மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். எதிர்கால மருத்துவர். மாநிலப்பாடத் திட்டத்தில் அரசு பள்ளியில் படித்து 199 வாங்கி நீட் மதிப்பெண் குறைவாக வாங்கினால் மருத்துவம் படிக்கத் தகுதி அற்றவர்கள். பிரச்சினை மத்திய பாடத்திட்டமா, மாநிலப் பாடத்திட்டமா? நோ.. சார்.. நோ! இது இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம்.

    தரம் (Quality) என்றால் என்ன? ஒரு பொருள் தரும் பயனை அல்லது சேவையை அதே முயற்சியில் அல்லது அதே செலவில் கிடைக்கும் மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே தரத்தின் அளவீடு. (standard of something as measured against other things of a similar kind)

    தரம் என்ற போர்வையில் மாநிலப் பாடத் திட்டத்தையும், மத்திய பாடத் திட்டத்தையும் ஒப்பிடவே முடியாது. மத்திய பாடத் திட்டத் தேர்வு எம். சி. கியூ (MCQ) என்று சொல்லபட படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஸ்டேட் போர்டு விரிவாக எழுதும் முறை. இரண்டையும் ஒரே தராசில் வைப்பது சரியா?

    ஏன் பிற மாநிலங்கள் நீட் எதிர்ப்புக் காட்ட வில்லை என்று கேட்கிறார்கள். வலியும், வேதனையும் வந்தவன் தானே கதற முடியும்?

    நீதி என்பது வெறுமனே வழங்கப்படுவது மட்டுமல்ல. வழங்கப்படுவதை அனைவரும் உணரச் செய்வது. உணர மறுப்பவர்களுக்கு எதிரான ஒரே ஆயுதம் போராட்டம் மட்டுமே!

    ஆளுநர் மாநில அரசின் அலங்காரத் தலைவர் மட்டுமே! அவர் ஆளவந்தார் போலக் கருத்துக் கூறுவதை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை என்பதை மறக்கக் கூடாது.

    • உலகில் மிக அதிகமான பெண் பைலட்டுகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி அல்லவா!
    • அன்றைய சமூகத்தில் இவர்கள் மிகப்பெரிய புரட்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையே வியப்பாக பார்த்த காலம் ஒன்றுண்டு. பெண்கள் கார் ஓட்டுவது என்பதே பெரும் சாதனையாக கருதப்பட்ட நேரத்தில் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஆகாய விமானத்தை ஓட்டுவது என்பது எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    ஆகாய விமானம் செல்கின்ற சத்தம் கேட்டால் வெளியே ஓடிவந்து, அன்னாந்து பார்த்து கைதட்டி மகிழ்வது மட்டுமே பெண்களுக்கு உரியதாக இருந்த காலம் அது. எங்கோ ஒன்றிரண்டு சீமாட்டிகள் மட்டுமே விமானத்தில் பயணிகளாக பயணம் செய்வதுதான் அரிதாக நிகழும். அப்படிப்பட்ட காலத்தில் நாட்டிற்கே இறக்கை கிடைக்காத சுதந்திரமற்ற நாட்டில் தனக்கு இறக்கைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினாள் ஒரு பெண்.

    தன் கைகளின் விசையால், ஆகாய விமானத்தை இயக்கிப் பார்க்கின்ற வாய்ப்பை, தன் கட்டுப்பாட்டால் விமானம் ஆகாய வெளியை அளப்பதை, வெண்மேகங்களின் ஊடே பறந்து செல்வதை சாதித்தே தீரவேண்டும் என்று எத்தனையோ பெண்கள் கனவு கண்டிருக்கக் கூடும். ஆனால் எத்தனை பேருக்கு தன் கனவை நனவாக்கும் சூழ்நிலைகள் வாய்க்கின்றது?

    அக்கனவை நனவாக்க சூழ்நிலைகள் வாய்க்கப்பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் சரளா தாக்ரல் என்ற சேலைகட்டிய செம்பாவை.

    உலகில் மிக அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட நாடு எது தெரியுமா? உங்கள் பதில் அநேகமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா என்று மேலை நாடுகளாக இருக்கக் கூடும். ஆனால் உலகில் மிக அதிகமான பெண் பைலட்டுகளைக் கொண்ட நாடு இந்தியாதான் என்பது மிகவும் வியப்புக்குரிய செய்தி அல்லவா!

    இந்தப் பெருமைக்கு விதை போட்ட பெண்தான் இக்கட்டுரையின் கதாநாயகி. சரளா ஷர்மாவாக இருந்து பின்னர் சரளா தாக்ரல் ஆன சாதனை மங்கை.

    ஆகாயத்தில் பறக்கின்ற விமானங்களின் விமானக் கட்டுப்பாட்டு அறை உட்பட அனைத்தும் ஆண்களின் கட்டுப்பாட்டில் இயங்கும்போது சரளாவிற்கு அக்கட்டுப்பாட்டு அறையில் முதல் மங்கையாக தான் மட்டுமே இருந்து விமானத்தை இயக்கவேண்டும் என்று ஆசை பிறந்தது. அந்த ஆசை பிறக்கும் போது அப்பெண்ணுக்குத் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண்குழந்தையும் இருந்தாள். ஆசையும், ஆர்வமும் வருவதற்கு வயதும், திருமணமும் தடையாகி விடுமா என்ன?

    எங்கும், எப்போதும் பெண்ணின் முன்னேற்றத்திற்கு குடும்பத்தில் இருக்கும் ஆண்களே பெரும்பாலும் தடையாக இருப்பார்கள். ஆனால் சற்றே நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும் வண்ணம் சரளாவின் வாழ்வில் மட்டும் அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. திருமணத்திற்குப் பின்னர் சரளாவின் கணவரும், மாமனாரும்தான் சரளா ஒரு விமானியாக சாதனை படைப்பதற்கு காரணமாக, பின்புலமாக இருந்தார்கள் என்பது பெரிதும் மகிழ்ச்சிக்குரியதுதானே! அன்றைய சமூகத்தில் இவர்கள் மிகப்பெரிய புரட்சியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இளமையில் திருமணம்: சரளா, 1914 ஆகஸ்ட் 8-ந் தேதி ஆஜ்மீரில் பிறந்தார். 16 வயதிலேயே பி.டி. ஷர்மா என்பவருடன் திருமணம். அப்போதைய பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த இந்தியாவில் லாகூரில் வாழ்ந்தனர் ஷர்மா குடும்பத்தினர். திருமணத்திற்குப் பின் சரளாவும் கணவருடன் வாழ்ந்திட லாகூர் சென்றார். சரளாவின் கணவரான ஷர்மா 'ஏர்மெயில் பைலட் லைசன்ஸ்' பெற்று, கராச்சிக்கும், லாகூருக்கும் இடையில் பறந்த முதல் இந்தியர். அதுமட்டுமின்றி அவரின் குடும்பத்தில் ஒன்பது பேர் விமானிகளாக இருந்தனர். இந்தப் பின்னணிதான் சரளாவும் பைலட்டாக உதவியது எனலாம்.

    குடும்பத்தினரின் ஆதரவும் விமானப் பயிற்சியும்:

    சரளாவின் ஆசைக்கனவாக இருந்த, தான் பைலட்டாக முடியுமா என்ற வினாவிற்கு அழுத்தந்திருத்தமாக முடியும் என்று கூறி அதற்கான முயற்சியை எடுத்தவர்கள் சரளாவின் கணவரான பி.டி. ஷர்மாவும், ஷர்மாவின் தந்தையும்தான். ஷர்மா குடும்பத்தினருக்குச் சொந்தமாக 'இமாலயா பிளையிங் கம்பெனி' (Himalaya Flying Company) என்ற விமான நிறுவனம் இருந்தது. பத்ரிநாத்திற்கும் ஹரித்துவாருக்கும் இடையே அந்நிறுவனம் தன் பயண சேவையை நடத்தி வந்தது. சரளாவை 'பிளையிங் ஸ்கூலில்' சேர்த்துவிட்டவர் அவரின் மாமனார் என்பதை நன்றியோடு ஒரு பேட்டியில் நினைவு கூர்கிறார் சரளா.

    ஷர்மாவின் தந்தை தனது மகனிடம் சரளாவிற்கு விமானப் பயிற்சியைக் கற்றுத் தரும்படி வலியுறுத்தி வந்தார். ஆனால் ஷர்மாவிற்குப் போதிய நேரம் கிடைக்காததைக் கண்ட அவர், தானே தனது மருமகளை "லாகூர் பிளையிங் கிளப்" (Lahore Flying Club) இல் சேர்த்து 'டிம்மி தஸ்த்தூர்' என்ற பயிற்சியாளரிடம் சரளாவிற்கு பயிற்சியளிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

    முதல் பெண் விமானியாக உரிமம் பெறுதல்

    பிளையிங் ஸ்கூலில் பயிற்சி பெற்ற பிறகு தனியே விமானத்தில் பறக்க மிக சீக்கிரமே தயாராகி விட்டார் சரளா. முதன் முதலாக சேலையுடன் ஒரு இந்தியப் பெண் விமானத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் தனியே அமர்ந்து 'ஜிப்சி மோத்' என்ற அந்தக் காலத்து சிறுவகை விமானத்தை இயக்கி சாதனை படைத்தார் என்றால் அது சரளா ஷர்மாதான்.

    தனியே விமானத்தை இயக்கி வெற்றி பெற்ற பின்னர் தொடர் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார் சரளா. முதலில், பைலட்டுக்கான 'A' Type லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் ஆயிரம் மணி நேரம் விண்ணில் விமானத்தை இயக்கியிருக்க வேண்டும்.

    விடா முயற்சியுடன் அந்தப் பயிற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் சரளா. ஆயிரம் மணி நேரம் விமானத்தை இயக்கி முடித்தப் பின்னர் 1936 -ல் தன்னுடைய 21-வது வயதில் ஏவியேஷன் பைலட் எனப்படும் 'A' Type லைசன்ஸ் எடுத்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமையைப் பெற்றார் சரளா ஷர்மா.

    தொடர்ந்து வணிக அளவில் பயணிகள் போக்குவரத்து விமானத்தில் விமானி ஆக வேண்டுமென்றால் 'B' Type லைசன்ஸ் எடுக்க வேண்டும். ஜோத்பூருக்குச் சென்று அதனைப் பெறுவதற்கான முயற்சிகளில் சரளா ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் அவரை திசை திருப்பும் அதிர்ச்சியைத் தந்தது வாழ்க்கை.

    சோதனைகள்: 1939-ல் நிகழ்ந்த விமான விபத்தில் சரளாவின் கணவர் பி.டி. ஷர்மா மரணமுற்றார். முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் திடீர் சறுக்கல்! 16 வயதில் திருமணம், 21 வயதில் பைலட், 24 வயதில் கணவனை இழந்த கைம்பெண். மகளோடு தனித்து நின்ற சரளா தனக்கு ஏற்பட்ட துயரத்தை மறைத்துக் கொண்டு பயணிகள் விமான பைலட் சான்றிதழ் பெற முயற்சி செய்யும் வேளையில் இரண்டாம் உலகப்போர் வெடித்தது. சரளாவின் முயற்சிகளும் தடைபட்டு சான்றிதழுக்கு காத்திருக்க வேண்டி வந்தது.

    ஒன்றை இழந்தால் மற்றொன்றை பெற வேண்டும் என்பதில்தான் மனிதவாழ்வின் முன்னேற்றம் உள்ளது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் வெறுமனே வீட்டில் இருக்காமல் லாகூரில் உள்ள மாயோ கலைக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்த சரளா, வங்காள முறை ஓவியத்தில் நுண்கலையில் பட்டயப் படிப்பை (Diploma in fine arts) முடித்தார்.

    இந்திய சுதந்திரம் நெருங்க நெருங்க வடமேற்கு இந்தியா முழுவதும் கலவரம் வெடித்தது. லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கணவனோ, வீட்டின் மற்ற ஆண்களோ இறந்துவிடும் சூழலில் வீட்டில் இருக்கும் பெண்கள் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டால் நஞ்சை அருந்தி தன்னை மாய்த்துகொள்வதற்கு பெண்களுக்கு நஞ்சுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக் கொணடு இளம்வயதில் கைம்பெண்ணாக நிற்கும் சரளாவை, இங்கே தங்கியிருக்க வேண்டாம் என்றும் டெல்லிக்கு சென்று விடுமாறும் அறிவுறுத்தினர். வேறுவழியின்றி தன் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்துக்கொண்டு ெரயில் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார் சரளா.

    டெல்லியில் ஓவியராகவும், ஆடை ஆபரண வடிவமைப்பாளராகவும், உற்பத்தியாளராகவும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார் சரளா. மிக விரைவிலேயே ஒரு தொழில் அதிபராக மாறினார். சரளாவின் பெற்றோர் சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட ஆரிய சமாஜத்தின் கொள்கைகளை பின்பற்றியதால், தன் மகளுக்கு பி.பி. தாக்ரால் என்பவருக்கு 1948-ல் மறுமணம் செய்து வைத்தனர்.

    விமானியாகுதல்: விடுதலை பெற்று நாடு அமைதி கண்டவுடன், தனது தொழில்முறை விமானி பயிற்சியினைத் தொடர்ந்த சரளாவுக்கு 1948-ஆம் ஆண்டு தொழில்முறை விமானி உரிமமும் கிடைத்தது. அந்த நேரத்தில் ராஜஸ்தான் ஆல்வார் அரசியின் விமானத்தை இயக்க ஒரு பெண் விமானி தேவை என்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அப்பணிக்கு விண்ணப்பித்த சரளா தாக்ரால் அரசியின் தனிப்பட்ட சிறப்பு விமானியாக ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

    தொடர்ந்து தான் தொடங்கிய தொழில் மீது கவனம் செலுத்தி புதிய புதிய வடிவங்களில், வண்ணங்களில் ஆடை, ஆபரணம் உற்பத்தி செய்து வந்தார். இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் இவரின் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களில் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டும் ஒருவர்.

    முதல் வணிகமுறை பெண்விமானி துர்கா பானர்ஜி

    1966-ம் ஆண்டில், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்தியன் ஏர்லைன்சின் முதல் பெண் விமானியாக பணியேற்ற துர்கா பானர்ஜி பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு சரளா தாக்ரல் முன்னோடியாக இருந்தார் என்றால் அது மிகையில்லை.

    பெண்களும் விமானியாக முடியும் என்பதற்கு பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனை படைத்த பன்முகத் திறன்வாய்ந்த சரளா தாக்ரல் தன்னுடைய 93-ம் வயதில் மார்ச் 15, 2008-ல் தான் பறக்க ஆசைப்பட்ட விண்ணிற்கு போய்ச் சேர்ந்தார்.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    • அந்த வயதில் அவர்களிடம் வாங்கிய வாழ்த்தும், பாராட்டும் எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை.
    • லட்சுமி அம்மா என்னிடம் வந்து மீனாக்குட்டிக்கு மருதாணி பிடிக்குமா என்றார்கள். நானும் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

    நலந்தானா...

    நலந்தானா...

    உடலும் உள்ளமும் நலம்தானா...

    இப்படி பாடி அபிநயத்தோடு பத்மினி அம்மா ஆட... சிவாஜி சார் அதற்கு பதிலை நாதஸ்வரம் வழியாக இசைக்க... பாட்டும்... பரதமும்... நடிப்பும்... அடேங்கப்பா... இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இப்படி யாராலும் நடிக்க முடியாது! இதை நான்தான் சொல்ல வேண்டும் என்பது அல்ல. நடிப்பு உலகமே சொல்லும். அப்படிப்பட்ட ஒரு பாடலுக்கு என்னாலும் ஆட முடியும் என்று யாராவது போட்டி போட்டால்... எப்படி இருக்கும்?

    ஆனால் நான் சவால் விட்டு ஆடி இருக்கிறேனே. உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும் சிவாஜி சார், பத்மினி அம்மா முன்பு ஆடி அசத்தி இருக்கிறேன். அட என்னம்மா நீ... அதெப்படி உன்னால் முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் அந்த வயதில் எனக்கு சிவாஜி சார் நடிப்புலக சக்கரவர்த்தி என்றோ, பத்மினி அம்மா நாட்டிய பேரொளி என்றோ தெரியாது.

    நானும் முறைப்படி பரதநாட்டியம் கற்றிருந்தேன். எனக்கு கற்றுத்தந்தவர் பொன்னி பாலசுப்பிரமணியம். சரி ஏதோ பரதநாட்டியம் தெரியும் என்பதால் தில்லானா மோகனம்பாள் பாட்டுக்கு அவர்போல் ஆடி விட முடியுமா? அதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல் ஆடினேன்.

    அதாவது "லட்சுமி வந்தாச்சு" என்ற படம். அந்த படத்தில் சிவாஜி சாரும், பத்மினி அம்மாவும்தான் ஜோடி. நான் குழந்தை நட்சத்திரம். கதைப்படி பத்மினி அம்மா கடுமையான சட்டத்திட்டங்களோடு குடும்பத்தில் எல்லோரையும் கட்டுப் பாட்டுடன் வளர்ப்பவர். ஜாலியாக இருப்பது கூட அவருக்கு பிடிக்காது. ஆனால் சிவாஜி சார் நேர் எதிரானவர். எல்லோருடனும் ஜாலியாக இருப்பவர். எல்லாரோடும் ஆடிப்பாடவும் செய்வார்.

    சிவாஜி சாருக்கும், பத்மினி அம்மாவுக்கும் திருமண நாள் வரும். அந்த நாளை கொண்டாட வேண்டும் என்று எல்லோரும் வீட்டின் மொட்டை மாடியில் சென்று ஆள் ஆளுக்கு டான்ஸ் ஆடுவோம். ரேவதியும் உண்டு. அப்போதுதான் நலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா... என்ற பாடலுக்கு பரத நாட்டிய உடை அணிந்து நான் ஆடுவேன். நாதசுவரமும் இசைக்கப்படும். சிவாஜி சார் பார்வையாளர் வரிசையில் இருப்பது போல் அங்கு அமர்ந்து பார்த்து ரசித்து கொண்டிருப்பார்.

    நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே பத்மினி அம்மா கோபத்தோடு அங்கே வருவார். உடனே எல்லோரும் நிசப்தமாகி விடுவோம். இதுதான் காட்சி. சூட்டிங் முடிந்ததும் பத்மினி அம்மா சிரித்து விடுவார். சூப்பர்டா செல்லம் நாங்கள் எங்கள் திறமையெல்லாம் ஒன்று திரட்டி நடித்த பாடல் காட்சி. ஆனால் இந்த வயதில் நீ இவ்வளவு அழகாக ஆடி அசத்தி விட்டாய் என்று என்னை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்கள்.

    சிவாஜி சாரும் மீனாக்குட்டி... சூப்பர் பின்னிட்டேபோ... என்று பாராட்டினார். அந்த வயதில் அவர்களிடம் வாங்கிய வாழ்த்தும், பாராட்டும் எனக்கு பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் அதை இப்போது நினைக்கும் போதும் சந்தோஷத்தில் உடலெல்லாம் புல்லரிக்கிறது. இந்த நிகழ்வுகள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.

    எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் இருக்கும் சிலரை பார்த்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து நமக்கு உத்வேகம் பிறக்கும். அப்படி எனக்கு உத்வேகம் ஊட்டியது ஸ்ரீதேவி அம்மா. ஏற்கனவே ஸ்ரீதேவி அம்மாவின் அழகை பார்த்து பிரம்மித்து இருப்பதாக தெரிவித்திருந்தேன். சிறு வயதில் எனது எண்ணம் அது.

    அதே மீனா ஹீரோயின் ஆன பிறகு ஸ்ரீதேவியின் நட்பு வட்டாரத்தில் இருந்ததும் மறக்க முடியாத அனுபவம். வயது இடைவெளி அதிகமாக இருந்தாலும் காலப்போக்கில் அவரது நெருங்கிய தோழியாக மாறி விட்டேன். ஸ்ரீதேவி வித்தியாசமானவர். படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் யாரோடும் அதிகமாக பேச மாட்டார். அமைதியாகவே இருப்பார். ஆனால் வந்தவுடன் தனக்கு என்ன காட்சி என்பதை கேட்டு அதில் நடிப்பதற்கு மட்டும் முயற்சிக்க மாட்டார். அதற்கு முந்தைய காட்சிகள், பின்னர் வரப்போகும் காட்சிகள் எல்லாவற்றையும் கவனமுடன் கேட்டு அறிவார். அதை உள்வாங்கி கொண்டு அதன்பிறகுதான் நடிப்பார். அதனால்தான் எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் அதில் முத்திரை பதிப்பார். அதற்கு உதாரணம் 'மூன்றாம் பிறை' ஒன்று போதாதா?

    அவரைப்பார்த்துதான் ஹீரோயின் ஆன பிறகு திரைத்துறையில் சில விசயங்களை கற்றுக்கொண்டேன். திரைத்துறையை பொறுத்தவரை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.

    கேமிரா முன்பு எப்படி நின்றால் எப்படி தெரியும்? டயலாக்குகளை பேசிக்கொண்டே 'மார்க்' பண்ணியிருக்கும் இடத்தில் போய் நிற்க வேண்டும்.

    நான் மானசீகமாக நேசித்து மகிழ்ந்த அந்த அழகு தேவதை திடீரென்று இறந்து விட்டார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய மறைவு செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    சிவக்குமார், லட்சுமி அம்மா ஜோடியாக நடித்த படம் "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்". அந்த படத்திலும் நான் குழந்தை நட்சத்திரம். அவர்களுக்கு குழந்தையாக நடித்த என்னை தூக்கி கொஞ்சுவதில் கூட இருவருக்கும் இடையே போட்டி நிலவும். உனக்கு இந்த அங்கிளை பிடிக்குமா? அந்த ஆண்டியை பிடிக்குமா? என்றெல்லாம் கேள்விக்கேட்டு இருவருமே என் மீது அளவுக்கடந்த பாசத்தை காட்டியவர்கள். இருவரும் என்னை தூக்கி வைத்து கொஞ்சிய புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டு சுவரை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.

    அந்த படத்தில் நடித்த போது ஒரு நாள் லட்சுமி அம்மா கையில் மருதாணி வைத்திருந்தது நன்றாக சிவந்து மிகவும் அழகாக இருந்தது. நான் அதையே பார்த்து கொண்டிருந்தேன். அதை கவனித்த லட்சுமி அம்மா என்னிடம் வந்து மீனாக்குட்டிக்கு மருதாணி பிடிக்குமா என்றார்கள். நானும் ஆமாம் என்று தலையை ஆட்டினேன். சூட்டிங் முடிந்து விட்டது. எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். ஆனால் லட்சுமி அம்மா என்னை அழைத்து வா கைக்கு மருதாணி போட்டு விடுகிறேன் என்று கூட்டி சென்று என் கைகளுக்கு மருதாணி போட்டுவிட்டுதான் புறப்பட்டு சென்றார்.

    எனது ஆசையை நிறைவேற்றி வைப்பதில் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். இப்படி குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தது மட்டுமல்ல முன்னணி கலைஞர்களுக்கு செல்லப் பிள்ளையாகவும் வளர்ந்து கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை.

    • தீர்ப்புக்கு எந்த மாதிரி சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்திய சாட்சிய சட்டம் தெளிவுபடுத்துகிறது.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதவிதமாக நடப்பதால் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் அமளி, துமளி, நம்பிக்கையில்லா தீர்மானம் என்று மட்டுமே பார்க்கப்பட்டாலும் கடைசி நாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 புதிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

    அதாவது இந்திய குற்றவியல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

    சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பலர் தப்பி விடுகிறார்கள். இது நடைமுறைக்கு ஒத்து வராத சட்டம் என்று சாதாரண மக்களுக்கும் சட்டங்கள் மீது இருந்து வந்த திருப்தி யற்ற எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

    இந்த புதிய சட்ட மசோதாக்கள் பற்றி மத்திய அரசு வக்கீல் ஸ்ரீனிவாசன் விவரித்தார்.

    இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டப் பிரிவுகளின்படிதான் குற்றவியல் வழக்குகள் நடைபெறும். இந்த சட்டத்தின் கீழ்தான் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதாவது எந்த குற்றத்துக்கு எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவது என்பதை இந்திய தண்டனை சட்டம் சொல்கிறது. வழக்குகளை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் விவரிக்கிறது. தீர்ப்புக்கு எந்த மாதிரி சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்திய சாட்சிய சட்டம் தெளிவுபடுத்துகிறது.

    ஆனால் நடைமுறையில் இருக்கும் இந்த 3 சட்டங்களும் சுமார் 163 ஆண்டுகளுக்கு முந்தையது.

    இந்திய தண்டனை சட்டம் 1860-ம் ஆண்டிலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1898-ம் ஆண்டிலும், இந்திய சாட்சிய சட்டம் 1872-லும் கொண்டு வரப்பட்டவை.

    அதாவது கிழக்கிந்திய கம்பெனி நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த கால கட்டத்தில் இந்தியா பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள் ஆட்சியில் பல பிரிவுகளாக இருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வசதியாக இந்தியாவில் எந்த மாதிரியான குற்றவியல் சட்டங்களை பொதுவாக வகுப்பது என்று 1834-ம் ஆண்டு லார்டுமெக்காலே தலைமையில் சட்ட கமிஷன் உருவாக்கப்பட்டு அந்த கமிஷன் பரிந்துரைப்படிதான் இந்த 3 சட்டங்களும் உருவாக்கப்பட்டது.

    அந்த கால கட்டத்துக்கு ஏற்றதாகவும், அவர்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டிருந்ததால் காலப் போக்கில் அவ்வப்போது சிறு சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு அந்த சட்டங்களையே பின்பற்றுகிறோம்.

    எல்லா சட்டங்களையும் முழுமையாக எடுக்க முடியாது. ஆனால் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்வது அவசியமாக இருந்தது. பல வழக்குகளில் நடைமுறை சாத்தியமில்லாத பல பிரிவுகளை கோர்ட்டு தீர்ப்புகளே சுட்டி காட்டியும் உள்ளன. அந்த தீர்ப்புகளை மையமாக வைத்து திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. பல சட்டங்கள் பாராளுமன்றம் மூலம் நீக்கப்பட்டும் உள்ளன.

    இப்போது மிகப்பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து இருப்பதோடு பல மாற்றங்கள் செய்து, தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.)

    இந்திய தண்டனை சட்டம் பாரதீய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது.

    இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாகி இருக்கிறது. 22 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 175 விதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. 8 புதிய விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

    தேச விரோத சட்டம் என்பது சுதந்திரத்துக்காக போராடியவர்கள், அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பயன்படுத்தி அதை கடுமையான குற்றமாக கருதப்பட்டது.

    இப்போது அதை நீக்கி உள்ளனர். அதற்கு பதிலாக பிரிவினை வாதம், தீவிரவாதம், தேச ஒற்றுமையை குலைப்பது, ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்வது, இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை சேர்க்கப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதவிதமாக நடப்பதால் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வ தாக, வேலை வாங்கி தருவ தாக, பதவி உயர்வு பெற்று தருவதாக பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, அடையாளத்தை மாற்றி ஏமாற்று தல் ஆகியவை புதிதாக தண்டனைக்குரிய குற்றங்களாக சேர்க்கப்பட்டு உள்ளன.

    முன்பு கற்பழிப்பு குற்றத்துக்கு 7 ஆண்டுகள் மட்டும் தண்டனை இருந்தது. கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தனி பிரிவு இல்லை. இப்போது அது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. தண்டனையும் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதிலும் பாதிக்கப்படும் பெண்கள் இளம் பெண்களாகவோ, மைனர் பெண்களாகவோ இருந்தால் ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இனம், சாதி, அடிப்படையில் பலர் சேர்ந்து அடித்து கொலை செய்வது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் முதல் குற்றத்தின் தன்மையை பொறுத்து மரண தண்டனை வரை விதிக்கப்படும்.

    வழிப்பறி குற்றங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளது. செயின் பறிப்புகளின் போது பாதிக்கப்படுபவர்கள் கீழே விழுந்து கடுமையான காயங்கள் ஏற்படுவது, உறுப்புகள் செயல் இழந்து போவது, உயிருக்கே ஆபத்து ஏற்படுவதால் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

    சிறுவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    முன்பெல்லாம் சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. இப்போது இந்த மாதிரி குற்றங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தியவர் கோர்ட்டு அல்லது போலீசில் சரண் அடையாமல் தலைமறைவானால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

    மத துவேசத்துடன் வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் 3 ஆண்டுகள் ஜெயில் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.)

    இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 169 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வீட்டில் ஒரு குற்ற சம்பவம் நடந்தால் அந்த சரக போலீஸ் நிலையத்துக்கு சென்றுதான் புகார் செய்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இனி சம்பந்தப்பட்டவர் அதே மாநிலத்தில் வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க முடியும்.

    அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விவரங்களை உடனுக்குடன் அவரிடம் தெரிவிக்கப் பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணை முன்னேற்றம் பற்றிய தகவலை 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

    பாலியல் கொடுமையில் பாதிக்கப் பட்ட பெண்களிடம் அவர்களின் வீடு அல்லது தங்கியிருக்கும் இடத்துக்கு மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று வாக்குமூலம் பெற வேண்டும். அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும், பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் இருக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் கோர்ட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் வாங்கு வதால் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

    கிரிமினல் குற்றங்களில் 90 நாட்க ளுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எளிதில் வெளியே வந்து விட முடியும் என்ற நிலை இருந்தது. இனி குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாவிட்டால் காரணத்தை கூறி கோர்ட்டில் மேலும் 90 நாட்கள் கால நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம்.

    குற்ற வழக்குகளில் விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கி விட வேண்டும். குறிப்பிடத்தக்க காரணங்கள் இருந்தால் 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் தீர்ப்பு வழங்கும் நாட்களை தள்ளிப் போட முடியாது.

    வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அடிக்கடி வாய்தா வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இனி 2 முறை மட்டுமே வாய்தா வழங்க வேண்டும். அதற்கு மேல் வாய்தா வழங்க நேரிட்டால் அதற்கான காரணத்தை நீதிபதி எழுத்து பூர்வமாக எழுதி வைக்க வேண்டும்.

    முதல் முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தில் 3-ல் ஒரு பகுதியை ஜெயிலில் கழித்ததும் ஜாமீன் போட்டு வெளியே வரலாம்.

    ஆயுள் தண்டனை கைதிகள், மரண தண்டனை கைதிகளை தண்டனையை குறைத்து வெளியே விடக்கூடாது.

    வழக்குகளில் சாட்சி சொல்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாப்புக்கு மாவட்ட அளவில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் முடிவு செய்ய வேண்டும்.

    குற்ற வழக்குகளில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்று வாரண்டு பிறப்பிக்கப்பட்டும் பிடிக்க முடியாமல் தலைமறைவாக இருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தலைமறைவாக இருக்கும் குற்ற வாளிகளை பிடிக்க முடியவில்லை என்றால் வழக்கு விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இல்லாமலும் வழக்கு விசாரணை நடத்தலாம். தண்டனையும் வழங்கலாம்.

    வழக்குள் தொடர்பாக கைப்பற்றப் பட்ட வாகனங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து விட்டு 30 நாட்களுக்கு பிறகு அப்புறப்படுத்தலாம்.

    இந்திய சாட்சியங்கள் சட்டம்

    பாரதீய சட்சிய சட்டம் (பி.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் 5 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக ஒரு விதி உருவாக்கப் பட்டுள்ளது.வழக்குகளின் ஆவணங்கள் உடனுக்குடன் ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    இதன் மூலம் ஆவணங்களை மாற்றுதல், திருத்துதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

    எப்.ஐ.ஆர்., வழக்கு டைரி, குற்றப் பத்திரிகை, தீர்ப்பு, பிறப்பிக்கப்பட்ட சம்மன்கள், வாரண்டுகள், நடை முறைப்படுத்தியது, புகார்தாரர் விசாரணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

    சோதனையிடுவது, சொத்துக்கள் பறிமுதல் செய்வதை வீடியோ பதிவு செய்து உடனடியாக மாஜிஸ்தி ரேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் குற்ற சம்பவங்களில் விசாரணைக்கு தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் 90 சதவீதம் தண்டனை பெற்று கொடுப்பது உறுதியாகும். இதற்கான கட்டமைப்பு களை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்க வேண்டும்.

    • தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலம் பட்டீஸ்வரம்.
    • துர்க்கையை வணங்குவதினால் ,ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும், மன அழுத்தம், துக்கம் விலகும்,காரிய வெற்றி கிடைக்கும்.

    துர்க்கை புகழ் பெற்ற தமிழ்த் தெய்வம். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். தமிழில் வெற்றிக்கு உரியவள் என்பது பொருள்.

    ரஜோகுணம் கொண்ட கொற்றவை வட இந்திய காளியுடன் இணை க்கப்பட்டு மகிஷாசுரமர்த்தினியானாள். பிறகு அவளே துர்க்கை எனவும் அழைக்கப்பட்டாள்.

    துர்க்கம் என்றால் அகழி என்று பொருள். அகழியானது கோட்டை மதிலைப் பகைவர் அணுக முடியாதபடி காவலாக இருப்பது போல் மக்களைத் துன்பம் அணுகாதவாறு காப்பவள் என உணர்த்துவதே துர்க்கையின் வடிவமாகும்.

    துர்க்கையை சோழ மன்னர்கள் தங்களையும் தமது அரண்மனையையும் பாதுகாக்க நான்குபுறங்களிலும் துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்கள் தாம் வணங்கி வந்த துர்க்கையின் சிலையை நிறுவினார்களாம்.

    தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலம் பட்டீஸ்வரம். இந்த ஆலயம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள்.

    இக்கோவில் ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்றிஇருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள் சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.

    சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் வெற்றிக்குத் துணைநிற்கும் துர்க்கையை வணங்கிச் செல்வது பழக்கம்.பாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி குலதெய்வமாக இருந்ததுபோல் சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கினாள்.

    பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசியும், ராஜராஜ சோழனுக்கு ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள துர்க்கையின் தொல் வரலாறு முன் சொன்ன வரலாறில் இருந்து மாறுபட்டது.வேத காலத்தில் பார்வதிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்திக்காக இந்த இடத்துக்கு வந்து தவம் இருக்க,அவளுக்காக தேவர்கள் அதனை வனமாக ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவ காமதேனு தன் பெண் பட்டியையும் அனுப்பியது. பார்வதி நின்றவாறே ஈசனுக்காய் தவம் செய்தாள். சிவன் அவள் வேண்டுகோளை ஏற்று சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கே துர்கையாக இருந்து மக்களின் துயர்களைத் துடைக்க கூறினார்.

    இங்கு நீ தவம் செய்ததினால் தவவலிமை பெற்ற பூமி ஆனது. இது தெய்வ பூமியும் ஆனது. ராமரும் இங்கு வந்து புனித தீர்த்தத்தை ஏற்படுத்தி என்னையும் பூசை செய்தார். இங்கு உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். மக்களுக்கு அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைவாய் எனக்கூறினார். அது முதல் துர்க்கை இங்கு தனி சன்னதியில் வடக்கு நோக்கி நின்று அருளுகிறாள்.

    இங்கு கருவறையில் உள்ள துர்க்கை மகிஷாசுரன் தலை மீது நின்று, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு எட்டு கைகளுடன் சுவரூபிணியாக காட்சி தருகிறாள். துர்க்கையின் சன்னதியை சுற்றி வலம் வரவும், அங்கப் பிரதட்சணம் செய்யவும் மேற்கூரை போடப்பட்ட பளிங்குக்கல் தரை மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் யாக சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் இடத்துடன் வடக்கு ராஜகோபுரத்தின் முன்புறம் தனி கோவில் அமைப்பாக உள்ளது.

    ராகுபகவானின்அன்னையாகவே காட்சி தருகிறாளாம். அதனால் ராகுபகவான் தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை ராகு காலத்தில் பூசிப்பதினால் அந்த நேரத்தில் துர்கையை பூசித்தால் தனது தாயார் துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஏற்படும் எந்தக் கெடுதல்களையும் தவிர்த்து நல்லதே செய்வாராம். அதனால்தான் இங்கு துர்க்கையை ராகு காலத்தில் வந்து பூசை செய்து வேண்டுவது வழக்கத்தில் உள்ளது. செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைக் கொண்டு பூசை செய்வதால் துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டுதல் செய்ய செவ்வாய் தோஷமும் விலகுமாம்.

    இங்கு வந்து துர்க்கையை வணங்குவதினால் ,ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்,மன அழுத்தம்,துக்கம் விலகும்,காரிய வெற்றி கிடைக்கும். பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகி குடும்ப வாழ்க்கை அமைதியாகும். எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும் என்பவை மக்களால் நெடுநாட்களாக பின்பற்றப்படும் பரிகாரங்களாகும்.

    பட்டீஸ்வரம் துர்கைக்கு ,தாமரை மிகவும் விருப்பமுடைய மலர். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலையை துர்க்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்க்கையாக வேண்டி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீரும். கணவன் -மனைவி பிணக்கு காணாமல் போகும். அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்க்கை.

    மகளுக்கோ மகனுக்கோ திருமணம், வீடு வாசல் வாங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க உங்கள் பிரார்த்தனை இருந்தால் வீட்டில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள். மஞ்சள் துணியில் ஒரு காசை முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடக்கும். வீடு வாசல்அமையும். சந்தானபாக்கியம் சம்பவிக்கும்.பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்க்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியோடுசெலுத்துங்கள்.

    கோவில் நகரமாம் கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டீச்சுரத்தில்சாந்த மனசுக்காரி துர்க்கையை வழிபடுங்கள்; மகிழ்ச்சியைத் தந்திடுவாள் மகேஸ்வரி!

    தொடர்புக்கு: - இரா.இரகுநாதன் - செல்:9677222212

    • எலக்ட்ரானிக் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் எல்லா உறுப்பினர்களும் சீட்டு அடிப்படையில் வாக்களித்தனர்.
    • ராகுல்காந்தியைப் பிரபலமாக்குவதே பாரதிய ஜனதா தான் என்றும் தோன்றுகிறது.

    இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆகஸ்ட் 1963ல் ஜே.பி. கிருபளானி, நேரு அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்தார். சீனப் போருக்குப் பிறகு நடந்த பர பரப்பான சம்பவம் அது. 12 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்த நேரு எதிர்கொண்டது அந்த ஒரே ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மட்டுமே!

    அன்று முதல் இன்று வரை மக்களவையில் 30 நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் (27+3) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகமானவற்றை எதிர்கொண்டவர் இந்திரா காந்தி. மொத்தம்: 15. அவரது ஆட்சிக்காலம்: 15.86 ஆண்டுகள்ள்ளள.

    லால் பகதூர் சாஸ்திரியும் பி.வி.நரசிம்மராவும் தலா மூன்று. சாஸ்திரி சுமார் ஒன்றரை ஆண்டுகளே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொரார்ஜி தேசாய் இரண்டு தீர்மானங்களை எதிர்கொண்டார். தீர்மானத்தை ஓட்டுக்கு விடுவதற்கு முன்பே 12.7.1979 அன்று மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

    ராஜீவ் காந்தி, வி.பி.சிங், எச்.டி.தேவேகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் தலா ஒரு தீர்மானத்தை எதிர்கொண்டனர். 2023-ஐயும் சேர்த்தால் மோடி இரண்டு தீர்மானங்களைத் தோற்கடித்திருக்கிறார்.

    நரசிம்மராவ் 5 ஆண்டு பிரதமர் பதவி வகித்தார். 1992 ல் 46 வாக்கு மற்றும் 1993-ல் வெறும் 14 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தீர்மானங்களை அவர் தோற்கடித்தார். பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்ற புகார் எழுந்தது.

    மன்மோகன்சிங் அரசுக்கு எதிராக பா. ஜ. 2008 ஜூலை மாதம் கொண்டுவந்த தீர்மா னத்தில் வெற்றி பெற சில எம்.பி.களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 2009 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அவர் இரண்டாவது முறை பிரதமர் ஆனார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்று அரசுகள் வீழ்ந்திருக்கின்றன. ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றது அதை அடுத்து நவம்பர் -7, 1990 அன்று வி.பி.சிங் நம்பிக்கைத் தீர்மானத்தை முன்வைத்தார். அது தோற்கடிக்கப்பட்டது. 346 வாக்குகளுக்கு 142 வாக்குகள் மட்டுமே வி.பி. சிங் பெற்றார். 1997 ஏப்ரல் 11-ல் தேவேகவுடா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 158 எம்.பி.க்கள் ஆதரவு. 292 பேர் எதிர்ப்பு. தேவேகவுடாவின் 10 மாதக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

    களப்பத்திரிகையானாகப் பணியாற்றிய போது அமரர் வாஜ்பாய் "ஒரு ஓட்டு" வித்தியாசத்தில் ராஜினாமாச் செய்ய நேரிட்ட பரபரப்பான சம்பவம் என்னால் மறக்க முடியாதது. அந்த அளவிற்கு அப்போது அரசியல் சஸ்பென்ஸ் நிலவியது.

    வாஜ்பாயின் தனிச்செயலாளராகப் பணியாற்றிய சக்தி சின்ஹா எழுதிய 'வாஜ்பாய்: தி இயர்ஸ் தட் சேஞ்ச் இந்தியா' என்ற நூலைச் சமீபத்தில் மறுவாசிப்பு செய்தபோது பழைய சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடின. 1998 மே 19 இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவரது ஆட்சி 1999 ஏப்ரல் 17-ல் கவிழ்ந்தது. அது வரை நடந்த சம்பவங்களை சக்தி சின்ஹா கோர்வை ஆக்கியுள்ளார்.

    அப்போது பா.ஜனதா அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவளித்து வந்தது. அவர் அமைச்சரவையில் பதவி வகித்த சேடப்பட்டி முத்தய்யா, தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் 6.4.1999 அன்று திடீ ரென்று பதவி விலகல் கடிதங்களை வாஜ்பாய்க்கு அனுப்பினார்கள். மறுநாள் என்.டி.ஏ. ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து அ.தி.மு.க. தனது உறுப்பினர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

    அதற்கடுத்த ஐந்து நாட்களில் ஜெயலலிதா 1999 ஏப்ரல் 12 அன்று டெல்லி கிளம்பினார். "வாஜ்பாய் அரசை அகற்றிவிட்டுப் புதிய அரசை நிறுவப் போகிறோம்." என்று விமான நிலை யத்தில் பேட்டி அளித்தார். ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து வாபஸ் கடிதத்தை வழங்கினார். எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி: டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

    பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க இருந்த சமயம் என்பதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வாஜ்பா யைக் கேட்டுக் கொண்டார்.

    நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக 269 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 270 ஓட்டு பதிவாகியது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் 13 மாத பா.ஜ.க. அரசு 1999 ஏப்ரல் 17 அன்று கவிழ்ந்தது. "ஒற்றை ஓட்டு மர்மம்" பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

    அப்போது அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் சபா நாயகருமான மறைந்த சேடப்பட்டி முத்தையா தன் வாக்கைச் செலுத்தத் தவறியது வெளிச்சத்துக்கு வந்தது. எலக்ட்ரானிக் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் எல்லா உறுப்பினர்களும் சீட்டு அடிப்படையில் வாக்களித்தனர். சேடப்பட்டி முத்தையா தன் ஓட்டுச் சீட்டைப் போடாமல் சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்து விட்டார். அது சர்ச்சையாகி அதன்பின் அவருக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டது.

    ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக சேடப்பட்டி முத்தையா ஓட்டுப் போட்டு இருந்தால், அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலா 270 வாக்குகள் பதிவாகி இருக்கும். அப்படியான சூழலில் சபா நாயகர் தனது வாக்கை அரசுக்கு ஆதரவாகச் செலுத்தி பா.ஜனதா அரசை காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்திருக்குமோ?

    இன்னொரு ஒற்றை ஓட்டு சர்ச்சையும் அதே 1999-ல் நிகழ்ந்தது. அந்தக் கால கட்ட காங்கி ரஸ் எம்.பி. கிரிதர் கோமாங் 1999 பிப்ரவரி யில் ஒடிசா மாநில முதல்வராகப் பதவியேற்றி ருந்தார். ஆனால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கவில்லை. எனவே அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாமா என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் சபாநாயகர் பால யோகி, அதைக் கோமாங்கின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் உத்தரவைப் பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராகக் கிரிதர் கோமாங் வாக்களித்தார். எனவே அந்த ஒற்றை ஓட்டு அவரது ஒரு வாக்கு தான் என்று சக்தி சின்ஹா தன் நூலில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.க்கள் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் பின்னர் எதிராக ஓட்டுப் போட்டனர். இப்படிப் பல்வேறு சம்பவங்களைத் தன் நூலில் குறிப்பிட்டிருந்தார் சக்தி சின்ஹா.

    கிரிதர் கோமாங் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பதுதான் சுவாரஸ்யம்! வாஜ்பாய் அரசு கவிழ்வதற்குக் காரணமானவர் என்றாலும் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டது பா.ஜ. தலைமை. அதே போல அன்றைய அ.தி.மு.க. வாபஸ் முடிவின் சூத்திர தாரியான சுப்பிரமணியன் சுவாமியும் பின்னர் பா.ஜ.எம்.பி. ஆனார்.

    பின்னர் 1999-ல் சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசில் அ.தி.மு.க. வலிந்து ஆதரவு அளித்த சோனியாகாந்தியும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை உருவாக்கத் தவறினார். முலாயம்சிங் கடைசி நேரத்தில் முறுக்கிக் கொண்டதே காரணம்! இப்படி வடமாநில அரசியலில் எதுவும் நடக்கலாம்!

    இதே போல இன்னொரு "ஒற்றை ஓட்டு சர்ச்சை" எங்கள் கல்லூரிக் காலகட்டத்தில் எழுந்தது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 560 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. 1947 ஒப்பந்தப்படி அவை இந்தியாவுடன் இணைய சில நிபந்தனைகளுக்கு மத்திய அரசு ஒத்துக்கொண்டது. அவற்றில் ஒன்று: மன்னர் மானியம்.

    மாஜி மன்னர்கள் மொத்தத்தில் கிட்டத்தட்ட 34 சலுகைகளை அனுபவித்தனர். இந்திய சட்டங்களின் செயல்பாட்டில் இருந்து விலக்கு, ஜாகிர்களை அனுபவிப்பது, ஆட்சியாளர்களின் சகோதர சகோதரிகளின் திருமணச் செலவுகளை அரசே செலுத்துதல், நீதிமன்றத்தின் சில செயல்முறைகளில் இருந்து விலக்கு ஆகியவையும் அடங்கும்.

    மானியத்தொகையாக ஆண்டுதோறும் ரூபாய் 5000 முதல் 2 லட்சம் வரை வழங்கப்பட்டது. ஐதராபாத் நிஜாம், திருவாங்கூர், பரோடா, ஜெய்பூர் மற்றும் பாட்டியாலா மன்னர்க ளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மன்னர் மானி யம் வழங்கப்பட்டது. மைசூர் மன்னர் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் பெற்றார். கொத்தாரியா என்ற ராஜபுத்ர ஆட்சியாளர் ஒருவர் வெறும் 192 ரூபாய் பெற்றார். 1969-ம் ஆண்டு நிலவரப்படி மன்னர் மானியத்தின் மொத்தத் தொகை சுமார் 58 கோடி ரூபாய். மன்னர் மானிய ஒழிப்புச் சட்ட மசோதாவை இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் 1969-ல் கொண்டு வந்தபோது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது.

    அந்த ஒரு ஓட்டைச் செலுத்தத் தவறியவர் அப்போதைய தி.மு.க. எம்.பி. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தனக்கு வயிறு சரியில்லாமல் போனதால் பாத்ரூம் சென்றதாகவும், திரும்பி வரும்போது வாக்கெடுப்புக்காகப் பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டதால் தன்னால் ஓட்டுப் போட முடியாமல் போனதா கவும் காரணம் சொன்னார் எஸ். எஸ். ஆர்.

    அதன்பின் பாகிஸ்தான்-வங்கதேச யுத்தத்தில் வெற்றி பெற்ற கையோடு, 1972 தேர்தலை முன் கூட்டியே 1971-ல் கொண்டு வந்தார் இந்திராகாந்தி. கலைஞரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலை மக்களவைத் தேர்தலோடு முன்கூட்டியே அறிவித்தார். மாநில ஆட்சிக்கும் ஒரு வருட ஆயுள் பாக்கி இருந்தது.

    எனக்குக் கல்லூரி வாழக்கையின் இறுதிக்கட்டம். நாங்கள் பெருந்தலைவர் காமராஜ் ஆதரவு மாணவர்கள். எனவே ஸ்தாபன காங்கிரசுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை பார்த்தோம். தி.மு.க. கூட்டணி 184 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றது. மீண்டும் மன்னர் மானிய ஒழிப்பு மசோதா 1971-ல் அறி முகப்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இப்படி பாராளுமன்றத்தின் "ஒற்றை ஒட்டு" இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல் அதிசயங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    மோடி அரசுக்கு எதிரான 2018 தீர்மானம் 325-126 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. இப்போதைய தீர்மானத்தின் கதியும் அது தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! பிரதமரை பேச வைத்ததே சாதனை என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

    தோற்றுப் போகும் என்று தெரிந்தே ஏன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது? ஊழல் புகார், சலுகைகள் பற்றிய சர்ச்சைகள் போன்ற சில குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயங்குவது முக்கிய காரணம். நடப்பு தீர்மா னத்தின் நோக்கம்: மணிப்பூர் பிரச்சினையை மக்களவையில் விவாதித்துப் பிரதமரைப்பதில் கூற வைப்பது. அந்த வகையில் "இந்தியா" எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இது வெற்றியே!

    தகுதி நீக்கத்தால் பதவி இழந்து உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.பி. யான ராகுல்காந்தி நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதம் துவங்கும் போது "கரெக்டாக" மக்கள வைக்கு வந்து சேர்ந்தார். "இந்தியா" அணியின் அதீத உற்சாகத்திற்கு அதுவும் காரணம். கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி கிடைக்கவிட்டாலும் "மேன் ஆப் த மேட்ச்" அவார்ட் ராகுல்காந்திக்குக் கிடைத்த பெருமையில் எதிர்க்கட்சிகள் கால ரைத் தூக்கி விட்டுக் கொண்டன.

    ராகுல்காந்தி அவையில் இருந்து வெளி யேறும்போது "பறக்கும் முத்தம் சைகை" கொடுத்தார் என்றும் அது பெண் எம்பிக்களை அவமதிக்கும் செயல் என்றும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் சபாநாயகரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

    பறக்கும் முத்தம் என்பது வார்த்தை அல்லாத தகவல்தொடர்பு என்றும், போற்றுதல் அல்லது பாசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு அன்பான சைகை என்றும் சேட் ஜி.பி.டி. கூறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது எழுந்த இன்னொரு சர்ச்சை இது. இதை வைத்து இன்னொரு ரவுண்ட் ஓடும். ராகுல்காந்தியைப் பிரபலமாக்குவதே பாரதீய ஜனதா தான் என்றும் தோன்றுகிறது.

    • நமது மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களால் மன வலி உண்டாகிறது.
    • யாருக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ அவர்களுக்கே இரைப்பையில் புண் ஏற்படுகிறது.

    நோய் வலியை உண்டாக்குகிறது. வலி என்பது நோய் குறித்து நாம் விழிப்புணர்வு அடைய கொடுக்கும் அறிகுறி என கருதலாம். நமது உடலில் ஏதோ ஒரு பிரச்சினை அல்லது உடல் பாகங்களில் ஏதோ ஒன்று சரி இல்லை என்பதைத்தான் வலி நமக்கு உணர்த்துகிறது. 'ஏ சிம்ப்டமேட்டிக் ஹார்ட் அட்டாக்' போன்ற மாரடைப்புகளும், இன்னபிற வியாதிகளும் வலி இல்லாமலே ஏற்படும்.

    உடலில் வலி ஏற்பட்டால், அதற்கு ஓய்வு எடுப்பது மற்றும் மருந்துகள் உட்கொள்வதை நாம் ஒரு நிவாரண வழிமுறையாகக் கையாள்கிறோம்.

    சில சமயங்களில் நம் உடலில் காயங்கள் அல்லது வியாதிகளால் அதீத வலி ஏற்படக்கூடும். நாள்பட்ட தீராத வயிற்றுவலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம்.

    இந்த வலிகள் குறித்தும், அதற்கான நிவாரண வழிகளைக் குறித்தும் பார்க்கலாம்.

    வலி என்பது 2 விதமாக இருக்கிறது. ஒன்று உடல் வலி. மற்றொன்று மனவலி. இருக்க கூடிய அனைத்து வலிகளிலும் மிகவும் மோசமான வலி எது என்று கேட்டால் அது மனவலியாக தான் இருக்கும்.

    மன வலி என்பது மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் ஒரு விளைவு. அதாவது நமது மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களால் மன வலி உண்டாகிறது.

    நமது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலியை நமக்கு உணரச் செய்வதே இந்த மூளைதான். எனவே, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மனவலி க்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப மன நல ஆலோசனைகள், மாத்திரைகள் உட்கொண்டு அதனை சரி செய்வதே சிறந்தது.

    வயிற்று வலி:

    மனிதனாகிய நாம் வயிற்றுக்கான உணவினை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி சரியான நேரத்தில் உணவினை எடுத்து கொள்ளவில்லை என்றால் வயிற்றில் வலி ஏற்படுகிறது. வயிற்று வலிக்கு முக்கிய காரணம் இரைப்பையில் புண் மற்றும் பித்தப்பையில் கல் ஏற்படுவதே காரணம்.

    வயிற்றில் ஒரு அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் சாப்பாடு வருகிறதா என்று எட்டி பார்க்கிறது. அப்படி வரவில்லை என்றால் வயிற்றில் உள்ள உள் சுவர்களை அரித்து விடுகிறது. மேலும் வயிற்றையே செரிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் வயிறு புண்ணாகி போகிறது.

    வலி எப்போது வருகிறது, எப்போது குறைகிறது என்று கேட்கலாம். சாப்பிட்டதும் வலி குறைகிறது. சாப்பிட்டு 6 மணி நேரம் கழித்து மீண்டும் வலி வருகிறது. அதாவது ஆகாரம் வயிற்றுக்குள் போனால் வலி குறைகிறது. ஆகாரம் இல்லையென்றால் வலி எடுக்கிறது. இப்படி இருந்தால், இரைப்பையில் புண்(அல்சர்) ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

    சாதாரணமாக இந்த புண் ஆறாது. இதனை குணப்படுத்த ஆண்டாசின், சிமாட்டின் உள்ளிட்ட மாத்திரைகள் எடுத்து கொண்டால் இந்த நோயினை குணப்படுத்த முடியும். அல்லது ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.

    யாருக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ அவர்களுக்கே இரைப்பையில் புண் ஏற்படுகிறது. தீராத வயிற்று வலியால் கணையத்தில் கூட கட்டி வரலாம். 100 மில்லி வர வேண்டிய இடத்தில் அமிலம் 1000 மில்லியாக வெளி வந்தால், இரைப்பை மட்டுமல்ல குடல் முழுவதுமே புண் ஏற்படும். அதனை சரி செய்ய சிமாட்டின் மாத்திரைகள் அல்லது பான்கிரியாஸ் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.

    இரைப்பையில் புண் வந்தது தெரிந்தால் கடையில் மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    இரைப்பை மற்றும் கல்லீரலுக்கு என்று நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களும் உள்ளனர். அவர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அவர்கள் கூறும் மருந்து, மாத்திரைகளை எடுத்து கொண்டால் நாள்பட்ட வயிற்று வலியை சரி செய்ய முடியும்.

    தலைவலி

    இடி இடித்தால் எப்படி சத்தம் வருகிறதோ, அதுபோன்ற சத்தம் நம் தலையில் இடித்து கொண்டிருந்தால், நம் தலையில் உள்ள ரத்தக்குழாய் உடைந்து விட்டது என்று அர்த்தம்.

    'மைக்ரைன், டென்ஷன்' போன்ற காரணங்களால் நாள்பட்ட தலைவலி ஏற்படலாம். இதுவும், திடீரென தொடர்ச்சியாக வரக்கூடிய தலைவலியும் வேறு வேறு. இப்படிப்பட்ட பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

    ஒருவருக்கு மூளையில் ரத்தக் கசிவு அல்லது அடைப்பு அல்லது ஏதேனும் கட்டி உருவாகி அதில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

    மற்றொன்று, முகத்தில் ஏற்படக்கூடிய மின்னல் வலி. பல் துலக்கும் போதும், சாப்பிடும் போதும், காற்று பட்டாலும், சிரித்தாலும் இந்த வலி ஏற்படும். இதனால் சில நோயாளிகள் சாப்பிடக்கூட முடியாமல் அவதியடைகின்றனர். முகத்திற்கு மேல் வரும் ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அடுத்தக்கட்டமாக அறுவை சிகிச்சை அல்லது 'ரேடியோ ப்ரீக்வன்சி' மூலமாக சிகிச்சை மேற்கொள்ளலாம்.

    முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் இருக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தசைகளுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனத்தின் உதவியை நாடிச் செல்ல வேண்டாம், ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்யலாம்.

    பொதுவாக, நேரத்தைக் காரணம் காட்டி முதலில் நாம் தவிர்ப்பது உடற்பயிற்சியைத்தான். எனவே, நேரம் இல்லை என்று கூறி தியானம் மற்றும் உடற்பயிற்சியை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டாம். டி.வி மற்றும் செல்போனில் மூழ்கி இருக்கும் நேரத்தை சற்றே தவிர்த்தாலே தினமும் உடற்பயிற்சி செய்துவிட முடியும்.

    மூட்டு வலி பலரையும் வாட்டி வதைக்கிறது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்குக் காரணம், எலும்புத் தேய்மானம், வயது முதுமை. இளம் வயதில் மூட்டு வலி வருவதற்கு காரணம், இளம்பெண்கள் ஹை-ஹீல்ஸ் அணிந்து நடப்பது தெரியாமல் செய்வது போன்றவையாகும். இதுபோன்ற காரணங்களால் மூட்டு வலி அதிகமாக வருகிறது.

    நாள்பட்ட வலிக்கும் சாதாரண வலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவருக்கு காலில் அடிபட்டால் சிகிச்சை எடுத்த பின்பு அந்த இடத்தில் வரக்கூடிய வலி சாதாரணமானது. இதைவிட மிகவும் மோசமானது, suicide tendency வலி ஆகும். இது, தொடர்ந்து ஏற்படும் வலியின் இன்னல்கள் காரணமாக ஒருவருக்குத் தற்கொலை செய்யும் எண்ணத்தைத் தூண்டும். அந்த அளவிற்கு இந்த வலி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

    எனவே, இதுபோன்ற வலி உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுத்துப் பார்த்து, பின்னர் அவர்களுக்கு எந்தப் பகுதியில் வலி இருக்கிறதோ அந்தப் பகுதியில் PRP (Platelet-Rich Plasma) எனும் பரிசோதனை செய்யப்படும்.

    இந்த பரிசோதனை மூலம், அவர்களுடைய ரத்தத்தை எடுத்து, சிவப்பு ரத்த அணுக்கள் வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளிலிருந்து பிரித்த பின்பு, அந்த பிளேட்லெட் மீண்டும் ஊசி மூலமாக வலியுள்ள இடத்தில் செலுத்தும்பொழுது அவர்களுக்குப் பூரண வலி நிவாரணம் ஏற்படுகிறது.

    எப்படியெனில், ஊசி செலுத்தும்போது அவர்களுக்கு அந்தப் பகுதியில் புதிய செல்கள் உருவாகிறது. அதனால் அவர்கள் குணமடைகின்றனர். தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய வலிகளுக்கும் எளிமையான மருத்துவம் உள்ளது.

    எந்த பகுதியில் வலி இருக்கிறதோ அதே பகுதியில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி வலியைக் குணப்படுத்தலாம். அதனால் நீண்ட நாள் வலிகள் இருப்பவர்கள், நமக்கு நிரந்தரத் தீர்வு இல்லையே என வருந்தத் தேவையில்லை.

    வலி நிவாரண சிகிச்சை என்பது உடல் உறுப்புகளில் ஏற்படும் நாள்பட்ட வலிகளுக்கு மட்டும் அல்ல. மிக சவாலான அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் மன பயத்தைப் போக்கி இயன்முறை மருத்துவம் செய்துகொள்ள உதவும் வகையில் வலி நிவாரண சிகிச்சையானது, தற்போதைய நவீன மருத்துவத்தில் ஒரு இணை உதவி மருத்துவமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    மக்கள் எந்த வலி வந்தாலும் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் சிறப்பான வாழ்க்கை வாழலாம்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப் பார்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள்.
    • ஜெர்மானியப்பெற்றோர்கள் பொறுப்பின்றி பியர் குடித்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

    ஜெர்மனி முழுக்க நிறைய ஏரிகள் இருக்கின்றன. அதி வசீகரமான ஒன்று கோனிக்சீ என்னும் பெரிய ஏரி. கோனிக் என்றால் ஜெர்மனில் ராஜாவாம்.

    ஏரி என்றால் நீலத்தண்ணி மட்டுமில்லை.. சுற்றிலும் பவேரியன் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், ஆங்காங்கே பனி படர்ந்து பரவசம் காட்டும் மேகத்திரைக்கு நடுவே பச்சை ரகசியம், காதுக்குள் ஜிவ்வென்னும் சில் காற்று தலையைக்கலைக்கும் விஷமம், துளிக்கூட குப்பை ஏதும் இல்லாத ஸ்வச் பவேரியா, அமைதியாக நம்மைக்கடத்தும் எலக்ட்ரிக் படகுகள், தூரத்தே ஊடாடும் வெள்ளை பாய்மரத்துணி வைத்த உல்லாச ஆசாமிப்படகுகள்.

    கூடவே கச்சிதமாக சினேகிதிகள், நம்மைப்போல கூட்டங்கூட்டமாய் டூரிஸ்டுகள். பாதிப்பேர் கிழங்கட்டைகள், பலர் துணைவியுடன் கூடவே கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப் பார்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள். வெறும் ஜட்டியுடன் மேலே ஒன்றுமில்லாமல், இருங்கள், இருங்கள், சின்னச்சின்னக்குழந்தைகள், ஸ், அப்பாடா, ஏரிக்கரையில் கால்களையும் பிருஷ்டத்தையும் நனைத்து விளையாடுகிறார்கள்.

    "பாத்து பாத்து, குழந்தை தண்ணில எறங்கறான் பார்!"

    "டேய்! கடங்காரா! உள்ள போகாதடா!

    இந்த மாதிரியான மரியாதைக்குரிய சப்தங்கள் ஏதுமின்றி ஜெர்மானியப்பெற்றோர்கள் பொறுப்பின்றி பியர் குடித்துக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

    நான் பார்த்து வியந்தது அந்த மாபெரும் ஏரிக்கு நடுவே முகத்தில் ஒரு சின்னக்கவலையோடு தன்னந்தனியே துடுப்பை வலித்து ஒரு டப்பா படகின் அல்லாட்டத்தில் இடுப்புக்கு மேலே முதுகுப்பக்கத்தில் பிளவைக்காட்டும் லோ லெவலில் பட்டாபட்டி டிராயர் அணிந்த ஒரு முப்பது வயதை தாண்டிய ஆள்… பரந்த அமைதியான மாபெரும் ஏரியில் வேகு வேகுவென தன்னந்தனியாக சின்னப்படகை சிரிக்காத முகத்துடன் வலித்துக்கொண்டு வரும் இந்த நபரின் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவாகத்தான் இருக்க முடியும்?

    இப்போது மீண்டும் போட்டொவைப்பாருங்கள்!

    துல்லியமான நீல ஏரி. துளிக்கூடச்சலனமில்லாத பாரபட்சமில்லாத ஞானியின் மனதைப்போல தண்ணீர்ப்பரப்பு. வீசும் சில் காற்றுக்குக்கூட சீரான அலைவரிசையைத் தோற்று வித்து ஒரு மெல்லிய நடுக்கத்தைக்காட்டி மறுபடியும் உறைந்துவிடுகிற நீர்ப்பரப்பு. பழுப்பு நிற வாத்துக்களின் கொர கொர சத்தமும், சில் வண்டின் ரீங்காரமும், லீவு போட்ட காலையில் சென்னையில் நாம் கேட்கும் ஒற்றைக்காகத்தின் குரலைப்போன்ற தனிமைக்காகக்கரையலும், நாளுக்கு ஒன்றிரண்டு முறை மட்டுமே தூரத்தே ஓடும் குட்ஸ் வண்டியும், இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மேப்பிள் மரங்களும், விரவி நிற்கும் அமைதியும் சில நேரங்களின் தனிமையின் கிலியை ஏற்படுத்துகின்றன.

    "தனிமையில் இருப்பது எளிதன்று" என்று சித்த புருஷர்கள் சொல்லுவது புரிகிறார்போல் இருக்கும் இடம்.

    சும்மா வேடிக்கை பார்ப்பதற்காக பெரிய பேக்கரி ஒன்றில் நுழைந்தோம். சந்தானத்துக்கு ஜோடியாய் "கஷ்க் முஷ்க்" என்று ஒரு பெண் வருமே, அதான் நம்ம மோகன் ராமின் டாட்டர், அவள் ஜாடையில் ஒரே ஒரு சின்னப்பெண் மட்டும் அந்தப்பெரிய பேக்கரியைப்பார்த்துக்கொள்கிறது. எங்களைப்பார்த்ததும் உடைசல் இங்கிலீஷில் இது வேணுமா அது வேணுமா, இதில் எள் போட்டு உடம்புக்கு நல்லது, அதில் சீஸ் கொலஸ்ட்ராலே கிடையாது என்றெல்லாம் பேசி ஒரு மெகா சைஸ் பன்னையும் எனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி கேக்கையும் தள்ளி விட்டுவிட்டது. ஆனால் மகா உபசாரம் பண்ணியது. தானே பிளேட் கொண்டு வந்து கொடுத்து, ஸ்பூன் பொர்க்கெல்லம் தந்து, அடிக்கொருதடவை ஆர் யூ ஓக்கே என்றெல்லம் பந்தி விசாரனை பண்ணி………

    ஒரு ஸ்பூன் கேக்கை வாயில் போட்டால் கொழகொழவென்று சீசும், கிரீமும், ஐஸிங்கும் ஓரத்தில் துண்டு ஸ்ட்ராபெர்ரியுமாய் உள்ளே போகின்றது. அடுத்த ஸ்பூனை கேக்கின் ஓரத்தில் கொண்டுபோய் சாய்வெட்டாக ஒரு செதில் எடுத்தால்..அட..பெரிசாக பாதாம்! சந்தேகமே இல்லாமல் 500 கலோரிகள் கலந்து ரத்தத்தில் கொலஸ்ட்ராலாக இன்னிக்கு ஏற்பாடாகிவிட்டது!

    அந்த நீள வேன் கிட்டத்தட்ட ரெயில்வே காரேஜ் மாதிரி இருந்தது. ஒரு வித அழுக்குப்பச்சையும் மஞ்சளும் கலந்த இயந்திர ராட்சசன். கொஞ்சம் முன்னே போய்ப்பார்த்தேன். மெர்ஸிடீஸ் பென்ஸ் அக்சார் 240 ஹெச் பி குதிரைச்சக்தி என்று போட்டு "வ்ர்ரூம்" என்று உறுமிக்கொண்டிருந்தது.

    நல்ல மதிய வேளையில் நம்ம கண்ணகி சிலைக்கு எதிர்த்தாப்பில் நின்றிருக்கிறீர்களா? பீச் மணலில் ஒரு குடைக்குக்கீழ் ஒட்டி உட்கார்ந்துகொண்டிருக்கும் மனுஷ ஜென்மங்களைத்தவிர ஒரு பைத்தியக்கரனும் வெளியில இறங்க முடியாத சூடாக இருக்கும். அது மாதிரி சீதோஷ்ணம் அன்று மியூனிக்கில்! பளீரென்ற சூரியன் தான் தூக்கத்தைக் கலைத்தது. மணி பார்த்தேன்.

    அதிகாலை நாலரை!

    அடப்பாவிகளா!

    ஒரு வழியாக ஆறு மணிக்கு எழுந்து எப்போதும் போல வெட்டி முறிக்கறா மாதிரி பால்கனியில் நின்றவாறே காபி குடிக்கும்போது பேச்சு.

    "இன்னிக்கு ரியம் மால் வாசலில் காய்கறிச்சந்தை! போகலாமா!"

    மருமகள் கேட்டவுடன் சரி என்று கிளம்பிவிட்டோம். அங்குதான் இந்த டிரக்கைப்பார்த்தேன். அதன் பின்னங்கதவு, அந்த ரஜினி படத்தில் முழங்காலுக்கு மேலே ஸ்கர்ட் போட்டுக்கொண்டு வருவாளே, அவள் கார் கதவு மாதிரி மேல் நோக்கி திறக்க, அதிலிருந்து நாலடி, உயரமில்லை, அகலவாட்டில் இருந்த ஒரு தங்கக்கலர் தொங்கு மீசை இறங்கினான். அவனை ஒட்டி ஓடக்கோல் போல ஒரு ஒல்லிப்பிச்சானாய் இன்னொ ருத்தன். இருவரும் டிராகினுள்ளிருந்து நீளமான பச்சைக்கலர் கான்வாஸ் சுற்றிய சில பல கோணல் மாணலான கம்பிகள் அடங்கிய ஒரு வஸ்துவை எடுத்து கீழே வைத்தான். இதற்குள் முன் வழியாக இரண்டு பெண்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகி வென்றபோது அவளுடன் மேடையில் இருந்த மாதிரி இரண்டு பெண்கள். வாட்ட சாட்டமாக ஒருவர் முழங்கால் அளவுக்கு அரை டிராயர் போட்டி ருந்தான் இந்தப்பெண்கள் போட்டிருந்த அரை டிராயர்… சரி வேண்டாம், மேலே எழுதினால், மாதர் சங்கங்கள் கோபித்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்புவார்கள், அதையெல்லாம் சமாளிக்கும் திராணி இல்லை.

    இருவரும் அந்த கம்பி சமாச்சாரங்களை பரபரவென்று பிரித்து அங்கே நட்டு, இங்கே பிரித்து என்று என்னென்னவோ குழப்படி செய்தார்கள். பார்த்தால் நீளமாக ஒரு டெண்ட் உருவாகிவிட்டது! அதற்குள் வாட்டசாட்டனும் ஓடக்கோலும் மளமளவென்று டிரக்கிலிருந்து டிரேக்கலை எடுத்து அடுக்கி பத்தே நிமிஷங்களில்........

    காய்கறிக்கடை!

    அடையாறு சர்தார் பட்டேல் ரோடில் என்னுடைய ஸ்கூல் தினங்களில் அடையார் பேக்கரிக்கு எதிரில் பிளாட்பாரத்தில் இருந்த நியாயவிலைக்கடை போல ஆகிவிட்டது. என்ன அங்கே சண்முககனி நாடார் ஏழெட்டு பேனாக்கள் அடங்கிய தொள தொள பை வைத்த காமராஜ் சட்டையுடன் கல்லாவில். இங்கே, அதான் சொன்னெனே, ஐஸ்வர்யா ராய் மேடைப்பெண்கள்.

    இன்னும் கூட்டம் வரவில்லை. நானும் மனைவியும் அங்கு போய் பேச்சுக்கொடுத்தோம். எனக்குத்தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அவர்கள் இருவரும் பரிட்சய ஜெர்மனில்.

    மியூனிக்குக்கு வெளியே நூறு மைல் தொலைவில் பெரிய பண்ணையாம். நூற்றுக்கு மேல் ஏக்கரோ ஹெக்டேரோ பாழாய்போன மொழி வளத்தினால் கணக்கு சரியாக விளங்கவில்லை. அவர்களே வேலை செய்து விளைவிக்கும் காய்கறி, பழங்களாம். நேரடி வியாபாரம். விலை நல்ல மலிவு என்று மருமகள் சொன்னார். மிடில் மென் என்னும் நடுத்தரகு வியாபாரிகள் யாரும் இல்லாத நன்மையைப்பார்க்க முடிந்தது.

    கொட்ட கொட்ட முழிக்கும் ஸ்ட்ராபெர்ரி, அரிசி மூட்டை சைஸில் தர்பூசனி, முட்டைக்கோஸ் ஒன்று வாங்கினால் கூட்டு பொரியல் என்று வாரம் பூரா கடத்திவிடலாம்.

    தக்காளி பச்சைக்காம்பு இலைகளுடன் ரம்மியமாக இருக்க, நம்மூர் பழமுதிர் நிலையத்தில் எழுவது ரூபாய்க்கு ஒன்று விற்கும் பிளம், யூரோ ஒன்றுக்கு ஆறு தந்தார்கள். டெண்ட் கடையின் ஓரத்தில் அந்த இன்னொரு உலக அழகி ஒரு பெரிய கண்னாடி பாத்திரத்தில் நெறயத்தண்ணீர் விட்டு அதில் சடசடவென ஸிட்ராபெர்ரீக்களைக்கொட்டி வைத்தாள். கூடவெ இன்னொரு கண்ணாடியிலும் அதேமாதிரி.

    என்னது இது என்று விசாரித்தேன்.

    "இது சர்க்கரையில் போட்ட ஸ்டிராபெர்ரி! அது ஒயினில் ஊற வைத்தது! பிரீ! எடுத்துக்கொள்ளுங்கள்!"

    காலங்காலையிலேயே சாராயம் கூடாது என்பதால் அந்த சர்க்கரை ஸ்டிராபெர்ரியை இரண்டை மட்டுமே எடுத்துக்கொண்டு பேச்சுக்கொடுக்கலாம் என்று பார்த்தேன்.

    அந்த வாட்ட சாட்டன் தாய் மாமனாம்!

    இன்னிக்குப்போதும் என்று நகர்ந்து வீட்டுக்கு வந்துவிட்டேன்.

    • பன்றியை வடமொழியில் வராகம் என்பார்கள். பன்றி முகம் கொண்டதால் வராகி என்ற திருநாமம் ஏற்பட்டது.
    • இருபது முப்பது சமுதாய மக்களின் குலதெய்வமாகவும் இந்த வராகி அம்மன் உள்ளார்.

    நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்காத ஒரு தெய்வம் தான் இந்த வராகி அம்மன்.

    சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் வராகி அம்மன்.

    அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர்.

    பிராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கவுமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோரே சப்த கன்னியர்.

    இவர்களில் பெரிதும் மாறுபட்டவள் வராகி. மனித உடலும், பன்றி முகமும் கொண்டவள். பன்றியை வடமொழியில் வராகம் என்பார்கள். பன்றி முகம் கொண்டதால் வராகி என்ற திருநாமம் ஏற்பட்டது.

    இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை,, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் மிக மிக பழமையானது உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் ஆலயம்தான்.

    உலகின் முதல் சிவாலயம் எனப்போற்றப்படும் திருஉத்திர கோசமங்கை மங்களநாதர் கோவில் அருகே காவல் தெய்வமாக வராகி வீற்றிரு க்கிறாள்.

    மங்களநாதர் சிவன் கோவில் காவல் தெய்வமாக வராகி இருப்பதால், முக்கிய திருவிழாக்களின் போது வராகிக்கு பூஜை நடத்தப்பட்ட பின்னரே சிவன் கோவில் விழாக்கள் தொடங்கும் மரபாக உள்ளது.

    மங்களநாதர் ஆலயம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமைக் கொண்டது வராகி அம்மன் கோவிலும்.

    வராகி அம்மன் அங்கு குடிகொண்ட வரலாற்றை அறிய வேண்டுமானால் கால பயணத்தில் பின்நோக்கி நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

    திரு உத்திர கோச மங்கை 4 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றிய தலமாகும். ஒரு சதுர் யுகம் என்பது 60 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. அப்படியானால் எவ்வளவு பழமையானது என நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

    நான்கு சதுர் யுகங்களுக்கு முன்னாள் ஒருசமயம் படைக்கும் கடவுளான பிரம்மா தனது அன்ன வாகனத்தில் வான்வழியாக சென்ற போது அடர்ந்த இலந்தை வனத்தின் நடுவே ஆவுடை இல்லாத லிங்கம் ஒன்றை கண்டார்.

    உடனே ஈசனை வழிபட அவ்விடத்தில் இறங்கினார் பிரம்மா. அங்கே கர்ப்ப கிரகம் அமைத்து அந்த லிங்கத்தை ஆவுடையுடன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவே திரு உத்திர கோச மங்கை மங்களநாதர் சிவாலயமாகும்.

    அங்கு பெருங்கோவில் உருவாவதற்கு முன்னரே கோபுரம் அமைய வேண்டிய இடத்தில் விநாயகர், முருகர் விக்ரகங்களையும் பிரம்மா பிரதிஷ்டை செய்தார்.

    இதில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. அதாவது, இடது புறத்தில் இருக்க வேண்டிய விநாயகரை வலது புறத்திலும், வலது புறத்தில் இருக்க வேண்டிய முருகரை இடது புறத்திலும் பிரதிஷ்டை செய்துவிட்டார்.

    கடவுளே செய்தாலும் தவறு தவறு தானே.. அதற்கு பிராயசித்தமாக உருவானது தான் இந்த வராகி அம்மன் ஆலயம்.

    செய்த பிழைக்கு என்ன பரிகாரம் என்று வேண்டி நின்ற பிரம்மாவிடம் ஈசன் "திருஉத்தரகோசமங்கையில் நானுறையும் ஆலயத்தின் அருகே வராகி சுயம்புவாய் எழுந்தருள்வாள். அவளை வழிபட்டு பிராயசித்தம் தேடிக்கொள்" என்று கட்டளையிட்டார்.

    அதன்படி அங்கே சுயம்புவாய் எழுந்தருளிய வராகி அம்மனுக்கு பிரம்மா மூலாலயம் அமைத்து வழிபட்டு நிவர்த்தி பெற்றார்.

    பிரம்மனுக்கே பிராயசித்தம் வழங்கிய அன்னை வராகி அன்று முதல் தன்னை நாடி வரும் கோடான கோடி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறாள்.

    ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் வராகி அம்மனைக் காணும் போதே நமக்குள் பரவசம் ஏற்படும்.

    வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட.. வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.

    அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.கிழக்கு திசை நோக்கி இருக்கும் இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார்.

    வராகி அம்மனை வழிபட்டால் வாழ்வில் வெற்றிகள் கிடைக்கும். ஆஷாட நவராத்திரியில் வராகி தேவியை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற வழக்குகள், நிலத்தகராறு பிரச்சினைகள் சுமூகமாகும்.

    ராஜராஜசோழன் எச்செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார். இதனால் இந்த அம்மனை "ராஜராஜ சோழனின் வெற்றித்தெய்வம்' என்று வர்ணிப்பர்.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு, பூமி சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், குழந்தை வரம், கல்வியில் தேர்ச்சி, பில்லி சூனியம்ஏவல் தோஷம் நீங்க, நினைத்த காரியம் கைகூடி வெற்றி பெற மாதத்தில் வருகிற வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

    நாம் வேண்டியதை நிறைவேற்றி வைப்பதால் இந்த வராகியை வழிபட தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி மற்றும் அமாவாசை பவுர்ணமி அன்று விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. எனவே அன்றைய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    மஞ்சள் பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப் படுகிறது.

    ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும்.

    மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.

    திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி லழிபடுவார்கள்.

    அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.

    பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன. மஞ்சள் கிழங்ைக கொண்டு வந்தோ அல்லது கோவில் வளாக கடைகளில் வாங்கியோ சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் அரைத்து கொடுக்க வேண்டும்.

    மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது. அரிசியை வாழை இலையில் பரப்பி, தேங்காய் உடைத்து வைத்து அதில் நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் காரிய வெற்றி எளிதில் கிடைக்கும்.

    கல்யாணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க, மஞ்சள் கயிற்றை கோவிலின் தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி பிராத்திக்கின்றனர்.

    திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பேறு இல்லதவர்கள் தொட்டில் கட்டி பிரார்த்திக்க மறுவருடத்தில் குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள்.

    இது தவிர குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் இருந்தால் அந்தந்த பிரச்சினைகளுக்குரிய வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறுவது நிச்சயம்.

    திருவிழாக்கள்: ராமநாதபுரம் சமஸ்தானம் - தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படும். தற்போது அது நின்றுபோய் உள்ளது. மீண்டும் பிரம்மோற்சவத்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆடி முதல் புரட்டாசி வரை நடக்கும் திருவிழா காலங்களில் அம்மனின் 4 கரகங்கள் வீதிவலம் சுற்றிவரும். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். ஆடி முதல் வெள்ளியில் பால்குட ஊர்வலம் நடைபெறும். புரட்டாசியில் நவராத்திரி விழா சிறப்பாக ெகாண்டாடப்படும்.

    இந்த ஆலயத்தில் வராகி அம்மனின் இரண்டு உற்சவ மூத்திகள் உள்ளன. இதுவும் அதிசயமான ஒன்றாகும். 4 கரங்களுடன் உள்ள உற்சவர் ருத்ர வராகி எனப்படுகிறார். இந்த உற்சவர் ஆடித் திருவிழாவில் வீதிவலம் வருவார். மற்றொன்று 8 கைகளுடன் உள்ள விஷ்ணு வராகி உற்சவர். நவராத்திரி விழாவில் இந்த உற்சவர் தான் வீதிவலம் வருவார்.

    இங்கு காளி தெய்வமும் உள்ளது. ஆடு, கோழி பலி பூஜையும் நடத்தப்படுகிறது. இருபது முப்பது சமுதாய மக்களின் குலதெய்வமாகவும் இந்த வராகி அம்மன் உள்ளார். நாமும் சென்று வழிபட்டால் நம் குலத்தையும் தழைக்க வைப்பாள்!

    • சமீப காலமாக தான் ‘ஜீரியாட்ரிக் மருத்துவம்’ எனும் முதியோர் நல மருத்துவப் பிரிவு உலக அளவில் துவங்கப்பட்டு, அவர்களின் மேல் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
    • ஆரோக்கியமான முதியோர் சமுதாயம் உண்டாக்கிட தொடர்ந்து பயணிப்போம். முந்தைய தலைமுறை மூதாதையர்கள் தான் அடுத்தடுத்த தலைமுறையின் நலனுக்கு வழிகாட்டி.

    வயது மூப்பு என்பது அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்று. தலையில் ஏற்படும் நரையும், கண்ணில் ஏற்படும் திரையும், வயது மூப்பின் துவக்க நிலையாக பண்டைய காலம் முதல் கணிக்கப்பட்டு வந்துள்ளது.

    ஆதலால் தான் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு (இறப்பு) ஆகிய இவை ஐந்தையும் வரிசையாய் உடலில் உண்டாகும் மாற்றங்களாக நம் முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளனர்.

    நவீன அறிவியலும், மருத்துவமும் அசுர வளர்ச்சி அடைந்ததன் காரணமாக தற்போதைய காலகட்டத்தில் ஆயுட்காலம் கூடியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெறும் 23 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம், இந்தியா சுதந்திரம் அடைந்த போது (1947) 32-ஆக உயர்ந்தது.

    தற்போதைய காலகட்டத்தில் இந்த சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 67 என்றும், பெண்களுக்கு 69 என்ற அளவிற்கும் உயர்ந்துள்ளது மருத்துவ வளர்ச்சியினால் தான். 2050-ல் இதே சராசரி ஆயுட்காலம் எழுபதை (70) தாண்டிவிடும் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள்.

    முதியோர்களுக்கு ஆயுட்காலத்தின் இந்த அசுர வளர்ச்சி ஆனந்தமாக இருப்பினும், இறப்பு வரையிலும் அவர்களின் உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டுமே என்கிற மன வருத்தம் அவர்களின் ஆனந்தத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறது.

    இப்பூவுலகில் பிறந்து, குழந்தை பருவம் துவங்கி இறக்கும் வரை எட்டு பருவங்களை அடுக்கடுக்காய் தமிழ் நூல்கள் பட்டியலிடுகின்றன. அத்தகைய பருவங்களில் இறுதி பருவமாக இருப்பது வயது மூப்பு பருவம். இறப்புக்கு முந்தைய பருவமும் இது தான்.

    2022-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 6.9 சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 13.8 கோடி பேர் வயது மூப்பு பருவத்தில் உள்ளனர். அதில் ஆண்கள் 6.7 கோடி பேரும், பெண்கள் 7.1 கோடி பேரும் உள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.

    பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகம் என்பதால் வயோதிக பருவத்தில் பெண்களே அதிகம் பயணிக்க வேண்டியுள்ளதாகின்றது.

    இத்தகைய வயது மூப்பு பருவத்தில் உடல் நலனும், மன அமைதியும் பெரும்பாலானவர்களுக்கு கிட்டுவதே இல்லை. உடல் வன்மை இருக்கும் வரை குடும்பத்திற்காகவும், சமூக பொறுப்புகளுக்காவும் உழைத்து உழைத்து உடல் செல்களை சேதாரம் செய்து கொண்டு, வயது மூப்பு பருவத்தில் முடியாமல் இருக்கும் பலர், கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதைப் போல தவறவிட்ட ஆரோக்கியத்தையும், நினைவுகளையும் தேடி அலைபவர்கள் தான்.

    இத்தகைய வயோதிகப் பருவத்தில் உடல் நலக்கேடுகள் ஒரு புறம், குடும்ப சூழ்நிலைகளால் ஏற்படும் மன நலக்கேடுகள் மறுபுறம், எதிர்புறம் நிதி பற்றாக்குறை என தள்ளாடும் வயதில் தாங்கி பிடிக்க ஆள் இல்லாமல், தயங்கி தயங்கி வாழும் மன நிலையில், இறப்பு எப்போது தழுவும்? எனும் ஏக்கம் இயற்கையாகவே உண்டாகிவிடுவது நிச்சயம் வருத்தம் தான்.

    மேற்கூறிய அனைத்தையும் ஒரு சேர சமாளித்து பெரும் சவாலுடன் அடுத்த அடியை எடுத்து வைத்தால் ஆரோக்கியம் அதை விட கடினமான பாதையை உருவாக்கும். இந்த தருணத்தில் ஏன் இந்த வயது மூப்பு ஏற்படுகின்றது? அதனை தடுக்கவே முடியாதா? மரணத்தை தள்ளிப் போட முடியாதா? என்ற ஐயப்பாடு பலருக்கும் ஏற்படும்.

    சமீப காலமாக தான் 'ஜீரியாட்ரிக் மருத்துவம்' எனும் முதியோர் நல மருத்துவப் பிரிவு உலக அளவில் துவங்கப்பட்டு, அவர்களின் மேல் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வயது மூப்புக்கு பல்வேறு காரணங்களும், கோட்பாடும் நவீன அறிவியலால் முன் வைக்கப்படுகிறது. அத்தகைய அறிவியல் காரணங்களை தடுப்பதன் மூலமாக வயோதிகத்தை தள்ளிப்போடும் முயற்சியிலும் நவீன விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர்.

    ஆனால் சித்த மருத்துவம் விஞ்ஞானத்திற்கு முந்தையது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 'காயகல்பம்' என்ற மருத்துவ சிகிச்சை முறையில் உடலை அழியாமல் காக்கும் மருத்துவ முறைகளை சித்தர்கள் கையாண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காயம் என்றால் உடம்பு. கல்பம் என்றால் அழியாமல் காப்பது என்று பொருள் விளங்கும். வயது மூப்பு பருவத்தில் உண்டாகும் உடல் உபாதைகளை தடுக்க சித்த மருத்துவத்தின் காயகல்ப மருந்துகளை நாடுவது நற்பலன் தரும். ஆகவே, இந்த முதியோர் நலன் சார்ந்த மருத்துவ முறைக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் தான் முன்னோடி மருத்துவமாக இருந்து வந்துள்ளது இதில் வெளிப்படை.

    இன்றைய நவீன அறிவியலில் வயது மூப்பிற்கு பல்வேறு காரணங்களும், கருத்துக்களும் விவரிக்கப்படுகிறது. அதில் முக்கியமாக கருதப்படுவது ஆர்.ஓ.எஸ். எனப்படும் எதிர்வினையாற்றும் ஆக்சிஜன் நச்சுப் பொருட்கள். நமது உடலுக்கு வெளியே பல்வேறு நச்சுப் பொருட்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது நாம் அறிந்ததே.

    அதே போல் நம் உடலுக்குள்ளும் நொடிக்கு நொடி நிகழும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றத்தினால் பல்வேறு நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன. அந்த நச்சுப்பொருட்கள் உடலில் உள்ள செல்களை (உயிரணுக்களை) தாக்கி பல்வேறு நோய்நிலைகளுக்கும், வயது மூப்பிற்கும் வழிகோலுகிறது.

    நாள்தோறும் நம் உடலில் உற்பத்தியாகும் இந்த நச்சுப்பொருட்களால், உடலில் உள்ள செல்களுக்கு சேதாரம் (பழுது) ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. இதுவும் வயது மூப்புக்கு முக்கிய காரணமாகின்றது. இந்த பழுதுகளை நீக்கி செல்களை புதுப்பிக்க வேண்டிய கடமை நம் உடலுக்கு உள்ளது. ஆதலால் தான் சத்தான உணவுகளை உண்பது மூப்பினைத் தடுக்கவும், முதியோர் நலனை காக்கவும் அத்தியாவசியமானது.

    அதே போல் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்ற விகிதம் ஆயுட்காலத்துடன் நேர்மாறாக தொடர்பு கொண்டுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது அதிக வளர்ச்சிதை மாற்ற விகிதம் உள்ள நபர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக உள்ளதாகவும், குறைவான வளர்ச்சிதை மாற்ற விகிதம் உள்ள நபர்களுக்கு ஆயுட்காலம் அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    எத்தனையோ பழங்கள் இருக்க அதியமான் அவ்வையாருக்கு ஏன் நெல்லிக்கனியை பரிசளிக்க வேண்டும்? என்று தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நெல்லிக்கனி வயது மூப்பினை தடுக்கக் கூடியது. இன்று நவீன அறிவியல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் 'வைட்டமின் சி'யை அதிக அளவு உடையது நெல்லிக்கனி.

    வயது மூப்பினை உண்டாக்கும் எதிர்வினையாற்றும் ஆக்சிஜன் நச்சுப் பொருட்களை ஒட்டுமொத்த மாக ஓரங்கட்டும் தன்மை இந்த வைட்டமின் சி-க்கு உண்டு என்கிறது நவீன அறிவியல். நவீன அறிவியல் இந்த உண்மையை தற்போது தான் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதியமான் நெல்லிக்கனியை பரிசாக அளித்த புலமை இன்றைய நவீன அறிவியலையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது.

    சித்த மருத்துவத்தில் நோய்களுக்கும் உடலின் இயக்கங்களுக்கும் அடிப்படை காரணங்களான வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் பல்வேறு மாறுபாடுகளால் முதுமையில் பல்வேறு நோய்நிலைகள் உண்டாவதாக விவரிக்கின்றது. முக்கியமாக அதிகரிக்கும் கபமும், வாதமும் இவற்றின் சேர்க்கையான கபவாதமும் பல்வேறு உடல் உறுப்புகளை சிதைத்து தேய்மான நோய்நிலைகளை உண்டாக்குகிறது.

    இந்த முதுமையில் உண்டாகும் தேய்மானம் எந்தவொரு உடல் உறுப்பையும் விட்டுவைப்பதில்லை. பாதிக்கப்படும் உறுப்புகளுக்கு ஏற்ப பல்வேறு உடல் உபாதைகளையும், நோய் நிலைகளையும் உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இறுதியில் இந்த கபவாதமே தீர்க்க முடியாத நோய்நிலைக்கும், இறப்பிற்கும் காரணமாக அமைந்து விடுவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

    இன்றைய வாழ்வியலில் 30 வயதிலேயே நரையும், 40 வயதில் கண்ணில் திரையும் உண்டாகி முதுமையை வரவேற்க துவங்கிவிடுகிறது. வயதாக வயதாக தோலில் கருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் நிறமிச்செல்களின் தேய்மானத்தால் தலையில் மட்டுமல்லாது, உடல் முழுதும் நரை (தோல் வெளுப்பு) உண்டாகக்கூடும். கண்ணில் திரை உண்டாகக் காரணம், கண்ணில் உள்ள லென்சில் புரதச்சத்து அதிகம் படிவதால் அதன் அடர்த்தி அதிகரிப்பதே என்கிறது நவீன அறிவியல்.

    இவ்வாறு உண்டாகும் வயது மூப்பினை தடுக்கவும், முதியோர் பருவத்தில் உண்டாகும் சருமப் பிரச்சினைகள், வயிறு குடல் சார்ந்த பல்வேறு நோய்நிலைகள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தேய்மானத்தால் உண்டாகும் எலும்பு மூட்டு சார்ந்த நோய்நிலைகள், நரம்பு மண்டல தேய்மானத்தால் உண்டாகும் நோய்கள், தூக்கமின்மை, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதை சார்ந்த தொந்தரவுகள், அதிகமாகி வரும் புற்றுநோய், ஆண்களின் புராஸ்டேட் மற்றும் பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் போன்ற பல்வேறு நோய்நிலைகளுக்கு பாரம்பரிய உணவு முறைகளுடன், சித்த மருத்துவம் காட்டும் தீர்வு முறைகளும், இவற்றை தடுக்கும் வழிமுறைகளும், நோய்களை தடுத்து முதுமையை வெல்வதற்கு வழிகளையும் இனி வரும் கட்டுரைகளில் தொடர்ந்து பார்ப்போம்.

    ஆரோக்கியமான முதியோர் சமுதாயம் உண்டாக்கிட தொடர்ந்து பயணிப்போம். முந்தைய தலைமுறை மூதாதையர்கள் தான் அடுத்தடுத்த தலைமுறையின் நலனுக்கு வழிகாட்டி. அனுபவ ஊற்றுக்கள். நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மரபின் கடத்தல்காரர்கள். அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஆரோக்கியத்தை மீட்டளித்து, சமூக நலன் காக்க வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமைகளுள் ஒன்று.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு.
    • குடியிருக்கும் வீட்டின் தென்மேற்கு கெட்டிருக்கும் பட்சத்தில் திருமணம் என்ற ஒரு அத்தியாயம் இல்லாமல் போகிறது.

    வாஸ்து சாஸ்திரம் என்றால் வசிப்பிடம் பற்றிய அறிவியல் என்று பொருள். இயற்கை எனும் சக்தியின் வரையறுக்கப்பட்ட நியதிகளை கடைபிடித்து கட்டிடங்களை உருவாக்குவது வாஸ்து சாஸ்திரமாகும். பலர் வாஸ்து சாஸ்திரம் வேறு ஜோதிட சாஸ்திரம் வேறு என்று நினைக்கிறார்கள். ஜோதிடத்தின் ஒரு பிரிவே வாஸ்து சாஸ்திரமாகும். ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் எப்படி அமைந்துள்ளதோ அந்த அமைப்புக்கு ஏற்றவாறு அவர் வசிக்கும் வீடு அமையும். எனவே ஒருவருடைய ஜாதகத்தை வைத்து அவர்கள் வசிக்கும் வீட்டின் அமைப்பைத் தெரிந்து கொள்ளலாம்.

    "வீட்டைக் கட்டிப்பார்" கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. மனிதர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்தில் வாழ்வதற்கான வீடு கிடைப்பது சவாலாகிவிட்டது. அதுவும் வாஸ்துப்படி அமைவது என்றால் மிகப் பெரிய சவாலாகிவிட்டது. ஒருவருக்கு சொந்த வீடு கிடைப்பது மிகப் பெரிய பாக்கியமாகும். பலருக்கு வீடு கட்டினாலும் அதில் குடியிருக்க முடிவதில்லை அல்லது வீடு கட்டி குடியேறிய பின் பிரச்சினைகள். துரத்துகின்றன. ஆடம்பரமான மாளிகையோ, ஓலைக் குடிசையோ எதுவாக இருந்தாலும் வாஸ்து சாஸ்திரப்படி அமைக்கப்பட்டவை மட்டுமே நிலைத்து நிற்கிறது. வாஸ்து முறைப்படி அமையாத எத்தனையோ வீடுகள் வாழ்க்கை நடத்த முடியாமல் பயனற்று போய்விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம்.

    மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணம். பருவ வயதை அடைந்த ஆண் மற்றும் பெண்ணிற்கு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியும் ஆர்வமும் வருவது இயற்கை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தை தரும் திருப்பமா கவும் ஆரம்பமாகவும் அமைவது திருமணம்.வாழ்வியல் ரீதியான சில காரணங்களால் பலருக்கு திருமண வாழ்க்கை கானல் நீராக இருக்கிறது. வாழ்வியல் ரீதியாக திருமணத் தடைக்கு ஒருவர் குடியிருக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதியும் காரணமாக அமைகிறது.

    ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள யோகங்களின் அடிப்படையிலேயே குடியிருக்கும் வீடு அமையும். மனித வாழ்வின் அடிப்படை தேவையில் வசிக்கும் வீடு முக்கிய பங்கு வகிக்கிறது. வாழும் வீடு வளமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்கு நிம்மதி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.குடும்ப உறவுகள் மகிழ்சியாக வாழ முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

    பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில் ஒருவர் வசிக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதியைத் தான் கன்னி மூலை என்று சொல்லு வார்கள். தென்மேற்கு மூலை வீட்டில் வசிக்கும் கன்னி களுக்கும் கன்னி தெய்வத்திற்குரிய மூலையாகும்.

    ராசிச் சக்கரத்தில் காலபுருஷ ஆறாமிடமான கன்னி ராசியே கன்னிமூலை என்றழைக்கப்படும்.

    பொதுவாக கன்னி மூலை என்பது உயர்ந்தும் நீரோட்டம் இல்லாமல் இருப்பதுடன் எப்பொழுதும் மூடியே இருக்க வேண்டும்.வாஸ்து சாஸ்திரப்படி கன்னிமூலை என்று அழைக்கப்படும் தென்மேற்குப் பகுதி தாழ்வாக இருந்தாலோ, நீரோட்டம் இருந்தாலோ, மூடப்படாமல் இருப்பின், அந்த வீட்டில் தீராத வியாதிகள், பொருள் பற்றாக்குறை மற்றும் சுப காரியத் தடை இருந்து கொண்டே இருக்கும்

    இந்தியாவில் கன்னிமூலை என்று அழைக்கப்படுவது கன்னியாகுமரி மற்றும் கேரள நாட்டின் தென்மேற்கு பகுதிகள். தென்மேற்கு பகுதிகளான கன்னியாகுமரி மற்றும் கேரளா நாட்டின் தென் மேற்கு பகுதிகள் நீரோட்டம் மிகுந்ததாகவும் மேலும் தாழ்ந்தும் காணப்படுகிறது.ஆக இந்தியாவின் கன்னி மூலை பகுதிகள் பாதிக்கப்படுகிறது.

    தென் மேற்கு பகுதி பாதிக்கப்பட்ட காரணத்தால் நமது முன்னோர்கள் அங்கே பிரம்மச்சாரி கடவுள்களை ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு கன்னி மூலை பாதிப்பை வெகுவாக குறையும்படி செய்தனர்.

    அதாவது ராசிச் சக்கரத்தில் கன்னி மூலையை குறிக்கும் தென்மேற்கு பகுதி கன்னி ராசியாகும். அந்த கன்னி ராசியின் ஆரம்ப நட்சத்திரம் உத்திரம் ஆகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் சுவாமி ஐயப்பன். சபரிமலை ஐயப்பன் ரூபம் இந்திய மக்கள் அனைவருக்கும் கன்னிமூலை பாதிப்பிலிருந்து காப்பாற்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட சாஸ்தா ரூபமாகும்.

    இதையே ஒரு ஆய்விற்காக உற்று நோக்கினால் தென் எல்லையை ஆட்சி செய்யும் கன்னியாகுமரி அம்மனும் தென் மேற்கில் அருள் பாலித்து வரும் நமது அய்யன் ஐயப்ப சுவாமியும் கன்னி தெய்வம் தானே. தென்மேற்கு தாழ்ந்தும் நீர் மிகுந்தும் இருப்பதால் தான் குமரி அன்னையும் ஹரிஹர சுதனும் கன்னியாகவே இருக்கிறார்கள்.

    இதேபோல் குடியிருக்கும் வீட்டிற்கும் கன்னி மூலைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காமிடத்தில் ராகு,கேது,மாந்தி மற்றும் நீச அஸ்தமன கிரகங்கள் இருந்தாலோ கன்னி ராசியில் மேலே கூறிய கிரகங்கள் இருந்தாலோ கன்னி மூலை பாதிப்பு நிச்சயம் இருக்கும். போரிங், செப்டிக் டேங்க், பாத்ரூம், கிணறு, பம்ப் போன்ற ஏதோ ஒரு வாஸ்து குறைபாடு இருக்கும். சிலருக்கு பூமிக்கு மேலே பாதிப்பு தெரியாமல் கிணறு இருந்து மூடப்பட்ட இடமாகவோ அல்லது சல்லியப் பொருட்களோ தங்கி இருக்கும்.

    கண்ணுக்கு தெரிந்த, தெரியாத கன்னி மூலை பாதிப்பு வீட்டில் பிறந்த பெண்களின் திருமணதை தடை செய்கிறது அல்லது குலத்திற்கு மாறான திருமணத்தை நடத்தி விடுகிறது. முதிர் கன்னிகள் இருக்கும் வீட்டில் அல்லது ஜனன கால ஜாதகத்தில் விஷ கன்னிகா தோஷம் இருக்கும் பெண்கள் வாழும் வீட்டில் கன்னி மூலை பாதிப்பு இருக்கும். தென் மேற்கு பகுதியின் பாதிப்பால் பல பேர் பல விதங்களில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் கட்டாயம் அது பொய்யாகாது. இது போன்ற அமைப்பால் பாதிப்பு ஏற்படுவதாக சிறிய சந்தேகம் வந்தால் கூட, உடனடியாக அந்த பிரச்சினை என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்து தீர்வு கொள்வது மிகவும் நல்லது. பெண்கள் மட்டுமல்ல ஜாதக ரீதியாக எந்த பிரச்சினையும் இல்லாத ஆண்களும் கன்னி மூலை பாதிப்பால் திருமணத் தடையை சந்திக்கிறார்கள்.

    பெண்களின் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே நடக்க வேண்டிய சம்பவங்கள் பல உள்ளது. அதில் ஒன்று திருமணம். ஒரு பெண்ணின் கழுத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே திருமாங்கல்யம் ஏற வேண்டும் என்பது இந்துக்களின் சம்பிரதாயம். அந்த திருமாங்கல்யம் ஒரே ஒரு முறை கூட கழுத்தில் ஏறாத பெண்களும் இருக்கிறார்கள். பலமுறை தாலியையும், வாழ்க்கைத் துணையையும் மாற்ற வேண்டிய நிர்பந்தமும் சில பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்த இரண்டு நிலைகளுமே ஒரு பெண்ணிற்கு சகிக்க முடியாத கொடுமை தான்.

    குடியிருக்கும் வீட்டின் தென்மேற்கு கெட்டிருக்கும் பட்சத்தில் திருமணம் என்ற ஒரு அத்தியாயம் இல்லாமல் போகிறது. இந்த தோஷமுடைய ஜாதகத்திற்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது.

    இந்திய சமூதாய கட்டமைப்பில் ஆண் என்பவன், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டாலும் பெரியதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒரு பெண்ணிற்கு முதல் திருமணம் விவாகரத்து ஆனாலோ அல்லது கணவனை இழந்தாலோ அவளை இச்சமூகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. பெண்ணும், ஆணைப்போல் மறுதிருமணம் செய்து கொண்டாலும் திருமணத்தில் நிம்மதியற்ற நிலையே தொடர்கிறது.

    பரிகாரம்

    வீட்டின் கன்னிமூலை எப்போதுமே அடைத்து தான் வைத்திருக்க வேண்டும். வீட்டில் கன்னி மூலையானது திறந்த நிலையில், இருக்கும்பட்சத்தில், துர்தேவதைகள் கட்டாயம் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். அப்போது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகளும், தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை.

    கன்னி மூலை பாதிப்பை சரி செய்யாமல் திருமணத் தடைக்கு எவ்வளவு பரிகாரம் செய்தாலும் பலிப்பதில்லை.காலபு ருஷ ஆறாமிடமான கன்னியில் புதன் உச்சம் பெறுகிறார். சுக்கிரன் நீசம் பெறுகிறார். புதன் என்ற புத்தியை பயன்படுத்தி தென் மேற்கு பகுதியை சரி செய்பவர்க ளுக்கு நீச சுக்கிரனால் ஏற்படும் பாதிப்பு குறைந்து வீட்டில் பிறந்த பெண்களுக்கு சுப வாழ்க்கை தேடி வரும்.

    கன்னி மூலை பாதிப்பை சரி செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தென்மேற்கு பகுதியில் சிறிய பீடம் அல்லது

    கபோர்டு அமைத்து அதில் ஆஞ்சநேயர், சுவாமி ஐயப்பன் மற்றும் பாலாதிரிபுர சுந்தரி போன்ற படங்களை வைத்து வழிபட வேண்டும்.

    குடும்பத்தில் பிறந்து கன்னியாக மறைந்த கன்னிகளை வெள்ளி கிழமைகளில் அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.

    ஜோதிடத்தில் எந்த ஒருஸ்தானம் மூலமாக தீய பலன் நடைபெறுகிறதோ அதன் எதிர் ஸ்தான அதிபதியின் அதி தேவதையை வழிபட அந்த ஸ்தானத்தால் வந்த தீய பலன் குறையும்.ஜனன கால ஜாதகத்தில் கன்னி ராசியில் உள்ள கிரகத்தால் கன்னி மூலை பாதிக்கப்பட்டவர்கள் அதன் எதிர் வீடான மீனத்தின் அதிபதி குருவை வழிபட பாதிப்பு குறையும். சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமானுஜர் போன்ற சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபடலாம்.

    ஜோதிடரீதியாக ஆண் ஜாதகத்தில் 2,7ம் அதிபதிகள், 2,7-ல் நிற்கும் கிரகங்கள், சுக்கிரன், தசாபுத்திகள் ஓரளவு சுபத்தன்மையுடன் இயங்கினாலே உரிய வயதில் திருமணம் நடந்துவிடும்.

    பெண் ஜாதகத்தில் 2,7-ம் அதிபதிகள், 2,7-ல் நிற்கும் கிரகங்கள், செவ்வாய், தசாபுத்திகள் ஓரளவு சுபத்தன்மையுடன் இயங்கினாலே உரிய வயதில் திருமணம் நடந்துவிடும்.

    ஆனால் வாழ்வியல் ரீதியாக ஜனன கால ஜாதகத்தில் திருமண பாவகங்களில் எந்த குறைபாடும் இல்லாத பலருக்கு ஏற்படும் இடர்களை ஆய்வு செய்தால் அவர்கள் வசிக்கும் வீட்டின் தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    மனிதர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வினைகளை அனுபவிப்பதற்கு விதிப் பயன் தான் என்றாலும் சுய உணர்வோடு செயல்பட்டு கர்மாவை மாற்றியமைக்க முயற்சி செய்வது சாலச் சிறந்தது.

    • அன்னா ராஜம் முதன்முதலாக சென்னை மாகாணத்தில் பணியேற்க வரும்போது முதல்-அமைச்சராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியார்.
    • “திருமணம் செய்துகொண்டால் நீங்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்” என்ற நிபந்தனையும் விதித்திருந்தனர்.

    "பெண்ணாக இருப்பதால் இந்திய ஆட்சிப் பணிக்கு நீங்கள் பொருத்தமாக இருக்க மாட்டீர்கள். இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை. நீங்கள் அயல்நாட்டு சேவைப் பணி, அல்லது மத்திய அரசுப் பணியை தேர்ந்தெடுக்கலாம்" –மத்திய தேர்வாணைய பணிக்குழு இயக்குநர்கள்.

    "தகுதி இருந்தும் எனக்கு ஏன் இந்திய ஆட்சிப்பணியை மறுக்கிறீர்கள்? நான் அதைத்தான் தேர்வுசெய்வேன்" – அன்னா ராஜம் ஜார்ஜ்"

    இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலும் கூட தனக்கென்று தனிப் பாதையை தேர்ந்தெடுக்கின்ற உரிமைகள் பெண்களுக்கு கிடைக்கவில்லை. படித்து முடித்து தான் விரும்புகின்ற பணியைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமையும் கூட பெண்களுக்கு மறுக்கப்பட்டது என்றால் அப்படியெல்லாமா இருந்தது என்று இப்போதைய தலைமுறையினர் கேட்கக்கூடும்.

    இந்திய ஆட்சிப்பணியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆங்கிலேயர்கள் முதலில் அப்பணிகளுக்கு நியமித்தது ஐரோப்பியர்களை மட்டுமே. அவர்களிடம் இந்திய ஆட்சிப்பணிக்கு சிவில் சர்வீஸ் படித்த இந்தியர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போராடி உரிமையைப் பெற்ற இந்தியர்கள், விடுதலை கிடைத்த பின்னராவது இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஆண்-பெண் வேறுபாடு பார்க்கக்கூடாதென்று நினைக்கக் கூட இல்லை. அதனாலேயே 1950 வரை சிவில் சர்வீசஸ் படிக்க எந்தப் பெண்ணையும் யாரும் அனுமதிக்கவில்லை.

    எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் இருக்கத்தானே வேண்டும். ஆம்! இன்றைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள், இந்திய தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுகளை எழுதுகிறார்கள். நிறையப் பெண்கள் முதலிடங்களைப் பிடிக்கிறார்கள். மிக இளம்வயதில் வெற்றிபெறுகிறார்கள். திறம்பட நிர்வாகம் நடத்துகிறார்கள். இதற்கெல்லாம் விதையிட்டவரும், பெண்களுக்கும் இந்திய ஆட்சிப்பணியைத் தரவேண்டும் என்று போராடிப் பெற்று திறம்பட நி்ர்வாகம் நடத்தி காட்டியவரும் ஒரு அற்புதமான பெண், அவர்தான் அன்னா ராஜம் மல்ஹோத்ரா.

    இளமைக்காலம் மற்றும் கல்வி: எப்போதுமே பெண்கல்வியில் முன்னணியில் நிற்கும் கேரளாவில் பத்தனம்திட்டாவில் உள்ள நிரணம் என்ற கிராமத்தில் ஜூலை 17, 1927 அன்று அன்னா ராஜம் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஓ.ஏ. ஜார்ஜ் மற்றும் அன்னா பால். இவரின் தாத்தா மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய பைலோ பால் ஆவார்.

    கோழிக்கோட்டில் வளர்ந்த அன்னா ராஜம், தன் பள்ளிக்கல்வியையும் அங்குதான் முடித்தார். புரவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியும், கோழிக்கோட்டின் மலபார் கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

    கல்வியில் தீராத ஆர்வம் கொண்ட அன்னா ராஜம், தன் மனதில் பல்வேறு உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருந்தார். இந்திய ஆட்சிப்பணித் தேர்வை வென்று ஆட்சியராக அமரவேண்டும் என்பது அதில் ஒன்று. அதன் முதல்படியாக சென்னைக்குச் சென்று, சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கில இலக்கியத்தினை சிறப்பாகப் பயின்று 1949-ல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய முதல்பெண்: தன் லட்சிய வேள்வியான இந்திய ஆட்சிப்பணியை அடையும் முயற்சிகளின் முதல்கட்டமாக 1950-ல் இந்திய ஆட்சிப்பணித் தேர்வினை எழுதி வெற்றிபெறுகின்றார் அன்னா ராஜம். சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெறுகிறார். அடுத்ததாக நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார். தான்தான் அத்தேர்வை எழுதி நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட முதல்பெண் என்பதைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை.

    ஆட்சிப்பணியைப் பெறுவதில் போராட்டம்: 1951-ல் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்று அதில் கலந்து கொண்டபோது, யு.பி.எஸ்.சியின் (UPSC) அப்போதைய தலைவர் ஆர்.என்.பானர்ஜி தலைமையிலான நான்கு ஐ.சி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட நேர்காணல் குழு, அன்னா ராஜத்திடம் "எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறீர்கள்?" என்று கேட்டனர். "Indian Administrative Service" என அதற்கு பதிலளித்தார் அன்னா ராஜம்.

    இந்திய ஆட்சிப் பணியை தேர்ந்தெடுப்பதை விட, வெளியுறவு சேவை அல்லது மத்திய சேவைகளில் சேருமாறு கேட்டுக் கொண்டது நேர்காணல் செய்த ஆண்கள் அடங்கிய அக்குழு. ஏனென்றால், ஐ.ஏ.எஸ் பதவியுடன் ஒப்பிடும்போது அந்தப் பதவிகள் "பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை" என்று அந்த கனவான்கள் நம்பியதோடு அன்னா ராஜத்திடம் வலியுறுத்தவும் செய்தனர்.

    தன்நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்றல்: தேவையான நேரத்தி்ல், தேவையான விஷயங்களை, தேர்ந்தெடுப்பதில் தவறு செய்துவிட்டால் வாழ்கின்ற காலம்வரை நாம் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டி வரும் அல்லவா!

    ஆனால் அன்னா ராஜம் தன் தேவை எது என்பதில் மட்டுமல்ல, அதனைப் பெறுவதில் உறுதியாகவும் இருந்தார். தகுதியிருந்தும் தனக்கு ஏன் ஐ.ஏ.எஸ். பணி மறுக்கப்படுகிறது எனக் கேட்டு அதுதான் வேண்டுமென்று உறுதியாக இருந்து, மெட்ராஸ் கேடரில் பணியையும் பெற்று "முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி" என்ற பெருமையோடு வெளியில் வந்தார்.

    ஆண்கள் கோலோச்சும் துறையில் ஒரு பெண் சாதிக்கமுடியுமா என்ற சந்தேகத்தோடு அவர்கள் அன்னா ராஜத்தின் பணி நியமன ஆணையில், "திருமணம் செய்துகொண்டால் நீங்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள்" என்ற நிபந்தனையும் விதித்திருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்விதி திருத்தம் செய்யப்பட்டு நீக்கப்பட்டது.

    மீண்டும் ஒரு போராட்டம்: அன்னா ராஜத்தின் மனதில் இருந்த இந்திய ஆட்சிப்பணி பெற்றுவிட்டோம்; சாதித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி எல்லாம் மெட்ராஸ் கேடருக்கு வந்தவுடன் மறைந்துபோயின. ஒரு சங்கிலியை விடுவித்து வெளியே வந்தால் மற்றொரு சங்கிலி காத்துக் கொண்டிருந்தது.

    அன்னா ராஜம் முதன்முதலாக சென்னை மாகாணத்தில் பணியேற்க வரும்போது முதல்-அமைச்சராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியார். பொதுவாகவே அப்போதைய ஆண்களின் மனதை பிரதிபலிப்பவராக இருந்தவர் ராஜாஜி. பெண்கள் பொதுச் சேவையில் நுழைவதில் விருப்பம் இல்லாதவர்.

    ஆட்சிப்பணித் துறைக்கென ஒரு பெண் பணிநியமனம் பெற்றுவந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் பெண்ணால் அதனை சமாளிக்க முடியாது, கையாளவும் முடியாது என்பதை காரணம் காட்டி அன்னா ராஜத்திற்கு மாவட்ட துணை ஆட்சியர் பதவியான சப்-கலெக்டர் பதவிக்குப் பதிலாக தலைமைச் செயலகத்தில் ஒரு பதவியை ஒதுக்கித் தந்தார்.

    முதல்-அமைச்சருடன் விவாதம்: சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒதுக்கிய துறையை ஏற்றுக்கொள்ள அன்னா ராஜம் தயாராக இல்லை. தான் பெற்றுள்ள பயிற்சிகளைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பெண் என்ற காரணத்தால் தன்னை குறைத்து மதிப்பிட்டுப் பேசிய முதல்வரிடம் விவாதிக்கத் தயாரானார் அன்னா ராஜம்.

    "வாய்ப்பே தராமல் என்னால் முடியாது என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?" என்றும், தான் பெற்றுள்ள பயிற்சிகளான குதிரை சவாரி, துப்பாக்கி மற்றும் ரிவால்வர் சுடுதல் திறன், மாஜிஸ்திரேட் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பெற்றுள்ள பயிற்சிகள், சட்டம் ஒழுங்கு சூழ்நிலைகள் எழும்போது அவற்றைக் கையாள்வதில் எந்த ஆணுக்கும் தான் குறைவானவர் அல்ல என்றும் அழுத்தம் திருத்தமாக வாதிட்டார் அன்னா ராஜம். இறுதியில் ராஜாஜி அவர் எடுத்து வைத்த வாதங்களுக்கு அடிபணிந்தார். ஒசூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல்பெண் ஆனார் அன்னா ராஜம்.

    ராஜாஜியின் பாராட்டு: சட்டம் ஒழுங்கை கையாள முடியாது என்று அன்னா ராஜத்தைப் பார்த்து பேசிய முதல்வர் ராஜாஜியே, அவரின் திறமைகளைக் கண்டும், பணியாற்றும் விதத்தைப் பார்த்தும், திருச்சிராப்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் முற்போக்குப் பெண்களுக்கு உதாரணமாக திகழ்கிறார் அன்னா ராஜம் என்று பாராட்டினார்.

    பாலினப் பாகுபாட்டிற்கெதிரான போராட்டம்: ஓசூர் சப்-கலெக்டராக பணியாற்றியபோது, தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு குதிரையில் சென்றார் அன்னா ராஜம். அப்போது அந்த கிராமத்துப் பெண்கள் அவரை பார்க்க விரும்புவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

    எங்களை மாதிரிதான் இருக்கிறார் : அன்னா ராஜமும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர்கள் அவரைச் சுற்றி சுற்றி நடந்தார்கள். அருகில் வந்து உற்று உற்றுப் பார்த்தார்கள். அப்போது ஒரு மூதாட்டி, "இவர் எங்களில் ஒருத்தியைப் போலத்தான் இருக்கிறார்" என்று வேறு எதையோ எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் கூறினார். அதிகாரியாக வந்த ஒரு பெண்ணிடமிருந்து மக்கள் வித்தியாசமாக எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை அன்னா ராஜம் உணர்ந்தார். அந்த சூழல் என்பது பெண்கள் எந்தளவிற்கு பெண் முன்னேற்றம் என்பது வாய்ப்புகளும் திறன்களையும் பொறுத்தது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

    திருமணம்: அன்னா ராஜம் தன் சக ஆட்சிப்பணி அதிகாரியும், அன்புத் தோழருமான ஆர்.என். மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொண்டார். கணவரைப் பற்றி குறிப்பிடும்போது அன்னா ராஜம், "நான் காத்திருந்து திருமணம் செய்துகொண்டது மிகவும் மதிப்புமிக்கது. மிகச் சிறந்த மனிதாபிமான குணங்களைக் கொண்டவர் மல்ஹோத்ரா" என்று குறிப்பிடுவார். இவர்கள் திருமணம் செய்துகொண்டபோது வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார் மல்ஹோத்ரா. மேலும், இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நிதிச் செயலாளராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 1985-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டுவரையும் பதவி வகித்தவர் அன்னா ராஜத்தின் கணவர் ஆர்.என். மல்ஹோத்ரா.

    பிரதமர் இந்திராகாந்தியுடன் பணியாற்றுதல்: அன்னா ராஜம் மல்ஹோத்ரா தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர். ஆனால் அப்பெயர் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. நிர்வாகப் பணிகளில் பல்வேறு துறைகளிலும் ஏழு முதல்-அமைச்சர்களின் கீழ் பணியாற்றியும், இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அவருடன் உணவு உற்பத்தி பெருக்கத்தினை முன்வைத்து "எட்டு நாடுகள் சுற்றுப்பயணம்" மேற்கொண்ட பெருமைக்குரியவராகவும் திகழ்ந்தார் அன்னா ராஜம்.

    நவா ஷேவா துறைமுகத்தை கணிணி மயமாக்கும் பொறுப்பை திறம்பட செய்துமுடித்தல் இதற்கு முன் செய்திராத ஒரு புதிய பொறுப்பு அன்னாராஜம் வசம் ஒப்படைக்கப்பட்டது. மும்பையில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுகத்தை முதன்முறையாக முழுவதும் கணிணிமயமாக்க வேண்டும் என்பதே அது. இத்தகைய திட்டத்தை இதுவரை கையாளாத அன்னாராஜத்திற்கு இப்பணி மிகச்சவாலாக விளங்கியது. தினமும், தெற்கு பம்பாயில் கார்மைக்கேல் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்டு, கேட்வேயில் இருந்து காலை 7 மணிக்கு படகைப் பிடித்து, நவா ஷேவாவுக்குப் புறப்பட்டு வந்து, வெறிச்சோடிக் கிடக்கும் சதுப்பு நிலமாகவும், உப்பு நிலமாகவும் இருந்த இடத்தில் பணியாற்ற வேண்டியிருந்தது.

    பிரதமர் ராஜிவ்காந்தியின் பாராட்டு: துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி, துறைமுகத்திற்கு அவ்வப்போது வந்து பார்த்து அன்னா ராஜத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.

    இந்தியாவின் முதல் கணினிமயமாக்கப்பட்ட துறைமுகமான நவா ஷேவா (Nhava Sheva) (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) மும்பையில் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்து தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்தார் அன்னா ராஜம். பணியாற்றும் போதும், பணி ஓய்விற்குப் பின்னரும் தான் ஏற்றுக்கொண்ட அத்தனை பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்து பெயரும், புகழும் 'பத்மபூஷன்' விருதும் பெற்ற அன்னா ராஜம் மல்ஹோத்ரா, தன்னுடைய 91வது வயதில் செப்டம்பர் 17, 2018 அன்று மறைந்தார்.

    தொடர்புக்கு-ruckki70@yahoo.co.in

    ×