search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.
    • குருமங்கள யோகத்தை அதிகரிக்கும் வழிபாட்டை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    கோட்சாரத்தில் வருகிற ஆகஸ்டு 26-ந் தேதி வரை ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் இணைந்து சஞ்சாரம் செய்கிறார்கள். இந்த கிரக சேர்க்கை குருமங்கள யோகமாகும். இந்த கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களை நேற்று விரிவாக பார்த்தோம். தற்போது 12 ராசியினருக்கும் இந்த கிரக சேர்க்கையினால் உண்டாகும் பலன்களைப் பார்க்கலாம்.

    மேஷம்: தாராள தன வரவு

    ராசிக்கு 2-ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. ராசி அதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான செவ்வாயும் பாக்கிய அதிபதி, விரய அதிபதியான குருவும் சேர்ந்துள்ளனர். இதனால் மேஷ ராசிக்கு வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித் திறமை மேம்படும். தன வரவில் நிலவிய தடை தாமங்கள் விலகும். சேமிப்புகள் உயரும். வராக்கடன்கள் வசூலாகும்.

    குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மன சஞ்சலங்கள் விலகும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும் . பூர்வீகச் சொத்து மீதான வம்பு, வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். சுப விரயங்கள், சுப விசேஷங்கள் நடைபெறும். திருமணம், குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பழநி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

    ரிஷபம்: திருமணத்தடை அகலும்

    ரிஷப ராசியில் 7,12-ம் அதிபதி செவ்வாயும் 8,11ம் அதிபதி குருவும் இணைந்து குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் தனது சம சப்தம பார்வையால் குருவுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், ராகு/கேது தோஷம் விலகி திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கைத் துணை மூலம் சொத்து அதீத பொருள் வரவு உண்டாகும்.

    பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். கூட்டுத் தொழிலில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மறையும்.நிலம், வாகனம் வாங்க நினைத்தால் வெற்றி கிடைக்கும், மேலும் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் அரசு உத்தியோக முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு விபரீத ராஜ யோகம் உண்டு. திருப்பரங்குன்றம் முருகனை வழிபடவும்.

    மிதுனம்: சுப விரயங்கள் உண்டாகும்

    ராசிக்கு 12-ம் மிடமான அயன, சயன, வெளிநாட்டு பயண ஸ்தானத்தில் குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. 7, 10-ம் அதிபதி குருவும். 6,11-ம் அதிபதியான செவ்வா யும் இணைந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். கடன் பெற்று வீடு, வாகன, யோகம் மற்றும் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற சுப தேவைகளை நிறைவு செய்வீர்கள். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வெளிநாடு செல்வதற்கான அறிகுறிகளும் உள்ளன. புதிய தொழில் முதலீட்டில் கவனம் தேவை.

    தடைபட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உடல்நலப் பிரச்சிினைகள் சீராகும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் சீராகும். வாழ்க்கைத் துணையால் நண்பர்க ளால், தொழில் கூட்டாளியால், வாடிக்கை யாளர்களால் சகாயமான பலன் உண்டு. பட்டமங்கலம் சென்று குரு பகவானை வழிபடவும்.

    கடகம்: காதல் வெற்றி

    ராசிக்கு 11-ம் மிடமான லாப ஸ்தானத்தில் 5,10-ம் அதிபதியான செவ்வாயும், 6,9-ம் அதிபதியான குருவும் சேர்க்கை பெற்று குரு மங்கள யோகத்தை வலுப்படுத்துகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும், பாக்கிய அதிபதி குருவும் ஒருங்கே பலம் பெறுகிறார்கள். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். முன்னோர்கள் வழிபாடு, பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றின் மூலம் பாக்கிய பலன்கள் அதிகமாகும். கடனால் வம்பு வழக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.

    தொழில், உத்தியோகத்தில் நிலவிய மன சஞ்சலம் விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். சிலருக்கு சுய விருப்ப விவாகம் நடக்கலாம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பாக தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். செவ்வாய் கிழமை திருத்தணி முருகனை வழிபடவும்.

    சிம்மம்: தொழில் விருத்தி

    ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் 4,9ம் அதிபதி செவ்வாயும் 5, 8ம் அதிபதி குருவும் இணைந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்துகிறார்கள். வங்கிப் பணி, ஆசிரியர் தொழில், ஜோதிடம், நிதி நிர்வாகம் போன்ற பணிகளில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். அரசியல், ஆன்மீகம் போன்ற துறைகளில் ஆர்வம் அதிகமாகும். தாய், தந்தை வழிச் சொத்தில் நிலவிய சர்ச்சைகள் விலகி முழு பங்குத் தொகையும் கிடைக்கும். நீண்ட கால திட்டங்கள் நிறைவேறும்.

    பங்குச் சந்தை, உயில் சொத்து, லாட்டரி போன்ற அதிர்ஷ்ட வருமானம் உண்டு. சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும்.ஆலங்குடி சென்று குரு பகவானை வழிபடவும்.

    கன்னி: இடப்பெயர்ச்சி

    கன்னி ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் 4, 7ம் அதிபதி குருவும் 3,8ம் அதிபதி செவ்வாயும் இணைகிறார்கள். இது குரு மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறது. இடப்பெயர்ச்சி செய்ய, முக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபட சிறப்பான காலம். முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்கு உண்டு. பிறவிக்கடனும், பொருள் கடனும் தீர்க்க உகந்த காலம். பாகப்பிரிவினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி தந்தை வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும்.

    பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தாங்க முடியாத வைத்தியச் செலவுகள் குறையும். கூட்டுத் தொழிலில் பிரிவினை, கருத்து வேறுபாட்டால் தம்பதிகள் பிரிவினை போன்ற பாதிப்புகள் சீராகும். அசையும், அசையாச் சொத்துக்கள் சேரும். தாய், தாய் வழி உறவுகளின் அன்பும், ஆதரவும் நிறைந்து இருக்கும். சகல வசதிகளும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். மருதமலை முருகனை வழிபடவும்.

    துலாம்: பேரதிர்ஷ்டம்

    ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் துலாம் ராசிக்கு 2, 7-ம் அதிபதியான செவ்வாயும் 3, 6-ம் அதிபதியான குருவும் இணைந்து குருமங்கள யோகம் உருவாகி உள்ளது. துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும் பேரதிர்ஷ்ட மும் ஒருங்கே சேர்ந்து செயல்படும் அமைப்பாகும். ஞாபக சக்தி கூடும். கண், காது, மூக்கு பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். கை மறதியாக வைத்த பொருட்கள், தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும். வழக்குகள் தள்ளுபடியாகும்.

    புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்யலாம் . வீடு, மனை, சொத்து சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டு. தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் தொடர்பான சில மன உளைச்சல் இருக்கும். திருமணத் தடை அகலும். 2வது குழந்தை பிறக்கும்.சுவாமிமலை முருகனை வழிபடவும்.

    விருச்சிகம்: வருமான உயர்வு

    விருச்சிக ராசிக்கு 7ம்மிடமான சம சப்தம ஸ்தானத்தில் ராசி மற்றும் 6ம் அதிபதியான செவ்வாயும் 2 ,5ம் அதிபதியான குருவும் சேர்ந்து நிற்பது குருமங்கள யோகம். இதனால் செயல்களில் வெற்றி உண்டாகும். வருமானமும் வசதியும் உயரும். பொன் பொருள் சேரும். குல தெய்வ பிரார்த்த னைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த காலம். குழந்தைக்காக ஏங்கிய வர்களின் விருப்பம் நிறைவேறும். உயர் கல்வி யோகம் உண்டு.

    வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை, ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.பூர்வீக சொத்து பிரச்சினை முடிவிற்கு வரும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. சுய ஜாதகரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடை பெறும். தொழில், கூட்டுத் தொழில், உத்தியோகத்தில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். குன்றத்தூர் முருகனை வழிபடவும்.

    தனுசு: கடன் கிடைக்கும்

    தனுசு ராசிக்கு 6ம்மிடமானருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ராசி அதிபதி, சுக ஸ்தான அதிபதியான குரு 5,12ம் அதிபதியான செவ்வாயுடன் சேருகிறார். இது தனுசு ராசிக்கு குரு மங்கள யோகத்தை மேம்படுத்து கிறது. சுக போகங்களையும், யோகங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் கூடும். விவசாயம் செழிக்கும். தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும்.

    இதுவரை எதிர்பார்த்த, விண்ணப்பித்த தொழில், விவசாய, சொத்து வங்கி கடன் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை பாராட்டு உண்டு. அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் துவங்க அரசின் ஒப்புகை கிடைக்கும். சிலர் வேலை மாற்றம் செய்யலாம்.சோலைமலை முருகனை வழிபடவும்.

    மகரம்: சுப யோகம்

    ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4,11-ம் அதிபதி செவ்வாயும் 3, 12-ம் அதிபதி குருவும் சேர்ந்து நிற்பது குருமங்கள யோகமாகும். ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார உயர்வை தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும் போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுப யோகமும் உண்டாகிறது.

    சிலர் உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடைகள் அகலும். வடபழனி முருகனை வழிபடவும்.

    கும்பம்: கடன் தீரும்

    ராசிக்கு 4 ம்மிடமான சுக ஸ்தானத்தில் 2 ,11ம் அதிபதி குருவும் 3,10ம் அதிபதி செவ்வாயும் சேர்ந்து குருமங்கள யோகத்தை ஏற்படுத்து கிறார்கள். குருமங்கள யோகம் கும்ப ராசிக்கு வரமாக செயல்படும். நிச்சயம் வீடு மனை யோகம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். 16 வகைச் செல்வங்களும் நிறைந்து இருக்கும். பாதை இல்லாத சொத்து, பட்டா இல்லாத சொத்து, முறையான ஆவணங்கள் இல்லாத சொத்து தொடர்பான சங்கடங்கள் விலகும்.

    தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும் . வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். சட்ட சிக்கல்கள் தீரும். பேச்சுத் திறமை, லௌகீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் தாக்கம் குறையும். காது, மூக்குத் தொண்டைக்கான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். குருவித்துறை குருபகவானை வழிபடவும்.

    மீனம்: நல்ல மாற்றம்

    ராசிக்கு 3ம்மிடமான உப ஜெய ஸ்தானம், சகாய ஸ்தானத்தில் ராசி அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி குருவும் தன அதிபதி, பாக்கிய அதிபதி செவ்வாயும் இணைத்து குருமங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. வீடு மாற்றம், வேலை மாற்றம், நாடு மாற்றம் என வாழ்க்கை வளம் பெறத் தேவையான மாற்றங்கள் உண்டாகும். இலவச ஆபர் கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவதாக கூறுபவர்களிடம் பணம் கொடுப்பது, ஆன்லைன் வணிகம், ஷேர் மார்க்கட், சொத்து வாங்குதல், விற்றல், ஜாமீன் கையெழுத்து போடுதல் போன்றவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    குடும்ப உறவுகளுடன் சாதகமான போக்கு தென்படும்.உங்களுக்கு மன அமைதியைத் தரும் நண்பர்களின் சந்திப்பால் மன நிம்மதி கூடும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

    மாலை மலர் வாசகர்கள் குருமங்கள யோகத்தை அதிகரிக்கும் வழிபாட்டை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள்.
    • குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது.

    ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று தான் குரு மங்கள யோகம்.

    குரு மற்றும் செவ்வாய் சம்பந்தத்தால் ஏற்படும் குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வரராக மாற்றியுள்ளது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் நிறைந்த சொத்து சுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இவர்கள் பிறவி கோடீஸ்வரராக இருப்பார்கள். சிலர் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள். தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும்சேர்ந்து உள்ளனர்.

    இந்த குருவும், செவ்வாயும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஒரு ராசியில் இணைவதால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் இணைவதால் பெரும் பலன்கள் கிடைக்கப் போகின்றன. குரு மங்கள யோகம் பற்றிய சில தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

    குருபகவான்

    சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு பகவான் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னத மான உணர்வுகளை உண்டாக்கக் கூடியவர்.

    நவகிரகங்களில், எதிர்மறை பலன் எதுவும் தன்னகத்தே கொண்டிராத முழு சுபகிரகம் குரு. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இவரே தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல் வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றிற்கு காரகன்.

    ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை, சொத்து சுகம் மிகச் சிறப்பாக இருக்கும்.இவை தவிர்த்து பணம் சார்ந்த வங்கி, நிதி நிறுவனங்கள், சிட் பண்டுகள், தங்க நகை கடை , நகை செய்யும் வேலை , மஞ்சள் வியாபாரம் போன்ற தொழிலில், உத்தியோகத்தில் இருப்பார்கள்.

    கால புருஷ தத்துவப் படி குரு 9, 12 -க்குடையவர். தனுசு ராசியில் மூலத்திரிகோணம் ஆட்சி. மீனத்தில் ஆட்சி. தனுசு ஒரு நெருப்பு ராசி, மீனம் நீர் ராசி. இரண்டுமே உபய ராசி. குரு நட்சத்திரத்திலும், குருவின் பார்வையிலும் அதிக கிரகம் இருந்தால் அது யோக ஜாதகம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீய பலன்களை குறைத்து, நல்ல பலன்களை செய்யும்.

    பாக்கிய ஸ்தானம் மற்றும் அயன சயன போக ஸ்தானத்திற்கு பொறுப்பு வகிக்கும் குரு பகவான் நல்ல நிலையில் இருக்கும் போது தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், புண்ணிய மற்றும் தீர்த்த யாத்திரை, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமை பதவியில் அமர வைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார்.

    சமூகத்தில் பெரிய மனித தோரணை ஏற்படுத்த கூடியவர். திருமணம், இல்லற இன்பம், வெளிநாட்டு வாழ்க்கை மோட்சம், முக்தி நிலை பெறுதல் போன்றவற்றை 12ம்மிடத்தின் மூலம் தருவார். குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்த ஒரு ஜாதகத்திலும் கெட்டு போக விடாது.

    செவ்வாய்

    செவ்வாய் பூமிக் காரகன், ரத்த காரகன் மற்றும் யுத்த காரகன். தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன் பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும். இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12ம்மிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை, தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம்.

    அதன்படி செவ்வாய் பலம் பெற்றால் உயிர் காரகத்துவமான உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரனை, ஆதாயம் உண்டு. பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்த குடும்பத்தை கட்டுக் கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார்.

    பொருள் காரகத்துவமான அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன் பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும்.

    பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரனையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதே போல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவது நாம் அறிந்ததே.

    அதனால் செவ்வாய் தோஷம் பற்றி 1000 பட்டி மன்றம் நடத்தினாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். அதே போல் ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்திய ரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும், உடன் இணைந்த, சேர்ந்த, பார்த்த கிரகத்திற்கு ஏற்ப அணுகும் போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும்.

    குருமங்கள யோகம்

    இத்தகைய குரு மற்றும் செவ்வாய்க்கு ஒரு ஜாதகத்தில் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குரு மங்களயோகமாக செயல்படும். புனிதன் குருவிற்கும் மங்களன் செவ்வாய்க்கும் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குருமங்களமாக செயல்படும்.

    ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும் செவ்வாயின் 4,7,8ம் பார்வையில் குரு இருந்தாலும் குருவின் 5,7,9ம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் குருமங்கள யோகமாகும். நிச்சயம் வீடு, மனை, யோகம் நிறைவேறும்.

    நல்ல ஆடம்பரமான வசதியான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். சகல சவுபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கவுரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர்கள் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பண்ணை யாளர்களாக இருப்பார்கள்.

    தாய்வழி பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

    தாய் வழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு, அனுசரனை உண்டு.இவர்கள் பிறவியில் ஏழையாக பிறந்தாலும் இந்த அமைப்பு இருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள்.

    அத்துடன் எந்த கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுப பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்திய ரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.

    உதாரணமாக குரு என்றால் குழந்தை, பணம், தங்கம். கோடிக்கான பணம், தங்கத்தை குறிக்கும் கிரகம் ஒரு ஜாதகத்தில் பலமாக இருந்தால் அளவிற்கு அதிகமாக பணம் வைத்து இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் மூலம் மன வேதனையை தருவார்.

    நல்ல பண்பான பிள்ளைகளைத் தரும் குருபகவான் அவர்களை நல்ல முறையில் வளர்க்கத் தேவையான பொருளாதாரத்தை வழங்கு வதில்லை. ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த வித மான யோகங்களாக இருந்தாலும் 4 விதமாகவே பலன் வழங்கும்.

    1. பொருள் காரகத்துவத்தை அபரிமிதமாக வழங்குதல். பொருள் காரகத்துவம் என்றால் தேவைக்கு அதிகமான பணம் மற்றும் சொத்துக்களை வழங்குதல்.

    2. போதிய பண வசதி இல்லாவிட்டாலும் உயிர் காரகத்துவங்களால் அதீத அன்பை பெறுவது. அதாவது உற்றார், உறவினர்கள், பெற்றோர்கள், மனைவி, மக்களின் அன்பு, மரியாதையை பெற்று மகிழ்ச்சியாக வாழ்வது.

    3. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் பரிபூரணமாக கிடைத்து நிம்மதியாக வாழ்வது. தேவைக்கு அதிகமான பணம், உபரியான சொத்துக்கள், சிறப்பான தொழில் அல்லது கவுரமான உத்தியோகம், நல்ல பெற்றோர்கள், அன்பான வாழ்க்கைத் துணை, அனுசரணையான பிள்ளைகள் என சகல ஐஸ்வர்யத்து டன் வாழும் வாழ்க்கை.

    4. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் இரண்டும் இன்றி வாழ வேண்டிய நிலை.அடிப்படை தேவைக்கு கூட திணறும் நிலை, உறவினர்களால் மன உளைச்சல். பூமியில் ஏன் பிறந்தோம் என்று நிர்பந்தத்திற்காக வாழ்தல்.

    தற்போது கோட்சாரத்தில் குருவும் செவ்வாயும் ரிஷப ராசியில் ஓரே ராசியில் சேர்ந்து உள்ளார்கள். இந்த கிரக கூட்டணியால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்க்கலாம்.

    குருமங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள்.

    நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சொத்து சேர்க்கை, மருத்துவராகும் யோகம், விவசாயத்தின் மூலம் வருமானம், நல்ல மன ஆரோக்கியம், நல்ல நிலையில் இருக்கும் தாய், தந்தை , சீருடை பணி, காவல் துறை, ராணுவத்தில் வேலை, நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், தீயணைப்புத் துறை, சமையல் வேலை, தொழில் போன்றவற்றை செவ்வாய் மற்றும் குருவின் வலிமையைப் பொருத்து இந்த கிரகங்கள் கொடுக்கும் எனலாம்.

    செல்வாக்கு, சொல் வாக்கு, புகழ், அந்தஸ்து, கவுரவம், மரியாதை தானாக உயர்வது, எதிரிகள் இல்லாத சூழல், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், துணிந்து செய்யும் காரிய சித்தி வெற்றி, சகோதர வழி ஆதரவு, சகோதர மேன்மை, எதையும் சாதிக்கும் ஆண் வாரிசுகள், வாரிசுகளால் உண்டாகும் பெருமை, அதிகார அந்தஸ்து நிறைந்த உத்தியோகம், தொழில். நாடாளும் யோகம்.

    சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். ரியல் எஸ்டேட், புரமோட்டர்ஸ், போர்வெல்ஸ், காவல் உயர் அதிகாரி, நிர்வாக அதிகாரிகளை உருவாக்கு வதும் இந்த குரு மங்கள யோகம் தான்.

    இந்த கிரகச் சேர்க்கை அதாவது குருவும் செவ்வாயும் மேஷம், சிம்மத்தில் நின்றால் ஜாதகரின் சொத்து மதிப்பை கணக்கிட முடியாத விதத்தில் அதீத சொத்து சேர்க்கை இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த கிரக சேர்க்கை பார்வையில் குருவும் செவ்வாயும் நட்பு ஆட்சி உச்சம், நீசபங்க ராஜயோகம், திக் பலம் ஆக இருந்து தசா நடக்கும் போது லக்னாதிபதி வலுவுக்கு ஏற்ப பலனை வாரி வழங்குவார்கள். மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம், ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதன்மையான யோக பலனை தரும்.

    குருமங்கள யோகத்தால் ஏற்படும் அசுப பலன்கள். இரண்டு கிரகங்களும் எதிர்மறை பகை வீடுகளில் ஒன்றாக வரும்போது அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை நோக்கித் திரும்புகிறது.

    குரு செவ்வாய் தரும் குரு மங்கள யோகத்தில் ராகு கேது இணைவது , சனி இணைவு பார்வை பெறுவது, அல்லது சூரியனால் அஸ்தங்க தோச பெறும் போது பலன் குறைவுபடும் அல்லது யோகம் தராது. ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசி, லக்னத்திற்கு சுப பலன் குறைவு படும்.

    லக்னாதிபதி, ராசி அதிபதி ஓரளவு நல்ல கேந்திர கோணத்தில் பாதிக்காமல் இருப்பதும் யோகத்தை அனுபவிக்க வழி செய்யும். கோட்சாரமும் குரு மங்கள யோகமும் தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியில் குருவும், செவ்வாயும் சேரும் இந்த கிரகச் சேர்க்கை ஆகஸ்டு 26 வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.

    ஜோதிடத்தின்படி, அதிர்ஷ்டம், செழிப்பு, கல்வி, அறிவு போன்றவற்றுக்கு காரணமான கிரகமான குருபகவான் தைரியம், வீரம், சொத்து, சுகத்திற்கு காரக கிரகமான செவ்வாயுடன் சேருவதால் ஒரு சில ராசிக்கு, வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. 12 ராசிக்கும் ரிஷப ராசியில் ஏற்பட்டுள்ள குரு மங்கள யோகத்தால் ஏற்படப் போகும் மாற்றங்களை நாளை காணலாம்.

    தொடரும்...

    • தூய அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டியவர் காமராஜர்.
    • நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.

    பெருந்தலைவரும், காமராஜரும் ஒருவர்தானே...?

    தலைப்பு குழப்புகிறதே என குழம்ப வேண்டாம்.

     நாட்டு நலனே முக்கியம் என தூய அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டி நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர், பெருந்தலைவர் காமராஜர். இவருடைய தங்கை நாகம்மாள். இவருக்கு ஜவகர், மோகன் என 2 மகன்கள்., மங்கலம், கமலம் என 2 மகள்கள். இவர்களில் ஜவகரின் மகன் காமராஜ்.

    அதாவது, பெருந்தலைவரின் தங்கை வழி பேரன். வயது 60. இந்த காமராஜை விருதுநகரில் சந்தித்தோம். பெருந்தலைவர் குறித்து பல சுவாரசிய தகவல்களை கூறினார். அதை இங்கே கேட்போம்.

    "எங்கள் தாத்தா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். இதனால் எங்கள் பாட்டியையும், அவரது பிள்ளைகளையும் (அதாவது காமராஜரின் தங்கை மற்றும் குழந்தைகள்) பாதுகாத்து கரை சேர்ப்பது உன் பொறுப்பு என காமராஜரிடம் அவரது தாயார் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    அதன்படி அவரும் கடைசி வரை எங்கள் குடும்பத்தினரை வளர்த்து ஆளாக்கி, தனது கடமையை செய்தார். அவரை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தபோதே காமராஜ் என எனக்கு பெயர் வைத்தனர்.

    குடும்பத்தினர் அனைவர் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டு இருந்தார் காமராஜர்.

    நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் அடிக்கடி அவர் கூறிய அறிவுரைகள் இப்போதும் நல்ல ஞாபகத்தில் உள்ளன. நல்ல பழக்கங்களை பழக வேண்டும். கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எப்போதும் கூறுவார். அவர் இருக்கும் வரை விருதுநகரில் உள்ள எங்கள் வீட்டில் (அந்த வீடு காமராஜர் நினைவு இல்லமாக பின்னாளில் மாற்றப்பட்டது) கூட்டுக்குடும்பமாகவே இருந்தோம்.

    எனக்கு 10 வயதாக இருந்தபோது அவர் காலமானார். தமிழக முதலமைச்சராக இருந்தபோது, எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சாதாரண மனிதர் போலவே வந்து பங்கேற்றுள்ளார்.

    எங்கள் குடும்பத்தினர் ஒருவர், அவரிடம் தனக்கு எம்.எல்.ஏ சீட் கேட்டுள்ளார். அதற்கு பெருந்தலைவர், உங்களுக்கு அரசியல் தேவையில்லை. தொழிலையும், குடும்பத்தையும் நல்லபடியாக கவனியுங்கள் என்று மறுத்துவிட்டார்.

    சிறுவனாக இருந்தபோது பள்ளி விடுமுறை காலங்களில் சென்னைக்கு சென்று இருக்கிறேன். அங்கு அவர் நல்லபடியாக பார்த்துக்கொண்டார்.

    விருதுநகர் வீட்டில் அவர் எந்த வசதியையும் செய்து கொடுக்கவில்லை. நான் பிறந்தபோதுதான் அந்த வீட்டில் மின்விசிறியே பொருத்தியுள்ளனர். முதலமைச்சராக இருந்தபோதும், மற்ற நேரங்களிலும் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பியது இல்லை.

    அந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுத்தொகையை கொண்டு ஏழைகள் பயன்பெற செய்யலாம் என்று கூறி இருக்கிறார். இதனால் நாங்கள் அவரது பிறந்தநாளை எளிமையாக வீட்டிலேயே இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

    அதுபோல அவரது தங்கை வாரிசுகள் என்பதால் பல்வேறு நபர்கள், அரசியலில் ஈடுபட அழைத்தார்கள். ஆனால் காமராஜரின் நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தவிர்த்து விடுவோம்.

    நாங்களும் அவரது பெயரை சொல்லி எந்த பலனையும் யாரிடமும் எதிர்பார்ப்பதில்லை. சிபாரிசு கூடாது என்பதில் அவர் கறாராக இருந்தார். அதை நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

    நம்மிடம் இருப்பதை கொண்டு வாழ பழக வேண்டும். அடுத்தவர்களை பார்த்து வாழ நினைக்கக்கூடாது என்பது அவரது வேதவாக்கு. அதை சிறு வயதில் கேட்டதில் இருந்து இப்போது வரை நான் கடைபிடித்து வருகிறேன். பெருந்தலைவர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக வாழ்ந்து வருகிறோம்.

    பெரும்பாலும் யாரிடமும் காமராஜரின் நெருங்கிய உறவினர் என்பதை வெளிப்படுத்தமாட்டோம். தவிர்க்க முடியாத இடங்களில் தெரியவந்தால் அவரைப்பற்றிய பெருமையான விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

    சமீபத்தில் சாத்தூரில் எங்கள் உறவினர் ஒருவர் வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீட்டை விற்றவர், பெருந்தலைவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். வீட்டை வாங்க வந்திருப்பது காமராஜரின் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததும், ஒரு குறிப்பிட்ட தொகையை விட்டுக்கொடுத்தார்.

    அந்த வீட்டுக்கு அவர், காமராஜர் பவனம் என்றே பெயர் வைத்திருந்தார். அந்த பெயரை மட்டும் நீ்ங்கள் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியதைக்கேட்டு நாங்கள் கண் கலங்கிவிட்டோம்.

    அந்த வீட்டுக்கு ஏன் காமராஜர் பவனம் என பெயர் வைத்தார் என்பதை அவர் கூறியதை கேட்டு எங்களுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.

    அதாவது, சுதந்திர போராட்ட காலங்களில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தலைமறைவாக இருப்பதற்காக காமராஜர், அந்த வீட்டுக்கு சென்றுதான் அவ்வப்போது தங்கி இருந்துள்ளார். அதனால்தான் அந்த வீட்டினர் காமராஜர் பவனம் என பெயரிட்டது அப்போதுதான் எங்களுக்கே தெரியவந்தது.

    எக்காரணம் கொண்டும் காமராஜரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எங்கள் பாட்டி எங்களிடம் கண்டித்து கூறியுள்ளார்.

    உயர் பதவிகளில் இருந்தபோதும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ எந்தவித ஆதாயத்தையும் பெறக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து உள்ளார். இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது உறவினர்கள் யாராவது ஆதாயம் அடைய முயன்றதாக தெரிந்தால் கடுமையாக கண்டிப்பார்.

    எனது பாட்டிக்கோ, என் தாயாருக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறுதான் அறிவுறுத்தி இருக்கிறார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவே மாட்டார்.

    இதுபோல பல்வேறு நபர்கள் காமராஜரை பற்றி எண்ணற்ற தகவல்களை கூறி இருக்கிறார்கள். மொரார்ஜி தேசாய், ராமகிருஷ்ண ஹெக்டே, கருணாநிதி என ஏராளமான அரசியல் தலைவர்களும் இப்போது நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு பெருந்தலைவரின் தங்கை வழி பேரனான காமராஜ் கூறினார்.

    நாம் அனைவருமே காமராஜரின் எளிமையையும், பொதுவாழ்வில் நேர்மையையும், நிர்வாக திறனையும் பின்பற்றுவதே அவருக்கு ஆற்றும் தொண்டு ஆகும்.

    • நரம்பியல் மண்டலத்திற்கென்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன.
    • குடல், தசைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

    குடல் நரம்பு மண்டலம் என்பதைத்தான் மனிதனின் இரண்டாவது மூளை என்று அழைக்கின்றோம். இந்த குடல் நரம்பியல் மண்டலம் நமது உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் ஆசனவாய் வரை சுமார் ஒன்பது மீட்டர் நீளம் உள்ளது.

    மூளையில் இருந்து வரும் செய்திகள் இதன் வழியாகத்தான் நம் குடல் பகுதியை வந்தடைகின்றன. இருப்பினும் மூளையின் தூண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாகவும் செயல்படக் கூடியது. இந்த நரம்பியல் மண்டலத்தை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.

    பொதுவாகவே நரம்பியல் மண்டலத்திற்கென்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன. மூளையில் உள்ள நியூரான்களில் சுரக்கப்படும் நரம்பியக்கடத்திகள் போலவே, குடல் நரம்பியல் மண்டலத்தில் சுரக்கப்படும் நரம்பியக்கடத்திகளும் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால்தான் இதை இரண்டாவது மூளை என்றழைக்கின்றோம்.

    டோபமின், அசிடைல்கோலின், செரடோனின் ஆகியவைகள் மூளையில் இருப்பதைக் காட்டிலும் குடல் நரம்பியல் மண்டலத்தில் அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, 90 விழுக்காடு செரடோனின், உடலின் 50 விழுக்காடு டோபமின் இங்குதான் உள்ளது.

    மூளை நரம்பியல் தொடர்பான நோய்கள் நம்மைத் தாக்குவதற்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு வயிற்றுப்போக்கு வந்து போன சில நாட்களில், அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    மன அளவிளான பாதிப்புகளும் இதனால் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இப்பகுதியில் பார்க்கலாம்.

    இரண்டாவது மூளையின் பணிகள்:

    1. குடல், தசைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

    2. உணவுக் குழாய்களுக்குச் செல்கின்ற ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கிறது.

    3. குடலின் உள்பகுதியில் உள்ள சுரப்பிகளின் சுரப்புத்தன்மை, அதிகமாகச் சுரப்பதும் அல்லது சுரக்காமல் இருப்பதும் இந்த நரம்பியல் மண்டலத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

    4. குடல் மண்டலத்தின் எதிர்ப்புசக்திக்கு முக்கியமானது.

    5. நம் குடலின் செரிமான சக்தியையும், சத்துகளை உறிஞ்சும் தன்மையை நிர்ணயிக்கிறது.

    6. குடலின் முக்கியப் பணியான உணவுகளை கீழ்நோக்கித் தள்ளும் Peristalsis நடைபெறுவதற்கு மிகவும் உதவுகிறது.

    7. குடலில் இருந்து ஹார்மோன்கள் (Gastrin, Secretion) சுரப்பதற்கான செய்திகளை அனுப்புகிறது.

    8. உணவு ஒரு பகுதியில் இருக்கும்போது அந்தப் பகுதியை மட்டுமே சுருங்கி விரியச் செய்கிறது. இதனால் குடலினுள் உள்ள உணவு ஒன்றோடு ஒன்று நன்கு கலக்கப்படுகிறது. இது செரிமானத் தன்மைக்கும், உணவில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்று.

    9. குடல்கள் மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து, துண்டிக்கப்பட்டாலும், குடல் நரம்பு மண்டலத்தின் உதவியோடு வழக்கமான பணிகளான செரித்தல், சத்துகளை உறிஞ்சுதல் போன்ற செயல்கள் எப்போ தும்போல் நடைபெறுகின்றன.

    இந்த குடல் நரம்பு மண்டலத்தைத் தொடர்ந்து நம் நலத்திற்கு மிகவும் முதன்மையானது நுண்ணுயிர் நரம்பு மண்டலம் (Microbial nervous system). அப்படி என்றால் என்ன என்றுதானே சிந்திக்கிறீர்கள்.

    நம் தோல், மூக்கு, வாய், இரைப்பை, குடல் ஆகிய பகுதிகளில் நன்மை பயக்கக்கூடிய பல பாக்டீரியாக்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை லாக்டோபேசிலஸ், என்ட்ரோபாக்டர், பிஃபிடோ பாக்டீரியம் ஆகியவைகளாகும்.

    இந்த நுண்ணுயிரிகள் உணவுகளைச் செரிப்பதற்கும், சத்துகளை உறிஞ்சுவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இந்த நுண்ணுயிரிகளின் நலத்தில்தான் நம் உடலின் முழுமையான நலம் அடங்கியுள்ளது.

    இந்த நுண்ணுயிரிகள் நம் உடலுக்குள் எப்படி வருகின்றன? சிசு வயிற்றில் இருக்கும்போதே வருவதாகவும், குழந்தை பிறந்து தாய்ப்பால் குடிக்கத் தொடங்கும் போது தாயிடம் இருந்து வருவதாகவும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த நுண்ணுயிரிகளின் நலன் பாதிக்கப்படும்போது மூளை, நரம்பு மற்றும் மனம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஸ்கிசோஃப்ரினியா மற்றும் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் ஆகும்.

    மாறிவிட்ட உணவு கலாச்சாரத்தினால் இந்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களுக்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணம்.

    இந்த நுண்ணுயிரிகளைப் பல்கிப்பெருக வைக்க நாம் சில உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவைகள் இரு வகைப்படும்.

    புரோ - பயோடிக் என்பது நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்.

    ப்ரி - பயோடிக் என்பது இந்தப் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகுவதற்கு உதவும் உணவு.

    நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இவைகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நமது நலத்தை மேன்மையுறச் செய்யும்.

    நுண்ணுயிரிகள் அதிகம் உள்ள உணவுகள்:

    மோர், இட்லி, தோசை மற்றும் புளித்த மாவில் இருந்து செய்யும் உணவு வகைகள், நீராகாரம் / பழையசாதம், உப்பில் ஊறவைத்த 2-3 நாட்களுக்குப் பிறகு எடுத்துக்கொள்பவைகள். உதாரணத்திற்கு ஊறுகாய், பன்னீர், தேன், வாழைப்பழம், வெங்காயம் ஆகியவை நம் குடலின் ஆரோக்கியத்தை மேன்மையுறச் செய்கின்றன. எனவே தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

    நுண்ணுயிரிகளை பாதிப்பவை:

    இராசயன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் ஆகியவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது. குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவைகள் நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளைப் பாதிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் அளவு குறையும்போது மனஅழுத்தம், மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த இரண்டாவது மூளையும் அதிலுள்ள நுண்ணுயிரிகளும்தாம் நம் உடலின் நலத்தை நிர்ணயிக்கின்றன. இவை பாதிக்கப்படும்போது வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் இந்த நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே வயிற்றில் சிக்கல்கள் ஏற்படும்போது எளிதாகச் செரிக்கக் கூடிய மேற்கூறப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் வெந்நீர் மட்டும் எடுத்துக்கொண்டு குடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    குடல் நரம்பு மண்டலத்திற்கு இரவு வேளைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி உணவு அருந்தி விட்டு உடனே உறங்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

    அரைவயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் என்று நம்முன்னோர்கள் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் உணவை வைத்து பிறகு அதை சூடுபடுத்தி உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

    நம் உடல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டாவது மூளையின் ஆரோக்கியத்தை, மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பாதுகாக்கலாம்.

    • சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல உன்னதமான திருத்தலம்

    ஒருவர் மரணம் அடைந்த பிறகுதான், அவர் செய்த மாபெரும் பணிகள், சேவைகள், தானங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரும். இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் விஜயகாந்த்.

    இந்த உலகில் வாழும்போது தான் சம்பாதித்த நற்பெயரையும் புகழையும் எவர் விட்டுச் செல்கிறாரோ அவரே வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்படுவார்: துதிக்கப்படுவார். அத்தகைய புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல உன்னதமான திருத்தலம் தான் கருவேலி சற்குணநாதர் திருக்கோவில்.

    கும்பகோணம் அருகே இருக்கும் வித்தியாசமான ஆலயங்களில் இந்த ஆலய மும் ஒன்று. கும்பகோணம் ஆன்மிக யாத்திரை செல்பவர்கள் தவிர்க்கக் கூடாத ஆலயமும் கூட.

    தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 126-வது தலமாகவும் காவிரி தென்கரைத் தலங்களில் 3-வது தலமாகவும் திகழ்கின்றது.

    அரசலாற்றின் வடகரையிலும் காவிரி தென்கரையிலும் அமைந்துள்ள இத்தலம் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மூர்த்தி, தலம் தீர்த்தம் என முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றதொரு தலமாக விளங்குகிறது. இத்தலத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களும் உள்ளன.

    இந்திரன் - நாகம்பாடி

    அக்னி - வன்னியூர்

    எமன் - கருவிலி.

    நிருதி - வயலூர்

    வருணன் - சிவநகரம்

    வாயு (-) அகாலங்கன்.

    குபேரன் - எஸ், புதூர்.

    ஈசானன் - நல்லாவூர்

    இந்த எட்டு தலங்களில் எமன் வழிபட்ட தலம்தான் கருவிலி.

    முற்பிறவியில் ஒரு தீயவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்கவேண்டி வந்தது. அவள் மறுபிறவியில் இறைவனை அடைந்ததால் பிறவாநிலை பெற்றாள்.

    அதுபோலவே இத் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவியில்லை அதாவது அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் கருகில்லை. என்னும் பொருளில் கருவிலி எனப்படுகிறது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் பொருள்கொள்ளலாம்.

    இத்தலத்தின் முக்கிய பெருமை நல்ல குணங்கள் உள்ளவ ருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதுவுமாகும். எனவே இவ்வூர் இறைவன் 'சற்குணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    சற்குணன் என்னும் மன்னன் இக்கோவிலில் வழிபட்டு திருப்பணிகள் செய்து குறைகள் நீங்கப்பெற்று, பிறவிக்கடலைக் கடந்து மோட்சமும் பெற்றான் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகிறது.

    தட்சனின் யாகத்தின்போது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப் பிடித்தாற்போல ஊர் ஊராக சுற்றித் திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.

    அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம், கருவிலி ஆலயத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம்.

    இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்ச்சித்த இடமே அம்பாச்சிபுரம். முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்னும் ஆட்டத்தை இத்தலத்தில் நிக ழ்த்தினார். எனவே இத்தலம் கொட்டிடை என்றழைக்கப் படுகிறது.

    திருக்கடையூரில் எமன் மார்க்கண்டேய னுக்கு பாசக்கயிற்றை வீச. சிவபெருமான் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை, கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எமன் இங்குவந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப் பெற்றான் இக்குளத்தில் நீராடினாலும், தலையில் தெளித்துக்கொண்டாலும் எமபயம் போகும்.

    சிவன் கோவில்களில் மூன்றுவிதமாக அம்மன் சந்நிதிகளை. அமைக்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது சமான வீஷணம், அனுக்கிரஹ வீஷணம், அபிமுக வீஷணம் என்பர்.

    சிவன் சந்நிதி (கிழக்கு அல்லது மேற்கு) எந்த திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கி றதோ அந்த திசை நோக்கியே அம்மனையும் பிரதிஷ்டை செய்வது அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கிக் காட்சி தருவதை 'சமான வீஷணம் என்பர் சில கோவில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சந்நிதியும் சில கோவில்களில் சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதியும் அமைந்திருக்கும். சுவாமிக்கு வலப்பக்கம் அம்மன் சந்நிதி இருப்பதை திருமணக் கோலம் என்றும், சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி இருப்பதை அர்த்தநாரீஸ்வர கோலம் என்றும் கூறுவர்.

    சிவன் சந்நிதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இருப் பினும் அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியே அமைந் திருக்கும். இதனை 'அனுக் கிரஹ வீஷணம்' என்பர்.

    இந்த முறையில் சுவாமியை தரிசிக்கும் ரீதியில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பாள். சுவாமியின் அனுக் கிரஹத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள் புரிவதாக ஐதீகம். பெரும்பாலான சிவாலயங் களில் இந்த முறையிலான அமைப்பே காணப் படுகின்றது.

    சுவாமி சந்நிதி மேற்கு நோக்கி அமைந்தி ருந்தால் அம்பாளின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமியும் அம்பாளும் நேரெதிரே பார்த்துக் கொள்ளும் நிலையான இதனை 'அபிமுக வீஷ ணம்' என்பர். 'எதிர்காட்சி என்று சொல்லப்படும் இந்தநிலை மிகவும் அபூர்வமானது. திருக் கடையூர், காள ஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பினை தரிசிக்கலாம்.

    மேற்கூறிய வகைகளில் 'சமான வீஷணம்' என்னும் சாஸ்திரப்படி சுவாமியும் அம்பாளும் ஒரே திசையான கிழக்கு நோக்கி, சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி அர்த்தநாரீஸ்வர கோலம் என்னும் அமைப்பில் கருவிலி தலத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சம் வாய்ந்த ஒன்று.

    இறைவனுடன் சேர்வதற்கு அம்பாள், அம்பாச்சிபுரம் என்னும் இடத்தில் சிலகாலம் தங்கி, பின் உலகத்து அழகையெல்லாம் ஒன்றுதிரட்டிய சர்வாங்க சுந்தரியாக இறைவனின்முன் நின்றாளாம்.

    அம்பாளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இவளை தரிசித்த இளம்பெண்களின் திருமணம் காலதாமதமின்றி, தடையின்றி நடப்பதோடு, குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பேறும் கிடைக்கிறதென்று பயனை டந்தவர்கள் கூறுகின்றனர்.

    இத்தலத்தில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறுபெற்றவர்கள் இனி எந்தவொரு கருவிலும் பிறக்க வேண்டியதில்லை என்னும் வரம் கிடைக்கும்.

    * இந்திரனும், தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

    * 'உய்யக்கொண்டான் வளநாட்டு, வெண்ணாட்டு, குலோத்துங்க சோழ நல்லூராகிய சுருவிலிக் கொட்டிடை என்னும் கல்வெட்டுச் செய்தி இரண்டாம் ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட தற்குரிய ஆதார முள்ளது. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    * சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறைப்படி ஆலய நிர்வாகக் குழு, அற நிலையத் துறையின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெறுகிறது.

    * தேய்பிறை அஷ்டமியில் பைர வருக்கும், பிரதோஷ வழிபாடும் விமரிசையாக நடக்கும்.

    * மூல நட்சத்திரம் மற்றும் சனிக் கிழமைகளில் சஞ்சீவி ஆஞ்சனே யருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    * வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ராகுகால வேளையில் துர்க்கை, சிம்மவாகினிக்கு வழிபாடு நடைபெறும்.

    * எமதீர்த்தக் குளத்தில் கங்கையை சடையில்கொண்ட ஈசனின் சிற்பம் அமைந் துள்ளது சிறப்பான ஒன்று.

    கோவில்கள் நிறைந்த கும்ப கோணத்தில் உள்ள அனைத்து கோவில் களையும் தரிசித்த பலன் இந்த ஒரு கோவிலை தரிசித்தாலே கிடைத்துவிடும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான குமார் குருக்கள்.

    அரசலாற்றின் வடகரையில் கருவிலி ஊரின் மையத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது ஆலயம்.

    ஜாதகத்தில் குருவுடன் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இணைந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும். 7-ம் இடத்தில் ராகு - கேது இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். அதனால் திருமணத்தடை, சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், சுருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    அத்தகையவர்கள் கருவேலி தலத்திற்கு வந்து மூலவர், அம்பாளை தரிசனம் செய்து, சுவாமி சந்நிதியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு புதுவஸ்திரம் சாற்றி அபிஷேக அர்ச்சனை செய்தால் நல்லதீர்வு கண்டு நலமுடன் வாழலாம்.

    காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    கும்பகோணம்- நாச்சியார் கோவில்- எரவாஞ்சேரி- பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்தால், அங்கிருந்து அரசலாற்றின் வடகரையில் உள்ளது கருவேலியை எளிதாக சென்று அடையலாம்.

    • துறவியர் வரிசையில், வள்ளலாருக்கும் ஒரு தனி இடம் உண்டு.
    • வள்ளலாரின் உரைநடை நூல்களில் உடல்நலம் சார்ந்த பல குறிப்புகள் உண்டு.

    எழுத்தாளர்களாக இருந்த துறவியர் பலர் உண்டு. வால்மீகி, வியாசர் போன்றோர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய துறவியர். ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி. தாயுமானவர், பட்டினத்தார் போலத் தமிழில் எழுதிய துறவியர் வரிசையில் இணைபவர் வள்ளலார்.

    `துறவு என்றால் உடலை வருத்திக் கொள்வது அல்ல, மனிதர்கள் உடல் நலனை நன்கு பேணுவது அவசியம் என்ற கருத்துடைய துறவியர் சிலர் உண்டு. `உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!` என்றார் திருமூலர். `கால்பந்து விளையாடி உடலை வலிமைப் படுத்தினால் கீதை நன்றாகப் புரியும்` என்றார் விவேகானந்தர்.

    உடல் நலன் பற்றி அக்கறை செலுத்திய இத்தகைய துறவியர் வரிசையில், வள்ளலாருக்கும் ஒரு தனி இடம் உண்டு.

    வள்ளலாரின் உரைநடை நூல்களில் உடல்நலம் சார்ந்த பல குறிப்புகள் உண்டு. அவரது உரைநடைத் தொகுப்பு நம் வாழ்வுக்குத் தேவையான எண்ணற்ற செய்திகளைச் சொல்கிறது.

    கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டும் என்ற உணர்ச்சி உடலில் தோன்றிய உடனேயே அவற்றை அகற்றி விட வேண்டும் என்றும், `ஒன்றடக்கல் இரண்டடக்கல்` போன்றவை உடல் நலத்தைப் பெரிதும் சிதைத்துவிடும் என்றும் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார். நம் பாரத தேசத்தில் பல பெண்களின் உடல்நலக் குறைவுக்கு காரணம், அவர்களுக்கு உடல் கழிவுகளை அப்புறப்படுத்த போதிய வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் இருப்பதே.

    வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்கம். இளம் வயதிலேயே தந்தை ராமையாவை இழந்தார். தாய் பெயர் சின்னம்மை. ராமலிங்கத்தையும் சேர்த்து அவருக்கு ஐந்து குழந்தைகள். சபாபதி, பரசுராமன், ராமலிங்கம் என மூன்று புதல்வர்கள். சுந்தரம்மாள், உண்ணாமுலை என இரண்டு புதல்விகள்.

    கணவர் காலமானபின் சின்னம்மை தன் மூத்த மகன் சபாபதி வீட்டிற்கு வந்துசேர்ந்தார். பின், நெடுநாட்கள் சின்னம்மை உயிர் வாழவில்லை. தாயின் மரணத்திற்குப்பின் ராமலிங்கத்திற்கு சபாபதியின் மனைவியான அவர் அண்ணியே தாயானார்.

    தன் மைத்துனன் ராமலிங்கத்தை அளவற்ற பாசத்தோடு பராமரித்த உன்னதமான அண்ணி அவர். தமிழ் இலக்கிய வரலாறு, அவருக்கு இணையான இன்னோர் அண்ணியைக் கண்டதில்லை.

    கடவுளை நேரில் கண்ட மகான் வள்ளலார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் நள்ளிரவு முடிய தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பின் விழிப்படைந்து நேரம் நள்ளிரவைத் தாண்டியிருப்பதை உணர்ந்து வீடுவந்து சேர்ந்தார்.

    அவருக்குச் சோறிடுவதற்காக நெடுநேரம் காத்திருந்த அண்ணி, ராமலிங்கம் வந்தால் கதவைத் தட்டட்டும் என எண்ணி கதவைத் தாளிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் அண்ணியின் உறக்கத்தைக் கெடுக்க ராமலிங்கம் விரும்பவில்லை. திண்ணையில் சாப்பிடாமலே படுத்தார். அப்போது வடிவுடையம்மன், அண்ணியின் வடிவு உடைய அம்மனாக, அண்ணி வடிவில் அவர்முன் தோன்றினாள்.

    `பசியோடு உறங்கலாமா? சாப்பிடு` என இலைபோட்டு அன்னம் பரிமாறினாள்.

    `அம்பிகையைப் பார்க்க ஆலயத்திற்குப் போனேன். அங்கேயே தியானத்தில் நெடுநேரம் கழிந்துவிட்டது` எனத் தயக்கத்தோடு தெரிவித்தார் வள்ளலார்.

    `அம்பிகையைப் பார்க்கக் கோயிலுக்குப் போவானேன்? என்னைப் பாரேன்!` என்றாள் அம்பிகை. வள்ளலார் திகைத்தார்.

    `எல்லாப் பெண்களும் அம்பிகையின் வடிவம்தானே?` என்று சூசகமாகச் சொல்லிக் கலகலவென்று நகைத்தாள் அம்பிகை.

    அன்னத்தை வாயிலிட்ட வள்ளலார் அதன் ருசியில் மயங்கினார்.

    `அண்ணி! உங்கள் சமையல் இன்று தேவாமிர்தம்போல் இனிக்கிறதே!` என்றார்.

    `ஆமாம். தேவாமிர்தம்தான் போயேன். தேவலோக ஆட்கள்தான் இன்று சமைத்தார்கள்!` என்று சொல்லி மீண்டும் நகைத்த அம்பிகை, போவதுபோல் போக்குக் காட்டி மறைந்துவிட்டாள்.

    சிறிதுநேரம் சென்றதும் உண்மையான அண்ணி கதவைத் திறந்து வந்து வள்ளலாரைச் சாப்பிட அழைத்தாள். அப்போதுதான் வந்தது அம்பிகை என்பது வள்ளலாருக்குப் புரிந்தது. அம்பிகை வந்து சென்ற சாட்சியாக அவர் சாப்பிட்ட இலை அங்கே கிடந்தது.

    காளிதாசனுக்கு நாவில் வெற்றிலை துப்பியும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தும் அறிவுபுகட்டிய அம்பிகை, வள்ளலாருக்கு அன்னமிட்டுத் தமிழை வழங்கிவிட்டாள். அதன்பின் வள்ளலார் நாவில், அவர் சொன்னதெல்லாம் கவிதையாக மலரத் தொடங்கியது.

    மணவாழ்வில் நாட்டமில்லாதிருந்த ராமலிங்கம், உறவினர்களும் குருநாதர்களும் வற்புறுத்தியதால், அவரது அக்கா உண்ணாமுலையின் மகளான தனக்கோடியை மணந்தார்.

    பள்ளியறையிலும் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் வள்ளலார். `வான்கலந்த மாணிக்கவாசகரின் வாசகத்தைத் தான் கலந்து பாடும் போது திகட்டாமல் இனிக்கிறது` என்று பாடியவர் அல்லவா அவர்?

    தனக்கோடி, கணவரின் மனமெல்லாம் ஆன்மிகமே நிறைந்துள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவரை வணங்கி, அவர் முழுமையாக ஆன்மிக நெறியில் வாழவேண்டும் என வேண்டி வழியனுப்பி வைத்த பக்குவம் தனக்கோடி அம்மாளுடையது. இந்தியத் துறவியரில் கணவர் துறவு பூண்டபோது அதை மனப்பூர்வமாக ஆதரித்த மனைவி என்ற பெருமை தனக்கோடி அம்மாளுக்கு மட்டுமே உரியது.

    அற்புதம் நிகழ்த்திய மகான்கள் வரிசையிலும் வள்ளலாருக்கு இடமுண்டு. ஆனால் அவர் அற்புதங்களை விரும்பவில்லை.

    தங்கத்தை வெறுத்த அவர், ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி, பின் இந்தத் தங்கத்தால் என்ன பயன் எனக் கேட்டு அதை மீண்டும் இரும்பாக்கிக் கிணற்றில் வீசிவிட்டு நடந்தவர்.

    வள்ளலார் `கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக!` என மூட நம்பிக்கைகளைச் சாடினார்.

    `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்` என வள்ளலார் எழுதியுள்ள வரி, அவரின் வானளாவிய அன்பிற்கு அடையாளம். பக்தித் தமிழின் பெரிய பொக்கிஷம் அவர் பாடல்களின் தொகுப்பு.

    சீனிவாச வரதாச்சாரியார், ஞானசுந்தரமய்யர், வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, பண்டார ஆறுமுக ஐயா போன்ற பற்பலர் அடுத்தடுத்து வள்ளலாரின் அடியவர்களானார்கள்.

    இவர்களின் வேண்டுகோளின் பேரில்தான் வள்ளலார் `நெஞ்சறிவித்தல், மகாதேவ மாலை, சிவநேச வெண்பா` போன்ற கவிதை நூல்களை எழுதினார். வள்ளலார் தம் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மனிதர்கள் மேல் பாட்டுப் பாடியதில்லை.

    புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார் போன்றோர் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழுவூர் வேலாயுத முதலியார் அளித்த பொருளுதவியோடு வள்ளலார் பாடல்களைத் திருமுறைகளாக வகுத்து வெளியிட்டனர்.

    தமிழ்த் தாத்தாவின் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றோர் வள்ளலாரின் அருட் பாடல்களைக் கொண்டாடினர்.

    அப்போதுதான் ஆன்மீக வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விந்தையான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என அழைப்பது தவறு என வழக்குத் தொடர்ந்தார். அவ்விதம் அழைப்பது மிகையான கூற்று என்பது நாவலர் கருத்து.

    மஞ்சக் குப்பம் டிஸ்டிரிக்ட் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது அங்கு டிஸ்ட்ரிக்ட் முன்சீபாகப் பணியாற்றியவர் நேர்மைக்குப் புகழ்பெற்ற முத்துசாமி ஐயர்.

    வள்ளலார் ஒளிவீசும் முகத்துடன் நீதிமன்றத்தின் உள்ளே தென்றல்போல் நுழைந்தார். அங்கே ஏற்கெனவே வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.

    வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்ததும் அங்கு இன்னதென்றறியாத தெய்வ சான்னித்தியம் உணரப்பட்டது. அனைத்து மக்களும் நீதிபதி முத்துசாமி ஐயரும் அந்தத் தூய துறவிக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்றார்கள். வள்ளலாருக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரும் தம்மையறியாமல் எழுந்து நின்றார்.

    அதையே சான்றாதாரமாகக் கொண்ட முத்துசாமி ஐயர், வழக்குத் தொடுத்தவராலும் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள வள்ளலார் எழுதியவற்றை அருட்பா என்று அழைப்பதில் தவறேதும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

    (இந்தப் புகழ்பெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய டிஸ்டிரிக்ட் முன்சீப் முத்துசாமி ஐயர், காலப்போக்கில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி முத்துசாமி ஐயரின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.)

    வள்ளலார் போதித்த நெறிகளில் முக்கியமானது ஜீவகாருண்யம். புலால் உணவை வெறுத்தார் அவர். `கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்` என்ற வள்ளுவர் நெறியே வள்ளலார் நெறி. தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாரின் சிந்தனை மரபு வள்ளலாரிடமிருந்து வந்தது. அணையா அடுப்பேற்றி வந்தவர்க்கெல்லாம் அன்னம் வழங்க ஏற்பாடு செய்த மகான் வள்ளலார்.

    வள்ளலார் ஐம்பது ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் இவ்வுலகில் தன் உருக்காட்டி எல்லா மானிடர் போலவும் வாழ்ந்து வந்தார். சொற்பொழிவுகள் மூலம் ஆன்மீகத்தைப் பிரசாரம் செய்துவந்த அவர் தம் இறுதிக் கட்டச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி முடித்தார். தம் வாழ்வின் கடைசி மூன்று மாதங்கள் மவுனத்தில் ஆழ்ந்தார்.

    1874 ஜனவரி முடிவில் மூன்று மாத மவுனத்தை விடுத்து, மீண்டும் பேசத் தொடங்கினார். பல முக்கியமான அறிவுரைகளை அடியவர்களுக்கு வழங்கினார். பின் படுக்கையில் சாய்ந்துகொண்டார்.

    தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக குருநிலை பெற்று சித்துகள் புரியும் என்று குறிப்பிட்டார்.

    அவர் உத்தரவிட்டபடி, கதவுகள் மூடப்பட்டன. சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறக்கவே அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலார் பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களிலேயே கரைத்துக் கொண்டு உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

    `அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை` என்ற சொற்றொடர்கள் வள்ளலார் நமக்கு ஆக்கி அளித்த மந்திரங்கள். வள்ளலார் இப்போதும் தம்மை நாடும் அடியவர்களின் உள்ளங்களில் தோன்றி அருளாசி வழங்கி வருகிறார்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான்.
    • தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

    உடல் குறையெல்லாம் இருந்தாலும் உலகம் புகழும் அளவு வெற்றி பெற்றதோடு அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டலாம் என்று வாழ்ந்து காட்டிய பெண்மணி யார் தெரியுமா? ஹெலன் கெல்லர் என்ற அபூர்வமான பெண்மணிதான் அவர்.

    பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள ஒரு சிறு நகரான டுஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பிறந்தார் ஹெலன் கெல்லர். பிறந்த 19வது மாதத்தில் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார்.

    அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களில் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

    ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிந்து வந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்சில் இருந்த பெர்கின்ஸ் 'ஸ்கூல் பார் தி பிளைண்ட்' என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

    ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் என்ற ஒரு இளம் ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர்தான்.

    அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

    ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை கப் என்பதற்கான அசைவுகள்! அடுத்து அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது வாட்டர் என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

    ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் கப்க்கும் வாட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்கு கோபம் கோபமாக வந்தது.

    ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுசுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் வாட்டர் என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது.

    நீர் அவர் கையில் பாய ஆரம்பித்தபோது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது.

    இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

    ஆன்னி தன் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

    பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

    கடுமையாக உழைத்த பின்னர் 1900-ம் ஆண்டில் ரெட்கிளிப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904-ம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

    1902-ம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும்போதே அவர், 'தி ஸ்டோரி ஆப் மை லைஃப்" என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் 475-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினார்; உரைகளை நிகழ்த்தினார்.

    1939-ம் ஆண்டு தொடங்கி 1959-ம் ஆண்டு முடிய ஐந்து கண்டங்களில் உள்ள 39 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். உலகப் பெண்மணி ஆனார்.

    சமுதாயத்தில் உடல் ஊனமுற்றோருக்காக அவர் குரல் கொடுத்தார். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர் பாடுபடலானார். குறிப்பாக அவர்களது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1920-ல் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனை நிறுவிய ஸ்தாபகர்களில் அவரும் ஒருவராக இருந்தார், ஒவ்வொரு மனிதரின் தனி மனித உரிமையை வலியுறுத்தும் சங்கமாக இது அமைந்தது.

    இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் இருந்த மருத்துவமனை

    களுக்குச் சென்று அவர்களுக்கு ஹெலன் ஆறுதல் கூறினார். அமெரிக்காவில் உள்ள கண் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனம் தனியாக அமைந்தது. அதற்கென 20 லட்சம் டாலர் நிதியை அவர் திரட்டி உதவினார்.

    உயரிய விருதும் மறைவும்:

    அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14-ம் தேதியன்று அவருக்கு 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம்; என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

    ஹெலனின் குடும்பம்:

    ஹார்வர்ட் பயிற்றுவிப்பாளரான ஜான் மேசி என்பவரை 1905-ம் ஆண்டு ஹெலன் மணந்தார்.

    1936-ல் வருந்தத்தக்க ஒரு சம்பவமாக அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியையான அன்னி சல்லிவன் மறைந்தார்.

    ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சுய சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: "எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் என்பது எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். "ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம்.

    ஹெலன் கெல்லரைப் பற்றிய படங்கள்:

    ஹெலனைப் பற்றி 'டெலிவரன்ஸ்' என்ற ஒரு படம் அவரது வாழ்கை வரலாற்றைச் சித்தரித்து 1919-ல் எடுக்கப்பட்டது.1959-ல் அவரைப் பற்றி 'தி மிராகிள் வொர்கர்' என்ற நாடகம் அரங்கேறியது. 1960-ல் இது புலிட்சர் விருதைப் பெற்றது. இதுவே அன்னி சல்லிவனை மையமாகக் கொண்ட திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

    மறைவு: 1968-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87-ம் வயதில் கனெக்டிகட்டில் ஈஸ்டனில் அவர் மறைந்தார். வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜோசப் சப்பலில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    "உலகில் சில மனிதர்களே இறக்காமல் இருக்கப் பிறக்கிறார்கள். அவர்களுள் ஹெலன்கெல்லரும் ஒருவர்" என்று அமெரிக்க செனேடர் லிஸ்டர் ஹில் அவரைப் போற்றிப் புகழாரம் சூட்டினார்.

    கண்பார்வையற்றோரின் சாதனைகள்: இந்து மகான்களில் சூர்தாஸ் கண்பார்வை இல்லாமலிருந்தும் கிருஷ்ண தரிசனத்தைப் பெற்ற வரலாற்றை நமது அறநூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

    செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள பூதூரில் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண்ணொளியை இழந்தவர். அற்புதமான தமிழ்ப் பாடல்களை இயற்றிய இவர் இலங்கை சென்று பரராஜசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்தார்.

    பிறர் மனதில் இருப்பதை அறிந்து அதற்குத் தகுந்த பாடல் பாடுவதில் இவர் வல்லவர். இலங்கை மன்னன் நினைத்த சந்தேகத்திற்கு இவர் தக்க விடையைப் பாடலில் அளித்து அவரை பிரமிக்க வைத்தார்.

    கண் பார்வையற்றோருக்காக பிரெய்லி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் கண்பார்வையற்ற லூயிஸ் ப்ரெய்லி (பிறப்பு 4-1-1809 மறைவு 6-1-1852) பிரபல ஆங்கில கவிஞரான 'பாரடைஸ் லாஸ்டைப்' படைத்த ஜான் மில்டன் கண் பார்வையற்றவரே. 1667-ல் இவர் படைத்த இந்த நூல் உலகப் புகழ்ப் பெற்றது.

    1907-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓக்லஹாமாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டரான தாமஸ் கோர் கண் பார்வையை இழந்தவர் தான்.

    ஆண்ட்ரியா பொசெல்லி, நார்மன் ஜெஃப்ரி, கேசி ஹாரிஸ், ரே சார்லஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் கண்பார்வையற்றவர்களே.

    மவுண்ட் எவரெஸ்டின் மீது 25-5-2001இல் ஏறிய முதல் கண்பார்வையற்ற வீரர் என்ற புகழைப் பெற்றவர் எரிக் வெய்ஹென்மேயர் உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்கும், விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் காது கேட்காது.

    உலகெங்கும் இது போன்ற உதாரணங்களைப் பரக்கக் காணலாம்.

    கண்பார்வை யற்றிருந்தாலும், காது கேட்காமலிருந்தாலும் சாதனைகள் புரிந்த பலரால் ஹெலன் உத்வேகம் ஊட்டப்பட்டார். அதே போல அவராலும் ஏராளமானோர் உத்வேகமூட்டப்பட்டனர்.

    பொன்மொழிகள்:

    ஹெலன் கெல்லரது பொன்மொழிகளில் சில: எனது வாழ்க்கை மிக சந்தோஷமான ஒரு வாழ்க்கை. ஏனெனில் எனக்கு அற்புதமான நண்பர்கள் இருந்தனர். செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தன. எனது குறைகளைப் பற்றி நான் நினைப்பதே இல்லை.

    அந்த குறைகள் என்னை ஒரு போதும் வருத்தமுறச் செய்ததும் இல்லை. ஒருவேளை ஒரு ஏக்கம் சில சமயம் இருந்திருக்கலாம், ஆனால் அது கூட மலர்க்கூட்டத்தின் இடையே புகுந்து செல்லும் தென்றலைப் போலத்தான் என்று சொல்லலாம். காற்று கடந்து செல்கிறது. மலர்கள் திருப்தியுடன் இருக்கின்றன.

    உலகில் மிக பிரமாதமான அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் அனுபவித்து உணர மட்டுமே முடியும். உங்கள் முகத்தை பிரகாசத்தின் பக்கம் திருப்புங்கள், நிழலை நீங்கள் பார்க்க முடியாது.

    சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

    ஜூன் 27:ஹெலன் கெல்லர் தினம்

    எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது. துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

    • கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு-கேதுக்கள்.
    • ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும்.

    மனித குலத்தையே அச்சுறுத்தலோடு, பதட்டத்தோடு வைத்திருக்கும் ஒரு தோஷம் உள்ளது எனில் அது ராகு-கேது தோஷமாகும்.ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு கட்டங்களில் ஏதேனும் இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு-கேதுக்கள். ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும்.

    கேது சுருக்கும். ராகு-கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகத்தையோ அல்லது அவயோகத்தையோ சந்திக்கின்றார்கள். 12 பாவகங்களில் 8 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுக ளுக்கான விளக்கங்களை கடந்த வாரம் பார்த்திருந்தோம். மீதம் உள்ள பாவகங்களை இப்போது பார்ப்போம். இதில் கொடுக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அவரவர் ஜென்ம லக்னத்திற்கே உரியது. ராசிக்கு அல்ல.

    9-ல் ராகு 3-ல் கேது

    தந்தை மகனை பிரித்தல், ஒருவரை ஆதரவிலக்கச் செய்தல், ஒருவரின் உயர் கல்விக்கு தடை செய்தவர்கள், குரு துரோகம், குரு தட்சனையில் குறை வைப்பது , பிற மதத்தை இழிவு படுத்துவது போன்ற குற்றம் செய்தவர்களுக்கு இந்த கிரக அமைப்பு ஏற்படும்.

    அதனால் இந்த ஜென்மத்தில் கற்ற வித்தை பலனில்லாமல் போவது , படிப்பிற்கு தொடர்பில்லாத வேலை யின் மை, முறையான அங்கீகார மின்மை, மரியாதை குறைவு ஆகியவை ஏற்படும். கோச்சாரத்தில் 9-ல் ராகு 3-ல் கேது வரும் போது தந்தை, தந்தை வழி உறவினர்களுட ன்கருத்து வேறுபாடு, பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை, பதவி இழப்பு ஏற்படும்

    பரிகாரம்

    சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபாடு செய்வது நல்ல பலன் தரும் . காசி, கயா, ராமேஸ்வரம், தேவிபட்டினம் போன்ற புனித தலங்களில் நீத்தார் கடன் தீர்க்க வேண்டும். அமாவாசை நாட்களில் உணவு, தண்ணீர் தானம் செய்து வரவேண்டும்.

    10-ல் ராகு 4-ல் கேது

    நில மோசடி, தவறான முறையில் அபகரித்த பொருள், தவறான நடத்தை,ஒருவரின் தவறான நடத்தைக் காரணமாக இருப்பவர், தவறான கர்ம வினைப் பரிகாரம் செய்து வைத்தல், நம்பிக்கை மோசடி ஆகிய வற்றுக்கான வினைப் பதிவு.

    இந்த அமைப்பு உடையவ ருக்கு ஆரம்பக் கல்வி தடை, உடல் நலக் கோளாறு , சரி செய்ய முடியாத வாஸ்த்து குறைபாடு உள்ள வீட்டில் வாழும் நிலை அல்லது விருத்தி இல்லாத வீடு, மனை வாங்கும் நிலை ஏற்படும். கோச்சாரத்தில் 10-ல் ராகு, 4-ல் கேது வரும் போது ஒருவர் தனது தந்தைக்கு கர்ம காரியம் செய்ய முடியாத நிலை, தவறான நில முதலீடு , பூர்வீக சொத்து அரசால் அபகரிக்கப்படுதல் போன்ற நிலை உருவாகும்.

    பரிகாரம்

    முறையான பட்டா இல்லாத நிலத்தை பட்டா செய்து கொள்ள வேண்டும். வாஸ்து குறைவான இடத்திற்கு வாஸ்து சாந்தி பூஜை செய்ய வேண்டும். ஆரம்ப கல்வி பயிலும் குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டு தானம் செய்ய வேண்டும். ஊரின் மேற்கு பகுதியில் உள்ள புற்றை வழிபாடு செய்ய வேண்டும்.

    11-ல் ராகு 5-ல் கேது

    கருச்சிதைவு செய்தவர்கள், அதற்கு காரணமாக இருந்தவர்கள், கோவில் சிலையை திருடியவர்கள், புற்றை இடித்தவர், ஒருவரை மனநோயாளியாகச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டியவர்களுக்கு, நல்ல காதலை பிரித்தவர்களுக்கு இந்த அமைப்பு ஏற்படும்.

    இதன் பலனாக இந்த பிறவியில் ஆசைப் பட்டதை அடைய முடியாமை, குழந்தையின்மை, குழந்தைகளை பிரியும் நிலை , பூர்வீகத்தை விட்டு வெளியேறுதல், உழைப்பிற்குரிய ஊதியமின்மை ஏற்படும். கோச்சாரத்தில் 11-ல் ராகு 5-ல் கேது வரும் போது குழந்தைகளால் அவமானம், பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை ,தியாகியாக வாழ வேண்டிய நிலை உருவாகும்.

    பரிகாரம்

    குலதெய்வ வழிபாட்டை வலிமைப்ப டுத்துவதுடன், சர்ப்பம் உள்ள புற்றை வழிபாடு செய்து வர வேண்டும்.

    12-ல் ராகு 6-ல் கேது

    தனது முரட்டு பிடிவாதத்தால் ஒருவரை அடிமைப்படுத்துவது, காயம் ஏற்படுத்துவது , நோய் ஏற்படக் காரணமான உணவுப் பொருள் விற்பவர் , நோய் பரவக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்த கிரக அமைவு ஏற்படும்.

    அதன் பலனாக இந்த பிறவியில் இனம் புரியாத நோய்கள், இனம் புரியாத பிரச்சினைகள் உரிமையை நிலை நாட்ட முடியாமை ஏற்படும். கோச்சாரத்தில் 6 ல் கேது 12ல் ராகு வரும் போது நோய் தாக்கம், கடன் தொல்லை, வம்பு வழக்கு,ஈடு செய்ய முடியாத இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    விநாயகர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்ல பலன் தரும். ஆசைக்கு அளவு கோல் வைத்திருப்பவருக்கு இந்த கிரக அமைப்பு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலே கூறிய அனைத்தும் தசா காலங்களில் அதிகமான பலனையும் புத்திகாலங்களில் மிதமான சுப, அசுப பலனைத் தருகின்றன. மற்ற நேரங்களில் எந்த பாதிப்பும் நேராது. கோச்சார கிரகங்கள்

    தசா புத்தியுடன் தொடர்பு பெறும் போது மட்டுமே சம்பவம் நடக்கும். அத்துடன் 9ம் அதிபதி பெற்ற வலிமைக்கு ஏற்ப சுப, அசுப தன்மையில் மாற்றம் இருக்கும். உரிய பரிகாரங்களை கடைபிடிக்க மேன்மையான பலன் உண்டு.

    மரபியலும் ராகு-கேதுவும்

    ஒருவரின் தந்தை மற்றும் தாய்வழி முன்னோர்களின் பாவம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையிலேயே ஜாதகத்தில் ராகு/கேதுக்களின் நிலைப்பாடு இருக்கும்.மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவர்கள். இவர்கள் தான்.

    ஒரு ஆன்மா பல்வேறு பிறப்புகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குவதும், ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.இவர்கள்.

    நெருப்பு

    மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் சுப அசுப பலன்கள் ஜாதகரை வேகமாக சென்றடையும். அதனால் ஏற்படும் பாதிப்பு வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். சுப, அசுபத்தின் சுவடை ஜாதகர் உணரும் முன்பே நீங்கி விடும்.வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.

    பரிகாரம்

    நெருப்பு ராசியில் உள்ள ராகு கேதுவின் பாதிப்பைக் குறைக்க மலை மலை சார்ந்த இடங்கள், நெருப்பு தத்துவத்தை உணர்த்தும் கோவில்களுக்கு செல்ல வேண்டும். திருவண்ணா மலை செல்லலாம். அல்லது குல இஷ்ட தெய்வத்திற்கு தீபம் போடுதல், விளக்கேற்றுதல் , ஹோமங்கள் நடத்துதல் , தீச்சட்டி எடுத்தல் , அக்னி குண்டம் இறங்குதல் போன்றவை கள் மூலம் பாதிப்பைக் குறைக்க முடியும்.

    நிலம்

    ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று நில ராசியில் உள்ள ராகு கேதுவினால் ஏற்படும் அனைத்து இன்ப துன்பங்களும் நிதானமாக ஜாதகரை வழிநடத்தும். நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும்.

    பரிகாரம்:

    காடு, காடு சார்ந்த இடங்களில் உள்ள கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லலாம். சபரி மலை ஸ்ரீ அய்யப்பன் வழிபாடு. நிலத் தத்துவ கோவிலான காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். அல்லது கோவில் உலவாரப்பணி, பொதுப் பணிகள், மரம் வளர்த்தல், முளைப்பாரி கட்டி வழிபடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    காற்று

    மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் அனைத்து நேர்மறை, எதிர்மறை பலன்க ளும் விருந்தினர் போல் வரும் போகும். மீண்டும் வரும். மீண்டும் போகும். இந்த ராசிகளில் நிற்கும் ராகு, கேது வினால் உருவாகும் பலன்களை எப்பொழுது வரும் எப்படி வரும் என்று யூகிக்க முடியாது.

    பரிகாரம்

    காற்று ராசி தத்துவத்தை உணர்த்தும் வாயு தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று வரலாம் அல்லது காரியசித்தி ஸ்தோத்திர பாராயணம் செய்தல் , ராம நாம பாராயணம் அல்லது எழுதுதல், வாசனை திரவியங்கள், சாம்பி ராணி, ஊதுபத்தி வழிபாட்டிற்கு பயன்படுத்துதல் போன்ற வற்றால் பயன் பெறலாம்.

    நீர்

    கடகம் ,விருச்சிகம், மீனம் ராசியில் உள்ள ராகு, கேதுவினால் ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளும் எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் ஜாதகரை நன்கு உயர்த்தும் அல்லது பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும்.

    பரிகாரம்:

    நீர் ஸ்தலமான திருவானைக்காவல் கோவில் சென்று வழிபடலாம். அல்லது நீர் நிலைகள், கடல். நதி, ஆறு, குளங்களுக்கு சென்று நீராடலாம். அல்லது இஷ்ட குல தெய்வத்திற்கு, பால், பன்னீர், மஞ்சள் நீர் போன்றவற்றால் அபிசேகம் செய்யலாம்.

    ஜாதகட்டத்தில் தனக்கென்று சொந்த வீடு இல்லாத ராகு கேதுக்கள் தாம் நின்ற பாவகத்தினை சொந்த வீடாக்கி தனது பலன்களை வெளிப்படுத்துகிறது.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்து வதை பாதிக்கும். வீரியமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரகம் ராகு கேது எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவக ரீதியான உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவத்தையும் சிதைக்கும் வல்லமை உண்டு. அதே நேரத்தில் அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாத தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    அஷ்டமபாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். சர்ப்ப தோஷத்தால் ஏதேனும் அதிகப்படியான பாதிப்புகள் . இருந்தால் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் சென்று வர வேண்டும். சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன்.

    வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் சங்கரன் கோவில் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.

    இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

    • அனைவருக்கும் வாழ்வில் பல சவால்கள் ஏற்படும் தான்.
    • தர்ம பாதையினை விட்டு அதர்ம பாதையில் செல்லக்கூடாது.

    நல்ல கருத்துக்களை கேட்பதற்காக பல வருடங்களுக்கு முன்பு மக்கள் ஒன்று கூடுவதற்கு நல்ல இடங்கள் இருந்தன. அங்கு மக்களுக்கு படித்தவர்கள், குருமார்கள் பல நல்ல செய்திகளை 'பிரசங்கம்' செய்வார்கள். இது பல காலமாக நடந்து வரும் நிகழ்வு. இந்த நிகழ்வுகள் இன்றும் தொடர்கின்றன.

    காலத்தின் முன்னேற்றம் காரணமாக பல அறிஞர்களின் சொற்பொழிவுகளை உட்கார்ந்த இடத்திலேயே ஒரு சிறிய செல்போன் உதவியுடன் கேட்கின்றோம். இது மிக நல்லதே. வால்மீகியின் ராமாயணம் என்கின்றோம்.

    வேத வியாசரின் மகாபாரதம் என்கின்றோம். இவை நடந்தது நடந்தபடியே சிறிதும் மாறாமல் அப்படியே இருக்கின்றது என்று நம்மால் உறுதி அளிக்க முடியாது. காலம் செல்ல செல்ல சில நீக்கல்கள் இருக்கலாம். சில இடைச் செருகல்கள் இருக்கலாம். மையக் கருத்து மாறாமல் இருக்கின்றது எனலாம்.

    அவ்வகையில் சில உரையாடல்களாக நாம் சில பகுதிகளை நாம் அறிந்த மொழியில் படிக்கின்றோம். அவற்றி னை நிரூபணம் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. மனிதனுக்கு நல்லவை ஆற்றுபவையாயின் அவையும் வரவேற்கத்தக்கதே.

    மகாபாரதத்தில் கர்ணன், கண்ணன் இடையே நிகழ்ந்த உரையாடலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளதனைப் படிப்போம்.

    கர்ணன்- 'நான் முறையான உலக வழக்கப்படி பிறக்காதது என் தவறா?

    'என் அன்னை நான் பிறந்த உடனேயே என்னை பரிதவிக்க விட்டுச் சென்று விட்டாள்.

    'நான் சத்ரியன் அல்ல என்று கருதப்பட்டதால் எனக்கு தகுதி யோடு படிப்பு கற்றுத் தரப்பட வில்லை.

    'குரு பரசுராமன் அவர்கள் எனக்கு வித்தைகள் கற்றுத் தந்தாலும் அவை எனக்கு மறந்து போகும் என சாபமளித்தார். அவ ருக்கு அப்போது நான் குந்தியின் மகன் என்று தெரியாது.

    'திரவுபதியின் சுயம் வரத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டேன்'

    'என் அன்னை குந்திதேவி கூட தனது மற்ற மகன்களை காப்பாற்ற வேண்டியே என்னிடம் வந்தாள்'

    ஆக என் வாழ்வில் எனக்குக் கிடைத்த உணவு, உடை, அந்தஸ்து இவை அனைத்தும் துரியோதணன் மூலமாகவே கிடைத்தது. அதனால் தான் நான் அவனுக்கு பக்க பலமாக, உறுதுணையாக நிற்கின்றேன்.

    இது தவறா கண்ணா? சொல் என்றான்.

     கிருஷ்ணர் கூறிய பதில்கள்

    "கர்ணா நான் பிறந்தது ஜெயிலில். இறப்பு என் பிறப்பிற்கு முன்பே காத்திருந்தது.

    'மாடு, சாணி இவைகளோடு நான் நடப்பதற்குள் என்னை கொல்ல பல முயற்சிகள் என்ற சூழ்நிலை'

    'படிப்பு என்பதே கிடையாது'

    'மக்களில் பலர் அவர்கள் வாழ்வின் பிரச்சனைக்கு நானே காரணம் என்று கூறினர்.'

    'உன் திறமைகளுக்காக நீ பாராட்டப்பட்டாய். எனக்கு எந்த கல்வியும் சிறு வயதில் கிடைக்க வில்லை. ரிஷி சண்டியானி குருவிடம் நான் 16 வயதில் தான் சென்றேன்.

    'நீ விரும்பிய பெண்ணை மணந்தாய்' நான் விரும்பிய பெண் எனக்கு கிடைக்க வில்லை. அரக்கர்களிடம் இருந்து மீட்ட பெண்களையும் மணக்க வேண்டியது ஆயிற்று.

    'என் சமூகத்தினை ஜராசந்திடம் இருந்து காப்பாற்ற யமுனை கரையில் இருந்து மாற்ற வேண்டி இருந்தது. என்னை பலரும் தைரிய மில்லாதன், ஓடி விட்டான்' என்றனர்.

    ' நீ யுத்தத்தில் ஜெயித்தாலும், தோற்றாலும் உனக்கு புகழ் கிடைக்கும்.

    'எனக்கோ குற்றம், குறைகளே கிடைக்கும்.

    ஆக பிறந்த அனைவருக்கும் வாழ்வில் பல சவால்கள் ஏற்படும் தான். அதனை காரணம் காட்டி தர்ம பாதையினை விட்டு அதர்ம பாதையில் செல்லக்கூடாது. வாழ்க்கை அனைவருக்கும் எளிதான தாகவும், நேர்மை பாதை யாகவும் இருக்காது.

    ஆனால் அதற்காக உள்ளு ணர்வு கூறும் தர்ம பாதை யில் இருந்து மாற இவை சாக்கு போக்காகாது. எத்தனை முறை அவமானப் பட்டாலும், விழுந்தாலும் வாழ்க்கை உன்னை அதர்ம பாதைக்குச் செல்லும் மனதினை தரவில்லை.

    விதி என்பது நாம் அணியும் காலணியை பொறுத்து அல்ல. நாம் வைக்கும் அடிகளைப் பொறுத்தே' என பதிலளித்தார்.

    இதில் பூச்சுகள் இருக்க லாம். மிகைப்ப டுத்தல் இருக்கலாம். இருந்து விட்டு போகட்டும். எத்தனை பெரிய கருத்து எத்தகைய அறிவுரை, அன்னபறவை போல் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம். தெரிந்து கொள்வோம்.

    இதிகாசங்கள், புராணங்கள், புனித நூல்கள் (எந்த மதமாயினும் சரி) திருக்குறள் இவை அனைத்துமே அனைவராலும் அறியப்பட வேண்டியவைதான். அததன்படிதான் ஒருவர் நடக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது. ஆனால் கிடைக்கும் அறிவு, ஞானம் இவை மனிதனின் மனதினை தூசு தட்டிக் கொண்டே இருக்கும். பல செய்திகளை நாமே நம்முன் தேடி அறிய முடியும். செய்து பார்ப்போமே. அறிந்து கொள்வோமே.

    மகாபாரதம் இதனை வேத வியாசர் தொடர்ந்து கூற பகவான் கணபதி (பிள்ளையார்) தொடர்ந்து எழுதினாராம். இதில் வேத வியாசரோ, பிள்ளை யாரோ சின்ன இடைவெளி கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் வேத வியாசரின் கடின சுலோ கங்களை எளிமைப்படுத்தி எழுத பிள்ளை யாருக்கு சற்று கூடுதல் நேரம் ஏற்பட்டது என்பர்.

    நாம் கீதை என்றாலே 'பகவத் கீதை' என்பதனைத்தான் முதலில் ஞாபகத்தில் கொள்வோம். ஆனால் சிவ கீதை, அஷ்டவக்ர கீதை என சுமார் 10 கீதோபதேசங்கள் இருக்கின்றன.

    * மகாபாரதத்தில் விதுரர் மிக நேர்மையானவர். விதுரநீதி என்றே சொல்வார்கள். இந்த விதுரரை எமதர்மராஜாவின் அவதாரமாக குறிப்பிடுகின்றனர்.

    * துரியோதனன் பிறந்த போது அவனது அழுகை கழுதையின் கத்தல் போல் இருந்ததாம். பறவைகள், காகங்கள் பயந்து அங்கும், இங்கும் ஓடினவாம். பல அபசகுன நிமித்தங்கள் தோன்றின. விதுரர் துரியோ தனனை அழித்து விடும்படி திருதிராஷ்டி ரரிடம் கூறினார். துரியோதனனால் வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு விளையும் என்றார். ஆனால் திருதிராஷ்டிரர் தன் மகன் மீது கொண்ட பாசத்தி னால் அவ்வாறு செய்யவில்லை.

    * மகாபாரதத்தின் மைய கருத்தே 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதுதான்.

    * மகாபாரதம் சொல்லும் பாடம் 'நியாய மானதற்கும், சரியானதற்கும், முறையான திற்கும் மட்டுமே உடன் இருக்க வேண்டும்.

    * ராமாயணத்தில் விஷ்ணு பகவான் ராமராக அவதரிக்கின்றார். மகாபாரதத்தில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரிக் கின்றார்.

    * இரண்டிலும் பரசு ராமன் உள்ளார்.

    * பரசுராமர், ராமர், கிருஷ்ணர் இந்த மூன்றி லும் மகா விஷ்ணு மனித அவதா ரம் எடுத்துள்ளார்.

    ராமாயணத்தினை முதன் முதலில் ஆதி ராமாயணம் என சிவ பிரான் சக்திக்கு கூறி உள்ளார் எனப்படு கின்றது. அதனைக் கேட்ட காகம் கபுசந்தி யின் மூலம் பரவியது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

    இவைகளை நம்ப வேண்டும் என்று அவசி யம் கிடையாது. அறியலாம் அல்லது அவரவர் விருப்பப்பட்ட நிரூபிக்கப்பட்ட நூல் களை படிக்கலாம். அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே. பொதுவில் ஆன்மீக புத்தகங்கள் அனைத்துமே (மதசார் பற்று) மனிதனின் பட படப்பினை குறைக்கும். மனித நேயத்தினைக் கூட்டும். இயற்கையோடு இணைந்து வாழச் செய்யும். இது ஒருவருக்கு கிடைக்கும் பெரிய பரிசு ஆகும்.

    • வசனத்தை கூட ராகமாக்கி பெரிய ஹிட் பாடல் ஆக்கிவிட்டார்.
    • முதல் பின்னணி பாடியவர் இவர்.

    "உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படத்திற்கு இசையமைக்க எம்.எஸ்.வி. எடுத்துக்கொண்டது 15 நாட்கள் மட்டுமே! வெளிநாடு எங்கும் சென்று பார்க்காமல் ரிகார்டிங் தியேட்டரில் உட்கார்ந்த இடத்திலேயே போட்ட மெட்டுகள் தான் காற்றலைகளில் இன்றும் அசைந்துக் கொண்டு நம் காதுகளில் விழுந்து, மனதில் நுழைந்து மயிலிறகாய் நம்மை வருடிக் கொண்டிருக்கிறது!!

    அதுவரை வாங்காத சம்பளத்தை எம்.எஸ்.வி.க்கு கொடுத்தும் அவர் முகத்தில் உற்சாகமில்லை.

    எம்.ஜி.ஆர். சொன்னார், "எல்லாப் பாடலும் நல்லா வந்திருக்கு விசு".

    "இது வேண்டாம்", "நான் நினைச்ச மாதிரி வரலை", "நேற்றுப் போட்ட டியூனே நல்லாயிருந்தது" என்றெல்லாம் எம்.ஜி.ஆர். தான் போட்ட டியூன்களை மறுத்தது நினைவிலாடியது எம்.எஸ்.விக்கு.

    "பாடல்கள் சிறப்பா வரணுமேனு தான் நீ தந்த சில டியூன்களையெல்லாம் தட்டிக்கழிச்சேன். உண்மையில் நீ போட்ட எல்லா டியூனுமே நல்லா இருந்தது" என்று சொல்லி அவரைக் கட்டியணைத்துக் கொண்டார், எம்.ஜி.ஆர்!

    எம்.எஸ்.வி.யின் இசைத் திறனை மெச்சி எம்.ஜி.ஆர். எப்போதும் சொல்லும் வார்த்தை, "ஒலிப்பதிவின் நேரத்தில் விசுவிடம் தினந்தந்தி பேப்பரைக் காட்டாதீங்க, அதுக்கும் அவர் மெட்டுப் போட்டு விடுவார்!!!"

    உண்மையில் அப்படியொன்றும் திறைத்துறையில் நடந்தேவிட்டது! என்ன அது என்கிறீர்களா?

    யாராவது திருமண அழைப்பிதழுக்கும் மெட்டமைத்து இசையமைத்து பாடலாக்குவார்களா? அதையும் செய்தவர் தான் எம்.எஸ்.வி.!

    "நெஞ்சிருக்கும் வரை" என்ற ஒரு திரைப்படம் புதுமை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1967ல் வந்தது. சிவாஜி கணேசன் ஒருதலையாக கே.ஆர்.விஜயாவை காதலிப்பார். அவரோ, சிவாஜியின் நண்பர் முத்துராமனை காதலிப்பார். இடையில் கே.ஆர்.விஜயாவின் அப்பா இறந்துவிட சிவாஜி காப்பாளராக பொறுப்பில் நின்று முத்துராமனுக்கும் கே.ஆர்.விஜயாவுக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இந்த சூழலில் வரும் பாடல் தான், "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி" என்றப் பாடல்!

    பாடலின் இடையே, "நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணி திங்கள் இருபதாம் நாள்... திருவளர் செல்வன் சிவராமனுக்கும் திருவளர்செல்வி ராஜேஸ்வரிக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்! தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுராமன்..." என்ற வரிகள் வரும்.

    பாடல் என்றால் எதாவது ஒரு ராகத்தில் அமைத்து விடலாம். வசனத்தை கூட ராகமாக்கி கூடவே நாதஸ்வரம், தவில் இசையை சேர்த்து பாடலை பெரிய ஹிட் பாடல் ஆக்கிவிட்டார். திருமணத்தின் நேரலைக் காட்சியை அப்படியே கிரிக்கெட் கமெண்ட்ரி போல பாடி கைத்தலம் பிடித்துக் கொடுப்பது வரை இந்தப் பாடல் போகும்!

    திரைத்துறையில் இப்படியொரு அடையாளத்துடன் கூடிய பாடல் இதற்கு முன்னுமில்லை. இந்தப் பாடலுக்கு பின்னுமில்லை. சவாலான பாடல் அது?

    "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி,

    புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி"-

    முதல் வரிசையில் நான்கு சீர்கள் (சொற்கள்) இருக்கின்றன. இரண்டாம் வரிசையில் ஐந்து சீர்கள் இருக்கின்றன. அதாவது புதியதாக ஒரு சீர் சேருகிறது. புதிதாக ஒரு சீர் சேருவதையும், மணமகள் திருமணம் வழியே புது சீர் போன்ற வாழ்க்கையை பெறுவாள் என்று இரு பொருள் பட எழுதி தமிழில் விளையாடியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்!! பாடல் முழுக்க ஒவ்வொரு வரியுமே நிறைய பேசப்பட வேண்டிய சுவை நிரம்பியவை தான்!

    நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனான படத்தில் எம்.எஸ்.வி. இசையமைக்க வந்ததும் மிகவும் சுவரஸ்யமானது தான்!

    1952-ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 'பணம்' என்றத் திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்திற்கு இசையமைக்க அப்போது பிரபலம் ஆகாத எம்.எஸ்.வி.யிடம் கேட்கிறார்.

    எம்.எஸ்.வி. "நான் தனியாக இசையமைப்பதைவிட சி.ஆர்.சுப்பாராமனிடம் முதன்மை உதவியாளராகவும், நல்ல அனுபவமுள்ள, திறமையான வயலினிஸ்ட்டா கவும் உள்ள அண்ணன் டி.கே.ராமமூர்த்தியும் இசையமைத்தால் நன்றாக இருக்கும்" என சொல்கிறார். சொல்வதுடன் நில்லாமல் டி.கே.ஆரிடம் கேட்கவும் செய்கிறார்.

    டி.கே.ராமமூர்த்தி, "தம்பி நீங்கள் இசையமைப்பதில் வல்லவர், கடுமையாக உழைக்கிறீர்கள். நீங்களே தனியாக இசையமைக்கலாமே என சொல்லியும் எம்.எஸ்.வி. ஒப்புக் கொள்ளவில்லை. "நீங்களே துறையில் சீனியர். நீங்களும் நானும் இணைந்து இசையமைப்போம் என்று வற்புறுத்தி டி.கே.ஆரை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

    புதிய இரட்டையர்களுக்கு தன் இயக்கத்தில் வாய்ப்பு கொடுத்த என்.எஸ்.கே. படத்தில் டைட்டில் கார்டு வரும் போது யார் பெயரை முதலில் போடுவது என்பதையும் தீர்மானித்தார். வயதில் மூத்தவரான டி.கே.ராமமூர்த்தி பெயரை முதலிலும், தன் பெயரை அடுத்துக் காட்டவேண்டும் என்பது எம்.எஸ்.வி.யின் விருப்பம்.

    ஆனால் கலைவாணர், "தம்பி விசு, உங்களுக்கு பக்கபலமாக உங்களுக்கு பின்னாலிருந்து டி.கே.ராமமூர்த்தி உங்களை வழி நடத்துவார். நீங்கள் இளையவர், உங்கள் பெயரே முதலில் இருக்கட்டும்" என்று சொல்லி விட்டார்.

    கலைவாணர் வாக்கே இறுதியாகவும், உறுதியாகவும் ஆனது! திரையுலகில் "விஸ்வநாதன், ராமமூர்த்தி" என்ற பெயர் புதிய அதிர்வலையை ஏற்படுத்திய மந்திர சொல்லாக ஆனது வரலாறு!!

    'பணம்' படம் தயாரித்தவர் அமரர் ஏ.எல்.சீனிவாசன். இவரது 'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் 1951ல் ஆரம்பிக்கப்பட்டு எடுத்த முதல் திரைப்படம் அதுதான்!

    ஏ.எல்.சீனிவாசனின் சகோதரர்தான் கவியரசர் கண்ணதாசன். தனது சகோதரர் தயாரிப்பில் வந்த 'பணம்' படத்தில் மொத்தம் 11 பாடல்களையும் கவியரசரே எழுதினார். கவியரசருக்கு திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழில் நடித்த இரண்டாம் படம் 'பணம்'.

    சிவாஜியும் நடிகை பத்மினியும் முதன் முதலில் இணையாக சேர்ந்து நடித்தப் படம், 'பணம்'.

    முதல் படத்திலேயே இரட்டையர்கள் பல புதுமைகளைப் பாடல்களில் தந்தார்கள். இந்துஸ்தானியில் இரண்டு பாடல்கள், 'ஏழை நின் கோவிலை நாடினேன்' என்ற ஒரு வால்ட்ஸ் ஸ்டைல் பாடல்!

    "ஒங்கொப்பனை கேட்டே முடிப்பேன்" என்ற கர்நாடக வகைப்பாடல், "எங்கே தேடுவேன் பணத்தை" என்ற கிராமிய பாடல், பிறப் பாடல்களை ஜனரஞ்சகமான மெல்லிசையிலும் தந்து முதல் படத்திலேயே தங்களை மொத்த திரையுலகமும் திரும்பி பார்க்க செய்தார்கள் 'எம்.எஸ்.விஸ்வநாதன்-டி.கே.ராமமூர்த்தி' என்ற வெற்றி இரட்டையர்கள்!!

    1953-ல் இரண்டு படங்கள், 1954-ல் இருந்து 1958 வரை வருடத்திற்கு நான்கு படங்கள், 1959-ல் இருந்து 1961 வரை ஐந்து அல்லது ஆறு படங்கள் இசையமைத்த இவர்களின் கிராப் 1962-ம் ஆண்டில் மட்டும் பதினைந்து படங்கள் என்று எகிறுகிறது!! தெலுங்குப் படங்களிலும் கூட இசையமைக்கிறார்கள். பட பூஜைகளின் போதே, பத்திரிக்கைகளில் இசை விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையமைப்பு என்று வர ஆரம்பிக்கிறது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் எகிற ஆரம்பிக்கிறது.

    பின்னணி ஒலிப்பதிவு வசதி இல்லாத காலக்கட்டத்தில் கர்நாடக இசையைப் பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்றும், அதனால் அந்த இசையைத் தெரிந்தவர்கள் நடித்தபோது அவர்களின் தலைமுடி அலங்காரம் பாகவதர் பாணியில் தான் இருந்தது என்றும் பார்த்தோம்.

    இதெல்லாம் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா காலத்தில் சரியாகப் பொருந்தியது. ஆனால் நவீன சமூக கால கதைகளின் நாயகர்களுக்கு பொருந்தாது இல்லையா? அரசர் கால கதைகளில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாகரீகமாக பேண்ட், சட்டை, கோட் அணிந்து நடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கெட்-அப்புக்கு பாகவதர் கால பாட்டு முறை பொருந்துமா? எழுச்சியான,உற்சாகமான, பரபரவென, துள்ளலான பாடல் முறை வேண்டுமல்லவா? அப்படியொரு பாணி உருவாக வேண்டுமில்லையா?

    இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட எல்லோரும் கொஞ்சம் இசையை மெல்லிசைப் படுத்துகிறார்கள்.

    இந்த காலத்தில்தான் டி.எம்.சவுந்திர ராஜன் பின்னனி பாடகரின் அறிமுகம் ஆரம்பிக்கிறது. பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அவர் திரையுலகிலும் வாய்ப்புகள் தேடுகிறார்.

    "தூக்குதூக்கி" திரைப்படத்தில் பாட அப்போது மிகப் பிரபலமான பின்னணி பாடகர் திருச்சி லோகநாதனை அழைக்கிறார் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். சம்பளத்தொகை உடன்படாததால், "புதியதாக டி.எம்.சவுந்திர ராஜன் என்று ஓர் இளைஞன் வந்திருக்கிறார். அவரை பாட வையுங்கள்" என்று சொல்லிவிட்டார் திருச்சி லோகநாதன். தமிழ்த் திரையுலகில் பின்னனி குரல் ஒலிப்பதிவு தொழில் நுட்பம் வந்தபோது, முதல் பின்னணி பாடியவர் இவர்.

    சிவாஜி கணேசனுக்கு அதுவரை சி.எஸ். ஜெயராமன் பின்னணி பாடிக்கொண்டிருந்தார். அதனால், புதுக்குரல் பொருந்துமா என்று சிவாஜி யோசிக்கிறார். உடனே, ஜி.ராமநாதன் மாதிரிக்கு, டி.எம்.சவுந்திர ராஜனை வைத்து, "ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு" -என்ற ஒரு பாடலை பதிவு செய்து போட்டுக் காட்டுகிறார்.

    சிவாஜி தனக்கு இந்த புதிய குரல் பிரமாதமாகப் பொருந்தியதைக் கேட்டு விட்டு சம்மதம் சொல்கிறார். பிறகு டி.எம்.சவுந்திரராஜனை வைத்தே, "சுந்தரி சவுந்தரி நிரந்தரியே", "பெண்களை நம்பாதே கண்களே", "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" அபாய அறிவிப்பு - என்றப் பாடல்களையும் பாடவைத்துவிட்டார் ஜி.ஆர். பாடல்கள் எல்லாம் படு பிரபலம். இனி எனக்கு டி.எம்.எஸ். தான் பின்னணி பாட வேண்டும் என்று சிவாஜி சொன்னதில் டி.எம்.எஸ்-க்கு ஏக குஷி!

    இந்தப் பாடல்களை கேட்டுப்பார்த்த எம்.ஜி.ஆர். தனக்கும் டி.எம்.எஸ். பின்னணி பாட வேண்டுமென நினைத்தார். அதுவரை எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும் ஏ.எம். ராஜாதான் பின்னணிகுரலில் பாடிக் கொடுத்து வந்தார்கள். 'குலேபகாவலி' படத்தில் ஏ.எம்.ராஜா பாடிய 'மயக்கும் மாலை பொழுதே நீ போ போ'-என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது.

    ஒரே படத்தில் டி.எம்.எஸ்.சை வைத்து வேறு பாடல் எப்படி பின்னணி பாட வைப்பது? குரல் வித்தியாசம் தெரியுமே?

    இதற்கு சாமர்த்தியமாக எம்.எஸ்.வி. ஒரு உத்தியைப் பாடல்களில் வைக்கிறார். எம்.ஜி.ஆர். மாறு வேடங்களில் பாடும் இரண்டு பாடல்களையும், பொது வெளியில் உரக்கப்பாடும் எழுச்சி மற்றும் தத்துவப் பாடல்களை டி.எம்.எஸ்.சின் பின்னணி குரலில் பாட வைக்கிறார். குரல் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகத் தனத்துடன் பொருந்திப் போகிறது!

    டி.எம்.சவுந்திர ராஜனால் திரையுலகின் இருபெரும் கதாநாயகர்களுக்கும் முதல்முறையாக நாயகத்தன்மையுடன் கூடிய ஒரு திடகாத்திரமான குரல் கிடைத்திருப்பது வரமானது!! இதிலும் கொஞ்சம் மாற்றங்கள் வந்தது. அது என்ன?

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

     இணைய முகவரி:

    banumathykrishnakumar6@gmail.com

    • இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் இயல்பானவைதான்.
    • சண்டையே இல்லாத இல்லறம் இனிக்காது.

    தெய்வ சக்தி மண்ணுலக மக்களை நெறிப்படுத்துவதற்காக மண்ணில் அவதாரம் செய்து ராமனாகவும் கண்ணனாகவும் வாழ்ந்து காட்டி உள்ளது.

    எதை செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதையெல்லாம் அவதாரங்களின் வாழ்க்கை மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

    நம் இல்லற வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதை தெய்வங்கள் நடத்திய இல்லறம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

    இல்லறத்தில் சண்டை சச்சரவுகள் இயல்பானவைதான். சண்டையே இல்லாத இல்லறம் இனிக்காது. தெய்வீக இல்லறத்திலும் சண்டை உண்டு.

    ஆனால் ஊடல் நேர்ந்தால் பிடிவாதத்தால் ஊடலை நீட்டிக்கக் கூடாது. உடனடியாக இயல்பான அன்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். இது தெய்வீக இல்லறங்கள் நமக்குப் புகட்டும் முக்கியமான நீதிக் கருத்து.

    துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் இடைக்காலத்தில் வாழ்ந்த சைவப் புலவர். காவடிச் சிந்து எழுதிய அண்ணாமலை ரெட்டியாரின் சமகாலத்தவர்.

    ரெட்டியார் சந்தத்தால் புகழ்பெற்றார் என்றால் சுவாமிகள் அபாரமான கற்பனைத் திறத்தால் புகழ்பெற்றார். அவர் `கற்பனைக் களஞ்சியம்` என்றே அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிறார்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடைபெற்ற ஊடல் காட்சி ஒன்றைக் கவிதை நயத்தோடு விவரிக்கிறார் சிவப்பிரகாசர்.

    ஊடல் தோன்றிவிட்டால், தலைவியை சமாதானம் செய்வதற்காக அவள் காலிலும் தலைவன் விழுந்து வணங்கலாம் என்கின்றன இலக்கியங்கள்! (இதெல்லாம் இன்றும் உள்ளதுதானே என்று தோன்றுகிறதா?!)

    பரமசிவனுக்கும் பார்வதிக்கும் இடையே ஊடல். பார்வதியை என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தப் பார்க்கிறார் சிவபெருமான். பார்வதி சமாதானமாகவில்லை.

    இனி வேறென்ன வழி? மனைவி காலில் விழ வேண்டியதுதான். `நான் செய்ததெல்லாம் தவறுதான், மன்னித்துக் கொள்!' எனப் பார்வதியின் பாதங்களில் தலைவைத்து வணங்கி இறைஞ்சுகிறான் இறைவன்.

    கணவன் தன் காலில் விழுந்ததும் பார்வதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவள் அத்தனை மகிழ்ச்சி அடையக் காரணம், கணவன் தன் காலில் விழுந்தான் என்பதல்ல.

    அப்படி அவன் விழுந்தபோது அவன் தலையில் உள்ள, பார்வதியின் சக்களத்தியான கங்கையும் அவள் காலில் விழுந்தாள் இல்லையா? அதனால்தான் பார்வதிக்கு அளவற்ற மகிழ்ச்சி என இதற்கு விளக்கம் தருகிறார் சிவப்பிரகாச சுவாமிகள்!

    ஒரு துறவி கூர்ந்து கவனித்து விவரிக்கும் இந்த நடைமுறை இல்லறம், படிக்கும்போது நம் முகத்தில் ஒரு புன்முறுவலை வரவழைக்கிறது!

    இன்னொரு முறையும் இப்படித்தான். பார்வதிக்கும் பரமசிவனுக்கும் ஊடல். அவள் சிவனை விட்டுச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டு விட்டாள்.

    அதற்காக சிவன் சிவனே என்றிருக்க முடியுமா? `என் சீற்றத்தை மாற்றி என்னை சமாதானப்படுத்தக் கூட உங்களுக்குச் சக்தி இல்லையா?' என்று அவள் கேட்டு விடுவாளே?

    சிவன் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறார். ஆனால் பார்வதி ஊடலை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்வது இப்போது?

    அப்போதுதான் ராவணன் இமயமலைப் பகுதிக்கு வருகிறான். சிவபக்தனான அவன் இமய மலையோடு சிவனைத் தூக்கிக்கொண்டு இலங்கையில் கொண்டுபோய் வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான்.

    தன் இருபது கரங்களால் இமயமலையைத் தூக்கவும் செய்துவிட்டான். அவன் தூக்க முற்பட்டபோது மலை நடுங்கியது.

    மலை திடீரெனக் குலுங்குகிறதே என அஞ்சிய பார்வதி, ஊடலை மறந்தவளாய், ஓடிவந்து சிவனைத் தழுவிக் கொள்கிறாள். அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் சிவனின் உடலில் பாதியாகவே இருப்பவள்தானே அவள்?

    இப்படியாக அவள் ஊடல் தணிந்ததில் சிவபெருமானுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன் கட்டை விரலால் அவர் மலையை அழுத்த மலை நடுக்கம் நீங்கி நிலை பெறுகிறது.

    ஆனால் இப்போது மலையின்கீழ் சிக்கிக் கொண்ட ராவணன் உடல் நடுங்கத் தொடங்குகிறது. இசையில் வல்லவனான அவன் தன் கைநரம்புகளையே வீணை நரம்புகளாக்கி சாம கானம் இசைக்கிறான். சாம கானப் பிரியனான சிவன் மனம் இளகுகிறது.

    ராவணனை மலையின் அடியிலிருந்து விடுவித்ததும் அல்லாமல், அவனுக்குப் பல வரங்களைத் தந்து யாராலும் வெல்ல முடியாத சந்திரகாசம் என்னும் வாளையும் தருகிறார் சிவபெருமான். சிவன் இந்த அளவு மனம் குளிர்ந்து ராவணனுக்கு வரங்கள் தந்ததற்கு ராவணன் இசைத்த சாம கானம் மட்டும்தான் காரணமா? அல்ல.

    தன் மனைவியின் மாறாத ஊடலை மாற்றி அவள் சமாதானம் அடைய உதவியது ராவணனின் மலையைத் தூக்கிய மலைக்க வைக்கும் செயல். அதன்பொருட்டே ராவணனுக்கு வரங்கள் அருளினாராம் சிவன்!

    ராமனுக்கும் சீதைக்கும் இடையேயான ஊடலை ராமாயணம் விவரிக்கிறது. சுந்தரகாண்டத்தில் சீதையிடம் அனுமன் ராமன் கொடுத்தனுப்பிய கணையாழியைத் தருகிறான்.

    மோதிரத்தைப் பார்த்ததும் ஆனந்த பரவசம் அடைகிறாள் சீதை. அனுமனிடம் கணையாழி தொடர்பான ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசுகிறாள்.

    ராமனுக்கும் சீதைக்கும் இடையே மணமான புதிதில் ஏதோ சின்னச் சண்டை ஒன்று தோன்றிவிட்டது. ஆனால் சண்டை நீடிப்பதை ராமனும் விரும்பவில்லை. சீதையும் விரும்பவில்லை. மறுபடி சகஜமாகப் பேசிக் கொள்ள என்ன வழி என ஆராய்கிறது ராமனின் மனம்.

    அவன் தன் விரலில் உள்ள மோதிரத்தை வேண்டுமென்றே கீழே போடுகிறான். பிறகு,

    `எனக்கு சீதை என்ற பேரழகியை மணம் செய்துகொடுத்தபோது என் மாமனார் ஒரு மோதிரத்தை என் விரலில் அணிவித்தாரே? இப்போது அந்த மோதிரத்தைக் காணோமே? என்ன செய்வேன் நான்?`

    என்று வெளிப்படையாகச் சொல்லியவாறே தேடுகிறான் ராமன்.

    எந்தப் பெண்ணும் அவள் அழகைப் புகழ்ந்தால் உள்ளம் குளிர்வாள் என்ற உளவியல் ரகசியத்தை ராமன் அறிந்து வைத்திருந்தான்.

    அவன் எதிர்பார்த்தபடியே தன்னைப் பேரழகி எனக் கூறித் தன் அழகைக் கணவன் புகழ்ந்ததில் சீதைக்கு வெட்கம் கலந்த மகிழ்ச்சி. அவளுக்கு ஊடல் பற்றிய நினைவே மறந்துவிட்டது.

    `இதோ அந்த மோதிரம் இங்குதானே இருக்கிறது பிராணநாதா! அது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம் தேடுகி றீர்களே?' என்று, ராமனின் கண்ணுக்கு எதிரேயே தென்பட்ட மோதிரத்தை சீதை எடுத்து அவன் கையில் கொடுக்க அவர்கள் சண்டை தீர்ந்து சமாதானம் ஆனார்களாம்!

    இல்லறம் தொடர்பான இந்த அழகிய நினைவை தன் மகனைப் போன்ற அனுமனிடம் ராமனுக்குச் சொல்ல வேண்டிய அடையாளச் செய்தியாக விவரித்து மகிழ்கிறாள் சீதாப்பிராட்டி. பிறகு கவலையோடு கேட்கிறாள்:

    `குழந்தாய் அனுமா! என் பிராணநாதர் இந்த மோதிரத்தை விரலிலிருந்து கழற்றி உன்னிடம் தந்தாரா அல்லது இடுப்பின் ஆடை முடிச்சிலிருந்து எடுத்துத் தந்தாரா?`

    எதற்கிந்த விசாரணை என்று தெரியாத அனுமன், யோசித்துவிட்டு, `தாயே! இடுப்பின் ஆடை முடிச்சிலிருந்துதான் எடுத்துத் தந்தார்.` எனச் சொன்னதும் சீதையின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

    `அனுமனே! விரலில் அணியும் மோதிரத்தை இடுப்பின் ஆடை முடிச்சில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? காரணம் அவர் என் பிரிவால் சரியாகச் சாப்பிடாததால் அவர் உடல் மெலிந்து விரலும் மெலிந்துவிட்டது. மோதிரம் விரலில் நிற்காமல் நழுவத் தொடங்கி விட்டது.

    அதனால் ஆடையில் முடிந்து வைத்துக் கொள்கிற நிலை நேர்ந்திருக்கிறது. நீ திரும்பிச் சென்று அவரைச் சந்தித்ததும் அவரை நன்கு உணவு உண்ணச் சொல். போரில் ஈடுபட்டு என்னைச் சிறை மீட்கவும் உடலில் வலிமை வேண்டுமல்லவா?`

    சீதையின் கூர்மையான மதிநுட்பத்தை எண்ணி அனுமன் பிரமித்தான் என்கிறது ராமாயணம்.

    கண்ணனைப் பற்றி என்ன சொல்ல! அவன் காதலுக்கென்றே படைக்கப்பட்ட கடவுள். திருட்டு அவன் தொழில். பொய் அவன் பொழுதுபோக்கு! எல்லாப் பெண்களின் இதயங்களையும் ஒருசேர அள்ளித் திருடுவான் அவன்.

    ஒருத்தியைத் தேடிப் போகும்போது இன்னொருத்தியை ஏங்கித் தவிக்க வைப்பான். `சொன்னபடி நேற்று நீ ஏன் என் வீட்டிற்கு வரவில்லை?` என்று ஒரு கோபிகை கேட்டால் அதற்கு பதில் அளிப்பதற்குக் கண்ணனிடம் ஆயிரம் பொய்கள் தயாராக இருக்கும்.

    அப்படித்தான் ஒரு கோபிகை இல்லத்திற்குச் சொன்னபடி ஓர் இரவு அவன் செல்லவில்லை. மறுநாள் `நேற்று வாக்களித்தபடி ஏன் என் இல்லத்திற்கு நீ வரவில்லை?` என்று அவள் ஊடல் கொண்டாள்.

    அதற்கு அவன் சொன்ன சமாதானம் என்ன தெரியுமா? `நேற்றிரவு கொஞ்சம் மழையாக இருந்ததே? தெரியாதா? அதனால்தான் உன் வீட்டுக்கு வர முடியவில்லை!`

    இந்த சமாதானத்தைச் சொன்ன கண்ணன் எந்தக் கண்ணன்? கனமழை பிடித்துக் கொண்டபோது கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்து அனைவரையும் காத்தானே அதே கண்ணன்!

    பாவம் அந்தக் கோபிகையும் கண்ணன் சொன்ன பொய்யை நம்பினாள். பெண்கள் ஆண்களின் பொய்களை நம்புவதற்கென்றே படைக்கப் பட்டவர்கள் அல்லவா?

    மனித வாழ்க்கையைப் போலவே தெய்வீக வாழ்க்கையைச் சித்திரித்து அதன்மூலம் மனிதனை நெறிப்படுத்துகின்றன புராணங்கள். இல்லறத்தில் ஊடல் இருக்கலாம், உணவில் உப்பைப் போல.

    உப்பில்லாத உணவு சுவைக்காது. எனவே ஊடல் தேவைதான். அளவை மீறிய உப்பு கரிக்கும். ஆகையால் ஊடலை ஓர் அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இல்லறத்தில் சண்டை இயல்பானது என ஏற்று உடனுக்குடன் சண்டையை விட்டுவிடத் தொடங்கினால் நாட்டில் விவாகரத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். ஊடலில் விட்டுக்கொடுத்துத் தோற்பவர்களே இல்லறத்தில் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெறுகிறார்கள்!

    தொடர்புக்கு-

    thiruppurkrishnan@gmail.com

    • அனைத்து கோவில்களிலும் தூய்மையும் அமைதியும் காக்கப்படுகிறது.
    • சத்தியத்தை மீறாமல் நடந்து கொள்வதை கடைப்பிடிக்கின்றனர்.

    மகிழ்வான மங்களூர் நகர கட்டுரையில் கர்நாடகத்தில் உள்ள தக்ஷண கனடா என்று அழைக்கப்படுகின்ற தென் கன்னட மாவட்டத்தின் தலைநகரான மங்களூரை பற்றியும் அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டோம். இப்போது தென் கன்னடம் என்றாலே தொன்மை மிகு கோயில்கள் பெயர் பெற்றவைகளாக உள்ளன. அவைகளை அறிவோம்.

    கர்நாடகத்தின் முக்கிய புண்ணிய தலமாக உள்ள "தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயம்" மற்றும் "குக்கே சுப்பிரமணிய ஆலயம் (காளஹஸ்தி போல் நாக தோஷம் போக்குகின்ற பக்தர்கள் குவியும் பரிகாரத் தலம்) பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

    இவை மட்டுமல்லாது இன்னும் பல கோவில்களும் இந்த மாவட்டத்திலேயே உள்ளன. இந்த மாவட்டத்தில் மங்கலாதேவி உள்ளிட்ட ஏழு அம்மன்கள் (சகோதரிகள்) அங்கு வாழக் கூடிய மக்களை காவல் காப்பதாக ஐதீகம்.

    இவற்றில்... மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நெளிந்து ஓடி வரும் நந்தினியாற்றின்அருகே அமைந்துள்ள "கட்டில்" என்ற ஊரிலுள்ள "துர்கா பரமேஸ்வரி அம்மன்" அங்கு வருகை புரியும் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அருள் பாலிப்பவளாக காட்சியளிக்கிறாள்.

    சுயம்புவாக எழுந்ததாக கருதப்படும் அம்மன் "மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி அதிகம்" உடையவளாக இருப்பது உண்மை.

    இந்த அம்மனுக்கு சாற்றப்படும் புடவைகள் எண்ணிலடங்கா.... அத்துடன் கண்ணாடி வளையல்களை, வேண்டுதல் கோரிக்கை நிறைவேற்றியதும் அங்கு வரும் பக்தர்களுக்கு அளிப்பது வாடிக்கை.

    ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக் காலங்களில் அதிக மழை பெய்யும் நாட்களில் இந்த கோவிலினுள் ஓடும் நந்தினியாற்றின் அழகை ரசிப்பதே தனி ஆனந்தம். பல்குணி நதிக்கரையில் நம் நாட்டின் பழமையான கோவில் ஒன்று "பொலலி"என்ற இடத்தில் உள்ளது.

    ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இங்கே எழுந்தருளியுள்ள தெய்வம். நம்மூரில் உள்ள மாரியம்மன் போல் ஆளுயரத்திற்கும் மேல் சிவப்பு நிறத்தில் 9 அடி உயரத்தில் மூலிகை மருந்துகளால் உருவாக்கப்பட்டு அமர்ந்திருப்பதை காண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

    இங்கு வருடத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள வயல்வெளியில் "பொலலி செண்டு" என்று கொண்டாடும் திருவிழாவிற்கு மக்கள் வெள்ளம் கூட்டம் கூட்டமாக திரள்கிறது. இத் திருத்தலம் மங்களூருவிற்கு 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    மங்கலாதேவி ஆலயத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே மாரி குடியும் (மாரியம்மன் கோயில்) உருவா மார்க்கெட் என்ற இடத்தில் ஒரு மாரி குடியும் உள்ளது.

    மேலும் 30 கிலோமீட்டர் தொலைவில் உடுப்பி செல்லும் வழியில் உள்ள "முல்கி" என்ற இடத்தில் "துர்கா பரமேஸ்வரி" அருள்பாலிக்கிறாள்.

    இந்த சக்தி மிகுந்த தெய்வங்கள் தென் கனடா மாவட்டத்தை காவல் காப்பதாக மக்களின் தெய்வீக நம்பிக்கை.

    இந்த மாவட்டத்தில் பல கிறித்துவ தேவாலயங்கள் இருந்தாலும் மங்களூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இன்பான்ட் ஜீசஸ் சர்ச், கார்மல் குன்றில் உள்ள கிறிஸ்தவ குழந்தை இயேசு தேவாலயம் அமைதி ததும்பும் இடமாக இருக்கிறது.

    தென் கன்னடாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள "உல்லால்" கேரளா காசர்கோடு செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    மதினாவில் இருந்து 400 வருடங்களுக்கு முன்பு வந்த புனித சையது சரி என்பவர் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உருஸ் திருவிழாவிற்கு பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் திரளாக வந்து பங்கேற்கின்றனர்.

    தென் கன்னட மாவட்டத்தில் சமண வழிபாடும் அதிகமாக இருந்திருப்பதை ஆங்காங்கேயுள்ள பசதிகள் அதாவது சமண ஆலயங்கள் நிரூபிக்கின்றன.

    ஜெயின் சமயத்தவரின் தென்னிந்தியாவில் உள்ள வாரணாசியாக கருதப்படும் மூடுபத்திரியில் உள்ள ஆயிரம் தூண் ஆலயம் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் ஒரு தூண் போன்ற அமைப்பு இன்னொரு தூணில் காணப்படுவது இல்லை.

    மங்களூர் மாவட்டத்தில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருந்தாலும் துளு பேசக்கூடிய மக்களே அந்த மண்ணின் மைந்தர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தெய்வ வழிபாடு என்பது கர்நாடகத்தில் இருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு இருப்பது ஆச்சரியமே.

    "யக்ஷகானா" என்கின்ற நடன நாடகம் அக்டோபர் முதல் அறுவடை முடிந்த வயல்வெளிகளில் வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்காரத்தோடு மகாபாரதம் ராமாயணத்தில் உள்ள கிளை கதைகள் போன்றவை சொல்லப்படுகின்றன. விடியும் வரை மக்கள் அமர்ந்து விரும்பி பார்க்கக்கூடிய அளவில் சிறப்பாக நடைபெறுகிறது.

    துளு மக்கள் நாக வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "குடுப்பு" என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் பஞ்சமி.. சஷ்டி திதிகளில் ஆயிரக்கணக்கான இளநீர்கள் அபிஷேகத்திற்கு பக்தர்களால் வழங்கப்படுகிறது. அதைப்போன்றே அனைத்து கோவில்களிலும் அரச மரத்தை ஒட்டியுள்ள நாக சிலைகளுக்கும் இதே பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

    "நாகமண்டலா" என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு பொதுவெளியில் இரவு நேரத்தில் ஒரு பூஜை நடத்தப்படுகிறது.

    நாகம் போன்று வேடமிட்டு ஆண் சுழன்றும் நெளிந்தும் ஆடும் முறையை தரிசிக்க அனைத்து மக்களும் பயபக்தியுடன் கலந்து கொள்வதை நாம் காணலாம். அங்கு அனைவருக்கும் உணவு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தினரும் கூட இந்த பூஜையை வேண்டிக் கொண்டு தனிப்பட்ட முறையில் செய்வதும் இங்கு வழக்கத்தில் உள்ளது.

    யக்ஷ கானாவை போலவே இங்கு பூத கோலா அல்லது நேமா என்ற ஒரு வழிபாட்டு முறை இங்கு கொண்டாடப்படுகிறது. 'கொரகஜ்ஜா' என்ற தெய்வத்திடம் (நம் முனீஸ்வரர் கருப்பசாமி போல்) அதிகம் பயம் உள்ளவர்களாக இந்த ஊர் மக்கள் இருக்கின்றனர். அவர் மீது செய்யப்படும் சத்தியத்தை மீறாமல் நடந்து கொள்வதை கடைப்பிடிக்கின்றனர்.

    "புலி வேஷம்" ,இது நம்ம ஊர் போன்று புலி வேஷம் என்றாலும் இதற்கான ஒப்பனை என்பது சற்று வேறுபட்டுள்ளது.

    இங்கு கிருஷ்ண ஜெயந்தி உரியடி ஊர்வலங்கள்... விநாயகர் சதுர்த்தி... தசரா போன்ற பண்டிகைகளின் ஊர்வலங்களில் மக்கள் புலிவேஷம் அணிந்து தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடிக்கொண்டு வருவது மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இருக்கும். வேடிக்கைக்காகவும் வேண்டிக் கொண்டும் இந்த வேடம் போடுகின்றனர்.

    இவ்வாறு வித்தியாசமான வழிபாடுகள் முறைகள் இருந்தாலும் தென் கன்னட மாவட்ட மக்கள் அனைவரும் 'பரசுராம ஷேத்திரம்' என்ற புண்ணிய பூமியில் இருப்பவர்களாக உணர்ந்து நியாயம் தவறாது நடப்பவர்களாக உள்ளனர்.

    இங்குள்ள அனைத்து கோவில்களிலும் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது அவர்கள் ஆலயத்தை எந்த அளவிற்கு பக்தியுடனும் அறநெறியுடனும் பராமரிக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

    அனைத்து கோவில்களிலும் தூய்மையும் அமைதியும் காக்கப்படுகிறது. கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பக்தர்களின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல இடங்களுக்கும் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து பயணிப்போம்.

    இணைய முகவரி:

    thaenmozhi27@gmail.com

    ×