பாபர் அசாம் சதத்தால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 317 ரன்கள் குவிப்பு
- விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தாரை வார்த்தது. சொந்த மண்ணில் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழுமையாக தோற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மாற்றப்பட்டது.
கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, நஜம் சேத்தி அமர்த்தப்பட்டார். தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரிலும் அவர் சொதப்பினால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார்.
தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார். 86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.