உள்ளூர் செய்திகள் (District)

சூலூர் அருகே பேராசிரியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2023-05-08 09:33 GMT   |   Update On 2023-05-08 09:33 GMT
  • தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
  • மேட்டுப்பாளையத்திலும் இதே போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை,

கோவை சூலூர் அருகே உள்ள கரையாம்பா ளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.77,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இரவு வீட்டிற்கு திரும்பிய சரவணகுமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம் கொண்டையூர் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது அலி (43). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துகொண்டு திருப்பூருக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 1 பவுன் கம்மல், ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News