காரைக்கால் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
- காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
- தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம்சதீஷ்(வயது28) தேடி வந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது. இது குறித்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்யும்படி, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காரைக்காலில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய அதிகாரிகள், சில்லறை கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்தாலும், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை சப்ளை செய்யும் நபர்களை பிடிக்கவில்லை.
இந்நிலையில், காரைக்காலில் உள்ள பல சில்லறை நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபராக, நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது28) என்பவரை காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சதீஷ்க்கு, அவரது சித்தப்பா சுரேஷ்(48) என்பவர் கஞ்சா வழங்கிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, காரைக்கால் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார், கம்பம் விரைந்து சென்று, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 1300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இருவரையும் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். இருவரும் தமிழகம் மற்றும் காரைக்காலைச்சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.