செய்திகள் (Tamil News)

மனைவியை எரித்து கொன்ற கோவை வாலிபர் ஜெயிலில் அடைப்பு

Published On 2016-11-20 17:23 GMT   |   Update On 2016-11-20 17:23 GMT
மனைவியை எரித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.

கோவை:

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் நிஷா (வயது 31). இவர் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கோவையில் சிங்கா நல்லூருக்கு வந்த நிஷா அங்குள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். அப்போது சரவணம் பட்டி சின்ன வேடம் பட்டியை சேர்ந்த மனோஜ்தீன் (35) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மனோஜ்தீனுடன் நிஷாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ஆனால் 2 குழந்தைகளும் மனோஜ்தீனிடம் வளர்ந்து வந்தன.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் மனோஜ்தீனிடம் இருந்த குழந்தைகளை பார்க்க நிஷா கோவைக்கு வந்தார். அதன்பின்னர் அவர் சென்னை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் ஜூலி , சென்னையில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் கோவைக்கு சென்னை போலீசார் வந்து விசாரித்தனர்.

விசாரணையில் மனைவி நிஷாவை மனோஜ்தீன் எரித்து கொலை செய்தது தெரிய வந்தது. கொலை நடந்து 9 மாதம் ஆனதாலும் தடயமே கிடைக்காததால் மனோஜ்தீனை கைது செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையே மனோஜ்தீனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மனைவியை எரித்து கொன்றதாக மனோஜ்தீன் ஒப்புகொண்டு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News