கும்பகோணம் அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தற்போது சிதலமடைந்து காணப்பட்டதால் கோவிலில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திருப்பணி பணியாளர்கள் வேலை முடிந்ததும் கோவில் அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டனர். இன்று காலை கோவில் வழியே சென்ற பொதுமக்கள் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கபட்டு இருப்பதை கண்டு கோவில் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்த போது உள்ளே சன்னதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் உடனடியாக கோவிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் கடந்த பல மாதங்களாக இந்த உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படவில்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.50 ஆயிரத்துக்குமேல் இருந்திருக்கும் என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.