செய்திகள்

கள்ளக்காதலியை கல்லால் தாக்கி கொன்ற தொழிலாளி

Published On 2018-06-09 08:16 GMT   |   Update On 2018-06-09 08:27 GMT
திருச்சி அருகே கள்ளக்காதலியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தச்சமலை வனப்பகுதியில் கடந்த மே மாதம் 30-ந்தேதி முகம் சிதைந்த நிலையில் ஒரு இளம்பெண் பிணம் கிடந்தது. காட்டுப்பகுதிக்குள் யாரோ மர்ம மனிதர் அவரை அழைத்து சென்று உல்லாசமாக இருந்து விட்டு கொலை செய்து தப்பி சென்றது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட பெண் யார் என கண்டுபிடிக்கப்பட்டால் குற்றவாளியை மடக்கி விடலாம் என்பதால் அவர் யார் என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியா வுல் ஹக் உத்தரவின் படி மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ஆசைதம்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர் மற்றும் தனிப்படை திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டங்களுக்கு கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி விசாரணை நடத்தினர்.

8 நாட்கள் தீவிர விசாரணைக்கு பிறகு கொலை செய்யப்பட்ட பெண் திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே உள்ள நந்த வனம்பட்டியைச் சேர்ந்த மலர்கொடி (வயது 38) என்பது தெரிய வந்தது.

அவரை கொலை செய்தது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த முருகன் (48) என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட மலர்கொடிக்கு முதலில் ராமன் என்பவருடன் திருமணம் நடந்தது. பிறகு மேலும் 2 பேரை திருமணம் செய்துள்ளார். இதில் முதல் கணவருக்கு ஒரு மகனும், 2-வது கணவருக்கு 2 பெண் குழந்தைகளும் பிறந்த நிலையில் அவர்களை பிரிந்து விட்டார்.

பிறகு வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய மலர்கொடி திண்டுக்கல்லுக்கு மீண்டும் திரும்பினார். நத்தத்தில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்த போது அதன் அருகில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்த முருகன் என்பவர் பழக்கமானார். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் கணவன், மனைவி போல் தனியாக குடித்தனம் நடத்தினர்.

இந்த நிலையில் மலர்கொடி மற்ற ஆண்களுடனும் பழக தொடங்கினார். இதை தட்டிக் கேட்ட முருகனை எதிர்த்து பேசினார். மேலும் முருகனிடம் பணமும் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள முருகன் மலர்கொடி பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கடந்த மே மாதம் 27-ந்தேதி மலர்கொடியை ஜாலியாக வெளியே சென்று வரலாம் என கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி தச்சமலை காட்டு பகுதிக்கு சென்றதும் மலர்கொடிக்கு போதை தரும் மாத்திரைகளை கொடுத்துள்ளார். பிறகு இருவரும் அங்கு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது மலர்கொடியை கொலை செய்த முருகன் முகத்தையும் சிதைத்து விட்டு தப்பியுள்ளார்.

கடைசியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். மலர் கொடி கொலை செய்யப்பட்டது தெரிந்து அவருடன் பழகியவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மலர்கொடி திண்டுக்கல் நத்தத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார்.

பலரிடம் பழகி சேர்ந்து வாழ்ந்து பிறகு பணம் கேட்டு மிரட்டுவது என இருந்த மலர்கொடியின் வாழ்க்கை கடைசியில் முருகன் மூலம் பரிதாப முடிவிற்கு தள்ளப்பட்டு விட்டது.

வழி தவறிய அவரது வாழ்க்கை கடைசியில் காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. முருகனை நேற்று கைது செய்த துவரங்குறிச்சி போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு முருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News