செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் நள்ளிரவில் தீவிபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

Published On 2018-07-26 12:21 GMT   |   Update On 2018-07-26 12:21 GMT
திருத்துறைப்பூண்டியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேமாகி விட்டதாக கூறப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பெரியநாயகிபுரத்தில நடந்த தீ விபத்தில் 45 வீடுகளும், திருத்துறைப்பூண்டியை அடுத்த அரியலூரில் நடந்த தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமாகின. இதில் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டித்தெருவில் உள்ள கருப்பசாமி என்பவரின் குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று இரவு 2 மணி அளவில் தீபிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவென பரவியது. இதில் கருப்பசாமி வீடு, அவர் நடத்தி வந்த மளிகை கடை மூத்தம்மாள் வீடு மற்றும் அவர் நடத்தி வந்த விறகு கடை மற்றும் அருணாசலம், ஜோதி, கோவிந்தராஜ் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேமானது. ஜோதி வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும். திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று தீயை அணைத்தனர். 4 பேரின் வீடுகளில் இருந்த சிலிண்டர்களை மீட்டனர்.

இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட 5 வீடுகள் மற்றும் 2 கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #tamilnews
Tags:    

Similar News