புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் 2 நாட்கள் நடக்கிறது
புதுச்சேரி:
புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இளையராஜா தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டாகிவிட்டது. இதனால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சித்தலைமை தேர்தலை அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு தீவிர உறுப்பினர் தனக்கு கீழ் 4 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அதனடிப்படையில் தற்போது 1½ லட்சம் பேர் இளைஞர் காங்கிரசில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் மனு பரிசீலனை நடந்து வருகிறது.
இறுதி பரிசீலனை வருகிற 30-ந்தேதி தொடங்கி 1-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனுதாக்கல் 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. வேட்பு மனு பரிசீலனை ஆகஸ்டு 3-ந்தேதி நடக்கிறது. சின்னம் ஒதுக்கீடு 4-ந்தேதி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆகஸ்டு 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடக்கிறது. 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு நேர்முகத் தேர்வு டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து அவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிட அனுமதிக்கப்படுகின்றனர். #congress