செய்திகள் (Tamil News)

லாஸ்பேட்டையில் மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை

Published On 2018-08-01 10:04 GMT   |   Update On 2018-08-01 10:04 GMT
திருமணமான 2 மாதத்தில் மாற்றுத்திறனாளி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் விஷ்ணுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் சித்தாள் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் 2 வருடத்துக்கு முன்பு மயிலம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

சமீப நாட்களாக கந்தசாமி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். வீட்டு செலவுக்கு பணம் இல்லாமல் செல்வி சுயஉதவி குழுவில் பணம் கடன் பெற்று செலவு செய்துள்ளார். இதனால் கடனும் அதிகமானது. இதுகுறித்து செல்வி கந்தசாமியிடம் கேட்கும் போது, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கந்தசாமி வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த செல்வி ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஜன்னல் கம்பியில் செல்வி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவரது அண்ணன் கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் இதை அறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்விக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.
Tags:    

Similar News