பத்திரப்பதிவுக்கு மனை அங்கீகார கடிதம் கட்டாயம் - 13-ந்தேதி முதல் அமல்
சென்னை:
பத்திரப்பதிவு துறையில் அண்மைகாலமாக பல்வேறு நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. பத்திரங்களை பதிவு செய்ய ஆன்-லைனில் முன்பதிவு செய்வது உள்பட பல நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனையை பதிவு செய்யக் கூடாது என்று பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்படிருந்தாலும், சில சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதை தடுக்கும் வகையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மனை விற்பனை பத்திரத்துடன் மனைக்கு அங்கீகாரம் வழங்கிய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ, நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. ஆகியவற்றின் கடித நகலை இணைக்க வேண்டும்.
பத்திரத்துடன் அங்கீகார கடித நகல் இணைத்து அதில் விற்பவர், வாங்குபவர் கையெழுத்திட வேண்டும்.
பத்திரத்தை ஸ்கேன் செய்வது போல் இந்த இணைப்பையும் ஸ்கேன் செய்ய வேண்டும். இதில் அசல் கடிதத்தை இணைக்க கோரி கட்டாயப்படுத்த கூடாது. இந்த உத்தரவு வருகிற 13-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.