மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் - போலீஸ் கமிஷனர் உத்தரவு
மதுரை:
தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டியது அவசியம். அணியவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நிலை இருந்தது.
இந்தநிலையில் திருச்சியில் நடந்த சம்பவத்திற்கு பின்னர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவரை மடக்கி பிடிப்பதில் போலீசார் அக்கறை காட்டவில்லை.
இந்தநிலையில் ‘மோட்டார் சைக்கிளில் செல்பவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம்’ என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டுநர் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றாலோ மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.