தாமிரபரணி புஷ்கரணி விழாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை - எச்.ராஜா
மதுரை:
நெல்லை தாமிரபரணியில் புஷ்கரணி விழா நாளை (11-ந் தேதி) தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக சிந்து, கங்கை, யமுனை, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, காவிரி உள்ளிட்ட 12 நதிகளில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுக்கப்பட்டு 12 ரதங்களில் நெல்லை கொண்டு செல்லப்படுகிறது.
இந்த ரத யாத்திரை இன்று காலை மதுரை வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி முன்பிருந்து பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் எச்.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை தாமிரபரணி புஷ்கரணி விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த முறை புஷ்கரணி விழா நடந்தபோது அப்போதைய சபாநாயகர் ஆவுடையப்பன் கலந்து கொண்டார். சுற்றுச் சூழலுடன் ஒன்றிணைவது தான் வாழ்க்கை என்று வேதங்கள் கூறுகின்றன.
இயற்கையை பசுவில் இருந்து பால் கறப்பது போல பயன்படுத்த வேண்டும். பசுவை கொல்லுவது போல பயன்படுத்தக்கூடாது.
இயற்கையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான் புஷ்கரணி விழா நடை பெறுகிறது.
நதியை தாயாக நினைக்கிறோம். 12 -வது புஷ்கரணி விழா மகா புஷ்கரணியாக கொண்டாடப்படுகிறது. அந்த விழா நாளை தாமிரபரணியில் சிறப்பாக கொண்டாட பக்தர்கள் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஆனால் புஷ்கரணி விழாவுக்கு திடீரென்று சில எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகம் வந்தபோது எதிர்ப்பு நிலவியது போல இப்போதும் எதிர்க்கிறார்கள்.
தி.மு.க., ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் கிடையாது. மேலும் அரசு ரீதியாகவும் சில இடைஞ்சல்கள் உள்ளன.
தீர்த்தவாரி என்றாலே விக்ரகங்களை வைத்து பூஜை செய்வது தான். ஆனால் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி இது ஆகம விதிகளுக்கு முரணானது என்று கூறியுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா வணிக கண்காட்சி நடைபெற்ற போது 28 கோவில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்து வந்து அந்த அதிகாரியே நிகழ்ச்சியை நடத்தினார்.
புஷ்கரணி விழாவால் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இன்றைக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் இங்கே வந்துள்ளார். அவரது வருகை ஒரு புதிய மாற்றம் முன்னேற்றமாக கருதுகிறேன்.
இந்து சமுதாயத்தில் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்று கிடையாது. எல்லோருமே ஒன்று தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தாமிரபரணி புஷ்கரணி விழா கொண்டாடப்படுகிறது.
இதில் பங்கேற்க புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுத்த இந்து அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாமிரபரணி புஷ்கரணி விழா 12 நாட்கள் நடைபெறுகிறது. அதில் புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்பதுடன், நாங்களும் தனியாக விழா நடத்த முடிவு செய்துள்ளோம்.
அனைத்து நதிகளின் தீர்த்தங்களையும் எடுத்து வந்து தாமிரபரணியில் கலப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும். நீர், நதி, மண் ஆகிய இயற்கையை பேண வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ThamirabaraniMahaPushkaram #HRaja