திருச்செந்தூரில் மரத்தில் கார் மோதி விபத்து- 2 பேர் படுகாயம்
திருச்செந்தூர்:
பாளை அன்புநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது46). இவர் தனியார் டி.டி.எச்-ல் மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை இவர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றார். காரை பாளை சமாதானபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.
கார் திருச்செந்தூர் அருகே உள்ள நட்டங்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.