செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

மின் வாரியத்திற்கு ரூ.1000 கோடி இழப்பு- அமைச்சர் தங்கமணி தகவல்

Published On 2018-11-19 07:01 GMT   |   Update On 2018-11-19 07:01 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #GajaCyclone #TNMinister #Thangamani
புதுக்கோட்டை:

‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்காக அமைச்சர் தங்கமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள், உயர் மின் அழுத்த கோபரங்கள், துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் துரிதமாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 84 ஆயிரத்து 736 மின் கம்பங்கள், 4 ஆயிரத்து 320 கி.மீ. தொலைவு வரையிலான மின் கம்பிகள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் முற்றிலும் செயல் இழந்துள்ளன.

இதனை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான மின் கம்பங்கள், உபகரணங்கள் இருப்பில் உள்ளன. நகர பகுதிகளில் 2 நாட்களிலும், கிராம பகுதிகளில் 4 நாட்களிலும் மின்சாரம் வழங்கப்படும்.


மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரம் பேர் வந்துள்ளனர். வயல்களில் சாய்ந்துள்ள மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பிகள் உடனடியாக அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

பணிகள் முடிவடைந்த பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான கணக்கீட்டுக்கு பின்னரே மொத்த மதிப்பீடு தெரியவரும்.

மாவட்டத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது குறித்து கணக்கீடு பட்டியலில் அவர் சேர்க்கப்படுவார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNMinister #Thangamani
Tags:    

Similar News