செய்திகள்

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் - திருமாவளவன்

Published On 2019-02-09 08:26 GMT   |   Update On 2019-02-09 08:26 GMT
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். அது எனது சொந்த தொகுதி. 1999-ம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். அங்கு நிற்கவே விரும்புகிறேன்.

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தி.மு.க.தான் முதலில் கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்று இருந்தாலும் புதிய கட்சிகள் வந்தால் வரவேற்பதாக தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

வலுவான கூட்டணியாக உள்ள தி.மு.க. தலைமையில் புதியவர்கள் வந்தால் மேலும் வலு சேர்க்கும்.

மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்துள்ள யாவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

தமிழக பட்ஜெட்டில் ஒன்றுமே கிடையாது. எந்தவித புதிய அறிவிப்புகளும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை என்பதை பட்ஜெட்டில் விமர்சித்து இருக்கிறார்கள்.

பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணிக்கு கூட முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பது நல்லதல்ல.

ரபேல் போர் விமான ஊழல் குறித்து பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு பிரதமர் மீது ஆதாரம் இல்லாமல் அவர் வெளிப்படையாக பேச மாட்டார். தேர்தல் தேதி அறிவித்தவுடன் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்.

விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மதவாதத்தை திணிக்க கூடாது. காவல் துறை நேர்மையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News