செய்திகள்

வள்ளியூர் அருகே விபத்து - வாலிபர் பலி

Published On 2019-03-11 06:17 GMT   |   Update On 2019-03-11 06:17 GMT
வள்ளியூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வள்ளியூர்:

குமரி மாவட்டம் நெய்யாற்றின் கரையை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது33). இவரது மனைவி மோனிஷ் (28). இவர்களுக்கு கிரிஷ் (3) என்ற மகன் உள்ளான். நேற்று அவர்கள் காரில் குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் உறவினர்கள் அம்மு, சூர்யா, சகி உள்ளிட்டோரும் சென்றனர்.

பின்பு அவர்கள் நள்ளிரவு காரில் ஊர் திரும்பினர். கார் பணகுடி அருகே உள்ள புண்ணியவாளன் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே இரும்பு லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. எதிர்பாராத விதமாக காரும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாலிபர் உன்னிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மனைவி மோனிஷ், குழந்தை கிரிஷ் மற்றும் கார் டிரைவர் ரெஜி உள்ளிட்ட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான உன்னிகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News