செய்திகள்

திருப்பூரில் பனியன் தொழிலாளி அடித்துக்கொலை

Published On 2019-04-09 10:13 GMT   |   Update On 2019-04-09 10:13 GMT
திருப்பூரில் பட்டப்பகலில் பனியன் தொழிலாளியை 6 பேர் கொண்ட கும்பல் அடித்துக்கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் அவரப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் கார்த்திக் (வயது 28). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வீரபாண்டி திருவள்ளுவர் நகரில் நடந்து சென்றார். அப்போது வழிமறித்த 6 பேர் கும்பல் கார்த்திக்கை உருட்டுக்கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் மயங்கி விழுந்தார்.

சத்தம்கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த கும்பல் தப்பி ஓடினர். பொதுமக்கள் காயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். மேலும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன பிரச்சினை? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News