குளச்சல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
குளச்சல்:
குளச்சல் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. குளச்சல் கடல் பகுதியில் பலமான காற்றும் வீசுகிறது. இதனால் வழக்கம்போல் கடலுக்கு செல்லும் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகினரும் படகுகளை தொடர்ந்து செலுத்த முடியாமல் அவசரமாக பாதியிலேயே கரை திரும்பினர். அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லாத கட்டு மரங்களும் மணற் பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து பாதிக்கப்பட்டது.மீன் வாங்க வந்த வியாபாரிகள், பொதுமக்கள் மீன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
குளச்சல் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் கரையாகுளம் பகுதியில் செங்கல் சூளை தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.பாம்பூரி வாய்க்காலில் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.