உள்ளூர் செய்திகள்

கோவையில் போதைப்பொருள் விற்ற கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது

Published On 2023-07-17 09:43 GMT   |   Update On 2023-07-17 09:43 GMT
  • 100 போதைமாத்திரைகள், 14 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • போதைப்பொருள் கிடைத்தது எப்படி? பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, 

கோவையில் போதை மாத்திரை, கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செட்டிபா ளையம் பகுதியில் சிலர் போதை மாத்திரை, போதைப்பொருள் ஆகியவற்றை பதுக்கி கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போத்தனூர் போலீசார் நேற்று செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது அவர்களிடம் மெத்தபிட்டமின் என்ற போதைப்பொருள், போதை மாத்திரை இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்த போது, அவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்வதற்காக இதனை வைத்திருந்ததும், அதற்காக அங்கு காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் போதை பொருட்க ளை விற்பனை செய்த போத்தனூர் ரோடு சங்கம் நகரை சேர்ந்த ஷாஜகான்(33), அவரது மனைவி மரியா(29), உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த யாசிக் இலாகி(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 100 போதைமாத்திரைகள், 14 கிராம் மெத்தபிட்டமின் போதைப்பொருள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது எப்படி? பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News