கோவையில் ஆன்லைன் முதலீட்டை நம்பி ரூ.10.30 லட்சம் இழந்த வாலிபர்
- ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக கோபாலகிருஷ்ணனுக்கு ரூ.150 லாபம் கிடைத்தது.
- கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ஒண்டிப்புதூர் கம்பம் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது23). இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது.
அதில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் அந்த ஆன்லைன் இணைப்பில் சென்று விவரங்களை பெற்றார். பின்னர் ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக ரூ.150 லாபம் கிடைத்தது. தொடர்ந்து இவர் அந்த லிங் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பி முதலீடு செய்தார். இந்தநிலையில் அதிக லாபம் வரும் என கருதிய அவர் ரூ.10.30 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார்.
ஆனால் ஆன்லைன் முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை. இது குறித்து கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.