உள்ளூர் செய்திகள்

தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்ட்-அரியலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Published On 2023-01-19 06:27 GMT   |   Update On 2023-01-19 06:27 GMT
  • தனியார் காப்பீட்டு நிறுவன இயக்குனருக்கு பிடிவாரண்ட் ஆணை அரியலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
  • சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020ம் ஆண்டில் பாரதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்

அரியலூர்:

ஜெயங்கொண்டம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பாரதி (வயது43). இவர் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் திட்டத்திற்கான காப்பீட்டு சேவையான யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சந்ததாராக உள்ளார். இந்நிலையில், பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020ம் ஆண்டில் பாரதி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1லட்சத்து 98 ஆயிரத்து 308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டபடி பணத்தை வழங்காததால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதி கடந்த நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அறிவிப்பை பெற்று கொண்டு விசாரணை நாளில் நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில் யாரும் ஆஜராகததால், எம்டி இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடி வாரன்ட் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News