விஷ வண்டுகள் கடித்து பசுமாடு உயிரிழப்பு
- விஷ வண்டுகள் கடித்து பசுமாடு உயிரிழந்தது
- மாடுகள் இரண்டும் மேய்ந்து கொண்டிருந்தன.
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்ன வளையம் தெற்கு தெருவில் அடிக்கடி கால்நடைகள் மற்றும் பொதுமக்களை துரத்தி விஷ வண்டுகள் கடித்து விடுகின்றன.
அரியலூர் மாவட்டம் சின்ன வளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் செல்வராஜ். இவருடைய மாடுகள் இரண்டும் அவரது வீட்டு தோட்டத்திற்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் பனைமரத்தில் கூடுகட்டியிருந்த விஷ வண்டுகள் மாடுகளை கடித்தன. இதில் மாடுகள் அரண்டு ஓடுவதைக் கண்ட பொதுமக்களும் வண்டுகள் துரத்துவதை கண்டு ஓடினர். வண்டுகள் கடித்து ஒரு மாடு இறந்தது மற்றொரு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் 20 அடி உயரத்தில் பனை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.