உள்ளூர் செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் சாவு

Published On 2023-05-10 06:06 GMT   |   Update On 2023-05-10 06:06 GMT
காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வேணாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாராஜ். இவரது மனைவி வினோதா(வயது 28). இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் திருமானூர் அருகே உள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த வினோதாவின் தந்தை நமச்சிவாயம், இவர்களோடு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடமாக சமாதானமாகி, பேச்சுவார்த்தையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சுதாராஜ் அடிக்கடி குடித்துவிட்டு, வினோதாவோடு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களை நமச்சிவாயம் அவ்வப்போது சமாதானம் செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு நமச்சிவாயம், வினோதாவுக்கு அரை பவுன் தோடு வாங்கி கொடுத்துள்ளார். அந்தத் தோடையும் விற்று, சுதாராஜ் மது குடித்ததாக கூறி வினோதா அவரோடு தகராறில் ஈடுபட்டு, மீண்டும் தோடு வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து சுதாராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார்.

இந்நிலையில் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வினோதா வீட்டின் தாழ்வாரத்தில் தனது புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, நமச்சிவாயத்திற்கு சுதாராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த நமச்சிவாயம் தனது மகள் வினோதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து வினோதாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News