வட்டார அளவிலான வினாடி வினா போட்டிகள்
- 13 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
- உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணர இந்த போட்டி நடத்தப்பட்டு உள்ளது
உடையார்பாளையம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான தேன்சிட்டு மாணவர்களுக்கான மார்ச் மாத இதழ் பகுதியிலிருந்து வினாடி வினா போட்டிகள் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக வட்டார அளவில் நடைபெற்றது.போட்டியினை வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தலைமையேற்று துவக்கிவைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் வரவேற்றார். போட்டிகளின் நடுவர்களாக புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன், உதயநத்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் அறிவுச்செல்வன், உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், ஜெயங்கொண்டம் அரசினர் மகளிர் உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் விஜயலெக்ஷ்மி ஆகியோர் செயல்பட்டனர்.
அரசு மேல்நிலை , உயர்நிலை, நடுநிலை சார்ந்த 13 பள்ளிகளிலிருந்து 26 மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சரண்யா, பிரசாத். உடையார்பாளையம் அரசினர் மகளிர் மேல்நிலைப் மாணவிகள் விஜயலட்சுமி , பார்கவி ஆகியோர் போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்று அரியலூரில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ளார்கள்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி கூறினார்.