- மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறன், குழு திறன் ஊக்குவிப்பதற்காக போட்டிகள்.
- முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் கலை திருவிழாவின் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், நடராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.
மாரிமுத்து எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசுகையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறன், குழு திறன் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் கலை திருவிழா நடத்தப்பட்டு தற்போது வட்டார அளவிலும் நடைபெற்று வருகிறது.
இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நாட்டுப்புறப்பாட்டு, செவ்வியல் இசை, சங்கு முழங்குதல், கீபோர்டு வாசித்தல், பிற மாநில நாட்டியம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இதில், முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் பாஸ்கர், கங்கா, மரகதம், ஆசிரியர்கள் அலோசியஸ், ரமேஷ், தமிழரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் நடுவர்களாக அம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விமலா, சாத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றி அழகன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தியாகராஜன், லாவண்யா இசைக்கலைஞர் ஷ்யாமளா தேவி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆடின் மெடோனா, நெடும்பலம் மேல்நிலைப்பள்ளி சுமதி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
முடிவில் சிறப்பாசிரியர் தேசிகாமணி நன்றி கூறினர்.