உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் எலக்ட்ரீசியனை தாக்கி நூதன முறையில் பணம்-பொருட்கள் பறிப்பு
- செல்வ விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
- 6 பேர் கொண்ட கும்பல், பாலாஜியை தாக்கி மோதிரம், பணத்தை பறித்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி செல்வ விநாயகபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி. (வயது28). எலக்ட்ரீசியன். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் தங்கள் வீட்டில் எலெக்ட்ரிக் வேலை இருப்பதாக முகவரி கூறி அழைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பாலாஜி முத்தையாபுரம் பொட்டல்காடு விலக்கு பகுதியில் சென்ற போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கம்பி மற்றும் அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த வாட்ச், மோதிரம், ரூ. 12 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர்.
மேலும் கூகுல்பே மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 45 ஆயிரத்தையும் எடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.