உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் தினசரி ஏல மார்க்கெட்டில் வெற்றிலை கட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த போது எடுத்த படம்.

உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-06-07 09:45 GMT   |   Update On 2022-06-07 09:45 GMT
பரமத்திவேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், செல்லப்பம்பாளையம், வெங்கரை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்றவற்றை பயிர் செய்துள்ளனர்.

வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர்.

பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிக்கும், பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா , மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் 104 கவுளி கொண்ட இளம் பயிர் வெள்ளைக்கொடி ஒரு சுமை ரூ 6 ஆயிரத்திற்கும், 104 கவுளி கொண்ட இளம் பயிர் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ 2,500-க்கும் விற்பனையானது. 104 கவுளிகொண்ட முதிகால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமைரூ 2,500-க்கும் ,104 கவுளி கொண்ட முதிகால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ1,400-க்கும்விற்பனையானது.

நேற்று 104 கவுளி கொண்ட இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை ஒரு சுமை ரூ 8,500-க்கும், 104 கவுளி கொண்ட இளங்கால் கற்பூரி வெற்றிலை ஒரு சுமை ரூ.4 ஆயிரத்திற்கும் விற்பனையானது. வெற்றிலை உற்பத்தி குறைவின் காரணமாக வெற்றிலை விலை உயர்ந்துள்ளது. வெற்றிலை விலை உயர்வால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News