உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜியை சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

Published On 2024-07-18 12:26 GMT   |   Update On 2024-07-18 12:26 GMT
  • அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது சட்ட விரோ பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
  • அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு மனுவில் வங்கிகள் அளித்துள்ள ஆவணங்களுக்கும், அமலாக்கதுறை வழங்கிய ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. மேலும், தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றொரு மனுவில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமலாக்கத்தறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைதான் வழங்கியுள்ளோம். வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த இரண்டு மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இதை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வாதடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அது தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் குற்றச்சாட்டுகள் பதிவுக்கான வழக்கின் விசாரணை 22-ந்தேதிக்கு தள்ளிவைத்து அன்றைய தினம் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

Similar News