சான்று பெற்ற விதைகளால் விவசாயிகள் உற்பத்தியை பெருக்கலாம்- விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பேச்சு
- உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது
- 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கோவை வேளாண் அறிவியல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தரமான விதை உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர்.குமாரவடிவேலு தலைமையில் நடைபெற்றது.
முகாமில் தேசிய விதை கழகத்தின் மண்டல மேலாளர் செல்வேந்திரன்,கோவை விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விதை மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் பேசும்போது, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலமாக விவசாயிகள் உற்பத்தியை பெருக்கலாம். விதை நேர்த்திகள் செய்வதன் மூலமாக தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த முகாமில் தேசிய விதை கழகத்தின் மேலாளர் சிந்துஜா அனைவரையும் வரவேற்றார். இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 45 உழவர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சுரேஷ்குமார் நன்றி கூறினார்.