எழிலூர் ஏரி பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
- தொடக்க நிலையிலேயே பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
- சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்டமைப்பாகவும் விளங்கும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் சாளுவனாற்றுகரையில், எழிலூர் தொடங்கி நெடும்பலம் வரை உள்ள திடலை பயன்படுத்தி ஏரி வெட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
எழிலூரில் வெட்டப்படும் ஏரியானது எழிலூர், மருதவனம், வங்கநகர் ஓவர்குடி ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு பாசனம் தரும் நீர் கட்ட மைப்பாகவும் விளங்கும்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு இங்கு ஏரி வெட்ட வேண்டுமென திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது. ஆனால், தொடக்க நிலையிலேயே பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு ஏரி வெட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.