மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது
- ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து தனது தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.
- ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன், காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்தவர் அருள் (எ) ராயப்பன் (வயது 49), ரேவதி (45) தம்பதியினர். காதல் திருமணம் செய்து 26 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பஸ் நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர்.
இதனால் கணவன்-மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி ரேவதி மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார்.
மகன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மகள் பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ராயப்பன்தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால் ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராயப்பன்-ரேவதி தம்பதியரின் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு ரேவதி வீட்டிற்கு சென்று தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார்.
அப்போது, அதனை ஏற்க மறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார்.
சரி எனக்கூறி ரேவதியை ராயப்பன் அழைத்து சென்றபோது காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அக்கம்ப க்கத்தினர் ரேவதியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம், ராயப்பனை கைது செய்து கொலைவழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.