தொண்டாமுத்தூர் பகுதியில் நிலக்கடலை செடிகள் கருகியது
- பருவமழை சரியாக பெய்யாததால் இக்கட்டான சூழ்நிலை
- தமிழக அரசு பயிர்களுக்கு உரிய நிவாரணம் தர கோரிக்கை
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது பூலுவபட்டி, வடிவேலம்பாளையம், ஆலாந்துறை, நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிரான நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் முற்றிலும் கருகி உள்ளது.
இது குறித்து வடிவேலாம்பாளையம் பகுதியில் நிலக்கடலை பயிர் செய்துள்ள நாகராஜ் என்ற விவசாயி கூறியதாவது:-
தனக்கு 2 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பருவமழையை நம்பி நிலக்கடலை பயிர் செய்து உள்ளோம்.
பருவமழை பெய்யாததால், வெப்பம் காரணமாக பயிர்கள் கருகி விட்டன. நிலக்கடலை பயிர் செய்ய ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளேன். நிலக்கடலை காய் செடியில் பிடிக்காமல் உள்ளது. அதே போல் கால்நடைகளுக்கு தீவனங்களாக கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு பயிர்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.