வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயில் கைதி தப்பி ஓட்டம்
- பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித் தொழிலாளி.
கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ராஜா சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் தப்பி ஓடிவிட்டார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.