நாகர்கோவிலில் தரமற்ற மீன்களை விற்ற கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
- மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
- மீன்கள் மீது ஐஸ்கட்டி மட்டும் போட்டு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரில் சுகாதாரத்தை பேண மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தர மற்ற மீன்கள் சப்ளை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைய டுத்து ஆணையாளர் ஆனந்த மோகன் அந்த உணவகத்தில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி நகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜான்,ராஜேஷ் ஆகியோர் குறிப்பிட்ட உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் தரமற்ற மீன்கள் உணவ கத்தில் இருந்தது தெரிய வந்தது. அங்கு மீன்களை பதப்படுத்த எந்த ஒரு வசதியும் இல்லாதது சோதனையில் கண்டறியப்பட்டது.
மீன்கள் மீது ஐஸ்கட்டி மட்டும் போட்டு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.உணவகத்தில் இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.